“ம்ம்”
பலதடவைகள் அழைத்தபின்னரே ‘ம்ம்’ என்றேன். அதுவும் வேண்டா வெறுப்போடுதான். நிச்சயம் அவனுக்கும் விளங்கி இருக்கும். இருந்தும், கண்டு கொண்டதாகக் காட்டிக் கொள்ளவில்லை. அவன் காலடியோசை என்னை நோக்கிவந்ததில் அதை புரிந்துகொண்டேன்.
சில விசயங்களில் நான் கொடாக்கண்டன் என்றால் அவனோ விடாக்கண்டன்.
அருகில் வந்து, ‘ஹனி’ மிருதுவாய் அழைத்தபடி என்னை ஒட்டிக்கொண்டு அமர்ந்தவன் என் கரத்தை எடுத்துத் தன் கரங்களுள் பொத்திக்கொண்டான்.
சமாதானம் சொல்லி எப்படியும் என்னை அழைத்துச் செல்லப் பார்க்கிறான்.
எனக்கு இவனென்றால் உயிர். அவன் கேட்டு ஒன்றை மறுப்பதும் அவ்வளவாக விருப்பம் இல்லை . இருந்தும் , இந்த விசயத்தில் அவன் மீண்டும் மீண்டும் தோற்றுப் போகப் போகிறான்.
எப்படி ஒருவன் தன் மனதுக்குப் பிடித்துப் போகும் ஒன்றை , மனம் நாடும் ஒன்றைச் செய்து அனுபவிக்கச் சுதந்திரம் உண்டு என்று ஆணித்தரமாக வாதாடுகிறானோ, அதைப் போலவே, மனம் ஏற்காத ஒன்றைச் செய்யவேண்டிய கட்டாயமும் இல்லைதானே?
அப்படி நடக்க நினைப்பவருக்கு, உ ற்றமும் சுற்றமும் பற்றியெல்லாம் எந்தக் கவலையும் இல்லை என்கையில், அந்த உற்றமும் சுற்றமும் கூட அவர்களைப் பற்றிக் கவலை கொள்ளத் தேவையே இல்லைத் தானே?
இதே எண்ணத்தில், ‘எனக்குப் பிடிக்கவில்லை, வேண்டாம் விட்டுவிடு!’ என்றாலும் கேட்கிறான் இல்லையே!
“லின்!” தலையால் என் கன்னத்தில் முட்டினான்.
நெதர்லாந்தில் இம்முறை மழை குறைவு என்று யார் சொன்னது? வெளிப்புறத்தில் இன்றைய வானிலை அறிக்கையின்படி கடும் புயல் மழை . ஜன்னலில் மோதிய நீர்த் துளிகள் சடசடத்தது.
வெடுக்கென்று முறைத்துப் பார்த்தேன். என்னுள் அடங்கிக் கிடக்கும் கோபாக்கினிக் குழம்பு இந்தக் கதை வந்தால் பொங்கிச் சீறி விடும். அதில் சுடுபட்டு நிற்கப் போகிறவன் என் கணவன்.
மனதின் பிரளயத்தை அடக்கிக்கொள்ள முயன்றேன்.
துணைசெய்யும் வகையில் வசீகரமாகச் சிரித்தான் அவன். இந்தச் சிரிப்பு என் எத்தனையோ கோபங்களைப் பஸ்பம் ஆக்கியிருக்கு . ஒத்துக் கொள்கிறேன். அதற்காக? என்னால் துளியும் ஏற்கமுடியாது என்ற ஒன்றை, கொஞ்சம் சமாளித்து ஏற்றுக்கொள் என்றால் ?
மீண்டும் முறுக்கிக் கொண்டது என்னுள்ளம்.
முதல் எதற்காகச் சமாளிப்பு? மனம் போன போக்கில் வாழலாம் என்று அழுந்தச் சொல்லிச் சென்ற ஒரு மனிதனுக்காக என் மட்டில் எந்தச் சமாளிப்புக்குமே இடமில்லை. அது கடைசியாக இருக்கட்டும் முதலாக இருக்கட்டும் .
‘என் அன்புக் கணவனே லாரன்ஸ்! நீ வீணாகத் தோற்கப் போகிறாய்.’
என் பார்வையில் மனதைப் படித்தவன் போல் மென்மையாக, வார்த்தைகளைத் தேடி தேடிப் பொறுக்கியெடுத்து உதிர்த்தான் அவன்.
“எப்போதும் போல் வெடுக்கென்று முடியாது என்று சொல்லிவிடாதே லின்.” என்றுதான் ஆரம்பித்தான்.
“அது தெரிந்தும் ஏன் அதைப்பற்றிக் கதைப்பான்?” முணுமுணுத்த என் பார்வையோ கணனியில் . இன்னும் சிலமணிநேரங்களுள் முடித்து அனுப்பவேண்டிய அறிக்கையிது. இல்லையெனில் அப்படியொன்றும் பிரச்சினை வரப்போவதில்லை . இருந்தும் சொன்ன நேரத்தில் அனுப்பி வைக்கவேண்டியது என் கடமை! சின்னதோ பெரிதோ தெரிந்தே கடமையில் இருந்து சறுக்குவதும், மெல்ல நலுவிவிட நினைப்பதுவும் மா பாவம்.
என்னை நன்றாக அறிந்தவனாச்சே!, “கடமை என்றே வச்சுக் கொள் லின், ஒரு தடவையேனும் போய்ட்டு வருவம்.” நான் சொன்னதைக் காதில் வாங்காதவனாகத் தொடர்ந்தான் .
“இன்னுமொருமுறை நன்றாக யோசித்துப் பார் லின்! பிறகு... ஒருகாலத்தில் ‘அடடா கடைசிக் காலத்தில் நம் பிடிவாதத்தில் இருந்து கொஞ்சமே கொஞ்சமாக இளகியிருக்கலாமே!’ என்று, ஒரு கணமேயானாலும் கவலைப்பட்டாலும் பலன் இல்லை.” சொல்லி முடிக்க முதல் திரும்பினேன்.
“ லாரா சிணுங்கிறாள் . கொஞ்ச நேரம் தூக்கி வச்சிரு லாரன்ஸ் ; இன்னும் கொஞ்சம் தான் இருக்கு முடிச்சிட்டு வாறன்.”
எழுந்து சென்றுவிட்டான். ஒன்றரை வயது மகளோடு கொஞ்சுவது காதில் விழ என்னையுமறியாது என் நினைவுகள் பின்னோக்கி வழுக்கிச் சென்றன!
என்னையும் என் மூத்த சகோதரிகள் இருவரையும் பொக்கிசமாகக் கொஞ்சிப் பாராட்டி மகிழ்ந்த உரு!
நினைவு தெரிந்ததிலிருந்து அன்பையும் அக்கறையையும் பாதுகாப்பையும் வழிக்காட்டலையும் தந்து எங்கள் உள்ளத்தில் நாயகனாக இருந்த உரு!
“இன்றோடு நாங்கள் காதலிக்க ஆரம்பித்து இருபத்தியிரண்டு வருடங்களாயிற்று!” என்றபடி, கண்களில் நேசம் பளபளக்க என் அம்மாவை இறுக அணைத்தபடி கனிந்து நின்ற உரு!
எங்கள் மூவரின் வாழ்விலும் இவரைப்போன்றதொரு ஆண் வேண்டும், ஆணென்றால் அதற்குதாரணம் இவர்தான் என்று எண்ணவைத்த உரு!
‘தட்’ எண்ணையுமறியாது கணணியை அறைந்து முடியிருந்தேன். வாசலில்நிழலாடியது.
மகளோடு நின்றிந்தவனைப் பார்க்கமுடியாது தளம்பிவிட்ட கண்ணீர் மறைத்தது.
நெருங்கிவந்தவன் அருகில் அமர்ந்து மகளோடு சேர்த்து என்னையும் அணைத்துக் கொண்டான்.
“அது உன் அப்…” அந்தச் சொல்லைச் சொல்ல அவனுக்கே பிடிக்கவில்லை போலும். “ அது அவர் வாழ்க்கை லின். பிடித்தபடி வாழ எல்லா உரிமையும் உண்டுதானே ? பார், ஊரே...இல்லை உலகமே இருக்கட்டும் என்று கடந்து போக நினைக்கிற விடயத்தை நீ ஏன் …” என்றவன் பேச்சு, நான் வெடுக்கென்று விலகியதால் நின்றிருந்தது .
“மம்மா!” மகள் எண்னிடம் தாவியிருந்தாள்.
“அவரின் வாழ்க்கை... சரி, பிடித்தபடி வாழுறதும் சரி. அதுக்கு அவரின் வாழ்க்கை அவரோடு மட்டும் நின்றிருக்க வேணும் . இத்தனை வருடங்களுக்குப் பிறகு நான் இப்படித்தான் என்று மகாப் பெரிய உண்மையைக் கண்டுபிடிச்சுச் சொல்ல முடிந்த மனுசன் …” தொடர்ந்து சொல்லாது நிறுத்திவிட்டேன். கோபமும் அருவருப்பும் நாக்கைக் கட்டிப் போட்டன.
அட! அன்பால் கட்டப்படும் முடிச்சுகளுக்குத்தான் பலம் அதிகம் என்பார்கள் இல்லையா? அதுவே இத்துப் போனது போல பட்டுப் பட்டென்று அறுபட்டுப் போகையில்...இதெல்லாம் எம்மாத்திரமாம்?
என்னுளிருந்து திமிறிய கோபம் நா மீதிருந்த முடிச்சை அறுத்தெறிந்தது.
“அந்த மனிதனுக்காக நீ மீண்டும் மீண்டும் என்னிடம் வாதாடுவது பிடிக்கவில்லை லாரன்ஸ் . என் அம்மா ...நாங்க மூன்று பேர் ...அவர் வாழ்க்கையில் எப்படி வந்தோம் லாரன்ஸ். அவரில்லாமல் பிறந்தோமா என்ன? சொல்லு பார்ப்போம்?”
உடைப்பெடுத்த விழிநீரைக் கடிந்து நிறுத்தினேன். அருமையான கண்ணீருக்கு அந்தாள் சற்றும் தகுதியில்லாதவன்.
“ லின்...நீ சொல்வது எல்லாமே சரி , நீ சொல்வது பிழையென்று நான் வாதாடவில்லையே! ஏதோ ...என்னவோ ...எப்படியோ நடந்து முடிந்த கதையிது. கதைப்பதால் என்ன பயன் சொல்லு? கோபமும் வேதனையும் தான் மிஞ்சும். இப்ப நம் கண்ணுக்கு முன்னால் அவர் மனம் வருந்திக் கிடக்கிறார். வாழ்க்கையின் கடைசி நிமிடங்களில் உன்னைப் பார்க்கவேணும் என்று உயிரைப் பிடிச்சு வச்சிக்கொண்டு…” என் கையுயர்ந்து ‘நிறுத்து’ என்றதில் நிறுத்திவிட்டாலும் லாரன்ஸ் முகத்தில் பயங்கர ஏமாற்றம் . கட்டாயமாக என்னை அழைத்து வருவேன் என்று சொல்லிவிட்டு வந்திருப்பான்.
என் எண்ணத்தை ஊர்ஜிதம் செய்தான் அவன்.
“உன் அம்மாவுக்கு இல்லாத வேதனையும் கோபமுமா? இன்று அவர் அங்கு பக்கத்தில் விலகாது அமர்ந்திருக்கவில்லையா? உன் சகோதரிகளும் வந்து பார்த்துச் செல்கிறார்கள். நீ மட்டும் தான்.” ஆயாச முச்சு விட்டான்.
“ஆமாம்,நான் மட்டும் தான்;. இருந்திட்டுப் போறேன் லாரன்ஸ் ; விட்டுவிடு!
ஒருத்தன் தன்னுடைய மனதின் வக்கிரமான ஆராச்சிகளுக்கு எங்களைப் பலியாக்கினான் என்றால், அதையும் நியாயப்படுத்த அவனால் முடியும் என்றால் … ‘ஒரு ஆணோடுதான் என்னால் பூரணமாகச் சந்தோசமாக வாழமுடியும்’ என்று, துணிந்து நிமிர்ந்து சொல்லிவிட்டுப் போன மனிதன், நானும் சகோதரிகளும் அம்மாவும் புரியாது, மெல்லவும் முடியாது விழுங்கவும் முடியாது தவித்த தவிப்புக்கெல்லாம் பதில் சொல்ல வேணாமா சொல்லு?
அவனுக்கான என் முழுமையான பதில் ‘மறுப்பு’ !
கண்ணை மூடும் கடைசி நேரத்திலும் இந்த மறுப்புக் கொடுக்கும் வலியையும் ஏமாற்றத்தையும் அந்த ஆள் அனுபவித்தே ஆகவேணும்.”
முடிவாகச் சொல்லிவிட்டு ,”மகளை பிடி, கஃபே போட்டுக்கொண்டு வாறன்” நகர்ந்துவிட்டு நின்று, “நீ கேட்டு நான் இல்லை என்று சொல்லும் படி இனிமேல் வேணாமே லாரன்ஸ் ...அதுவும் இந்தக் கதை...இந்த இடத்தில் முடியுது!”
அவன் பார்வை இயலாமையோடு என்னில் இருப்பது தெரிந்தும், உறுதியான முடிவில் முடிச்சுப் பலமாகவே விழுந்துவிட்டதில் சமயலறைக்குள் புகுந்து கொண்டேன்.
படம் உபயம்: கூகிள்
Last edited: