You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

3. விட்டில் பூச்சிகள் - ரோசி கஜன்

ரோசி கஜன்

Administrator
Staff member
1542052463272.png

“என்னடா மச்சான்! உண்மையாவா சொல்லுறாய்?!” ஆச்சரியமாகக் கேட்டான் வேந்தன்.

“பின்ன! பொய்யா சொல்லுறான்?” இடையிட்ட அடுத்தவன், “என்ன திடீரென்று? ஊரில பெண் பாத்து வச்சிருக்கீனமோ?” தன்பங்குக்கு கேள்வியொன்றை ஊதி விட்டான்.

“அம்மா, அப்பா யாருக்காவது உடம்பு சரியில்லையா அருள்?” கைபேசியில் எதையோ தட்டிக் கொண்டிருந்த மூன்றாமவன், ‘என் செவிகளும் உங்கட பேச்சில்!’ என்றுணர்த்தினான்.

“நேற்றிரவு அவன்ட அம்மா கதச்சார் என்டு நினைக்கிறன்; அப்ப இருந்து ஒருமாதிரித்தான் இருக்கிறான்; வாய் திறந்தாத் தானே!” மிகவும் சலித்துக்கொண்டான் நான்காமவன்.

தன்னைச் சுற்றிலும் எழுந்த நண்பர்களின் கேள்விகளுக்கு அருளின் பதிலோ, வழமையான மௌனம்!

ஆனால், வழமைக்கு மாறாக அவன் முகம் பாறையாகிக் கிடந்ததை அவதானித்தார்கள் நண்பர்கள்.

‘காலையில சாப்பிட்டானோ தெரியாது; மத்தியானமும் ஒழுங்காச் சாப்பிட இல்ல. ஒருநாளும் இல்லாத கணக்கில ஃபோனும் கையுமாத் திரிஞ்சான். முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்குது! என்னவாக இருக்கும்!’ வேந்தனின் மனமோ, அறியும் ஆவலில் அலைந்தது.

“கொஞ்சம் வெளியில போய்ட்டு வாறன்.” அவர்களின் கேள்விகளை காதில் வாங்காதவன் போன்று, அச்சிறு வரவேற்பறையைக் கடக்க முயன்றவனை, எட்டிப் பிடித்து நிறுத்தினான் வேந்தன்.

“ஏன்டா மச்சான், ஒரு வருசம் இரண்டு வருசமா? கிட்டத்தட்ட ஐஞ்சு வருசங்கள் ஒன்றா இருக்கிறம்! உன்ர பிரச்சனைகள எங்களிட்ட சொன்னாக் குறஞ்சா போயிருவாய்?” அக்கறையும் அங்கலாய்ப்புமாகக் கேட்டவன், அருளின் மரத்த முகத்தைப் பார்த்து மிகுந்த எரிச்சல் கொண்டான்.

‘என்ன பிறப்போ!’ இரண்டாமவன் மனதில் கடுகடுத்தபடி, “பச்..விடுடா மச்சான்; எப்பிடிக் கேட்டாலும் அவன் வாய் திறக்கப் போறதில்ல; விடு விடு!” எழுந்து, குளியலறைக்குள் மறைந்தான்.

“அவனவன் நல்ல நண்பன் கிடைக்கமாட்டானா என்று ஏங்குவான்கள்; இங்க, இவனச் சுற்றி நான்கு தடியன்கள் இருக்கிறம்! எப்பிடித்தான் நெருங்க நினைச்சாலும் தனக்குத்தான் குடும்பமும் பொறுப்பும் சுமையும் இருக்கிறது போல படம் போட்டுக் கொள்ளுறதில இவனக் கேட்டுத்தான்!” சத்தமாகவே முணுமுணுத்தான் மூன்றாமவன்.

“அதுதானே மச்சான்; எங்களுக்கும் தான் தலைக்கு மேல பொறுப்பிருக்கு! அதுக்கென்று உன்னப் போலவா?!” நான்காமவன் குரலில் ஏகத்துக்கும் கேலி!

“டேய் விடுங்கடா; அவனுக்கு எதையும் நம்மட்ட சொல்ல விருப்பம் இல்ல. என்னதான் ஒன்றா இருந்தாலும் கோடு போட்டு நம்மைத் தள்ளி வச்சிருக்கிறான். அது விளங்காம நீங்களும்...பச்...உங்களுக்கு வேற வேலையே இல்லையா?” தொடர்ந்து சலித்துக்கொண்டவன், விருட்டென்று பக்கத்து அறையினுள் நுழைந்து மறைந்தான்.

தன்னையே பார்த்திருந்த மிகுதி இருவரையும் அமைதியாக ஒருபார்வை பார்த்துவிட்டு சட்டென்று வெளியேறிய அருள், முன்வாயில் கதவு மூலையில் இருந்த காலணிகள் வைக்கும் சிறு இரக்கிலிருந்து தன் சப்பாத்துகளை எடுத்தான்.

அவன் ஸ்பரிசம் பட்டதும் மெல்ல விழித்துக் கொண்ட சப்பாத்துகள் இரண்டும், “நன்றாகத் தளர்ந்து போனோம்; எங்களை விட்டுவிடேன்!” கண்ணீரோடு முனக, அதைச் சிறிதும் உணராது கீழே போட்டவன், அவசரமாகக் கால்களை அவற்றுள் திணித்தான்.

“மச்சான் கொஞ்சம் நில்லுடா!” பின்தொடர்ந்து வந்தான் வேந்தன்.

இருவருக்குள்ளும் சில வருடங்கள் வயது வேறுபாடு இருந்தாலும், இங்கு வந்தபின் நண்பர்களாகப் பழகியதில் வயது வேறுபாட்டை மறந்திருந்தனர்.

“இண்டைக்கு சாந்தன் அண்ணான்ட மகனுக்கு பத்தாவது பிறந்தநாள் எல்லோ; மறந்து போனாயா? ஒரு ஆறு மணி போல எல்லாருமாப் போவம். அவர் எப்பவுமே ருசியான சாப்பாடு போடுவார்.” சொன்னவன் வாயில், உணவின் நினைவில் எச்சில் ஊறியது.

வெளிநாட்டில், அதுவும் பிரமச்சாரிகள் பெரும்பாலும் வீட்டுச் சாப்பாட்டுக்கு ஏங்கிக் கிடப்பார்கள் அல்லவா?

எப்போதாவதுதான், ஊர் ருசிக்கு ஏங்கும் நாவைத் திருப்தி செய்யும் வகையில் உணவுகளும் அமையும்.

அப்படி அமையும் சந்தர்ப்பங்களில் ஒன்று சாந்தன் வீட்டு விழா!

உணவுப் பிரியனான சாந்தன் அழைப்பவர்களுக்கு வஞ்சனையில்லாது சுடசுட உணவுகள், குடிவகைகள் என்று கடைபரப்பி அசத்திவிடுவான்.

அதை யாராவது தவற விடுவார்களா?

“நீயும் வருவாய்தானே அருள்?” பத்து வருட, பழைய கருப்பு குளிர்கோட்டை மாட்டிக்கொண்டு வெளியேறியவனை கேள்வியால் தயங்கச் செய்தான் வேந்தன்.

“பச்... நான் வர இல்ல; நீங்க போயிட்டு வாங்க; என் பங்குக்குப் பத்து யூரோ டிவிக்கு பக்கத்தில வச்சிருக்கிறன்; எடு!” சலித்தபடி சொன்னவன், நண்பனின் பதிலுக்குக் காத்திருக்கவில்லை.

விருட்டென்று வெளியேறும் நண்பனை, இப்போது, கோபமும் எரிச்சலுமாகப் பார்த்தான் வேந்தன்.

“என்ன ஜென்மமடா இவன்? வெளிநாடு வந்து பத்து வருசங்கள் இருக்கும்! ஏழுநாட்களும் மாடா உழைக்கிறான். கிளீனிங் வேலை என்றால் இளப்பமா? கைநிறைய வருமானம் வருகுதே! ஆனாலும், அநியாயத்துக்கு இப்படிக் கஞ்சத்தனம் காட்டக் கூடாது.

உழைக்க உழைக்க காசை ஊருக்கு அனுப்பி மாளிகை கட்டி இருக்கிறானாம். இவனா போயிருக்கப் போறான். சரி சரி... குடும்பத்துக்குச் செய்யத்தான் வேணும். அதுக்காக, இவன் பீத்தல் பறங்கி போலவா வாழ வேணும்? நல்லதா உடுத்தி, சாப்பிட்டு பச்... நாளைக்கு உனக்கு என்று எதையும் சேர்த்து வைக்க வேணாமா ?

இவனோடு வந்த ராசு அண்ணாவப் பார்; சொந்த வீடு வாங்கி கலியாணமும் செய்திட்டார். இவனப் போல நான் மட்டும் உழைத்தால் இப்பிடியா இருப்பன். ஐஞ்சுபேர் இருக்கும் முட்டுவீட்டில்... தகதிமிதோங் போட்டுக் கொண்டிருப்பேனா?!” தன் பாட்டில் மூச்சுவிடாது அங்கலாய்த்த வேந்தனை, நகைப்போடு ஏறிட்டார்கள் மற்றைய மூவரும்.

“டேய்! டேய்! அருளை உன் தங்கச்சிக்குச் செய்ய நினச்சாய்; நல்ல நம்பிக்கையாகக் கேட்டும் பார்த்தாய்; அவன் பிடி கொடுக்க இல்ல என்றதும் சந்தர்ப்பம் கிடைத்தால் இதுதான் சாட்டென்று மென்று துப்புறாய்!” முதுகில் அடித்தான் ஒருவன்.

“போடா; அப்படியில்லையடா! அருமையான பெடியன் என்று கேட்டன் தான். உனக்கொரு தங்கச்சி இருந்திருந்தால் நீ விட்டா இருப்பாய்?” முறைத்தான் வேந்தன்.

“அவனும், ‘இப்ப கலியாணம் செய்யும் எண்ணம் இல்ல; பெரியதங்கச்சியின் கலியாணம் முடிய வேணும். சின்னவளுக்கும் சரி வந்தால் முடிச்சிட்டுத்தான்’ என்றான்; நானும் விட்டுட்டன்.” தொடர்ந்து சமாளித்தான்.

‘என்ட தங்கச்சிக்கு மாப்பிள்ளை என்றதும் கண் முன்னால் இருந்த அவனைக் கேட்டுப் பார்க்கவில்லையா? அவனும் தன்ட தங்கச்சிக்கு மாப்பிள்ளை பார்க்கிறான் தானே? என்னை நிஷாவுக்கு செய்தால் என்ன என்று அவனுக்குத் தோன்ற இல்லையே!’ வேந்தனின் அடிமனதில் துளியாக விழுந்த ஏக்கம், சிறுக சிறுக வளர நினைக்குதே!

சின்னவயதிலிருந்து ஒரேதெருவில் கண்முன்னால் நடமாடிய நிஷா, இப்போதெல்லாம் இவன் கனவுகளிலும் தலைகாட்டுவதை இவன் மறந்தும் வெளியில் கசிய விடவில்லை.

“நீ பார்த்துக் கொண்டேயிரு மச்சான், இப்ப அவனுக்கு முப்பத்தி மூன்று; ஐம்பது வயசானாலும் இவன் கலியாணம் செய்யமாட்டான்.” மற்றவர்களைவிட, ஒரே தெருவில் வசிக்கும் வேந்தனும் அருளும் நெருக்கம் அதிகம். அருளின் குடும்பம் பற்றி மிகவும் நன்றாகத் தெரிந்திருந்ததால் ஆதங்கத்தில் முணுமுணுத்தான் வேந்தன்.

“டேய் ஏன்டா இப்படிப் புலம்புகிறாய்? ஹ்ம்ம்... அருமையான பெடியன் அருள்; முயன்று உன் தங்கச்சிக்கு செய்யப் பார். ஊரில் அவர்கள் வீட்டுக்குக் கிட்டத்தானே உங்க வீடும்; உன் அம்மா அப்பாவை போய்க் கதைக்கச் சொல்லன்.”

“பச்! அருள் நல்லவன் தான்; அவன்ட அப்பா பற்றி உனக்குத் தெரியாது மச்சான்; வம்பு பிடிச்ச ஆள். கூடவே வரட்டுக் கௌரவம். அது மட்டுமா? ஒரு இடக்கு முடக்கான ஆள். இவன் சம்மதிச்சா ஒருவேளை அவர்களும் சம்மதிப்பீனம் என்றுதான் கேட்டுப் பார்த்தன். என்ட அம்மா அப்பா கதைக்கப் போனால் அது இது என்று சொல்லி இன்னொரு வீடு கட்ட என்னட்ட இருந்து காசு பறிச்சிரும் அந்த மனிஷன்.” ஏளனமாகப் பழித்தான் வேந்தன்.

“என் தங்கச்சிக்கே என்றாலும் கொடுக்கிறதுக்கும் ஒரு அளவு இருக்குதானே மச்சான்; நாளைக்கு என்ட வாழ்வையும் பார்க்க வேணுமே! அதனால தான் ஒண்டும் கதைக்காம விட்டுட்டன்.” என்று நகர்ந்தவனை பேச்சற்று நோக்கினார்கள் நண்பர்கள்.

“சும்மா சொல்லக் கூடாதடா வேந்தன்; நீயும் நல்ல காரியவாதிதான். பிழைச்சுக் கொள்வாய்!” அவர்களின் ஒருவன் முணுமுணுத்தான்.

“மாடாக் கஷ்டப்பட்டுத் தோட்ட வேலை செய்து உழைக்கிறன் மச்சான். என்னதான் பழகினாலும், குளிருக்குள்ள தோட்ட வேலை செய்யிறது எவ்வளவு கஷ்டமென்று நான் சொல்லியா உனக்குத் தெரிய வேணும்? ஆற்றில போட்டாலும் அளந்து போடவேணும் என்ற கொள்கைதான் எனக்குப் பிடிக்கும்.” அறையிலிருந்தே குரல் தந்தான் வேந்தன்.

“ம்ம்...ஏதோ நீ சொல்லுறதும் சரிதான்! ஒத்த சதம் என்றாலும் கஷ்டப்பட்டு உழைச்சுப் பார்த்தாத் தான் அருமை தெரியும். அப்பிடி உடம்பு நோக உழைச்சு வார காசின்ட அருமை தெரிஞ்ச யாராலும் அத்தியாவசியத்துக்குத் தவிர, அளவு கணக்கில்லாம, அநியாயமாப் போகுதென்று தெரிஞ்சு கொண்டே எல்லாம் அள்ளிக் குடுக்க முடியாதுதான். அது இரத்த உறவே என்றாலும். ஹ்ம்ம்...நோகாம வந்தால் அள்ளித் தரலாம்... ” ஆமோதித்தான், இவனைக் காரியவாதி என்ற நண்பன். “அதிலும் அருள் போன்ற ஆக்கள் விதிவிலக்கு! செக்கு மாடு போல உழைச்சு தனக்கென்று ஒரு சதம் செலவழிக்காம வீட்டாக்கள் பற்றியே சிந்திக்கிறது...சுத்த முட்டாள்தனம் ...” தொடர்ந்து. சொன்னான்.

“சரி விடு, அது அவன் விருப்பம். அருள் வர இல்ல என்றால் பழசை சாப்பிட்டிட்டு இருக்கட்டும்; ஆறு மணிவாக்கில பிறந்தநாள் வீட்டுக்குப் போயிட்டு வருவம்.” முடிவெடுத்தவர்கள், தத்தம் வேலைகளில் மூழ்கினர்.

ஒன்றாக இருக்கும் நண்பர்களின் மனத்தாங்களுக்குப் பாத்திரமான அருள், அதையெல்லாம் உணரும் நிலையில் இல்லவே இல்லை.

மனம் என்ற ஒன்று இருக்கின்றதா? அவனுக்கே சந்தேகம் தரும் வகையில் நெஞ்சாங்கூடு வெறுமையை உணர்ந்தது.

தொண்டைவரை முட்டிய கயர்ப்பு, அவன் வாழ்வை; இத்தனை வருட கடின உழைப்பை; உடன் பிறப்புகள் என்று துடிக்கும் அவனின் பாசம் கொண்ட மனதை எள்ளி நகையாடியது.

கோபமும் ஆத்திரமும் வெறுப்பும் கட்டிப்பிடித்து ஆக்ரோஷமான கைகலப்பில் ஈடுபட்டிருக்க, இயந்திரமாகச் செயல்பட்டு, திட்டமிட்டபடி வெளி அலுவல்களை முடித்தவன், சில பொருட்களையும் வாங்கிக்கொண்டு வீடு திரும்ப, நண்பர்கள் பிறந்தநாள் வீடு சென்றிருந்தார்கள்.



 

ரோசி கஜன்

Administrator
Staff member
வெறிச்சென்றிருந்த வீடு, ஏதோ ஒருவகையில் அவன் மனதை வருடியது.

தேவையற்ற குடைச்சல் கேள்விகள், பார்வைகள், முணுமுணுப்புகள் இருக்காதே!

இரு சிறு அறைகள்; சிறு வரவேற்பறை; இருவர் நின்றால் முட்டிக் கொள்ளும் அளவில் சமையலறையும் அதோடு சேர்ந்த சிறு பால்கனியும்; குளியலறை, கழிப்பறை என இருசதுரங்கள்; இதே கட்டிடத்தில் சாமான்கள் போடும் நிலக்கீழ் அறை; இதுதான் இந்த ஐந்து பேருக்குமான உறைவிடம்.

ஒருவர் பங்குக்கு மாதம் ஐம்பது யூரோ வாடகையில் அரச மாடிக் குடியிருப்பு. தண்ணீர், மின்சாரம் அனைத்தும் இந்த ஐம்பதுக்குள் அடக்கம்.

இடப்பற்றாக்குறை மிகையாகவே உண்டென்றாலும், எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து நிற்பது மிக அபூர்வம் என்பதால், ஐவரும் சமாளித்துக் கொண்டார்கள். பகல், இரவு வேலை என வேலைநேரம் வெவ்வேறாக இருப்பதால் இடவசதியின்மை பெரிதாகத் தாக்கவில்லை.

ஏழுநாட்களும் வேலை செய்யும் இவனுக்கு, அதிஷ்டவசமாக இன்று சனிக்கிழமை வேலை இருக்கவில்லை.

நேற்றிரவு வேலையால் வந்தவனை அழைத்திருந்தார், இவன் அன்னை.

“என்னம்மா இந்த நேரம்? அங்க எத்தன மணி?”

“பன்னிரண்டு ஆகுதய்யா!” என்ற, தாயின் குரலின் வேறுபாட்டில் இவன் நெற்றி சுருங்கியது.

“ம்மா! ஏதாவது பிரச்சனையா? இவ்வளவு நேரம் முழிச்சிருந்தா வருத்தம் வராம வேற என்னம்மா வரும்? பிறகு, தல சுத்துது; நெஞ்சுக்க நோகுது என்று புலம்புங்கோ!” கோபப்பட்டான். அன்னை என்றால் இவனுக்கு எப்போதும் விசேஷம்.

“நித்திரை முழிச்சித்தானா வருத்தம் வரவேணும் தம்பி? பெத்த பிள்ளைகள் செய்யிற கூத்துகளிலும் நெஞ்சு நின்று போகும்.” அன்னையின் குரலின் வறட்சி, இவனை மிகவும் தொல்லை செய்தது.

“என்னம்மா நடந்திச்சு? அக்கா வந்திருந்தாளா? என்னவாம்? காசு ஏதாவது வேணுமென்று கேட்டவளா?” என்ற, இவன் குரலும் வறண்டு தான் வெளிப்பட்டது.

ஒருவர் தன்னை மிகவும் இலகுவாக ஏமாளியாக்குகிறார் என்று புரிந்தும் ‘பாசம்’ என்ற ஒன்றை அடையாளமாகக் கொண்டு ஏமாந்து போகிறானே! அது எத்தனை நாட்களுக்குத்தான் மனதில் இதம் பரப்பும்? இப்போதெல்லாம் தமக்கை பற்றி சிந்தித்தாலே இவன் மனம் தொட்டாச்சிணுங்கி ஆகிவிடுகின்றது.

“ஹ்ம்...அவளுக்கு போனமாதம் தானே லட்டுக் கணக்கா குடுத்திருக்கு!” கடினமாக ஆரம்பித்தார் தாய்.

“இங்கபாரு ராசா, உன்ர அப்பா நான் கதைக்கிறதக் காதிலயே வாங்கப் போறதில்ல. இத்தின வருசங்கள் வாங்காதவர் இனியா வாங்குவார்! அந்தாள் திருந்தாத ஜென்மம். ஆனா நீ...கொஞ்சம் புத்தியா நடந்துகொள் தம்பி. நீங்க ஐஞ்சு பேரும் எனக்குப் பிள்ளைகள் தான்; ஆனாலும், உன்ன எல்லாருமாக மொட்டை அடிக்கிறத என்னால பார்த்துக் கொண்டிருக்க முடியாது.” என்ற, அவன் தாயின் குரல் தழுதழுத்து விட்டது.

“அம்மா! என்ன நடந்திச்சி? இப்ப ஏன் இந்த சாமத்தில எடுத்துக் கண்ணக் கசக்கிறீங்க?” என்றவனுக்கு, நிச்சயம் சலிப்பு வந்திருந்தது.

வேலைக்குப் போய்விட்டுக் களைத்து வந்தவனை நிற்கவைத்து பழைய புராணம் படித்தால்!

“உன்ர அப்பா தூக்கிக் கொடுத்துக் களைக்க மாட்டார்; உன்ர அக்கா வாங்கிக் களைக்க மாட்டாள். ‘காதலிச்சுக் கலியாணம் செய்தாலும் அவள் என்ர மூத்தவள்; நாலு பிள்ளைகள் வேற. புருசனுக்கு வேல அப்பிடியும் இப்பிடியும். நம்மட்ட இருக்கேக்க குடுக்காம இருக்க முடியுமா? இப்ப என்ன, சீதனம் என்றா அவளுக்குக் குடுத்தம்!’ என்று சொல்லிச் சொல்லியே மாதம் மாதம் பணம் குடுத்து உன் அத்தானை முழுச்சோம்பேறி ஆக்கியது உன்ர அப்பாதான்.”

இதையெல்லாம் மகன் புரிந்து, பணம் அனுப்புவதைக் குறைக்க மாட்டானா என்கின்ற ஆதங்கம் தாய்க்கு.

“விடுங்கம்மா! அதப்பற்றி இப்ப ஏன் என்னட்ட சொல்லுறீங்க? ஒவ்வொருமுறையும் கடமை என்றதையும் கடந்து பாசமாகத்தான்மா காசு அனுப்புறன். அக்காவை விடுங்க, எனக்கு அவளைப் பற்றி எந்தக் கதையும் தேவையில்ல. நமக்கு விருப்பமில்ல என்ற பிறகும் வீம்புக்கு கலியாணம் செய்தாள்; இப்ப வந்து நின்று அப்பா பாசத்தை பயன்படுத்தி...பச்... அவளப் பற்றி எதுவுமே என்னட்ட சொல்ல வேணாம்.” என்றவன் குரலில் மிதமான கோபம்.

‘ஊரறிந்த குடிகாரன்; ஊதாரி. இதெல்லாம் தெரிஞ்சும் காதல், கலியாணம் என்று என்ன பாடுபடுத்தினாள். கொள்ளிக்கட்டையால் தலையைச் சொரிஞ்சா புண்ணாகும் தான். பிறகு, மருந்து போட நாங்க வேணுமாமா?’ இப்படி மனதில் கொதிப்பவன், தான் அனுப்பும் பணத்தில் அக்காவுக்கு என்று தந்தை கொடுப்பதைத் தடுக்கும் வழிதெரியாது வாய் மூடிவிடுவான்.

“இப்ப பணம் அனுப்ப முடியாது என்றால் என்ன செய்வீங்க?” இப்படிக் கேட்பதை அவனால் நினைத்தும் பார்க்க முடிவதில்லை.

இவன் சிறிதாக ஆட்சேபக்குரல் எழுப்பினால், வெகுவாக வெகுண்டு விடுவார் அவன் தந்தை.

“என்ர உழைப்பில செய்த நகைகளை, காணியை விற்று, அங்க இங்க கடன்பட்டு உன்ன வெளிநாடு அனுப்பி வச்சா என்னட்டயே கேள்வி கேட்பாயா?” என்று உச்சஸ்தானியில் கத்தி, அங்கிருந்தே இவன் தலையைக்குனிய வைத்துவிடுவார் மனிதன்.

மகன் ரோசக்காரன் என்று தெரிந்தவர், எதைக் கதைத்தால் அவன் வாயை இறுக மூட வைக்கலாம் என்று அறிந்தவர் அதைப் பயன்படுத்திவிடுவார்.

“இப்ப, உன்ர தம்பி மோட்டார் சைக்கில் வாங்கக் காசு கேட்டானாமே!” சிறு அமைதியை விரட்டினார் தாய்.

“ம்ம்...கேட்டான் தான்மா. அடுத்த மாதம் வாக்கில தாறன் என்றன். என்ன செய்கிறான்? டெக்னிகல் காலேஜூக்கு ஒழுங்காப் போறானா?”

“எதையோ படிக்கிறான் ராசா. அதைவிட பகட்டுத்தான் அதிகம். வீட்டில சமைச்சாலும் கடையில சாப்பிட்டுட்டு, ஃப்ரெண்ட்ஸ் அப்படி இப்படி என்று திரிகிறான். அதைப் பார்க்க உன் அப்பாவுக்குத் துப்பில்ல. ஊர் நியாயம் பேசிக் கொண்டு திரியுது அந்தாள். இந்த அழகில் மோட்டார் சைக்கில் ஒன்றுதான் இல்லாத குறை; பொறுப்பில்லாதவன்.” கசப்புடன் சொன்னார் தாய்.



“என்னம்மா சொல்லுறீங்க?” கொஞ்சம் பதறினாலும், தம்பிக்கு உயர்தரப் பரீட்சையில்(பிளஸ் 2) நல்ல பெறுபேறுகள் வரவில்லை என்றதிலிருந்து தாயின் புலம்பல் இதுதான் என்பதை நன்கறிந்திருந்தவன், அன்னையை சமாதானம் செய்ய முயன்றான்.

“படிப்பு எல்லாருக்கும் வராதம்மா. அதைவிட, எல்லாரும் கம்பஸுக்கு போவதென்றதும் சரிவராது தானே? ஏதோ அவனுக்கு வருவதை படித்து ஒருவேலையைத் தேடி, தன் காலில் நிற்கட்டும். இருபத்தியொரு வயதுதானே! போக போக பொறுப்புத் தானாக வரும்.”

“போடா தம்பி. நீ வெளிநாடு போக ஆயத்தம் செய்யேக்க உனக்கு எத்தின வயது? உனக்கு அந்த வயதில பொறுப்பு வர இல்லையா? இது எல்லாம் அளவுக்கு அதிகமாகக் கிடைக்கிறதால வார மிதப்பு! இப்பிடியே போனான் என்றால் அவன் குட்டிச் சுவர்தான்! அவனுக்கு மோட்டாருக்கு காசு அனுப்ப வேணாம் தம்பி; அவன் உழைச்சு வாங்கட்டும். அப்பத்தான் அருமை தெரியும்.” ஒருபோதுமின்றி தாயின் படபடப்பில் இவன் மிகவும் குழம்பிவிட்டான்.

‘எதுவோ நடந்திருக்கு! இல்லையோ அம்மா இப்படி நேரம் கெட்ட நேரத்தில் எடுத்துக் கலங்க மாட்டார்.’ நினைத்துக்கொண்டே எழுந்தவன், அருகில் தன் நண்பர்கள் இருப்பதால் மெல்ல வெளிவாயிலைத் திறந்து பாதையால் இறங்கி ஓரமாக நடக்கத் தொடங்கினான்.

“தங்கச்சிகள் எப்படிம்மா இருக்கீனம்? எல்லாரையும் பார்க்க ஆசையா இருக்கம்மா! நிஷாவுக்கு ஒரு கல்யாணம் சரிவந்தால் அதைச் சாட்டாக வச்சு ஓடி வந்திருவன்.” என்ற மகன் குரலில் தொனித்த ஏக்கத்தில், தாய் மனம் உருகி விழிகளைக் கடந்தது!

“என் பிள்ள சுமைதாங்கியாகீட்டான்! இந்த வீட்டில உள்ள நன்றி கெட்டதுகளுக்கு அது புரியுதில்லையே!” வாய்விட்டே அரட்டியவர், கொஞ்சம் தள்ளி அமர்ந்திருந்த மகள் நிஷாவை நெருப்பாகச் சுட்டார்.

அவளோ, கதிரைக்குள்(இருக்கை) உடலைக் குறுக்கி, குன்றலும் கண்ணீருமாக அமர்ந்திருந்தாள்.

‘அண்ணா என்னைப் பற்றி என்ன நினைத்துக் கொள்வார்!?” இந்த எண்ணமே அவள் மனதைக் கிழித்துக் கொண்டிருக்க, “நான் ஏன் இப்படி எல்லாம் நடந்து கொண்டன்? எனக்குள்ள சாத்தான் பூந்திட்டானோ! இதை எல்லாம் ஒன்றுமே இல்லை என்று மாற்ற முடிந்தால்; என்ர மனம் அதுக்கு இசையுமா?’ தமையனின் நம்பிக்கையை அழிக்கும் வேலையைச் செய்த தன்னையே தான் சபித்து, கண்ணீரில் கரைந்தாள் நிஷா.

தாய் சுமைதாங்கி என்றதும், “பச்... என்னம்மா இது? நான் அப்பிடி எல்லாம் நினைக்க இல்லையம்மா.” என்றவன், தாய் தொடர்ந்து சொல்ல, பேச்சை நிறுத்தி விட்டான்.

“அம்மா! என்னம்மா நடந்திச்சி?”

“சின்னவள் தர்சி உன் நம்பிக்கையைப் பொய்யாக்க மாட்டாள் தம்பி. அந்த நம்பிக்க எனக்கும் மலையளவு இருக்கு.” சொன்னவரின் விசும்பல் சத்தம் இவன் தேகத்தை நடுங்க வைத்தது.

“அப்ப! நிஷா? நிஷா எங்கம்மா? அவளுக்கு என்ன?” அவன் செல்லத் தங்கை அல்லவா அவள்! மிகையாகப் பதறிவிட்டான்.

தாயோ, அமைதி காக்க காக்க இவனின் இதயத் துடிப்பு எகிறியது!

கடைசியாக, குரலை உயர்த்தி, உலுக்கி இவன் கேட்க, அவர் சொன்னதோ இவனை அப்படியே உறையச் செய்துவிட்டது.

வெளிப்புறத்தில் நன்றாகப் பரவியிருந்த குளிரையும் தோற்கச் செய்து கோபத்தில் உடல் தகித்துப் போனான் அருள்.



“இப்ப அவள் எங்க?

“விசரி தம்பி, வடிகட்டின விசரி; இந்தா இருக்கிறாள் ராசா.”

“அவளிட்ட ஃபோனக் குடுங்க.” என்ற மகன், அந்நியம் ஆகிவிட்டான் என்றுணர்ந்தார் தாய்.

தங்கையோடு கதைத்துவிட்டு வைத்தவன் செவிகளில், “அண்ணா மன்னிச்சுக் கொள்ளுங்கண்ணா; மன்னிச்சுக்கொள்ளுங்க.” செல்லத் தங்கையின் தீனக்குரலே ரீங்காரமிட்டுக் கொண்டிருந்தது.

என்றைக்குமே இவன் தம்பி, தங்கைகள் இவனை எதிர்த்து ஒத்த சொல் சொன்னதில்லை. இவன் வெளிநாடு வர முன்னிருந்தே அவர்கள் அப்படித்தான். “அண்ணா சொன்னார்.” என்றால் மறுபேச்சு பேசமாட்டார்கள்.

 

ரோசி கஜன்

Administrator
Staff member
இன்றும், அவன் பேசிய அத்தனை கொதிப்பான வார்த்தைகளுக்கும் கேள்விகளுக்கும் அவள் தந்த பதில் அழுகையோடு மிகவும் அடங்கியே வந்திருந்தது.

‘என்ர தங்கச்சியா இப்படி? என்ர நிஷாவா?’ உள்ளம் தகிக்க வீடு வந்தவனின் சிந்தை முழுவதும் தங்கை சொன்னவற்றைச் சிந்திக்க, அமைதியின்மையில் உறக்கமின்றி உழன்றவன் காலை எழுந்ததும் மீண்டும் தங்கைக்கு அழைத்தான்.

மனதில் கொளுந்துவிட்டெரிந்த ஆத்திரத்தைக் கடந்து யோசிக்கையில் சிறுபொறியாகத் தோன்றிய சந்தேகத்தில் தங்கையோடு கதைத்தவன், முடிவில், கொலைவெறி கூத்தாட, அதை அடக்கப் பெரும் பாடுபட்டுவிட்டான்.

இடையில், நண்பர்களின் கலாட்டாக்கள்; குத்தல் கதைகள்; கேலிகள் செவிகளை செவிடாக்கிட மரத்துப் போனான் அவன்.

அப்போதே வீடு செல்வதாக முடிவெடுத்து, பயணச்சீட்டும் எடுத்துவிட்டே நண்பர்களிடம் சொல்லியிருந்தான்.

அதைக் கேட்டவர்களின் காலாட்டக்களை காதிலும் வாங்கிக் கொள்ளவில்லை அவன்.

அவன் பிரச்சனை அவனுக்கல்லவா தெரியும்?

இதையெல்லாம் சபையில் வைத்து ஆற அமரப் பேசி உரையாடவா முடியும்?

நண்பர்களே என்றாலும் பகிர்ந்து விவாதம் செய்யக்கூடிய விசயமா இது?

என் தங்கையின் வாழ்வு அங்கே உள்ளதே! என்னதான் தங்கை மீது தீராத கோபம் ஏற்பட்டிருந்தாலும், அவள் வாழ்வில் சிறுகறையும் வர அவன் இடம் கொடான்.

“இதுவரைக்கும் எவ்வளவு கஷ்டப்பட்டன்?! அவே தங்கட வாழ்க்கையில துன்பப்படுறதக் காணவா இந்தக் கஷ்டம் எல்லாம்?” வாய்விட்டே அரட்டியவன் கண்கள் கலங்கிவிட்டன!

“முட்டாள் முட்டாள்!” தங்கையைத் திட்டினான்.

செய்திகள், பத்திரிகைகள் மட்டுமின்றி இப்போதெல்லாம் ஒவ்வொருவரின் பேச்சிலும் அடிக்கடி இடம் பெறும் நவீன அவலங்கள் ஒவ்வொன்றும் அவன் மனதில் வந்து வந்து போனது.

பாவம், ஐந்தறிவுள்ள ‘விட்டில் பூச்சிகள்’! வெளிச்சத்தை நாடிச் சென்று சுற்றி சுற்றி குதூகலித்துவிட்டு, அதில் விழுந்தே உயிரை மாய்த்துக் கொள்ளுமே!

ஆறறிவிருந்தும் இவர்களும் இதைத்தானே செய்யத் துணிகின்றார்கள்!

நெருப்பென்று இனம் காண முடியாதவர்களா இவர்கள்?!

படித்திருந்தென்ன! அறிவிருந்தென்ன! பகுத்தறியும் தன்மையை இழந்தல்லவா நிற்கிறார்கள்?

எவ்வளவுதான் முன்மாதிரியாக அவலங்கள் நடந்தேறினாலும் மீண்டும் மீண்டும் அதற்குள் சென்று மாட்டிக் கொள்கிறார்களே!

எல்லாவற்றின் முடிவில், தம் செயல்களுக்கு சாதகமான விளக்கங்களையும் அல்லவா முன்வைக்கிறார்கள்.

அவன் மனம் பதறியது! ஒரே நாளில், பல வயதுகளைக் கடந்து விட்ட மூப்பை அவன் இதயம் உணர்ந்து கொண்டது.

பத்து வருடங்களுக்குப் பின், சொந்தநாட்டையும் வீட்டையும் காணப்போகிறோம் எனும் மகிழ்வு, துளியும் அவனுள் வர மறுத்தது.

உற்ற உறவுகளில் மிகுந்த பற்று வைத்திருந்தவனின் இதயம் உணர்வின்றியிருக்க, இயந்திரமாக நிற்கிறான் அருள்.

‘வசதி வாய்ப்புகள் ஒருவர் வாழ்வில் இப்பிடியும் விளையாடுமா? அட விளையாடுமே! எதுவும் அளவுக்கு மிஞ்சினால் நஞ்சுதான். ஆனால் என்ன, அமிர்தமாக ருசித்து உண்ணும் வகையில அந்த நஞ்சு இருந்து தொலைக்கும். அது தன் குணத்தைக் காட்டி, ஒவ்வாது என்று சுதாகரிக்க முதல் ஆளை விளுங்கி விடும்!’ அவன் உதடுகளை உரசிய கசந்த முறுவல் கூட, தயக்கத்துடன் எட்டிப் பார்த்துச் சென்றது.

அத்தி பூத்தாற்போல் அமையும் விடுமுறைநாட்களை மிகவும் ஆவலாய் எதிர்பார்ப்பவன் இவன்.

இன்று, அந்த நாள் ஏன் வந்தது என்று நொந்து கொண்டான்.

ஊசி விழுந்த ஒலி தெளிவாகக் கேட்கும் வகையில் அமைதியாக இருந்த வீட்டில், இப்போது, வெகுவாய் மூச்சு முட்டுவதாக உணர்ந்தான் அருள்.

மனதின் வெம்மை உடலை ஆக்கிரமிக்க, முதல் நாள் பகல் உண்ட பாணுக்குப் பிறகு எதையுமே ஒழுங்காக உண்ணாதிருந்தவன், கடமைக்காகவேனும் வயிற்றில் எதையாவது தள்ளுவோம் என சமையலறையை நாடினான்.

கசப்போடு எழுந்த ஆத்திரத்தை விழுங்கிக்கொண்டே சமையலறை அலுமாரியைக் குடைந்து, குளிர்சாதனப் பெட்டியைத் தடவி ஒருமாதிரி ஒரு ஆம்லட்டும் சில வாட்டிய பாண் துண்டுக்களுமாக தன் இரவுணவை முடித்துக் கொண்டான்.

அதே வேகத்தில் நிலக்கீழ் அறையிலிருந்து தனது பயணப் பையை தூசுதட்டி எடுத்து வந்தவன், பயணத்துக்குத் தேவையான ஆயத்தங்களைச் செய்யத் தொடங்கினான்.

‘சரி, இப்ப ஊருக்குப் போறன்; அங்க போய்?’ அவன் மனதில் புதிதாக ஒரு கேள்வி மெல்ல எட்டிப் பார்த்தது.

ஏற்கனவே, குற்ற உணர்விலும் பலத்த ஏமாற்ற உணர்விலும் சிக்கித் தவிக்கும் நிஷாவை இன்னும் குன்ற வைக்கவா போறன்?!

சட்டென்று எல்லாவற்றையும் அப்படியே போட்டுவிட்டு எழுந்தான் அருள்.

பால்கனியைத் திறந்து வெளியில் சென்றவன், சிலுசிலுத்த பனிக்காற்றில் தேகம் விறைத்தாலும் அதை உணராது சிந்தை கலங்கி நின்றான்.

எவ்வளவு நேரம் அப்படியே நின்றிருப்பானோ தெரியாது, விருட்டென்று உள்ளே நுழைந்தவன் மணியைப் பார்த்தான்; அது, இரவு எட்டை நெருங்க முயன்று கொண்டிருந்தது.

ஓர் தீர்மானத்துக்கு வந்தவன் போல் கைபேசியை இயக்கி, காதில் பதித்துக்கொண்டே மீண்டும் பால்கனியை நாடினான்.

“சொல்லு மச்சான், வீட்ட வந்திட்டாயா? எதையாவது கொட்டிக் கொண்டாயா? இல்லை என்றால் இங்க வாவன்டா; பத்து மணிக்கு மேல தான் சாப்பாட்டைப் பற்றி யோசிப்பீனம்.” அக்கறையாக விசாரித்து, பிறந்த நாள் வீட்டுக்கு வரும் படி அழைத்தான், வேந்தன்.

“நான் சாப்பிட்டிட்டன் வேந்தன். நீ என்ன செய்யிறாய்?”

“ஹா..ஹா...இது என்ன கேள்வி? பிறந்த நாள் வீட்டில வந்து நீச்சலா அடிப்பம் மச்சான்??” கேலியாகத் தொடர்ந்தான் வேந்தன்.

“குடிச்சுக் கொண்டிருக்கிறயா வேந்தன்?” கேட்டவன் குரலில் பட்டும் படாமலும் கண்டிப்பின் சாயல்.

“மச்சான், இந்த கிண்டல் தானே வேண்டாம் என்கிறது? எல்லாரும் உன்னப் போல இருக்க முடியாதடா! நான் என்ன மொடாக் குடியனா? ஏதோ இப்பிடிப் பிறந்தநாள்விழா, விஷேசம் என்றால் மற்றவையோட சேர்ந்து பம்பலுக்கு ஒரு ரவுண்ட்; என்ர லிமிட் தெரியும் அருள்.” என்றவன், “மற்ற மூன்று பேரையும் தூக்கித்தான் காருக்குள்ள ஏத்த வேணும். இப்பவே உளறத் தொடங்கீட்டான்கள்; ஆனாலும் விடுவான்களா?” சிரித்தான்.
 

ரோசி கஜன்

Administrator
Staff member

“ஓ! உனக்கு உன்னைப் பார்த்துக் கொள்ளத் தெரியும் என்று எனக்கும் தெரியும் மச்சான்.” என்ற அருள், கொஞ்சம் தடுமாறினான். ஆனாலும் ஒரு முடிவுடன் தொடர்ந்தான்.

“இப்ப ஏன் எடுத்தன் என்றா... உன்னோட கொஞ்சம்... கதைக்க வேணும் மச்சான். இப்ப...இப்ப வர ஏலுமா? பிறகு அவன்களைப் போய் கூட்டிக்கொண்டு வரலாம்.” என்று அவன் சொல்கையில், விறுவிறுவென்று வெளியேறிக் கொண்டிருந்தான் வேந்தன்.

“அருள், இந்தா பத்து நிமிசத்தில வீட்டில் நிப்பன்.” சொல்லிக் கொண்டே காரில் ஏறியவனை, “மச்சான் சாப்பிட்டிட்டு வாடா; ஆசையாப் போனாயே!” என்றான் அருள்.

“ப்ச்..பரவாயில்ல விடு! நீ எதைச் சாப்பிட்டியோ அதையே வந்து சாப்பிடுறன்.” என்றவன், ஃபோனை நிறுத்தி வைத்துவிட்டு காரைக் கிளப்பினான்.



பத்து நிமிடத்தில் விரைந்து வந்திருந்த வேந்தன், வீட்டின் அருகிலிருந்த நிறுத்துமிடத்தில் காரை விட்ட வேகத்தில் வீட்டினுள் நுழைந்தான்.

‘ஊரில தான் எதுவோ நடந்திருக்கு! அதுதான் இவன் ஆளே சரியில்லாமல் இருக்கிறான். என்னவென்று என்னிடம் சொல்வானா?’ உள்மனம் முனகியது.

ஏதேதோ எண்ணங்கள் எட்டிப் பார்த்தன! அவற்றினிடையே இலேசாக எட்டிப் பார்த்தாள் நிஷா.

‘மனதில் உள்ள விருப்பத்தை வெளியே சொல்லும் தைரியம் இல்லாமல் இருக்கிறனே! உன் தங்கச்சிக்கு ஊரெல்லாம் மாப்பிள்ளை பார்க்கிறாயே! ஏன், நான் அவளுக்குப் பொருத்தமானவன் இல்லையா அருள்?’ என்று, இவனின் நாக்கு நுனியில் துருத்தும் வார்த்தைகள் வெளியே வரமுனையாது பரிதாபமாக பின்வாங்கிவிடுமே!

‘சரி, என்ட தங்கச்சிக்கு அவனைக் கேட்டுப் பார்ப்பம்; அப்ப சரி அவன் நினைவில் நான் விழுவேனா பார்ப்பம்!’ என்றிருந்த சிறு நப்பாசையும் அவன் பதிலில் அடங்கிவிட்டது.

‘இவன் இந்தளவுக்கு குழம்ப என்ன நடந்திருக்கும்? ஒருவேளை அவள் அக்கா போல நிஷாவும் யாரையாவது காதலிச்சு தன்னிஷ்டத்துக்கு போய்விட்டாளோ!’ இப்படித்தான் அவன் மனம் சட்டென்று எண்ணிக் கொண்டது.

சிறிதாக மனதில் பரவ முயன்ற ஏமாற்ற உணர்வும் சிறு பதைபதைப்புமாக வீட்டினுள் நுழைந்தவனை ஆம்லட், வாட்டிய பாண் சகிதம் வரவேற்றான் அருள்.

“ஹா..ஹா..” தன்னைமறந்து நகைத்தான் வேந்தன்.

“மச்சான் ஆட்டிறைச்சிக்கொத்துடா! அதை விட்டுட்டு வந்திருக்கிறன்.” சிரிப்போடு சொன்னவன், “சாந்தன் அண்ணாவுக்கு ஒரு ஃபோனைப் போட்டு உனக்கும் சேர்த்தே பார்ஸல் அனுப்பச் சொல்லுவமா?” என்றவன், அருளின் முறைப்பில் அமைதியாகப் பாணைக் கடித்தான்.

“ஏன்டா இப்படி சாப்பாட்டுக்கு அலைகிறாய்? இப்ப என்ன, ஆட்டிறைச்சிக்கொத்துத் தானே வேணும்? பொறு, ஊருக்குப் போயிட்டு வந்த பிறகு ஒருநாளைக்கு செய்து தாறன்.” என்ற நண்பனை உற்றுப் பார்த்தான் வேந்தன்.

அவன் முகம் ஏதோ ஒரு தீர்மானத்தோடு தெளிந்திருப்பதைக் கண்டவன், “அதைவிடு மச்சான்; நீ செய்து தரும் போது சாப்பிட்டுக் கொள்ளுறன்.” கேலியாக ஆரம்பித்து, “என்ன விஷயம் மச்சான்? ஊரில் ஏதாவது பிரச்சனையா?” தொடர்ந்தான்.

நண்பனின் அருகில் அமைதியாக அமர்ந்துகொண்ட அருள், சிறிது நேரம் எதையும் பேசவில்லை.

“மச்சான், நான் இப்ப சொல்லப் போறது நமக்கு ரெண்டு பேருக்குள்ளயும் இருக்க வேணும். யாரிட்டயாவது சொல்லாட்டி என்ட மண்டை வெடிச்சிரும் போல இருக்குடா!” என்றவன், கண்கள் கலங்கியதைக் கண்டு திடுக்கிட்டுவிட்டான் வேந்தன்.

வாயில் அடைத்த பாணை முழுங்கியவாறே தட்டை நிலத்தில் வைத்துவிட்டு, “டேய் அருள்... என்ன பிரச்சனையடா? உன்ர வீட்டில ஏதாவது பிரச்சனையா? உன்ர அக்கா...அத்தான்...” தொடர்ந்து கேட்கத் தயங்கியவாறே அருளின் கரத்தைப் பற்றியவன், “என்னட்ட சொல்லுறது எதையும் எந்தக்காலத்திலும் வெளிய சொல்லமாட்டன் அருள். உனக்குத்தான் நான் மற்றவர்களில ஒருத்தன்; யாரோ. உன்ன நான் அப்பிடி நினைக்க இல்ல. எப்போதுமே நீ எனக்கு தனி மச்சான்.” என்றவன் குரலும் முகமும் இறுகிவிட்டது.

“ஒருநாளும் நீ மனம் விட்டுக் கதைக்க வேணுமென்று நினைக்கிறதில்லையே! நேற்றில இருந்து எவ்வளவு கேட்டிட்டன். சரி, எல்லாரும் இருக்கேக்கச் சொல்லப் பிடிக்க இல்ல என்றால் தனியாப் போய்க் கதைக்க முடியாதா?” எனக் காட்டமாகத் தொடங்கியவன், நண்பனின் முகம் மீண்டும் கன்றிவிட்டதைப் பார்த்து, “இப்ப சரி சொல்லு; என்ன பிரச்சன?” என்றவன் குரலில் ஆதரவு நிறைந்திருந்தது.

“நிஷா ..நிஷாதான்டா...” என்று ஆரம்பித்த அருள், இவன் மனதை, திக்கென்று திடுக்கிட வைத்தான்.

“நிஷாவுக்கு என்ன அருள்?” என்றவன்,குரல் மிகவும் இறங்கியிருந்தது.

‘ஆஹ...அவள் யாரையோ காதலிச்சிட்டாள் போல! தமக்கை போல வீட்டை விட்டும் போய்ட்டாளோ! ஆனால், அவள் அப்படிப்பட்டவள் இல்லையே! நிச்சயம் அப்படியெல்லாம் நடந்திருக்க மாட்டாள்.’ இவன் எண்ணம் முடுக்கிக் கொண்டு புறப்பட்டிருந்தது.

அருளோ தலை குனிந்திருந்தான். ‘எப்படிச் சொல்வது?’ அவமானம் பிடுங்கித் தின்றது.

‘இத்தின நாள் ஒன்றாக இருந்தும் கேட்காத நான், இப்ப இப்பிடிக் கேட்டால் என்னைப் பற்றி என்ன நினைப்பான்? பச்சைச் சுயநலவாதி என்றா? நினைச்சுப்போட்டுப் போகட்டுமே! அவனுக்கு விருப்பமா என்றுதானே கேட்கப் போறன். இது எல்லாம் கட்டாயப்படுத்திற விசயமா?’ என்ற எண்ணமோட, தங்கை மீது கொண்ட அளவு கடந்த பாசம், நண்பனை நிமிர்ந்து பார்க்க வைத்தது.

“நிஷாவுக்கு ஒரு பொருத்தம் சரி வந்திருக்காம் வேந்தன்; மாப்பிள்ள யாழ்ப்பாணம் தானாம்.”

“ஓ!” மேலே சொல் என்பதாக பார்த்தாலும் வேந்தன் மிகவும் குழம்பிவிட்டான்.


‘அப்ப, காதல் பிரச்சனை இல்லை. உள்ளூர் மாப்பிள்ளை என்றால் ...ஹ்ம்ம்...நிறையச் சீதனம் கேட்கிறார்களோ! என்னட்ட கேட்கப் போறானோ! ச்சா...மாடாக உழைத்துச் சேர்த்து வச்சிருக்கிறானே; காசு ஒரு பிரச்சனையாக இருக்காது. கண்ணுக்கு முன்னால் இருக்கும் நானெல்லாம் இவன் பார்வைக்கு மாப்பிள்ளையாகத் தெரியமாட்டனே! கட்டினால் யாழ்ப்பாணப் பிரபுவைத்தான் கட்டிக் கொடுப்பார்களாமே!’ புலம்பலோடு நண்பனை நோக்கினான்.

அவனோ, “இப்ப வந்து, தான் ஒருத்தனைக் காதலிக்கிறன் என்று சொல்கிறாளாம்டா!” என்று குரல் கம்மச் சொல்லி, வேந்தனை நிமிர்ந்து அமர வைத்தான்.

“என்ன மச்சான் சொல்கிறாய்?! நிஷாவா?”

“இதே அதிர்ச்சிதான்டா எனக்கும். அவளில் எவ்வளவு நம்பிக்கை வச்சிருந்தன். எல்லாத்தையும் சுட்டுப் பொசுக்கிப் போட்டாள். சரிதான் போடி; எக்கேடும் கெட்டுப் போ என்று எப்படிடா உதறுறது?” கண்கள் பளபளக்க அவன் பார்த்த பார்வையில் திடுக்கிட்டு விட்டான் வேந்தன் .

“என்ன பிரச்சின அருள்? முழுதாகச் சொல்லாமல் இப்பிடிச் சொல்லி என்னைக் குழப்பிறாய். நிஷா அப்படி ஒன்றும் முட்டாள் இல்ல. ஏன் அவன் நல்லவன் இல்லையா? நம்ம குடும்பத்துக்கு சரி வரமாட்டானா? எந்த ஊர்? என்ன செய்றான்?” கேள்விகளை அடுக்கினான்.

“அந்த மானக்கேட்டை நான் எப்பிடிடா சட்டுப்புட்டென்று சொல்லுறது!” என்ற அருள், எழுந்துபோய், தனது சிறு கையடக்கக் கமராவை எடுத்து வந்தான்.

எப்போதாவது விழாக்களுக்குப் போனால் வீட்டுக்கு அனுப்ப என்று படங்கள் எடுப்பான். ‘இதை ஏன் இப்பக் கொண்டு வாறான்?’ என்ற யோசனையோடு பார்த்தான் வேந்தன்.

கமராவை இயக்கித் தட்டிக்கொண்டே போனவன், “இந்தப் படத்தப் பார்.” கமராவைக் கொடுக்க வாங்கி விழிகளை அதில் பதித்தவன் முகம் சட்டென்று சுருங்கியது.

“அட..நம்ம தோசை குடும்பம்.” என்றவன் முகத்தில் அத்தனை குழப்பத்திலும் நகைப்பு மலர்ந்தது.

“மச்சான், இவனும் ஒரு ஆளென்று இவன் ஃபோட்டோவை வேற வச்சிருக்கிறாயே! பார், என்ன மாதிரி ஜம்மென்று நிக்கிறான், ராஸ்கல்! இவன் மனிஷி, ஐஞ்சு பேருக்கு பத்துத் தோசை என்று கணக்குப் பார்த்துத் தர, நானும் அழகாச் சிரிச்சுக்கொண்டு வாங்கி முழுங்கீட்டு, ‘அட நம்ம முன் வீட்டில் இருக்கீனமே, இப்பிடி அப்பப்ப அளந்துசரி வீட்டுச் சாப்பாடு கிடைக்குமே’ என்று காணுற இடங்களில ரெண்டு வார்த்தைகள் கதைச்சுச் சிரிக்க, இந்த நாசமாப் போனவன் தன் பெஞ்சாதியை நான் சைட் அடிக்கிறன் என்று சண்டைக்கு வர இல்லையா? மறக்குமாடா இவனை? ராஸ்கல்!” என்று சொல்லிக்கொண்டே பல்லைக் கடித்தவன், சட்டென்று நிமிர்ந்து நண்பனைப் பார்த்தான்.

“இப்ப இவன் ஃபோட்டோவை ஏன் காட்டிறாய்? இப்ப இவனுக்கு ரெண்டு பிள்ளைகளாம்; இங்க இருந்து லண்டன் போய் ரெண்டு வருசங்கள் இருக்கும் தானே? இந்த முறை லண்டன் போன நம்ம கடைக்கார அண்ணா கண்டு கதைச்சதாக அன்றைக்குச் சொல்லிக் கொண்டிருந்தார்.” என்றவன், மீண்டும் நண்பனைக் கேள்வியாகப் பார்த்தான்.

“இந்த ராஸ்கல் நிஷாவின் பேஸ்புக் ஃப்ரெண்டாம்! பார் கொடுமைய; அதில கதைச்சு கதைச்சு காதலாம்..” என்று அருள் சொல்லிக் கொண்டிருக்க கையிலிருந்த கமரா கீழே தெறித்து விழ விருட்டென்று எழுந்தான் வேந்தன்.

“என்னடா அருள் சொல்லுறாய்?

“கேட்க உனக்கே இப்பிடி இருக்கே எனக்கு எப்பிடி இருந்திருக்கும். ‘இப்பிடிக் காதலிக்கிறாள் தம்பி; லண்டன் பெடியன்; விசாரிச்சுப் பார்த்து நல்லவன் என்றால் கட்டி வைப்பம்.’ என்றுதான் அம்மா சொன்னார். எனக்கு வந்த ஆத்திரத்தில அவள நல்லாத் திட்டிப்போட்டன். ஒழுங்கான வளர்ப்பு வளர்ந்த ஒருத்திக்கு இப்படியெல்லாம் புத்தி போகுமா என்று கேட்டுட்டன். பிறகுதான் விபரம் கேட்க, பெயரையும் லண்டனில இருக்கிறான் என்றும் சொன்னாள். வெளிநாட்டில அண்ணா இருக்கிறன் என்றால் சீதனம் கேட்டாலும் என்று நான் இங்க இருக்கிறதை அவனிட்டச் சொல்ல இல்லையாம். பார், அவ்வளவு புத்திசாலி என் தங்கச்சி!” சொன்னவன் குரலில் வெறுப்பும் கசப்பும்!

“ ‘சுதாகர் ரெண்டு வருசங்களுக்கு முதல் வரை நெதர்லாந்தில இருந்திட்டு லண்டன் போனவர்’ என்றாளா! உடனே எனக்கு நினைவு வர இல்ல. இரவு யோசிச்சுப் பார்க்கேக்க தற்செயலாத் தான் நம்ம முன் வீட்டில இருந்தவனும் சுதாகர் தானே என்று நினைவு வந்திச்சு. ஆனாலும், கல்யாணம் செய்தவன்; பிள்ள குட்டிக்காரன்; நம்பிக்கை இல்லாமல் தான் காலம காட்டி அவன்ட ஃபோட்டோ இருந்தாத் தா என்றன். அனுப்பி விட்டாள் மச்சான்.” சொல்லி நிறுத்தியவன், அந்தப் புகைப்படத்தைப் பார்த்ததும் தான் அடைந்த அதிர்வை இப்போதும் உணர்ந்தான்.
 

ரோசி கஜன்

Administrator
Staff member
“உன்ர ஃபோட்டோவையும் குடுத்தனியா என்றதுக்கு, ‘இல்லையண்ணா நான் பேஸ்புக்கிலும் ஃபோட்டோ போடுறதில்ல. அவர் கேட்டவர் தான்; பிறகு தாரன் என்று சொன்னன். இப்ப மூன்று மாதங்களாத் தான் சட் பண்ணுறம்.’ என்றாள். ஃபோட்டோ குடுக்க இல்ல என்றது கூட உண்மையா? பொய்யா? அவளில் இருந்த மொத்த நம்பிக்கையும் போச்சு வேந்தன்.” அங்கலாய்த்தவன்,

“இந்த ராஸ்கலின் குடும்பப்படத்தை அவளுக்கு அனுப்பி, ‘ஏற்கனவே கலியாணம் செய்தவன் அவன்; இதுதான்டி இன்டர்நெட் காதலின் அழகு!’ என்றதும் ஓவென்று அழுகிறாள்.” என்றுவிட்டு, கனத்த தலையை கரங்களில் தாங்கிக்கொண்டு குனிந்தான் அருள்.



தொப்பென்று அவனருகில் அமர்ந்து கொண்ட வேந்தனால் நடந்ததை கொஞ்சமும் ஜீரணிக்கவே முடியவில்லை.

இப்படியான செய்திகள் அப்படியும் இப்படியும் பரவலாகப் பேசப்பட்டாலும் நம் ஊர், நமக்குத் தெரிந்த பிள்ளைகளும் இதற்கு விதிவிலக்கல்ல எனும் போது அது பெருத்த அதிர்ச்சி தானே!?

சிலவருடங்களுக்கு முன் எப்படி இருந்த ஊர்? நல்லவைகளையும் துறக்க வேண்டுமா? அதுதான் நாகரீக வளர்ச்சியா?

அங்கு நீண்ட மௌனம் நிலவியது.

“விடக் கூடாது மச்சான்; அந்த ராஸ்கலை லேசில் விடக் கூடாது.” கொதித்தான் வேந்தன்.

“அவனோட சண்டை போடுறதால என்ன பயன் வேந்தன்? நம்மட மானம் தான் போகும். ஆணும் பெண்ணும் தப்புச் செய்தாலும் அதிகம் தாக்குப்படுறது பெண்கள் தானே? அதை அவர்களும் உணர்ந்து கொள்கிறார்கள் இல்லையே!”

“இந்தளவோடு தப்பினாள் என்று ஆறுதல் படுவதை விட வேறென்ன செய்ய முடியும் சொல்லு?” என்றவன், நண்பனை தீர்க்கமாகப் பார்த்தான்.

“பேசின கல்யாணத்தையே செய்து வைத்துவிடுவம் என்று சொல்லுறார் அம்மா. நடந்ததைச் சொல்லியா கட்டிக் குடுக்க முடியும்? பிறகொருகாலத்தில் ஏதாவது பிரச்சனை வந்தால் என்று பயமாக இருக்குடா.” பாசமான சகோதரன் அரட்டினான்.

“ஏதோ மனம் தடுமாறீட்டாள் மச்சான். என் தங்கச்சி என்றதற்காகச் சொல்ல இல்ல; மற்றும்படி அவள் சரியான நல்லபிள்ளை.” என்றவனையே கேள்வியாகப் பார்த்தான் வேந்தன்

“நிஷா எப்படிப்பட்டவள் என்று எனக்கும் தெரியும் அருள். நான் இங்க வாறத்துக்கு முதல் என்ட ஃப்ரெண்ட் ஒருத்தன் அவளுக்குப் பின்னால சுத்தினான். நல்ல பெடியன்; பார்க்கவும் ஜம்மென்று இருப்பான். உண்மையாக அவளைக் காதலிக்கிறன் என்றான். அதை அவளிட்ட சொல்ல, உன் தங்கச்சி என்ன செய்தாள் தெரியுமா? காலில் கிடந்ததைக் காட்டிவிட்டாள். இனியொருதரம் பினாத்திக் கொண்டு பின்னால் வந்தால் நடப்பதே வேறு என்றாளா, அவனுக்கோ சரியான கோபம். நான் தான் அதையும் இதையும் சொல்லி சமாதானம் செய்தன்.” என்றவனை,

“இதெல்லாம் எனக்குத் தெரியாதேடா! கண்ணுக்கு முன்னால் காதலிக்கிறன் என்றவனுக்கு செருப்பைக் காட்டியவள், எங்கோ இருக்கிற அறியாதவனோட என்ன துணிவில் நம்பிக் கதைச்சிருப்பாள்!” கோபத்தில் புலம்பியவனுக்கு, அதன் மர்மம் தான் புரியவில்லை.

“மச்சான், இப்ப...நான் ஏன் இதை உன்னட்ட சொன்னன் தெரியுமா? என்ர மனசின்ட பாரத்தைப் பகிர்ந்து கொள்ள இல்லையடா; என்ர தங்கச்சி வாழ்க்கை நல்லா இருக்க வேணும் என்ற நப்பாசையில் தான் சொன்னன்.” என்று தொடர்ந்தவனை, புரியாது பார்த்தான் வேந்தன்.

“உனக்குப் பிடிக்க இல்லையோ முகத்துக்கு நேர சொல்லிவிடு; இந்தப் பேச்சையும் மறந்துவிடு!” என்ற அருள்,

“நீ ..நீயே நிஷாவைக் கல்யாணம் செய்து கொள்ளுறாயா? அவளைப் பற்றி நன்றாகத் தெரிஞ்சவன் என்றால் அவள் வாழ்க்கையில பிரச்சினை வராது என்று நினைத்துத்தான் உன்னட்ட மறைக்காமல் சொன்னன்.” இறுதியில் கேட்டே விட்டான்.

வேந்தனின் முகமோ, கோபத்தில் சிவந்துவிட்டது.

“ஆமாம் ஆமாம்! உன் தங்கச்சிக்கு மாப்பிள்ள பார்க்கேக்க நான் உன்ர கண்களுக்குத் தெரிய இல்லையே!

என் தங்கச்சியை உனக்குச் செய்யக் கேக்கேக்கயும் உன்ர தங்கச்சியை எனக்குச் செய்து தரும் எண்ணம் வர இல்லையே!

இப்ப, பிரச்சின என்று வந்த பிறகுதான் உன்ர கண்ணில பட்டிருக்கிறன் இல்லையா?” கோபமாகக் கேட்டவன் , விருட்டென்று அப்பால் நகர்ந்தான்.

நண்பனின் அறிமுகமில்லாத கோபத்தையும் சீறலையும் கண்ட அருள், உண்மை சுட, விக்கித்துப் போய் அமர்ந்திருந்தான்.

வாயிலைத் திறந்து நண்பன் வெளியேறுவதைப் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்த அருள், அவன் நண்பர்களை அழைத்து வர செல்வதை உணர்ந்து கொண்டவன், அவனின் அமைதி கன்னத்தில் அறைந்ததில் அவமானத்தோடு எழுந்து தனக்குரிய இடத்தில் சுருண்டுவிட்டான்.

அடுத்த நாள் காலை வழமைபோல எழுந்து வேலைக்குப் புறப்பட்டான் அருள்.

தேநீர் அருந்திக் கொண்டிருந்த வேந்தன் இவனைத் திரும்பியும் பார்க்கவில்லை.

“அப்ப மச்சான்...நாளைக்கு இரவு நீ பயணம் தானே?” கேட்ட நண்பன் ஒருவனுக்கு ஆமென்று தலையாட்டிக்கொண்டு வெளியேறியவனைத் தொடர்ந்து வந்தான் வேந்தன்.

அருள் திரும்பியும் பாராது தன்காரை நோக்கிச் செல்ல, எட்டி அவன் தோளில் கைபோட்டு நிறுத்தியவன், முறைப்புடன் அவனை உற்றுப் பார்த்தான்.

“இங்க பாரடா, மனசில கோபம் இல்லை என்று சொல்லமாட்டன்; போனால் போகுதென்று விடுறன். நிஷாவைக் கல்யாணம் செய்கிறாயா என்று என்னட்ட முதலே கேட்டு, அதுக்குப் பிறகு இந்த விசயம் தெரிய வந்திருந்தாலும் இந்தளவுக்கு கோபப்பட்டிருக்க மாட்டன்.” நிஜமான கோபம் அவன் குரலில் தெறித்தது.

“பரவாயில்ல விடு வேந்தன். நான்...நான் அப்பிடி உன்னட்ட கேட்டிருக்கக் கூடாது.” முகம் கன்றச் சொல்லிவிட்டு நகர முயன்றவன் கரத்தைக் கெட்டியாகப் பற்றி, முறைத்தான் வேந்தன்.

“இங்க பார், கொஞ்சம் மரியாதை குடுத்து நடக்கப் பழகு. இவ்வளவு நாளும் எப்படியோ அதை விடு; இனி, தங்கச்சி புருஷன் என்றால் மரியாதையை நான் எதிர்பார்ப்பன்!” என்றவன், என்ன சொல்கிறான் எனப் புரியாது விழித்தான் அருள்.

“ஏன்டா இப்படி முழுசுறாய்? அப்ப, சும்மா விளையாட்டுக்கா உன் தங்கச்சியைக் கட்டித் தாரேன் என்றாய்! நானும் உண்மை என்று நினைச்சிட்டேன்.” என்ற நண்பனை இறுகக் கட்டிக்கொண்டான் அருள்.

“இப்படிக் கட்டிப் பிடிச்சா மட்டும் எனக்குப் போதாது; என்ட தங்கச்சியை நீ கலியாணம் செய்து கொள்ள வேணும்; சம்மதமா?” கேட்டவனுக்கு, கண்கலங்க “முழுமனசோட சம்மதம் மச்சான்.” என்றான் அருள்.

“ஆங் அது! உன் அப்பா...அந்தாளோடு கதைச்சு ஒழுங்கு செய்ய வேண்டியது மொத்தமும் உன்ர பொறுப்பு. வில்லங்கம் பிடிச்ச மனிசன்; நம்மால முடியாதுடா; என்ட அப்பா...அதுதான் உன்ர மாமா...ஒரு அப்பிராணி!” என்ற நண்பனை இறுக அணைத்துக்கொண்டான் அருள்.

“உன் ஃப்ளைட் டிக்கட்டை தந்திட்டுப் போ; நானும் உன்னோட ஊருக்கு வாறன்.” என்ற வேந்தன், கண்கள் கலங்க நின்ற அருளை பார்த்துக்கொண்டே, “இன்னொரு முக்கிய வேலை இருக்கே!” என்றவாறு கைபேசியை இயக்கினான்.

“யாருக்கடா?”

“கொஞ்சம் பொறு; தெரியும்.”

மறுபுறம் தொலைபேசி எடுபட்டதும், “ஹலோ நான் வேந்தன் கதைக்கிறன்.” ஆரம்பித்தான்.

“எந்த வேந்தனா? அட போங்க; நெதர்லாந்து வேந்தன். உங்க முன் வீட்டிலிருந்த ஐஞ்சு பேரில ஒருத்தன்; உங்க வீட்டுக்காரப் பிரபுவுக்கு என்னைக் கண்டால் மிகவும் பிடிக்குமே! அட...தோசை வடை என்று கிள்ளித் தருவீங்களே மறந்து போனீங்களோ!”

“டேய் டேய் மச்சான் வேணாம்டா...பாவம் டா” அருள் இவன் தோள்பற்றித் தடுக்க முயன்றான்.

தடுத்த அருளை முறைத்தவாறே நகர்ந்து நின்றுகொண்ட வேந்தன், தொடர்ந்து அவளோடு கதைத்துவிட்டு வைத்த போது, இதுவரை மனதில் எரிந்த கோபம் சிறிதே சிறிதாகத் தணிந்த மாதிரி உணர்ந்தான்.

“ஒத்த வார்த்தை பேசாது கேட்டாடா; அதிர்ந்து போயிருப்பா என்று நினைக்கிறன்.” என்றவன், “புத்தியுள்ளது என்றால் புருஷன் என்ற அந்தக் கழுதைய கைக்குள் வச்சிருக்கட்டும்; இல்லையோ, போடா போ என்று துரத்திப்போட்டு தான் நிமிர்ந்து நிற்கட்டும்.” முணுமுணுத்தவாறே, “வா..வந்து டிக்கெட்டை எடுத்துத் தந்திட்டுப் போ!” வீட்டை நோக்கி நடந்தான். அவனைப் பின் தொடர்ந்தான் அருள்.

இலண்டனில், வேந்தனோடு கதைத்துவிட்டு தொலைபேசியையே வெறித்தவாறு திரும்பினாள் சுதாகரின் மனைவி.


“ஏங்க, உங்களுக்கே இது நியாயமாகப்படுதா? ரெண்டுபேரும் வேலைக்குப் போறம்; பிள்ளைகளின்ட மொத்த வேலைகளையும் பார்த்து, வீட்டுவேலைகளையும் பார்த்து நான் லோ..லோ என்று திரிய, நீங்க வேலைக்குப் போய்ட்டு வந்தால் சாமம் சாமமாக இந்த ஃபோனைக் கட்டிப் பிடிச்சுக் கொண்டு திரியிறீங்களே! உங்களுக்கு கொஞ்சம் சரி மனச்சாட்சி இருக்கா?” நாளாந்தம் கணவனோடு அவள் பேசும் அதிகபட்ச வார்த்தைகள் இவைதான்.

‘அடப்பாவி மனுஷா! இதைத்தான் ஃபோனில செய்தியா? மிகவும் தெரிந்தவர்கள் மூலம் தெரிய வந்தது என்று அவ்வளவு உறுதியாகச் சொல்கிறாரே அந்த வேந்தன்! நீ நல்லா இருப்பாயா?’ உள்ளத்தில் மொட்டுவிட்ட சந்தேகத்தோடு ஆக்ரோஷமும் இணைய, சற்றுத்தள்ளி மெத்தென்ற இருக்கையில் புதைந்திருந்தவாறே கைபேசியில் மிக மும்முரமாக ஆழ்ந்திருந்த சுதாகரை சுட்டுவிடும் பார்வையோடு நெருங்கியவள், சட்டென்று நின்றாள்.

‘ச்சா! ச்சா! இவர் அப்படிப்பட்டவரா? கலியாணம் செய்த இந்த ஏழு வருசங்களில என் மீது எவன் ஒருத்தன் பார்வை இலேசாகப்பட்டாலே கொதித்துப் போவார். அந்தளவு என்னில் அன்புள்ளவர். இவரைப் போய் யாரோ ஒருத்தன் எதையோ சொன்னான் என்று சந்தேகப்பட்டுட்டனே!

அவன் வேந்தனுக்கு என்ன கொழுப்பும் தைரியமும்!? என்னோட வலிய வலிய பல்லைக் காட்டினான் என்று இவரிட்ட நல்லா வாங்கியவன் தானே அவன். அதை மனசில வச்சிருந்து இவ்வளவு நாட்களுக்குப் பிறகு என்ட குடும்பத்தில் பிரச்சனை பண்ணப் பார்க்கிறானே! நல்லா இருப்பானா? நாசமாகப் போவான்; படுபாவி!’

சந்தேகமும் ஆக்ரோஷமும் அப்படியே வேந்தன் மீதும் அவன் சொன்ன தகவல் மீதும் திரும்ப, “விடியவெள்ளன வந்திட்டான்; என்ர வாழ்க்கையைக் காப்பாத்துறானாம். படுபாவி!” முணுமுணுத்தவாறு சமையலறைக்குள் நுழைந்தாள் அவள்; பரிதாபரகமான எத்தனையோ விட்டில் பூச்சிகளில் ஒரு அங்கமாக!

முற்றும்.


கதை பற்றிய உங்கள் கருத்துக்களை இங்கேயே பகிர்ந்து கொள்ளலாம் மக்களே!
 
Top Bottom