ரொம்ப சந்தோசம் . முதல் rw . அருமையான கதை தந்தமைக்கு வாழ்த்துகள்.
நிதனிபிரபுவின் இது நீ இருக்கும் நெஞ்சமடி!
நாயகன் நாயகி மட்டுமில்லாது அனைத்துப் பாத்திரங்களும் துல்லியமாக மிளிர்ந்து வாசகர்கள் மனதில் நீங்கா இடம் பிடிக்கும் வகையில் கதை நகர்கின்றது.
தெரிவு செய்து வாசிக்கும் பழக்கமுள்ள என்னை, முதலாம் அத்தியாயத்திலிருந்து அடுத்தது எப்போது என்று காத்திருந்து வாசிக்க வைத்த அந்த உணர்வே, இக்கதை, ஒரு வாசகனை எந்தளவுக்குத் தன் வசப்படுத்தியுள்ளது என்பதற்குச் சான்று!
குடும்பமாக இலண்டனில் வாழும் கிளிநொச்சியைச் சேர்ந்த நாயகி ஆர்கலி, அவளின் தாய் லலிதா, தந்தை சுந்தரம்:
பேச்சில் துடுதுடுப்போடு வந்து நாயகனையும் அவன் குடும்பத்தாரையும் ஆர்ப்பரிக்கும் ஆழியெனத் தன் வசப்படுத்திவிடும் ஆர்கலி,
ஆழ் நேசம் வைத்து, எதிர்ப்பட்ட தடைகளைத் தாண்டி, நேசம் வைத்தவனின் பொறுப்புகள் முடியும் வரை காத்திருந்து நாயகன் வசம் சேர்ந்த முறையை, காதலிக்கும் இன்றைய இளம் யுவதிகள் தயங்காது ஒரு எடுத்துக்காட்டாகவே கொள்ளலாம்.
மகள் நேசித்தவனைப் பிடிக்காவிட்டாலும் அவள் நேசத்தில் உறுதியாக இருக்கையில் இழுத்துப் பிடித்து பிரச்சனையை வளர்காது இசைந்து போனார் லலிதா. ஒரு தாயாய் அவரது கவலைகள், பயங்கள், ஆதங்கங்கள் அனைத்தும் அத்தனை இயல்பாகச் சித்தரிக்கப்பட்டிருந்த அதேவேளை, தான் கொண்ட எண்ணத்தில் அழுந்த நின்று மகள் வாழ்க்கையைப் போராட்டமாக மாற்றாது, அவள் விருப்பை முன்னின்று நடத்தி வைத்துச் சந்தோசமாகக் கண்கலங்கிய போது, ஆங்காங்கே கேள்விப்படும் காதல் கலியாணங்களின் அவல முடிவுகள் நிச்சயம் மாற்றியமைக்கப்படக்கூடியவை என்றே எண்ணத் தோன்றிட்டு!
சுந்தரம், பாசம் காட்டுவதில் அவருக்கு நிகர் அவரே! உறவு என்பதை விட ஒரு படி வலுவானது நட்பு என்ற கருத்தினைக் கொண்டவள் நான். கருப்பன், சுந்தரம் அர்களிடையே நிலவிய அந்தத் தூய்மையான நட்பு அதை மீண்டும் நிரூபித்துவிட்டது. இப்படிப்பட்ட நட்பு எளிதில் கிடைத்துவிடாது . கிடைத்தவர்கள் பாக்கியம் பெற்றவர்களே!
பிரணவன், தாய் புவனா , தந்தை கருப்பன், சகோதரிகள் மூவர் என, ஊரில் உள்ள ஒரு நடுத்தர வசதிவாய்ப்புள்ள குடும்பத்தை அச்சுப் பிசகாது கண்முன்னால் காட்சிப் படுத்திவிட்டார் கதாசிரியர்.
-படிப்பு இருக்கு , ஒரு வேலையும் இருக்கு. இருந்தும் இன்னும் மேலே வர, வசதி வாய்ப்பைப் பெற வெளிநாடு செல்லக் கிடைத்தால்!
-படிப்பு , வேலை எதுவும் இங்கே சரியாக அமையவில்லையே . என்ன பாடு பட்டென்றாலும் பேசாமல் வெளிநாடு சென்றுவிட்டால்
இந்த எண்ணமும் இன்று பொதுவானதே ...
உன்னிடம் திறமையும் அயராத விடா முயற்சியும் இருந்துவிட்டால், வெளிநாடு சென்று பனியிலும் குளிரிலும் எந்தவிதமான வேலையையும் செய்யத் தயாராகும் நீ, அதையே உள்ளூரில் செய்யத் துணிந்தால்...முன்னேற்றம் புறமுதுகிடுமோ? நிச்சயம் இல்லை; அது ஆசையாசையாக உன்னை வந்து ஆரத் தழுவியே தீரும் .
இப்படி அசையாத தீர்மானத்தோடு பிரணவன் வாழ்வில் முன்னேறிய விதம் ஒவ்வொரு இளைஞருக்கும் எடுத்துக்காட்டு என்றால், அவனில், அவன் குடும்பத்தார் வைத்த நம்பிக்கை, அவர்கள் அவனுக்குக் கொடுத்த ஆதரவும் அனுசரணையும் ...அது கிடைத்தால் எப்படி ஒருவனால் முன்னேறாது இருக்க முடியும்?
பிரணவனின் வாழ்வைத் துல்லியமாகப் படம் பிடித்துக் காட்டி அருமையான செய்தியைக் கதாசிரியர் சொல்லி இருக்கிறார்.
இவ்வளவோடு இளமை துள்ளும் நாயகன் நாயகி உரையாடல்கள் கதைக்கு மெருகூட்டிவிடுகின்றது .
மேலும் பல பல தரமான படைப்புகளை வழங்கிடவேண்டும் என்ற கோரிக்கையோடு வாழ்த்துகளும் !