நாள்கள் இறக்கை கட்டிக்கொண்டு பறக்கின்றனவா என்றுதான் ஆரபிக்கு நினைக்கத் தோன்றியது. அந்தளவில் அத்தனையும் வேகமாக நிகழ்ந்து, இதோ பொன் தாலியைப் பூட்டி, அவளைத் தன் திருமதியாக வரித்துக்கொண்டிருந்தான் சகாயன்.
அருகில் அமர்ந்திருந்தவனைத் திரும்பிப் பார்த்தாள். அதற்காகவே காத்திருந்தாற்போல் இலேசாக இவள் புறம் சரிந்து, “என்னடி மனுசி?” என்றான் அவன்.
உள்ளே சில் என்று பனிக்கட்டிகள் இறங்கிற்று அவளுக்கு. பட்டு வேட்டி சட்டையில், மணமகனுக்கே உரித்தான களையும் கம்பீரமும் சுமந்து, அன்று காதலை அவள் சொன்னபோது என்ன மாதிரியான துள்ளல் மனநிலையில் இருந்தானோ, அதற்கு இணையாக மகிழ்ச்சி பொங்க அமர்ந்திருந்தவனைக் கண்டு அவள் உள்ளம் நெகிழ்ந்தே போயிற்று.
“பிடிச்சிருக்கா?” தானும் இலேசாக அவன் புறம் சரிந்து, எதையோ எடுத்து வைப்பதுபோல் பாவனை காட்டியபடி வினவினாள்.
சரக்கென்று திரும்பிப் பார்த்தவனின் உதடுகளும் கண்களும் போட்டிபோட்டுக்கொண்டு அவளிடம் சிரித்தன. “இரவுக்குச் சொல்லுறன்.” என்றான் அவன் கள்ளூறும் சிரிப்புடன்.
முகம் முழுக்க மலர்ந்த முறுவலையும் வெட்கத்தையும் மறைக்க, மண்டபத்தை நோக்கிப் பார்வையைத் திருப்பினாள் ஆரபி.
இப்போதும் நிறைந்து வழிந்த அந்த மண்டபத்தைப் பார்க்கையில் மலைப்பாக இருந்தது.
அன்று மட்டக்களப்பில் இருந்து அவன் திரும்பிய நாளில் இருந்து சரியாக ஒரு மாதத்தில் இந்தத் திருமணத்தை நடாத்தியிருந்தான் அவன்.
அவன் வீட்டினருக்கு அனைத்தும் ஏற்கனவே தெரியும். இவள் வீட்டினருக்கும் தெரியப்படுத்திய பிறகு, இரு தரப்பினரையும் சந்திக்க மிகவுமே சங்கடப்பட்டுப்போனாள் ஆரபி.
அதுவும் அவள் வீட்டினர் தந்த மண்டகப்படியில் காதலைப் பற்றிச் சொல்லாமலேயே கலியாணத்திற்கு ஏற்பாடு செய்திருக்கக் கூடாதா என்று நினைத்திருந்தாள்.
அந்தளவில் பேச்சுக் கேட்டிருந்தாள். விட்டுக்கொடுத்துப் போக வேண்டும், எதுவாக இருந்தாலும் மனம் விட்டுப் பேச வேண்டும், பிரச்சனை என்று வந்துவிட்டால் தவறே செய்திருந்தாலும் பெரியவர்களிடம் சொல்ல வேண்டும் என்று காதில் இரத்தம் வருகிற அளவுக்கு அபிசாவும் மங்கையற்கரசியும் புத்தி சொல்கிறார்களா, திட்டுகிறார்களா என்று பிரித்தறிய முடியா அளவில் அவளை ஒரு வழியாக்கியிருந்தார்கள்.
முறைத்துக்கொண்டு திரிந்த தமையனைச் சமாதானம் செய்வதற்குள் அவளுக்குப் போதும் போதுமென்றாயிற்று. பின்னே அன்று அவன் அவ்வளவு கேட்டும் வாயே திறக்கவில்லையே அவள்.
இவர்களை இணைத்து வைக்க முதலே இரு வீட்டுக்கும் விருப்பம் இருந்தது. இவர்கள் காதலர்கள் என்று அறிந்ததும் விடுவார்களா? அதைவிட இவர்களுக்குள் இத்தனை சண்டை சச்சரவு இருந்திருக்கிறது என்று அறிந்ததும் அடுத்த சண்டையை இவர்கள் போடுவதற்கு முதல் இதோ திருமணத்தையே முடித்துவிட்டிருந்தார்கள்.
வினோவின் திருமணம் எத்தனை பெரிதாக நடந்தது என்று தெரியும். அப்படி இல்லை என்று சகாயன் சொல்லியிருந்தான். எளிமையாக இருக்கும் என்று எண்ணியிருந்தவள் வந்த அரசியல் புள்ளிகளையும், முக்கிய பிரமுகர்களையும் கண்டு மிரண்டுபோனாள்.
மணப்பெண்ணாக மேடையேறி வந்து அவன் அருகில் அமர்ந்ததும், அவள் கேட்ட கேள்வியே, “என்ன இவ்வளவு ஆக்கள் வந்திருக்கினம்?” என்றுதான்.
சடங்குகள் எல்லாம் முடிந்து, மதிய விருந்து, முக்கிய புள்ளிகள் புகைப்படம் எடுப்பது என்று பரபரப்பான நேரம் முடிந்த பொழுதில் ஒருவிதத் தயக்கத்துடன் மேடையேறி வந்தான் கிரி.
அன்று, ‘அவளிடம் மன்னிப்புக் கேட்கவா’ என்று கேட்டபோது திரும்பவும் எதையாவது ஆரம்பித்து வைக்காதே என்று சகாயன் சொன்னது மிக மிக ஆழமாக அவனைக் காயப்படுத்தியிருந்தது. வெளியில் காட்டிக்கொள்ளவில்லையே தவிர உள்ளுக்குள் மிகவும் உடைந்துபோனான். அதில் இருந்த உண்மையும் சேர்ந்து நன்றாகவே சுட்டிருந்தது.
கூடவே மட்டக்களப்புக்குச் சென்று வந்த அன்று, பாய்ந்து இவனைக் கட்டிக்கொண்டு, அவளோடு சமாதானமாகிவிட்டேன் என்று சொன்னவனின் முகத்தில் இருந்த வெளிச்சமும், நேரம் கிடைக்கிற பொழுதுகளில் எல்லாம் தனியாக இருந்து அவளோடு கைப்பேசியில் பேசுகையில் அவன் முகத்தில் இருக்கிற பிரகாசமும் மகிழ்ச்சியும் இவனுக்கே கண்ணுக்கு நிறைவாக இருந்திருக்கிறது.
இப்படி இருந்திருக்க வேண்டியவனைத்தான் தேவையற்று அவர்களுக்குள் தலையிட்டு, வார்த்தைகளை விட்டு, சண்டையை உருவாக்கி, இறுகிப்போக வைத்திருக்கிறோம் என்று பலமுறை நினைத்திருக்கிறான்.
அவள்தான் தன் சந்தோசம் என்று என்றும் அவன் சொன்னதில்லை. ஆனால், அதை இவன் உணர்ந்திருக்கிறான்.
அதனாலேயே திருமணத்திற்கு இடைப்பட்ட காலத்தில் ஆரபியைச் சந்திக்கவோ, மன்னிப்புக் கேட்பதற்காகவேனும் அவளோடு பேசவோ அவன் முயற்சி எடுக்கவில்லை. தன்னால் திரும்பவும் எதுவுமாகி, அவர்களுக்குள் பிணக்குகள் எதுவும் வர வேண்டாம் என்று நினைத்தான். முதலில் திருமணம் முடியட்டும் என்று எண்ணினான். இதோ நல்லபடியாகத் திருமணமும் முடிந்தது.

