ஆதார சுதி 18

சஹானா முற்றிலும் மனமுடைந்து போயிருந்தாள். காயம் பட்டிருந்த கன்னம் வேறு விண் விண் என்று வலித்தது. திரும்பிய பக்கமெல்லாம் தோல்வி மாத்திரமே கிட்டியதில் தன் இயல்பைத் தொலைத்திருந்தாள்.

எப்போதும் விடிந்ததும், “அத்தை, அப்பா வீட்டுக்கு போயிட்டு வாறன்!” என்றுவிட்டு ஓடிவிடுவாள். இன்றோ அறைக்குள்ளேயே முடங்கிக் கிடந்தாள். ராகவி அழைத்தும் வெளியே வரவில்லை. அம்மா அப்பாவிடம் போய்விடப் பிள்ளைமனம் துடியாய்த் துடித்தது.

“ஹல்லோவ்..! அறைக்க இருந்து முட்டையா இடுறாய்? வெளிக்கிடு வெளிக்கிடு வெளில எங்கயாவது போவம்!” என்று உற்சாகமாகக் குரல் கொடுத்தபடி வந்தான் அகிலன்.

அவளிடம் பதிலே இல்லை என்றதும், “காதும் போச்சா?” என்றான் குறும்புடன்!

அப்போதும் அசைய மறுத்தவளிடம், “எழும்பி வெளிக்கிடு சஹி!” என்றான் சற்றே அழுத்தி.

“நான் வரேல்ல!”

“ஏன்? ஏன்? ஏன்? வந்தா என்ன? வராம எப்பிடி இருக்கிறாய் எண்டு நானும் பாக்கிறன்! என்னோட அதுவும் இந்த அகிலனோட வரமாட்டன் எண்டு சொல்லுறதுக்கு உனக்கு எவ்வளவு தைரியம்?” அவனின் அதிகப்படியான பேச்சில் மெல்லிய சிரிப்பு ஒன்று உதயமாக, “மச்சான்!” என்றாள் அதட்டல் போன்று.

“மச்சான்தான்! உன்ர அகில் மச்சானே தான்! இந்த மச்சான் தான் சொல்லுறன், ஓடிப்போய்க் குளிச்சிட்டு வா. அறைக்குள்ள வரவே நாறுது!” என்று மூக்கைப் பொத்தினான் அவன்.

முறைத்தாள் அவள். “என்ன நக்கலா? நாங்க எல்லாம் ஒரு நாளைக்கு ரெண்டுதரம் குளிக்கிற ஆக்கள். உங்களை மாதிரி மாதத்துக்கு ஒருக்கா உடம்புக்குத் தண்ணி காட்டுற ஆக்கள் எண்டு நினைச்சீங்களா?” என்று சண்டைக்குப் போனாள் அவள்.

“ஓமோம்! நாறுற நாத்தத்திலேயே நீ சொல்லுறது எவ்வளவு உண்மை எண்டு தெரியுது!” விடாமல் வம்பு செய்தவனுக்குத் தலையணையை எடுத்து எறிந்தாள் சஹானா.

லாவகமாக அதைப் பற்றிக்கொண்டு அவளருகில் சென்று அமர்ந்தான். “மகாராணி எதைப்பற்றித் தீவிரமாகச் சிந்திக்கிறீர்கள்?” தணிவான அவன் குரலில் அவளின் பொய் முகமூடி அவிழ்ந்து விழுந்தது. கண்கள் தழும்பிவிட, “அம்மாட்ட போப்போறன்!” எனும்போதே கண்ணீர் மணிகள் உருண்டு விழுந்தன.

அவளின் தலையைப் பிடித்துச் செல்லமாக ஆட்டினான் அவன். “இன்னும் மூண்டு நாள்ல அங்கதான் நிக்கப்போறாய். சாவகச்சேரி லேடி டான் தெய்வானை ஆச்சியையே ஒரு ஆட்டு ஆட்டுற சஹி இப்பிடி சின்னப்பிள்ளை மாதிரி அழுறது பாக்க நல்லாவா இருக்கு? ம்? கண்ணைத் துடை! அங்க இருந்து இங்க தனியா வந்து, மாமாக்காக அவரின்ர வீட்டிலேயே போய்த் தைரியமா கதைச்சு இருக்கிறாய். அவே சமாதானம் ஆகுவீனமோ இல்லையோ ஆனா மனம் குத்தும். எண்டைக்கோ ஒரு நாளைக்குத் தாங்க செய்தது பிழை எண்டுறதை நிச்சயம் உணருவீனம் சஹி. உணர்ந்து அவேயே கதைக்க வருவீனம். என்ன, அதுக்கு நாங்க கொஞ்சம் டைம் குடுக்க வேணும். அவ்வளவும் தான்! இனி அழுறேல்ல. சும்மாவே இந்த முகத்தைப் பாக்கேலாது. இதுல அழுதா மெகா கன்றாவியா இருக்கு. பிளீஸ் போய்க் குளிச்சிட்டு வா!” மனதை இலேசாக்கும் வகையில் இதமாகப் பேசிக்கொண்டு வந்தவன் கடைசியில் மீண்டும் அவளைச் சீண்ட முறைக்க முயன்று முடியாமல் அழுத விழிகளோடு சிரிப்புப் பொங்க அவனுக்கு அடித்தாள் சஹானா.

“இதுதான் எங்கட சஹிக்கு நல்லாருக்கு! ஓடு ஓடு!” என்று துரத்தி, குளித்துத் தயாராகி வந்தவளை அழைத்துக்கொண்டு அவன் தன் பைக்கின் புறமாக நடக்க கண்களை விரித்தாள் சஹானா.

“இண்டைக்கு என்ன மச்சான் நடந்தது உங்களுக்கு?”

“ம்.. அத்தை மகள் ரத்தினம் சைக்கிள் ஒட்டியே களைச்சுப் போறாளே எண்டு பாவமா இருந்தது. அதுதான்!” என்றபடி வண்டியில் ஏறி அமர்ந்து ஹெல்மெட்டை எடுத்து மாட்டினான் அவன்.

கண்களில் குறும்பு மின்ன அவன் காதோரமாகக் குனிந்து, “உங்கட பெட்டை பாத்திட்டு சண்டைக்கு வரமாட்டாவா?” என்று, ரகசியக்குரலில் வினவினாள் அவள்.

அவளின் மண்டையிலேயே ஒன்று போட்டான். “பேசாம ஏறு! இல்லாத காதலி ஒண்டும் சொல்லமாட்டாள்!” என்றபடி அவள் ஏறியதும் வண்டியை எடுத்தான் அவன்.

முதல் நாள் நண்பர்கள் கேலி செய்வார்கள் ஏற்றமாட்டேன் என்றவன் இன்று அதைப்பற்றி எந்தக் கவலையும் கொள்ளாது ஏற்றிப்போகிறான். அவள் காயப்பட்டிருக்கிறாள்; அந்தக் காயத்துக்கு மருந்தாக இதமாக நடக்க முனையும் அவனது அன்பு அவளை நெகிழ்த்தியது.

“என்னில நீங்க பாசமா மச்சான்?” காதோரமாக அவள் கேட்ட கேள்வியில் சிரித்தான் அவன்.

“நீ என்ன நினைக்கிறாய்?”

“பாசம் எண்டுதான் நினைக்கிறன்.”

“பிறகு என்னத்துக்கடி கேக்கிறாய், விசரி?”

“அப்பிடித்தான்டா மச்சான் கேப்பன். நீ பதில் சொல்லோணும்!” என்றவளை, “அடிங்! என்ன தைரியம் உனக்கு? டா போடுறாய்!” என்றான் அடக்கப்பட்ட சிரிப்புடன்.

அடங்காமல், “விடுடா விடுடா மச்சான்! வாழ்க்கையில இதெல்லாம் சகஜம்டா!” என்றபோது, பழைய சஹானாவாக மாறியிருந்தாள்.

அகிலன் அழைத்துச் சென்றது கசூரினா கடற்கரைக்கு. பெரிய அலைகள் இல்லாமல் கரையோரத்தில் மிகுந்த ஆழமும் இல்லாத அழகிய கடற்கரை என்பதால் மக்கள் அலைமோதினர். கூடவே ஓலையால் வேயப்பட்ட கூடாரங்கள் நிறைந்திருக்க, வெயிலில் நிற்கவேண்டிய அவசியமற்று மணற்பரப்பிலிருந்து சற்றுத் தள்ளி அடர்ந்து வளர்ந்து நிற்கும் மரங்கள், சற்றே தள்ளி இருக்கும் பனைமரங்கள் என்று முற்றிலும் இயற்கை கொட்டிக்கிடந்து கண்களைக் கவர்ந்துகொண்டிருந்தது.

பார்த்த சஹானா புருவங்களை உச்சி மேட்டுக்கே உயர்த்தினாள். “சொல்லியிருந்தா குளிக்கிறதுக்கு ரெடியா வந்திருக்கலாமே மச்சான்!”

அலைகளின் உற்சாகம் அவளையும் தொற்றிக்கொண்டதில் ஓடிப்போய்க் கால்களை நனைத்தாள்.

“மச்சான், நீங்களும் வாங்கோ!” அவளின் ஆர்ப்பரிப்பை சின்ன முறுவலோடு ரசித்தபடி அவளருகே சென்று நின்றுகொண்டான் அவன்.

“இன்னும் கொஞ்சம் உள்ளுக்குப் போவமா!”

“ஜீன்ஸ் முழுக்க நனைஞ்சிடும் சஹி. இங்கேயே நில்!” என்றவனின் பேச்சை அவள் கேட்கவேயில்லை. இன்னும் கொஞ்சம் இன்னும் கொஞ்சம் என்று உள்நோக்கி நகர்ந்துகொண்டே இருந்தாள்.

“சொன்னா கேக்கமாட்டியா! வா இங்கால!” என்று பல்லைக் கடித்தவனின் பேச்சை தூசுபோல் தட்டிவிட்டாள்.

“பயமா மச்சான்?” அவன் மீது கையால் கடல் நீரை வாரி இரைத்துவிட்டு கலகலத்துச் சிரித்தவளை முறைக்க மட்டுமே முடிந்தது அவனால்.

கருப்பு ஃபிட் ஜீன்சும் கையில்லாத குட்டி மஞ்சள் டொப்பும் அணிந்து மான்குட்டியாகத் துள்ளியவளின் நிறமும் உடல் மொழியுமே அவள் இந்தத் தேசத்தவள் அல்ல என்று காட்டிவிடச் சுற்றி இருந்தவர்களின் கண்கள் கண்டும் காணாததுபோல் அவளை ரசிக்கத் தொடங்கின.

அதைக் கவனித்துவிட்டு, “வா, சும்மா கொஞ்சத் தூரம் நடப்பம்!” என்று இழுத்துக்கொண்டு போனான்.

அவளுக்கோ கால்கள் தரையில் பாவ மறுத்தது. சோர்ந்து போயிருந்த மனதுக்குப் பார்க்குமிடமெங்கும் உற்சாகம் துள்ளும் சூழ்நிலை பெரும் மாற்றத்தை உண்டாக்கிற்று. “என்னைப் பிடிங்க மச்சான்!” என்றுவிட்டு சிட்டுக்குருவியைப் போன்று கடலோரமாய்ப் பறந்திருந்தாள்.

அன்று சனிக்கிழமையும் என்பதில் நிறைந்திருந்த ஆட்களின் மத்தியில் நொடியில் காணாமல் போனாள் சஹானா. சற்றுநேரம் தேடி முடியாமல் போக, “இவளைப்பற்றித் தெரிஞ்சும் கூட்டிக்கொண்டு வந்த என்னச் சொல்லோணும்!” தன்னையே நொந்தபடி அவளுக்குக் கைபேசியில் அழைத்தான்.

அவனுக்குப் போக்குக் காட்ட ஆட்களுக்குள் மறைந்து ஓடிய சஹானா, எதிர்பாராத விதமாக அங்கே நின்றிருந்த சஞ்சயனைக் கண்டதும் அப்படியே நின்றுவிட்டாள்.

நேற்று அவன் நடந்துகொண்ட விதம் நெஞ்சில் மோதிச் செல்ல, சீண்டும் ஆவல் எழுந்தது.

“சஞ்சு மச்சான்!” வேண்டுமென்றே சத்தமாக அழைத்தாள்.

‘தூய்மையான யாழ்ப்பாணம்’ இதுதான் சஞ்சயனின் தற்போதைய இலக்கு. அதன் முதற்கட்டமாகக் கசூரினா பீச் மற்றும் அதனைச் சுற்றிய பகுதிகளைத் தெரிவு செய்து, பிளாஸ்டிக்கை அகற்றும் பதினைந்து நாட்களுக்கான வேலைத்திட்டம் ஒன்றை உருவாக்கி இருந்தான். அது பற்றிய அறிவிப்பைத் தன் முகநூலில் பகிர்ந்து சுயமாகக் கைகோர்க்க விரும்பும் இளைய சமுதாயத்துக்கு அழைப்பும் விடுத்திருந்தான். கூடவே, அந்தப் பகுதிப் பிரதேச சபை, விளையாட்டுக் கழகம், மாதர் சங்கம் என்பவற்றுக்கு அறிவித்து உதவியும் கோரியிருந்தான். பிரதேசபை வாகன உதவிகளை வழங்குவதாக உறுதியளித்தது. விளையாட்டுக் கழகமும் மாதர் சங்கமும் தங்கள் உறுப்பினர்களோடு சேர்ந்துகொண்டது.

சொன்னது போல இன்றைய தினம் துப்பரவாக்கற் பணிகள் நடைபெற்றது. எதிர்பாத்த அளவுக்கு இளைஞர்களின் ஒத்துழைப்புக் கிடைக்கவில்லை என்றபோதும் வந்தவர்கள் முனைப்புடனேயே செயலாற்றியதில் அவனுக்கு மிகுந்த திருப்தி. ஆங்காங்கே கழிவுகளைக் கொட்டும் கூடைகள் அமைத்து, ஒவ்வொரு குடில்களின் அருகிலும் கூடைகளை அமைத்து அதன் அருகே, குப்பைகளின் படம் வரைந்து, ‘நான் இங்கே மட்டும் தான் இருப்பேன்’ என்கிற வாசகம் அமைத்து என்று, முதல் நாளின் பெறுபேறு மிகச் சிறப்பாகவே இருந்தது என்றுதான் சஞ்சயன் சொல்வான்.

நாளைக்கு நெகிழிகளை(பிளாஸ்டிக்) அகற்றவும் அதனைத் தனியாக எடுத்துச் செல்வதற்கான ஏற்பாட்டையும் செய்வதாகவும் முடிவானது.

அன்றைய இலக்கை முடித்துக்கொண்டதும், “எம்மைப் பொறுத்தவரை இது ஒரு சிறப்பான நிறைவான ஆரம்பம். எமது சூழலை நாம் தான் பாதுகாக்க வேண்டும். அந்த உயர்ந்த சிந்தனை எல்லோரிடமும் பரவ முன்னுதாரணமான தொடக்கம்தான் இது! தொடர்ந்து செயற்படுவோம்! நிச்சயம் மற்றவர்களும் மாறுவார்கள்! அழைப்பு விடுத்ததும் எந்தப் பிரதியுபகாரமும் எதிர்பாராமல் வந்து கைகோர்த்த உங்கள் அனைவருக்கும் எனது நன்றிகளும் பாராட்டுக்களும்.” என்று அவன் உரையை முடித்தபோதுதான் அவளின் குரல் செவிகளை எட்டியது.

வேகமாக அவன் திரும்ப, “மச்சான்! சஞ்சு மச்சான்!” என்று மீண்டும் கொஞ்சலாய் அழைத்துக்கொண்டிருந்தாள் அவள். அவனைச் சுற்றி இருபதுக்கும் மேற்பட்ட இளவட்டங்கள். அவர்களின் பார்வையில் சுவாரசியம் ஏறிற்று. சுர் என்று ஏறியது அவனுக்கு! அவளைக் கண்டிப்புடன் நோக்கி, ‘போ!’ என்று கண்களால் விரட்டினான்.

அதைக் கவனிக்கும் நிலையில் சஹானா இல்லை. நேற்றைய அவனுடைய செய்கை உண்டாக்கியிருந்த காயம் உருவாக்கிவிட்ட கோபத்தில் அவனைச் சீண்டுவதில் மாத்திரமே குறியாக இருந்தாள். “மச்சான்? இங்க என்ன செய்றீங்க மச்சான்?” அப்பாவியாக விழிகளை விரித்துக் கேள்வி எழுப்பியவளின் உதட்டோரம் அடக்கமுடியாத குறுஞ்சிரிப்பு ஒன்று குமிழியிட்டுக்கொண்டிருந்தது.

அந்தக் குறும்பில் இளையவர்களின் பார்வை இன்னும் ரசனையுடன் அவள் மீது படிய, ‘சும்மா இருக்கிறவங்களையும் ஏத்தி விடுவாள் போல!’ என்று பல்லைக் கடித்தான்.

அவனின் மனநிலையை அறியாமல், “என்ன மச்சான்? சஞ்சு எண்டு கொஞ்சுது பஞ்சவர்ணக்கிளி.” என்று, அடுக்கு மொழி மட்டுமே தமிழின் அழகு என்பதில் அசையாத நம்பிக்கை கொண்ட நண்பன் கார்மேகன் கேட்க, சஹானாவின் மீதிருந்த சீற்றம் பளார் என்று அவன் மீது இறங்கியது.

சஹானாவே ஆடித்தான் போனாள். “சரி சஞ்சு மச்சான். நீங்க முக்கியமான அலுவலா நிக்கிறீங்க போல. நான் பிறகு வாறன்!” என்றுவிட்டு வேகமாக நழுவினாள். ‘அடிப்பாவி! எனக்கு அடி வாங்கித்தரத்தான் வந்தியா?’ என்று கொலைவெறியோடு நோக்கினான் கார்மேகன்.

இது எதுவும் அறியாத அகிலன், திரும்பி வந்துகொண்டிருந்தவளைக் கண்டு, “உன்னை எங்க எல்லாம் தேடுறது? பயந்தே போனன்.” என்று அவளின் மண்டையில் எப்போதும்போல் குட்டினான்.

“ஹாஹா.. அதுவா மச்சான்..” என்று கதை சொல்லத் தொடங்கியவளின் செவியோரம், “அறிவில்லை உனக்கு? சுத்திவர ஆம்பிளைகள் நிக்கிறாங்கள். வந்து நிண்டு மச்சான் கச்சான் எண்டு கொஞ்சிக்கொண்டு நிக்கிறாய். எங்க எப்பிடி நடக்கோணும் எண்டு தெரியாது? அதுசரி, ஓடின கூட்டம் பெத்து வளத்த ஜென்மம் தானே நீ. உன்னட்ட ஒழுங்கான பழக்கவழக்கத்தை எதிர்பார்க்கிறது பிழைதான்.” என்று, அடக்கப்பட்ட ஆத்திரத்துடன் சீறிவிட்டுப் போனான் சஞ்சயன்.

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock