அழகென்ற சொல்லுக்கு அவளே 26 – 1

தொழிலில் எப்போதுமே அடிமட்ட வேலையிலிருந்து அனைத்தும் தெரிந்திருக்க வேண்டும் என்பார் தையல்நாயகி. குறைந்தபட்சமாக அது பற்றிய தெளிவான அறிவாவது இருக்க வேண்டும் என்பார்.

அப்போதுதான் அனைத்தும் நம் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும். யாராலும் இலகுவாய் நம்மை ஏய்த்துவிடவும் முடியாது. இல்லையோ அவர்கள் சொல்வதற்கு தலையாட்டும் இடத்திற்கு நாம் நகர்ந்துவிட, அவர்களின் கை ஓங்கிவிடப் பார்க்கும். தலைமை என்பது அதுவன்று! அனைத்தையும் தன் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருப்பது என்பார்.

அதன்படிதான் ஆண்கள் உடைத் தயாரிப்பிற்கான பயிற்சி நெறிக்கு அவள் புறப்பட்டதும்.

தையல்நாயகியை விட்டு விலகி இருந்த நாள்களிலேயே இதைக் குறித்தான தேடல்களை ஆரம்பித்திருந்தாள். இனியும் தேடி என்ன காணப்போகிறாய் என்று அன்றைய நாள்களில் அறிவு கேட்டபோதும் அதை அவளால் தவிர்க்க முடியவில்லை. சரியாக இப்போது சந்தர்ப்பம் அமையவும் அதைப் பற்றிக்கொண்டாள்.

கணவனிடம் சொல்லாமல் வருவது தவறு என்று அவளுக்குத் தெரியாமல் இல்லை. அது அவளால் இலகுவாய் முடிந்திருக்கவும் இல்லை. இதுவரையில் எத்தனையோ வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டிருக்கிறாள்.

அப்போதெல்லாம் ஏதோ ஒன்றைப் புதிதாக அறிந்துகொள்ளப் போகிறோம், தையல்நாயகி அடுத்த நிலையை நோக்கி நகரப்போகிறது என்கிற துள்ளோடுதான் போவாள்.

இந்த முறைதான் கண்ணில் நீருடன் புறப்பட்டிருக்கிறாள். அதுவும் பயணத்தின்போது, அவள் காரில் ஒலித்த,
‘எனக்கென இருந்தது ஒரு மனசு
அதை உனக்கெனக் கொடுப்பது சுகம் எனக்கு
எனக்கென இருப்பது ஒரு உசுரு
அதை உனக்கெனத் தருவது வரம் எனக்கு’ என்கிற வரிகளில் சத்தமாக விம்மிவிடப் பார்த்தாள்.

ஏன் இப்படியாகிப்போனோம் என்று அவளுக்குப் புரியவேயில்லை. மனத்தைக் கல்லாக்கிக்கொண்டு அத்தனை ஆயத்தங்களைச் செய்ததும் அவள்தான். இந்தப் பயணத்தை அடி நெஞ்சிலிருந்து வெறுத்ததும் அவள்தான்.

அவள் புறப்பட முதல் எப்படியாவது அறிந்து தன்னிடம் வந்துவிட மாட்டானா என்றெல்லாம் நினைத்திருக்கிறாள். அவன் என்று வந்துவிட்டால் முற்றுமுழுதாக அவள் அறிவு மழுங்கித்தான் போகிறது.

ஆனால், உயிரைக் குடையும் இந்த வலிக்கு மத்தியிலும் இந்த விலகளும் இடைவெளியும் வேண்டும் என்றே நினைத்தாள்.

தான் என்று வந்தால் அவன் எப்படிக் கட்டுப்பாட்டை இழப்பான் என்றும், தன்னில் எந்தளவில் கட்டுண்டு கிடப்பான் என்றும் அவளுக்குத் தெரியும். அப்படியானவன் அன்று தன்னை நெருங்கிவிட்டு விலகியது அவள் நெஞ்சில் பெரும் அடியாக விழுந்துபோயிற்று.

அதற்குக் காரணம் அவள் வார்த்தைகள் என்றால், அந்த வார்த்தைகளை அவள் விடுவதற்கு காரணம் அவள் நெஞ்சில் அணையாமல் எரிந்துகொண்டிருக்கும் தீ.

அது அணையாமல் அவளால் அமைதியாக முடியாது. அப்படி அவள் அமைதியாகாமல் அவர்களின் இல்லறம் என்றுமே சிறக்காது. திரும்ப திரும்ப அவள் காயப்படுத்துவதும் அவன் காயப்படுவதும் மட்டுமே நடக்கும்.

உண்மையைச் சொல்லப்போனால் எடுத்த முடிவுகளைச் செயலாற்ற விடாமல் நிலனின் அன்பும் அனுசரணையும் அவளைப் பலவீனப்படுத்திக்கொண்டிருந்தன. அவன் இல்லாத பொழுதுகளில் கொழுந்துவிட்டு எரியும் கோபத்தீ, அவனைக் கண்டுவிட்டால் தடுமாறத் தொடங்கிவிடும்.

அவனின் அளவற்ற நேசத்தை அனுபவித்துக்கொண்டே அவளால் அவன் குடும்பத்திற்கு எதிராய் எதையும் செய்ய முடியவில்லை. அவனா, அவர்கள் மீதான பகையா என்று அல்லாடுகிறாள். தனக்குள் போராடி போராடி ஓய்ந்து போகிறாள்.

தான் ஆற்றப்போகும் காரியங்களால் அவன் என்னாவான் என்கிற சிந்தனைதான் பிரதானமாய் ஓடிற்று. இதனால் உள்ளத்தின் புழுக்கமும் அழுத்தமும் இன்னுமின்னும் அதிகமாகியதே ஒழியக் குறைவதாக இல்லை.

அவள் தந்தை சொன்னது போன்று சில இழப்புகளையும், நியாயமே இல்லாமல் அனுபவித்த துன்பங்களையும் எதன் மூலமும் ஈடு செய்ய முடியாதுதான். எந்த நியாயமும் அதற்கு நிகராய் வந்து நிற்காதுதான்.

ஆனால், அவள் நெஞ்சம் கொஞ்சமாவது ஆற வேண்டாமா? இந்த உள்ளத்தின் கொதிப்பு அடங்க வேண்டாமா? மிகுதி வாழ்க்கையைத் தன்னும் அவள் நிம்மதியாக வாழ வேண்டாமா?

அன்னை என்று நினைத்தால் இப்போதும் ஜெயந்திதான் அவள் கண் முன்னே வந்து நிற்பார். அதற்காக வாசவியை எண்ணி வருந்தாமல் இருக்க முடியவில்லை. அவர்தான் அவளைப் பெற்றவர் என்று தெரிய முதலே மிக மிக மென்மையானவர், மிகவுமே பதுமையானவர் என்று குணாளனும் தையல்நாயகியும் சொல்லியிருக்கிறார்கள்.

அவர் தனக்குத் தானே தேடிக்கொண்ட முடிவை முதல் கூடப் புரிந்துகொண்டிருப்பாளோ தெரியாது.

ஆனால் இன்று உயிர் நேசமும், அது தரும் ஆத்மார்த்தமான வாழ்க்கையும், அவர்கள் மீது நாம் வைக்கிற பாசமும் ஒருவரை எத்தனை பலவீனமானவராக மாற்றும் என்பதற்கு உதாரணமாக அவளே அவள் முன்னால் நிற்கையில் பூஞ்சை உள்ளம் கொண்ட வாசவி என்னாகியிருப்பார் என்று நன்றாகவே புரிந்தது.

காதலில் தோற்பது என்பது கூட வேறு. இங்கே அவர் காதல் என்று சொல்லிக்கொண்டு வந்த கயவனிடம் ஏமாந்திருக்கிறார். அது போதாது என்று வயிற்றில் குழந்தையை வாங்கி, அதற்காகக் கேட்கக் கூடாத பேச்செல்லாம் கேட்டு, கையில் குழந்தையோடு நின்றிருக்கிறார்.

அது மட்டுமா? தன் அன்னை உயிராக வளர்க்கும் தொழிலில் ஒரு பகுதியைக் கூட அந்த மோசக்காரனிடம் ஏமாந்து அடிக்குமேல் அடி என்று அவர் வாங்கியவைதான் எத்தனை? அதனால்தானே தன் உயிரைத் தானே மாய்த்துக்கொள்ளும் அளவுக்குப் போனார்.

இதையெல்லாம் எண்ணியெண்ணி நீ உயிராகப் போற்றும் பெண்மணியை இறப்பின் இறுதி வரையில் நிம்மதியே இல்லாமல் வாழவைத்த மனிதர்கள் உன் கண்முன்னே இருந்தும் பேசாமல் இருக்கப் போகிறாயா என்று அவள் அறிவு சதா கேள்வி எழுப்பிக்கொண்டே இருக்கையில் அவளும்தான் என்ன செய்ய?

இதெல்லாம் அவளைப் போட்டுச் சுழட்டி அடிக்கையில் எப்படி அந்தக் குடும்பத்தை மன்னிப்பாள்? எப்படி நிலனோடு நிம்மதியாக வாழ்வாள்?

எதுவானாலும் அவள் உள்ளத்தின் வெப்பம் தணிய வேண்டும். அதன் பிறகுதான் அவளால் அவளை அழுத்தும் பழைய வாழ்க்கையிலிருந்து வெளியே வர முடியும். அதுதான் அவனைக் கோபப்படுத்தும் விதமாகச் சொல்லாமல் கொள்ளாமல் வந்திருக்கிறாள். அவன் கேட்டால் மட்டும் உண்மையைச் சொல்லும்படி விசாகனிடம் தெரிவித்திருந்தாள்.

அதைவிடவும் பெரிய காரியம் ஒன்றைச் சீனா புறப்படுவதற்கு முதல் துணிந்து செய்துவிட்டுத்தான் வந்திருக்கிறாள்.

எல்லாம் சரிதான். அவள் கணவன்? இதையெல்லாம் அறியும் போது அவன் என்னாவான்? விழிகளில் அரும்பிய கண்ணீரைச் சுண்டிவிட்டாள்.

பெரும்பான்மையான சீன மக்கள் புத்த மதத்தைப் பின்பற்றுகிறவர்கள் என்று நாமெல்லாம் எண்ணிக்கொண்டிருக்கிறோம். ஆனால், உண்மை அதுவன்று. சீனர்களில் தொண்ணூற்றி ஐந்து சதவீதமானவர்கள் மத நம்பிக்கையற்றவர்கள். தம் மூதாதையர்களை மாத்திரமே நம்புகிறவர்கள்.

அதைப்போலத்தான் அவளும். தன்னைக் குறித்துத் திடமானவள் தைரியமானவள் என்று நம்பிக்கொண்டிருந்தாள். அப்படித்தான் எல்லோர் கண்களுக்கும் தெரிந்தாள். ஆனால் அவள் மிகுந்த பலகீனமானவள். அதுவும் அவள் கணவனின் முன்னே அலை அடித்துச் செல்லும் சிறு துரும்பளவு கூட அவள் திடம் இருப்பதில்லை.

*****

error: Alert: Content selection is disabled!!
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock