இணைபிரியா நிலை பெறவே 3 – 2

தற்போதைக்கு அதைப் பற்றிப் பேசாமல், “சரி விடு. உனக்காக ஆசையா சமைச்சு வச்சிருக்கிறன் வா. என்ர செல்லமெல்லா, உனக்குப் பிடிச்ச ஐஸ்கிரீம் எல்லாம் வாங்கி வச்சிருக்கிறனடி.” என்று அவளைக் கெஞ்சிக் கூத்தாடி அழைத்துக்கொண்டு சென்றாள்.

காவலாளி இவளைக் கண்டதும் ஓடி வந்து மன்னிப்பை வேண்டி, இனி இப்படி நடக்கமாட்டேன் என்று சொன்னார். அது அவன் வேலை என்று புரிந்தது. சகாயன், வினோதினியின் அன்னை கலைமகள் மலர்ந்த முகத்துடன் வாசலுக்கே வந்து வரவேற்றார்.

அவருக்கும் தன் வீட்டில் இன்னொரு பெண்ணைப் போன்று இருந்தவளை இத்தனை நாள்களுக்குப் பிறகு பார்த்ததில் மிகுந்த மகிழ்ச்சி. வினோதினியோடு ஏதும் சண்டையா என்று விசாரித்தார்.

அவளுக்குச் சங்கடமாகப் போயிற்று. விலகி இருக்கையில் தெரியவில்லை. அதுதான் சரி என்றும் நினைத்தாள். ஆனால், அவர்களை எதிர்கொள்கையில் மிகவுமே ஒரு மாதிரி இருந்தது. என்னவோ தவறு செய்துவிட்டவள் போன்று தடுமாறினாள்.

“விடுங்கம்மா. பிறகு திரும்பவும் கோவிச்சுக்கொண்டு போயிடுவாள்.” என்ற வினோதினியை முறைத்தாள்.

“என்ன முறைப்பு? குழந்தைப்பிள்ளை மாதிரி கோவிச்சுக்கொண்டு போயிற்று கோவம் வேற வருது உனக்கு. வா!” என்று சமையலறைக்கே நேராக அழைத்துப்போனாள்.

அவர்கள் வீடு பெரிய மாற்றமில்லாமல் அப்படியேதான் இருந்தது. அவளால்தான் முன்னர் போன்று இயல்பாக இருக்க முடியவில்லை. முன்னர் எல்லாம் சகாயனின் அறை, பெரியவர்களின் அறை தவிர்த்து அந்த வீட்டில் மிகுதி இடங்களுக்கு எல்லாம் வெகு இயல்பாகப் போய்வருவாள். ஆனால் இன்று?

அவன் பைக் வெளியே நின்றிருந்தது. அவனைக் காணவில்லை. ஆனாலும் எங்கோ ஒரு மூலையிலிருந்து அவன் பார்த்துக்கொண்டிருக்கிறான் என்கிற உணர்வு அவளை இயல்பாக இருக்க விடாமல் செய்தது.

வினோதினியின் பிள்ளைகளோடு கூட அவளால் இயல்பாக விளையாட முடியவில்லை. அவள் மகன் பிருந்தகன் இவளை மறந்திருந்தான். சின்னவளை வாங்கி மடியில் வைத்துக்கொண்டாள்.

வினோதினி பழைய மாதிரியே ஊர்க் கதைகளை எல்லாம் வளவளவென்று அளந்தாள். “முதல் அவாக்கு ஏதாவது குடிக்க குடு பிள்ளை.” என்று கலைமகள் சொன்ன பிறகுதான் குடிக்கவே தந்தாள். அந்தளவில் அவளுக்குச் சொல்வதற்கு நிறைய இருந்தன.

அவள் சின்னவள் சினுங்க ஆரம்பித்தாள். குழந்தைக்கு என்றே மசியலாக வைத்திருந்த உணவைப் போட்டுக்கொண்டு வந்து வினோதினி ஊட்ட வெளிக்கிட, “என்னட்டத் தா!” என்று வாங்கி, தன் மடியில் இருந்தவளுக்குத் தானே ஊட்டினாள் ஆரபி.

“அபி அக்கான்ர மகனைக் கவனிச்சுப் பழக்கம்போல உனக்கு.” அவள் இலாவகமாகக் குழந்தைக்கு உணவூட்டுவதைக் கவனித்துவிட்டு வினவினாள் வினோதினி.

“கிடைக்கிற லீவுக்கு எல்லாம் அங்க ஓடிடுவன். கிருத்திக்கும் நான் இருந்தா போதும்.” பிருந்தினிக்கு உணவூட்டியபடி சொன்னாள் அவள்.

“பிறகு ஏனடி ஊருக்கு வராமையே இருந்தனி?” என்றவள் திடீர் கேள்வியில் அதிர்ந்து நிமிர்ந்தாள் ஆரபி.

“அண்ணாவோட ஏதும் பிரச்சினையாடி?”

“வினு”

“இல்லாம அண்ணா சொல்லியும் கேக்காம கோவிச்சுக்கொண்டு போகமாட்டாய். இப்ப வரைக்கும் அண்ணாவும் வந்து உன்னோட கதைக்கேல்ல. நீயும் அவரைப் பற்றி ஒரு வார்த்த கேக்கேல்ல.” என்றவளிடம் என்ன சொல்லுவாள்?

“முந்தி எல்லாம் அவரைப் பற்றித் திட்டிக்கொண்டே இருப்பாய். நினைவிருக்கா? ஆனாலும் அண்ணா ஒண்டு சொன்னா செய்யாம இருக்க மாட்டாய். ஆனா இப்ப…” என்றவளின் தொடர் கேள்விகளில் ஆரபிக்குக் கண்கள் கரித்துக்கொண்டு வந்தன.

சட்டென்று மடியில் இருக்கும் சின்னவளுக்கு உணவூட்டுவது போன்று தலையைக் குனிந்துகொண்டாள்.

“உங்களுக்க என்ன நடந்தது, இல்ல என்ன நடக்குது எண்டு எனக்குத் தெரியேல்ல. ஆனா எண்டைக்கும், என்ன பிரச்சினை எண்டாலும் உன்ர ஃபிரெண்ட் நான் இருக்கிறன் எண்டுறத மறந்திடாத.” அவள் பதிலை எதிர்பாராமல் தன் நிலைப்பாட்டைத் தெளிவாகச் சொன்னாள் வினோதினி.

இதுதான் அவள். அவளின் அந்த அன்புக்குத் தான் சரியான மரியாதை செய்யவில்லை என்று ஆரபிக்குத் தெரியும். ஆனால், அவளுக்கு எல்லாவற்றிலிருந்தும் வெளிவரவேண்டியிருந்தது. அதனால்தான் சகாயன் தொடர்பான அத்தனையில் இருந்தும் விலகியிருந்தாள். இதையெல்லாம் சொல்ல முடியாமல் அமைதி காத்தபடி சின்னவளுக்கு உணவூட்டி முடித்தாள்.

“நீங்களும் அப்பிடியே சாப்பிடலாமே பிள்ளைகள். நேரமாச்சே.” வெளியே தோட்டத்தில் வைத்துப் பிருந்தகனுக்கு விளையாட்டுக் காட்டியபடியே உணவைக் கொடுத்துவிட்டு வந்த கலைமகள் சொன்னார்.

“பொறுங்கம்மா. இன்னும் பத்து நிமிசத்தில உங்கட பேத்தி நித்திரைக்கு அழுவா. அவாவை நித்திரையாக்கிப்போட்டு நிம்மதியாச் சாப்பிடுறம்.” என்றவள் சின்னவள், ஆரபி சகிதம் மேலே தன் அறைக்குப் மாடியேறினாள்.

“நான் மாமாட்ட போறன்.” என்றபடி இவர்களை முந்திக்கொண்டு படிகளில் தாவி ஏறினான் பிருந்தகன்.

அந்த மாமா என்கிற சொல்லுக்கே இவளுக்கு நெஞ்சு படபடத்தது. அவன் பார்வையில் படாமல் வினோதினியின் அறைக்குள் நுழைந்த பிறகே கொஞ்சமேனும் ஆசுவாசமானாள்.

“எங்கயடி அண்ணா?” வினோதினியின் கணவனைப் பற்றி விசாரித்தாள்.

“அவர் கொழும்புக்கு போய்ட்டார். நாளைக்குத்தான் வருவார்.” என்றவள் சின்னவளை வாங்கக் கைகளை நீட்டினாள்.

அவள் ஆரபியிடமிருந்து வரமாட்டேன் என்றாள்.

“பாத்தியாடி நான் பெத்ததுக்கு இருக்கிற தடிப்பை. அவள் பிறந்ததும் நீ பாக்கவே வரேல்ல. ஆனா அவள் உன்னைக் கண்டதும் என்னட்ட வரமாட்டாளாம்.” வினோ என்னவோ சும்மா விளையாட்டுக்குத்தான் சொன்னாள். அதில் இருந்த உண்மை ஆரபியை நன்றாகவே சுட்டுவிட்டதில் சட்டென்று முகம் சிவந்து, கண்கள் கலங்கிப் போனது அவளுக்கு.

error: Alert: Content selection is disabled!!
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock