நினைவெல்லாம் நீயாகிட வந்தேன் வெகு சாதாரணமாக எழுத நினைத்து 2017ல் எழுதிய கதை. ஆனால், உங்கள் பலருக்கு மிகவுமே பிடித்துப்போனது மிகுந்த மகிழ்ச்சிக்குரிய விசயமே! போனவாரம் அளவில் இதே கருவை வைத்து வேறு ஒருவர் கதை எழுதி இருப்பதைக் கண்டு உண்மையிலேயே அதிர்ச்சியோடு கவலையாகத்தான் இருந்தது. நாயகனுக்கு ஒரு மகன் இருப்பான், அப்படியே அந்தக் கதையிலும். நாயகிக்கு ஒரு மகள் இருப்பாள். அதுவும் அந்தக் கதையில் அப்படியே. நாயகனின் நண்பனின் அம்மா வீட்டுக்கு பக்கத்து வீட்டில் நாயகி இருப்பாள். அதுவும் அப்படியே. இப்படி காட்சிகள் அனைத்தும் ஒரே விதம். என்ன என் பாணியில் நான் எழுதியதை அவர் அவர் பாணியிலும் அவரின் பேச்சு வழக்கிலும் எழுதி இருப்பார். அப்படியே கொஞ்சமாய் தேனே, மானே, பொன்மானே க்களை அங்கங்கே சேர்த்து இருப்பார். இது வேறு கதை அது வேறு கதை என்று காட்ட வேண்டாமா? அதைப் பார்த்தபோது கோபம் என்பதை விட கவலையாகத்தான் போயிற்று!
இதைக் கேட்டுக்கொண்டு போகலாம் என்று நினைக்கிறீர்களா? கும்பலாய்ச் சேர்ந்து கும்மி அடிப்பார்கள். இல்லையோ உங்களுக்கு வந்த கற்பனை எனக்கு வந்திருக்காதா என்பார்கள். எப்படி கூட்டிக் கழித்துப் பார்த்தாலும் நம்ம பக்கம் தான் வீக். சொந்தமாய் எழுதியவள் நான் இல்லையா. பேசாமல் தான் இருக்கவேணும்.
காப்பி அடித்து எழுதுகிற அளவில் என் கதை இருக்கிறது என்று பெருமையும் பட்டுக்கொள்வோம். வேறு என்னதான் செய்வது?
அவரவருக்கு அவரவரின் மனச்சாட்சிகள் தான் நீதிபதி! அதற்கு ஏற்றவாறு நடந்துகொள்ளட்டும்! நம்முடைய கற்பனைகள் மாத்திரமே நம்மைத் தலைநிமிர வைக்கும்; பெருமைகொள்ள வைக்கும்! அடுத்தவரின் கற்பனைகளைத் திருடினால் தலை குனிந்துதான் நிற்கவேண்டி வரும்!
Last edited: