ஆதார சுதி 8 – 2

அவளின் நாணம் மிகுந்திருந்த விழிகள், அவனுக்கான பச்சைக்கொடியை அசைத்துவிட்டிருந்தது. இருவருமே தாங்கள் நின்ற எல்லைக்கோட்டைத் தாண்டி ஓரடி எடுத்து வைத்துவிட்டார்கள் என்று புரிந்துபோயிற்று. மனம் படபடக்க வேலைகளைப் பார்த்துக்கொண்டிருந்தாள் யாதவி.

இது நடந்திருக்கக் கூடாது என்று புத்தி எடுத்துரைத்தாலும் மனம் நடாத்திவிட்டிருந்தது. முடிந்தவரை அவனை நெருங்காமல், அவர்களுக்குத் தனிமை நேராமல் பார்த்துக்கொண்டாள்.

திருமணம் இனிதே முடிய, மணப்பெண்ணுக்கு என்று ஒதுக்கிய அறைக்குப் போய்விட்டு வந்தவளை, அங்கிருந்த ஆலமரத்தடியில் வைத்துப் பிடித்தான் பிரதாபன்.

பயத்தில் அவள் விழிகளைச் சுழற்ற, “இன்னும் ரெண்டுபேரையும் சேர்த்து மறைக்கும் இந்த மரம்.” என்றான் அவன்.

திட்டம் போட்டுத்தான் பிடித்திருக்கிறான். என்ன சொல்லப்போறானோ? இனிய எதிர்பார்ப்பிலும் பயத்திலும் இதயம் படபடக்கத் துவங்கிற்று!

“மூக்குத்தி ஒட்டி இருக்கிறாய் போல. கண் அங்கேயே போகுது. உண்மையான மூக்குத்தியே போடு, வெள்ளை கல்லு. அருமையா இருக்கும்!” அவன் ரசனையோடு சொல்ல சொல்ல உயர்ந்த அவள் விழிகள் அவனை முறைத்தது.

எதையெல்லாமோ எதிர்பார்த்து அவள் நடுங்க அவன் என்ன சொல்லிக்கொண்டிருக்கிறான். கோபச் சிரிப்பொன்றைச் சிந்திவிட்டு, “மூக்குத்திதானே? குத்துறன், உங்கட மூக்குல.” என்றவள் ஓடப்போக, “நில்லு யது!” என்று அவசரமாகத் தடுத்தான் அவன்.

அவனுடைய ‘யது’வில் இனிமையாய் அதிர்ந்தாள் யாதவி.

“காதல் மனது சம்மந்தப்பட்டது எண்டு நீதான் சொன்னாய். என்ர மனதும் இப்பயெல்லாம் உன்ன மட்டும் தான் தேடுது. காலம் முழுக்க என்னோட, எனக்குப் பக்கத்திலேயே நீ இருந்தா நான் சந்தோசமா இருப்பன் எண்டு சொல்லுது. இரவில வாற கனவிலையும் நீதான், பகலில வாற நினைவுகளிலையும் நீதான் நிறைஞ்சு இருக்கிறாய். உன்ர மனதும் என்னைத் தேடுதா எண்டு நீதான் சொல்லவேணும்.” என்றவன், தங்க வர்ணம் மினுங்கும் பேப்பரால் சுற்றப்பட்ட சின்னப் பரிசுப் பெட்டியை அவள் கரங்களில் வைத்தான்.

இதயம் படபடக்க வாங்கிக்கொண்டவள் வார்த்தைகள் எதுவும் வராத ஒரு மயக்க நிலையிலேயே அங்கிருந்து நகரப்பார்க்க, “ஒண்டுமே சொல்லாம போனா எப்பிடி யது?” ஏமாற்றத்துடன் கேட்டான் பிரதாபன்.

தன் மனம்கொண்டவனே மணம்புரியக் கேட்ட போதிலும், சம்மதித்துவிட முடியாமல் கலங்கி நின்றாள் யாதவி. அந்தக் கலக்கம் விழிகளில் தெரிய அவனை ஏறிட்டாள்.

முதன் முறையாக அவள் கலங்கிப் பார்க்கிறான்.

“என்னம்மா?” நெஞ்சமே உருகிப்போகக் கேட்டவனுக்கு அந்தக் கணமே அவளின் சஞ்சலங்களை ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட வேண்டும் போலிருந்தது.

“என்ர அண்ணாக்குக் கல்யாணம் நடந்த விசயம் தெரிஞ்சா உங்கட தங்கச்சி என்ன செய்வாவோ தெரியாது. இதுல நாங்க வேற.. இப்பிடி எண்டால்.. அவா சம்மதிப்பாவா? இதெல்லாம் நடக்குமா?” பதில் அவனிடம் மட்டுமே உண்டு என்பது போன்று கலக்கத்துடன் அவனையே பார்த்து அவள் கேட்டபோது, அள்ளி அணைத்து ஆறுதல் படுத்தத் துடித்த கரங்களை அடக்கச் சிரமப்பட்டான் பிரதாபன்.

“பிரதி விசயம் முடிஞ்ச கதை. உன்ர அண்ணாக்குக் கல்யாணம் நடந்து முடிஞ்சுது எண்டு தெரிஞ்சால் கொஞ்ச நாளைக்குக் கவலைப்படுவாள் தான். கோபத்தில கத்தவும் கூடும். அதுக்குப் பிறகு மறந்திடுவாள். அதைப்பற்றி நீ கவலைப்படாத. நான் பாக்கிறன்.” என்றான் அவன் அவசரமாக.

“உங்கட வீட்டுல சம்மதிப்பீனமா? எங்களுக்கு அம்மா அப்பா இல்ல.. சொந்தபந்தம்.. சொத்து..” என்றவளின் கரத்தை, அதற்குமேல் முடியாமல் மென்மையாகப் பற்றினான் அவன்.

“நான் விரும்புறது யாதவி எண்டுற அருமையான பெட்டைய(பெண்ணை). அவளை நல்ல பிள்ளையா எண்டு மட்டும் தான் பாப்பீனம்.” அவனது வீட்டு நிலை அவனுக்குத் தெரியும். அதைவிட அவன் மனதை அவனுக்கு மிக நன்றாகவே தெரியும். எனவே நம்பிக்கையோடு சொன்னான்.

அவள் கலக்கம் தீராமலேயே நிற்க,“நீ நல்ல பிள்ளைதானே?” என்று உதட்தில் முளைத்துவிட்ட சிரிப்புடன் கேட்டான் பிரதாபன்.

“அது தெரியாமத்தான் வந்து கல்யாணத்துக்குக் கேட்டீங்க போல.” என்று சொன்னவள், அங்கு யாரோ வரக்கண்டு, “பிரதாப்! ஆக்கள் வெளில வரத் துவங்கிட்டீனம். நான் போறன்.” என்றுவிட்டு நகரப்போக, அவன் பெயரை அவள் உச்சரித்த அழகில் கிறங்கிப்போனான் அவன்.

அவனிடமிருந்து சத்தமே இல்லை என்றதும் திரும்பிப் பார்த்து, என்ன என்று கண்ணால் கேட்டாள். “நீ கூப்பிடேக்கத்தான் என்ர பெயர் எவ்வளவு வடிவு எண்டே எனக்குத் தெரியுது. இன்னொருக்கா கூப்பிடன்.” என்றான் கெஞ்சலாக.

“பிரதா…ப்” முகம் சிவக்கச் சிணுங்கியவள் அங்கிருந்து ஓடியே போனாள்.

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock