ஆனால், அவளைக் கொல்லும் இந்தக் கழிவிரக்கத்தை என்ன செய்ய?
இன்னும் வேகமாக நடந்தாள். எதிர்ப்பட்ட ஊழியர்கள் மிகுந்த பணிவுடன் நடந்துகொண்டனர்.
இத்தனை நாள்களும் அதையெல்லாம் அன்போடு ஏற்றுக்கொண்டவளின் உள்ளம் இன்று, இதெல்லாம் உனக்கானது இல்லை, உனக்கும் இவர்களுக்கும் வித்தியாசம் இல்லை, நீயும் இவர்களில் ஒருத்தி என்று அறைந்து சொன்னது.
அவள் யாரில் ஒருத்தியாக இருக்கிறாள் என்பது அவளுக்கு ஒரு விடயமே இல்லை. ஆனால், இத்தனை நாள்களும் என்னுடையது என்கிற சொந்தத்தோடும் உரிமையோடும் நடந்த இடத்தில் இன்று கால்கள் கூசின. உரிமையற்ற உணர்வொன்று அவளைச் சூழ்ந்தது.
சொல்லி ஆறுவதற்கோ, தோள் சாய்வதற்கோ யாருமே இல்லாமல் தனித்தே நிற்கிறாள். அப்படி யாரிடமும் சொல்வதோ, ஆறுதல் தேடுவதோ அவளுக்குப் பழக்கமும் இல்லாத ஒன்றாயிற்றே.
*****
இங்கே அவள் வீட்டில் யாருக்கு என்ன கதைப்பது என்று தெரியாத நிலை. குணாளன் மொத்தமாய் இடிந்து போயிருந்தார். ஜெயந்தியின் புறம் திரும்பவேயில்லை. சுவாதிக்குமே இளவஞ்சி தன் தமக்கை இல்லை என்கிற விடயம் பெரும் அதிர்ச்சியாய் இறங்கியிருந்ததில் அப்படியே அமர்ந்திருந்தாள்.
பிரபாகரன் குடும்பத்தினருக்கு வந்தபோது இருந்ததை விடவும் தற்போதைய நிலவரம் மிகுந்த இறுக்கமாக இருப்பது நன்றாகவே தெரிந்தது. அதைவிட இந்த நேரத்தில் திருமணம் குறித்துப் பேசுவது அநாகரீகம் என்று புரிந்துகொண்ட பிரபாகரன், “எல்லாம் சரியாகும் குணாளன். ரெண்டு நாள் போகட்டும். எல்லாரும் அமைதியா இருந்து கதைங்கோ.” என்று சொல்லிவிட்டு எழுந்துகொண்டார்.
இனி எதுவும் சரியாகும் என்கிற நம்பிக்கை குணாளனுக்கு இல்லை. அவருக்கு இளவஞ்சியைத் தெரியும். இனி அவர்களை எல்லாம் அரவணைத்துப் போன அந்த மகள் அவருக்குக் கிடைக்கவே மாட்டாள்!
கலங்கிப்போன மனமும் விழிகளுமாக அவர்களை நோக்கி, “உங்கட வீட்டில எல்லாரோடயும் கதைச்சு எவ்வளவு கெதியா ஏலுமோ அவ்வளவு கெதியா இந்தக் கலியாணத்துக்கு ஏற்பாடு செய்ங்கோ. நடத்தி வைப்பம்.” என்று சொன்னார்.
“இளவஞ்சி?” என்றார் பிரபாகரன் கேள்வியாக.
“அவா என்ர மகள்தான். ஆனா இனி அது எனக்கு மட்டும்தான். அதால அவாட்ட இருந்து இனி ஒரு வார்த்த மறுப்பா வராது.” வேதனை மிகவுறச் சொன்னார்.
சரி என்பதுபோல் தலையசைத்த பிரபாகரன் நிலனைப் பார்த்தார். வரும்போது இளவஞ்சியை மணக்க அவ்வளவு பிடிவாதமாக இருந்தானே இனி என்ன செய்யப்போகிறான் என்று மிகுந்த மனக்கவலையோடு வந்தவர் இப்போது மகன் மனநிலை என்ன என்று தெரியாது நின்றார்.
நிலனுக்கு அந்த எண்ணமெல்லாம் இல்லை. அவன் தன் முடிவில் தெளிவாக இருந்தான். அதைவிட அவர்களிடம் மன்னிப்பைக் கேட்டுவிட்டுப் போனவள் பின்னாலேயே அவன் எண்ணம் முழுவதும் சுற்றிக்கொண்டிருந்தது.
அந்த நிமிடமே அவளைப் பார்க்கத் துடித்தவன் தன் வீட்டினரை அழைத்துக்கொண்டு புறப்பட்டான்.
ஆனால், அவன் நினைத்ததை அவனால் செயலாற்ற முடியவே இல்லை.
அவளின் அலுவலகத்திற்கே நேராகச் சென்றவனைச் சந்திக்க மறுத்தாள் இளவஞ்சி. அன்று மட்டுமன்று. அதன் பிறகு வந்த நாள்களிலும் அவனால் அவளைப் பார்க்க முடியவில்லை.
தன்னைத் தானே தனிமைச் சிறையில் போட்டுப் பூட்டியிருந்தாள்.
அன்று மாலை வீடு வந்தவள், “நான் இந்த வீட்டில இருக்கலாமா? இல்லை, வெளில போகோணுமா?” என்றாள் குணாளனிடம்.
துடித்துப்போனார் மனிதர். “அம்மாச்சி, அப்பா ஏற்கனவே நல்லா உடஞ்சிட்டனம்மா. நீங்களும் சேர்ந்து நோகடிக்காதீங்கோ. இப்பவும் சொல்லுறன். நீங்க எனக்குப் பிறக்காம இருக்கலாம். ஆனா என்ர பிள்ளதான். இளவஞ்சிதான் என்ர மூத்த மகள்.” என்றார் தழுதழுத்த குரலில்.
அதன் பிறகு அவள் அந்த வீட்டில் யாரோடும் எதுவும் கதைப்பதேயில்லை.
*****
நிலன் வீட்டில் ஜானகியால் பெரும் பூகம்பமே வெடித்திருந்தது. ஆசையாசையாகப் பெற்று, பார்த்து பார்த்து வளர்த்த மகனுக்கு இவர்கள் போய்த் திருமணம் பேசிவிட்டு வருவார்களா என்று கொதித்தார்.
“பெத்தவள் நான் என்ன செத்தா போயிட்டன்? இருக்கிற மொத்த சொத்துக்கும் பாதி சொந்தக்காரன் அவன். இன்னும் சொல்லப்போனா நாலுல ஒரு பங்குதான் உங்களுக்குச் சொந்தம். மிச்ச எல்லாத்துக்கும் ஒற்றை வாரிசு அவன். அவனுக்குப் போய் ஆரின்ர வீட்டில கலியாணம் பேசி இருக்கிறீங்க. கேவலம் கெட்ட கூட்டம். உடம்பக் காட்டி என்ர மகனை மயக்கி இருக்கிறாள்.” என்றவரின் பேச்சில் அதிர்ந்துபோனான் மிதுன்.
அன்னை கோபப்படுவார் என்று தெரியும். அவனைக் குறித்து ஓராயிரம் கற்பனைகளோடு இருக்கிறார் என்றும் அறிவான். மிகவும் சங்கடத்தோடுதான் அவரை எதிர்கொள்ள வந்தான். ஆனால், அவர் பேசும் விதம்? சுவாதியைக் கேவலமாகப் பேசியதுமல்லாமல் குடும்பத்தைப் பிரித்துவிடுவார் போலிருந்தது.
அவசரமாகத் தன் மாமன் குடும்பத்தைப் பார்த்தான். அவர்களுக்கும் ஜானகியின் வாயைத் தெரியும். அதனால்தான் நிலன் முதலில் தந்தைக்கு அழைத்து விடயத்தைச் சொல்லி, அந்தப் பக்கம் இந்தப் பிரச்னையை ஒரு நிலைக்குக் கொண்டு வந்துவிட்டு இங்கே வந்து இவரிடம் சொல்லலாம் என்று முடிவு எடுத்தான். ஆனாலும் சொத்தைக் குறித்தெல்லாம் பேசுவார் என்று எதிர்பார்க்கவேயில்லை.
கோபத்தோடு கூடிய ஆதங்கத்தோடு மகனைப் பார்த்தார் பிரபாகரன். அவர் அவருக்குப் பிறகு நிலன் என்று முழுமூச்சாக நின்று தொழிலை வளர்த்து, சொத்தைப் பெருக்கியவர்கள் அவர்கள். பேச்சு எப்படி மாறிவிட்டது? தங்கைதான் என்று விட முடியாமல் அவரும் இரண்டு பிள்ளைகளை வைத்திருக்கிறாரே!
அவர் தவிப்பை உணர்ந்த நிலன் வேகமாக அவர் அருகில் சென்று, அவரின் கரம் பற்றி அமைதி படுத்தினான்.
அதுவே அவர்கள் தனி, தான் தனி என்றாகிப்போனது போலாகிவிட, “என்ன கதையெல்லாம் கதைக்கிறீங்கம்மா?” என்று அதட்டினான் மிதுன்.
ஜானகி அடங்க வேண்டுமே! “என்னடா? என்னையே அதட்டுற அளவுக்குப் பெரிய மனுசனா நீ? இப்பிடிக் குரலை உயத்தச் சொல்லி அவளா சொல்லித் தந்தவள்? இல்ல அவளின்ர அக்கா சொல்லி அனுப்பினவளா? செய்தாலும் செய்வாள்.” என்றதும் மிதுனோடு சேர்ந்து நிலனும் பல்லைக் கடித்தான்.