விடிகாலைப்பொழுது மெல்ல உதயமானது. சூரியன் தன் பொற்கிரணங்களை அள்ளி இறைத்துக்கொண்டிருந்தான். வாசல் ஓரமாய்க் கிடந்த கதிரையில் ஓய்ந்து அமர்ந்திருந்தேன். ஆயிரம் போராட்டம் மனதிற்குள்.
நேற்றய நினைவுகள் உள்ளத்தை அறுத்தெடுத்தன. அந்த மனப்போராட்டத்தோடு அப்படியே உறங்கிவிட்டிருந்தேன். நடு இரவில் அம்மா வந்து எழும்பி, “உள்ள வந்து படு!” என்று சொன்னது நினைவில் இருந்தது. ஆனால், நான் அப்படியே உறங்கிவிட்டிருந்தேன்.
உள்ளத்தை அரித்த எண்ணங்களைத் தூக்கிப்போட முடியாது தவித்துக் கொண்டிருந்தேன். அம்மாவிடம் கேட்டுவிட்டதென்னவோ சரிதான் என உள்ளம் வாதாடினாலும், பாதி மனம், ஏதோ தவறு செய்துவிட்டதாய்த் தவித்துக் கொண்டிருந்தது. அவசரமாய் வெளியே வந்த அம்மா, “எல்லாம் எடுத்து வைச்சிட்டன், சாப்பிடு!” என்றபடி நடந்து விட்டார். அப்போதுதான் பார்த்தேன், அம்மாவின் கையில் பயணப்பை ஒன்றை. என்ன ஏதெனக் கேட்பதற்குள் விரைந்து நடந்துவிட்டார். மனக் குழப்பத்துடன் அப்படியே அமர்ந்துவிட்டேன்.
“ஆது ...ஆது” உலுக்கிய ஒலியில் விழித்துக்கொண்டேன்.
அருகில் கானகி. இரவின் விழிப்பில் மீண்டும் அப்படியே உறங்கிவிட்டிருந்தேன். கானகி என்னோடு கூடப்படிப்பவள், என் காதலியும் கூட. பல்கலைக்கழகப் படிப்பு முடிந்ததும் திருமணம் என, இரு வீட்டிலும் பச்சைக்கொடி காட்டியிருந்தனர். எல்லாம் சிறப்பாக இருந்த இவ்வேளையில் தான் அப்பாவின் அந்த இழப்பு, விபத்து ஒன்று அவரைப் பலி கொண்டிருந்தது.
“ஆதவன்!” ஓங்கிக் கூப்பிட்ட கானகியின் சத்தத்தில் அவசரமாய் நினைவுகளில் இருந்து விடுபட்டு “என்ன?” என்றேன்.
“என்ன யோசிக்கிறாய்?” என்றாள், அவள்.
“ஒன்றுமில்லை” அவசரமாய்ச் சொன்ன போதும் உள்ளம் இடிக்க, “அது…” என இழுத்தபடி, நடந்த அத்தனையையும் அவளிடம் கொட்டிவிட்டேன்.
என்னை நிமிர்ந்து பார்த்த அவளின் பார்வையில் நான் பொசுங்காமல் போனது ஆச்சரியமே. என்னைப் பார்க்கவே பிடிக்காதவள் போலப் பார்வையைத் தாழ்த்திக்கொண்டாள். என்னால் அவளின் உதாசீனத்தைத் தாங்க முடியவில்லை. எப்போதும் நேர்மையாய் இருக்கும் கானகியின் அந்தப் பார்வையே, நான் மாபெரும் தவறுசெய்துவிட்டேன் என்பதை எனக்கு உணர்த்தியது.
“அம்மா எங்கே இப்போ?” என்றாள்.
“தெரியேல்ல...காலையிலயே போய்ட்டா...” என்றேன்.
“வா...அம்மாவிடம் போய் மன்னிப்புக் கேட்கலாம்.” என்றாள்.
‘ஏன்?’ மனம் முரண்டியது.
“அம்மா இன்னும் என்னிடம் விளக்கம் சொல்லவில்லை.” என்றேன்.
“என்ன விளக்கம்?” என்றாள், ஒரு விதத் தோரணையாய்.
“அப்பா இறந்த பிறகு தினமும் காலையில் போய் இருட்டினதுக்குப் பிறகுதான் வீட்டுக்கு வாறாவாம், எங்க போறீங்க எண்டு கேட்டன், மழுப்பலாப் பதில் சொன்னா.
நேற்றைக்கு முதல் நாள் ராத்திரி வீட்டுக்கு வரவே இல்லையாம். எங்க போனீங்க எண்டு கேட்டன், பதில் சொல்லேல்ல.
‘உனக்கெதுக்கு அதெல்லாம்? படிக்கிற வேலையைப்பாரு!’ என்றா.
சின்ன வயசில இருந்து என்னை விடுதியில விட்டுத்தான் படிக்கவைச்சா, அப்பா இறந்த பிறகு, அம்மாவோட இருக்கலாமென்று நினைச்சா, என்னை வலுக்கட்டாயமா அங்கயே அறை எடுத்துத் தங்கச்சொல்லீட்டா. நான் வேணாமெண்டு எவ்வளவு சொல்லியும் கேட்க இல்ல. நான் டொக்டர் ஆகவேணும் எண்டதிலத் தீவிரமா இருக்கிறதாலதான், இப்படிப் பண்றா எண்டு நினைச்சன். ஆனா, எதிர்வீட்டு அங்கிள் சொல்றதைப்பாத்தா...”
“ஆதவன்...!” கானகி ரௌத்ரமாய் கத்தினாள், அதிர்ந்து நிமிர்ந்தேன்.
“வார்த்தையைக் கவனமாப் பேசு! அவ உன்னோட அம்மா!” என்றாள்.
“கானகி, மற்றவே சொல்லேக்க எனக்கு எப்படி வலிக்குது தெரியுமா?” என்றேன்.
“அந்த விளக்கம் எனக்குத் தெரியும், அம்மா சொன்னா” என்றவள், சற்றே மௌனம் காத்தாள்.
அவள் என்ன விளக்கம் சொல்லப் போகிறாள் என்று பார்த்திருந்த நான், அவள் சொல்ல சொல்ல உறைந்து போனேன்.
“எதிர்வீட்டு அங்கிள் உன் அப்பாவோட நண்பர் என்றது மட்டும் தான் உனக்குத் தெரியும், அவரோட மோசமான இன்னொரு பக்கம் தெரியாதே! உன் அப்பா இறந்ததுக்குப் பிறகு மட்டும் அம்மாவுக்குக் கஸ்ரம் இல்ல, இருக்கும் போதும் கஸ்ரம் தான்.” என்றவள், சற்றே நிதானித்துவிட்டுத் தொடர்ந்தாள்.
“அவருக்கு மட்டும் இல்ல...உன் அப்பாவுக்குமே மது, மாது ரெண்டிலுமே அதிகமா ஈடுபாடு.” என் அதிர்வை உள்வாங்கிக் கொண்டு, தொடர்ந்தாள்.
“ ஒத்தைப் பிள்ளையான நீ அதைத் தெரிஞ்சு கொள்ளவோ, அதனால் உன் அப்பாவை வெறுக்கவோ கூடாதென்று நினைச்சுத்தான் அம்மா உன்னை விடுதியில விட்டுப் படிக்கவைச்சா. அப்பவே உன் அப்பாவின் நடத்தையைத் தெரிஞ்சுகொண்ட உன் அப்பாவின் நண்பர் உன் அம்மாவிடம் எப்போதும் ஒருவிதக் காமப் பார்வையைத்தான் வீசியிருக்கிறார். எப்பவுமே தன்னைக் காத்துக்கொள்ள உன் அம்மா பெரும்பாடு பட்டிருக்கிறாங்க. பாதுகாப்பா, நம்பிக்கையா உணரவைக்க வேண்டிய கணவனே இன்னனொருத்தன் கேவலமா பார்க்கிறதுக்கு வழிவகுத்தக் கொடுமையை உன் அம்மா யாரிடம் சொல்வார்?
சமீபத்தில உன் அப்பா இறந்தது அந்த ஆளுக்கு வசதியாப்போச்சு. அடிக்கடி அம்மாவைத் தொந்தரவு பண்ணத் தொடங்கிவிட்டார்.