அவள் ஆரணி 52 – 2

“அதுக்கு என்ன? இந்தா இன்னும் அஞ்சு நிமிசத்தில எல்லாம் முடிஞ்சிடும். நீ சாப்பிடு.” என்றான் அவன்.

“இந்தமுறை பசி இல்ல நிக்கி. ஒரே நித்திரை நித்திரையா வருது. உன்ர மகன் சோம்பேறியா வரப்போறார் போல.” என்றவளின் பேச்சில் அவன் உதட்டினில் மென்னகை அரும்பிற்று.

“கொஞ்ச நாளைக்கு அது அப்பிடித்தான் இருக்கும். அதுக்கு என்ர பிள்ளையைச் சோம்பேறி எண்டு சொல்லுவியா நீ? முகம் கழுவிக்கொண்டு வா. சாப்பிடலாம்.”

“இல்ல. எனக்கு ஒண்டும் வேண்டாம். இந்த மணமே பிடிக்கேல்ல!”

அவன் அங்கும் இங்கும் கைவேலையாக அசைகின்ற போதெல்லாம் அவனைக் கட்டிக்கொண்டு அவன் பின்னாலேயே இழுபட்டவளின் கையைப் பிடித்துத் தன் முன்னால் கொண்டுவந்தான் அவன்.

“என்ர ஆராக்கு வேற என்ன வேணுமாம்?” என்றான் கலைந்திருந்த அவளின் கேசத்தை இரு பக்கமும் ஒதுக்கியபடி.

“ஒரு கிஸ் வேணும்.”

அவன் உதட்டினில் சிரிப்பு அரும்பியது.

“கிஸ் தந்தா வயிறு நிரம்புமா?”

“மனசே நிரம்புமாம். வயிறு நிரம்பாதா?” எதிர்கேள்வி கேட்டாள் அவள்.

அதற்குமேல் அவளைக் காக்க வைக்கவில்லை அவன். தன் இரு கரம் கொண்டும் மென்மையாக அணைத்து அவளின் நெற்றியில் தன் உதடுகளை ஒற்றி எடுத்தான்.

“கண்ணில.” இன்னுமே உறக்கத்தைச் சுமந்திருந்த அந்த இரண்டு விழிகளையும் அவன் உதடுகள் ஒற்றி மீண்டன. மூக்கைச் சுருக்கிக்கொண்டு தொட்டுக் காட்டினாள். அங்கும் கொடுத்தான். கன்னங்களைக் காட்டினாள். முறுவல் விரிய அங்கும் கொடுத்தான். கடைசியாக உதட்டைக் காட்டப் போகிறாள் என்று காத்திருக்க அவளோ முறைத்தாள்.

“கேட்டாத்தான் தருவியோ?”

“கேக்காமயும் தருவன்.” என்றவனின் உதடுகள் இப்போது அவளின் இதழ்களை மென்மையாக ஒற்றி எடுத்தது.

“விடிய வெளில போகேக்க(போகும்போது) நான் தந்தனான். ஆனா நீ தரேல்ல.” முகத்தைச் சுருக்கிக்கொண்டு குற்றப் பத்திரிக்கை வாசித்தாள் அவள்.

“நேரமானதில மறந்திட்டன் போல.” அவளின் நெற்றியோடு தன் நெற்றியை முட்டியபடி சொன்னான் அவன்.

அதற்குப் பதில் சொல்லாதவளின் கைகள் அவனுடைய வெற்று மார்பின் அடர்ந்த முடிச் சுருள்களோடு விளையாடின. முகத்தில் யோசனைக் கோடுகள். எதையோ கதைக்க விரும்புகிறாள் என்று விளங்கியது. அவனும் என்னதான் செய்கிறாள் என்று அவளையே பார்த்துக்கொண்டிருந்தான். சற்று நேரத்தில் நிமிர்ந்து அவனைப் பார்த்தவளின் விழிகளில் பெரும் பரிதவிப்பு.

“ஏன் நிக்கி இப்பிடி இருக்கிறாய்?”

அவன் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான்.

“எனக்கு என்ர பழைய நிக்கி வேணும். அவனுக்கு நான் தான் உயிர். நான் தான் உலகம். நான் தான் ஆறுதல். என்னட்ட எதையும் மறைக்கமாட்டான். எல்லாத்தையும் தனக்குள்ள போட்டு மறைச்சுக்கொண்டு நடிக்கிற இந்த நிக்கிய எனக்குப் பிடிக்கேல்ல.” என்றபடி அவனைப் பிடித்துத் தள்ளிவிட்டாள் அவள்.

அவன் உதட்டினில் ஒட்டிவைத்திருந்த சிரிப்பு மெல்ல மெல்ல மறைந்தது. விழிகளில் பெரும் வலி ஒன்று படர்ந்தது. அவள் கவனிக்கிறாள் என்றதும் வேகமாக முகத்தைத் திருப்பிக்கொண்டான். ஏறி இறங்கிய தொண்டைக்குழியும் அழுத்தம் கூடித் துடித்த உதட்டோரமும் அனைத்தையும் தனக்குள் போட்டுப் புதைக்கப் போராடுகிறான் என்று சொல்லிற்று.

அதைத் பார்க்க முடியாமல் அவன் கன்னங்களைப் பற்றித் திருப்பி, தன் முகம் பார்க்க வைத்தாள் ஆரணி. “என்னடா? என்னத்த மனதுக்க வச்சுத் தவிக்கிறாய்? நான் ஏதாவது உன்ன நோகடிச்சிட்டனா? அப்பிடியே இருந்தாலும் உன்ர ஆராவ மன்னிக்க மாட்டியா?” என்று விழிகள் கலங்கப் பரிதவித்தாள்.

“லூசா நீ! அப்பிடியெல்லாம் ஒண்டும் இல்ல!” என்றவன் வேகமாக அவளைத் தன் மார்புடன் சேர்த்து அணைத்துக்கொண்டான். அவனது இதயத்தின் நிதானமற்ற துடிப்பு எல்லாவற்றையும் தனக்குள் வைத்துத் துடிக்கிறான் என்று இப்போதும் அவளிடம் சொல்லிற்று.

ஆரணிக்கு அழுகை வந்துவிடும் போலிருந்தது. ஆனாலும் அடக்கி, அவன் அணைப்புக்குள் அடங்கினாள்.

இருவரும் சற்று நிதானத்துக்கு வந்ததும், “மாமா மாமிக்கு சொல்லிட்டியா?” என்று வினவினான்.

அவள் முகம் இலேசாகச் சிவந்தது. “இன்னும் இல்ல…” என்று முணுமுணுத்தாள்.

“ஏன்?” காரணம் தான் அவன் அறிவானே. எழுந்த சிரிப்பை உதட்டுக்குள்ளேயே அடக்கிக்கொண்டு கேட்டான்.

“ஒருமாதிரி வெக்கமா இருக்கடா. பூவிக்கு இன்னும் ஒரு வயசே ஆகேல்ல. அதுக்கிடையில…” என்றவளின் பேச்சை அவனுடைய நகைப்பு இடைநிறுத்த, “எல்லாம் உன்னாலதான்!” என்று அவனை அடித்தாள்.

“கலியாண நாள் அண்டைக்கு ஒரு பாட்ட போட்டு என்னை அழவச்சு நீ பாத்த வேலையால நடந்தது இதெல்லாம்.” மேலே பேசமுடியாமல் அவளின் இதழ்கள் அவனால் சிறைசெய்யப் பட்டது.

ஆழ்ந்த முத்தம். மிக மிக ஆழ்ந்த முத்தம். உயிரோடு உயிரை உறையவைக்கும் முத்தம். நீண்ட நாட்களுக்குப் பிறகு இருவருமே விழிமூடிக் கிறங்கி அதை அனுபவித்தனர். இருவருக்குமே மனம் நிறைந்து தளும்பியது. மெல்ல அவளை விடுவித்தவனின் முகத்தில் மிகுந்த திருப்தி. குறும்புடன், ‘எப்படி இருந்தது?’ என்றான் புருவங்களை உயர்த்தி.

“ராஸ்கல்! நீ எப்பவுமே இப்பிடித்தான்டா. செய்றதை எல்லாம் செய்றது. பிறகு ஒரு கிஸ்ஸ தந்து சமாளிக்கிறது!” என்று அவனை அடித்தாள், ஆரணி.

அவன் சத்தமாக நகைத்தான். இப்போது அவள் கேட்காமலேயே அவளின் முகமெங்கும் தன் உதடுகளை ஒற்றியெடுத்தான். அவளைத் தன் உயிரோடு சேர்த்து அணைத்துக்கொண்டான். அழகான மௌனமான பொழுது. அட்சய பாத்திரமாய் காதல் நிறைந்து தழும்புகையில் காயங்கள் ஆறாமல் இருப்பது எப்படி? மெல்ல மெல்ல ஒருவர் மற்றவருக்கு மருந்தாகிக்கொண்டு இருந்தனர்.

கன்னம் வருடியபடி, “கஷ்டமா இருக்கா?” என்று, அவர்களுக்குள் நிரம்பியிருந்த அந்த மௌனத்தைக் கலைத்தான் அவன்.

“இல்ல. வெக்கமா இருக்கு!”

அவன் உதட்டினில் மீண்டும் மென்னகை மலர்ந்தது. “விடு. நானே மாமா மாமிக்குச் சொல்லுறன்.”

“ம்ம்… ஆனா உனக்கு வெக்கமா இருக்காதா?”

அவன் சிரித்தான். “அதுக்காகச் சொல்லாம இருக்கேலாதே. சமாளிப்பம் விடு!” என்றுவிட்டு, அவளின் வயிற்றை நிரப்பிவிட்டே புறப்பட்டான்.

error: Alert: Content selection is disabled!!
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock