“அதுதான் மொத்தமா முறிச்சு விட்டுட்டாயெல்லா. பிறகும் என்னத்துக்கு அவள் எல்லாம் ஒரு ஆள் எண்டு கதைக்கப் போனனி?”
“நீ தேடி தேடிப் போறதாலதான் அவ்வளவு திமிர் அவளுக்கு.”
கிரி சொன்ன எதற்கும் வாயே திறக்கவில்லை சகாயன். இவனுக்கு எப்படி அவளைச் சிறு வயதிலிருந்து தெரியுமோ அப்படித்தான் அவனுக்கும். அதில் ஒருமையிலேயே கதைதான்.
இப்போது புள்ளிகளைக் குறித்துக்கொள்ளும் வேலையைக் கிரி பார்த்தான். என்னதான் வேலை தடைப்படாமல் நடந்தாலும் சகாயனால் முழு மனதாக அதைக் கவனிக்க முடியவில்லை.
அவள் சொன்ன விடயம் அந்தளவில் உச்சி மண்டையிலேயே போய் முடித்திருந்தது. அன்று மட்டுமில்லை அடுத்து வந்த நாள்களும் அதுவே மண்டைக்குள் நின்று அவனை என்னவெல்லாமோ செய்துகொண்டிருந்தது. பார்த்துக்கொண்டிருந்த கிரிக்கு அவள் மீது அப்படி ஒரு ஆத்திரம் உண்டாயிற்று.
*****
மழைக்காலம் ஆரம்பிக்க இருந்ததில் வாய்க்கால்களை சீரமைக்கும் பணியினை ஆரம்பித்திருந்தான் சகாயன். இல்லையா இடர் கால நேரத்தில் நிச்சயம் மக்கள் அவல நிலைக்கு ஆளாவார்கள். வருடா வருடம் செய்வதுதான். ஒவ்வொரு வருடமும் சீரமைத்த பிறகு கழிவுகளை வீசாதீர்கள், பிளாஸ்ட்டிக்குகளை போடாதீர்கள், உங்களுக்குச் சொந்தமான பகுதி வாய்க்கால் துண்டுகளை நீங்களே சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள் என்று சொல்லும்போதெல்லாம் பெரிதாகத் தலையாட்டுகிறவர்கள் நாளடைவில் பழைய குருடி கதவைத் திறடி கதைதான்.
அதில் அந்த வருடமும் பிரதேச சபை செயலாளர், காவல்துறை அதிகாரி சகிதம் வாய்க்கால்களை தூர்வாரும் வேலையை ஆரம்பித்திருந்தான்.
அது தெரியாமல் கடைக்குப் புறப்பட்டு வந்திருந்தாள் ஆரபி. போகவே முடியவில்லை. பிரதான வீதியின் இரு மருங்கிலும் இருக்கிற வாய்க்கால்களை தூர் வருவதால் எக்ஸ்கவேட்டரை(Excavator) நடுவில் நிறுத்தி வேலை நடந்துகொண்டிருந்தது.
‘இவன் ஒருத்தன் எப்ப வந்தாலும் நாடு ரோட்டில படுத்துக் கிடப்பான்!’ என்று திட்டிவிட்டு அன்று போலவே இன்றும் இரண்டு கிலோமீட்டர்கள் சுற்ற வேண்டிய நிலையை நொந்தபடி ஸ்கூட்டியைத் திருப்பினாள்.
அன்று அவனிடம் அப்படிச் சொல்லிவிட்டு வந்தவளும் சந்தோசமாக இல்லை. இது என்ன வேதனை என்று இருந்தது. முறிந்துபோன உறவு. வேண்டாம் என்றது அவன். அவள் எல்லாம் ஒரு ஆளே இல்லை என்றதும் அவன்தான். இப்போது எதற்கு திரும்பவும் ஆரம்பிக்கிறான் என்று யோசித்து யோசித்தே களைத்துப்போனாள்.
சிந்தனையின் திசையைத் திருப்ப எண்ணித்தான் கடைக்குப் புறப்பட்டு வந்தாள். பார்த்தால் அவனே கண் முன்னே நின்று என்னை மறந்துவிடுவாயோ என்று கேளாமல் கேட்கிறான். மனத்துக்கு அமைதி வேண்டுமாக இருக்க எதிரில் வந்த அம்மன் கோவிலுக்குச் சென்று வணங்கினாள்.
இன்றைய நிலையில் தமையனின் திருமணத்தைக் கூட மகிழ்வோடு அனுபவிக்கும் நிலையில் அவள் இல்லை. எப்போதடா ஆனந்தனின் திருமணம் முடியும், எப்போதடா மட்டக்களப்புக்குச் சென்று சேர்வோம் என்று இருந்தது அவளுக்கு.
அம்மனைக் கும்பிட்டுவிட்டு, ஓரளவிற்கு மனத்தின் அமைதியை மீட்டெடுத்துக்கொண்டு அவள் வெளியே வர, அவள் முன்னால் வந்து நின்றான் கிரி.
ஒரு நொடி திடுக்கிட்டுப்போனாள். அடுத்த நிமிடமே முகம் கடுக்க விலகி நடக்க ஆரம்பித்தாள்.
“ஆரபி நில்லு. உன்னோட கதைக்கோணும்.”
“ஆரபி!”
“ஆரபி, நான் கதைக்கிறது காதில விழேல்லையா உனக்கு?
“இந்தத் திமிருக்குத்தான் அவன் உன்னை வெட்டிவிட்டவன். ஆனாலும் அடங்கிறியா பார்!” என்றதும் நன்றாகச் சுட்டுவிட்டது அவளுக்கு.
சட்டென்று திரும்பி, “என்னை வெட்டி விட்டுட்டு என்னத்த வெட்டிக் கிழிச்சவர் உங்கட நண்பர்? உருப்படாததுகளோட சேந்து உருப்படாமத்தான் இன்னும் திரியிறார்.” என்றாள் அவளும் பட்டென்று.
“என்னைப் பாக்க உருப்படாதவன் மாதிரி இருக்கா உனக்கு? நீ பெரிய இவள். போடி வாய மூடிக்கொண்டு!” அவள் தன்னை அப்படிச் சொல்லிவிட்ட கோபத்தில் நிதானத்தை இழந்திருந்தான் கிரி.
“டீயா? ஒழுங்கு மரியாதையா கதைங்க! டீ போட்டீங்க மரியாதை கெட்டுடும்!” என்று விரல் நீட்டி எச்சரித்தவளின் முன்னே வேகமாக வந்து நின்ற சகாயன், “விரல் நீட்டிக் கதைக்காத ஆரபி!” என்று அவள் விரலிலேயே படார் என்று அடியைப் போட்டான்.
சட்டென்று நின்றுவிட்டாள் ஆரபி. இதேபோலொரு காட்சி சட்டென்று வந்து முகத்தில் அறைந்தது. அன்று தான் அவமானப்பட்டு நின்றதும் சேர்ந்து நினைவில் வந்துவிட, நொடியில் அவள் கண் முகமெல்லாம் கலங்கிச் சிவந்து போனது.
அடுத்து என்ன நடக்கும் என்று அவளுக்குத்தான் தெரியுமே. “சொறி!” என்றாள் மயூரனைப் பார்த்து.
“உங்களுக்கு அல்லது உங்கட நண்பருக்கு என்னோட என்ன கதைக்கோணும்?” அவமானக் கன்றலில் சிவந்துவிட்ட முகமும் கலங்கிவிட்ட விழிகளுமாக அவன் முகம் பார்த்து வினவியவளைக் கண்டு, திகைத்து நிற்பது இப்போது சகாயனின் முறையாயிற்று.
“ஆரு” என்றான் பேச்சு வராமல்.
“என்ன கதைக்கோணும்?” கோடாகக் கண்ணீர் படர்ந்திருந்த அவள் விழிகளில் ஒரு பிடிவாதம்.
“இல்ல. ஒண்டும் இல்ல. நீ போ.”
“என்ன கதைக்கோணும்?”
“அதுதான் ஒன்றுமில்லை எண்டு சொல்லுறனெல்லா.” என்று அவளிடம் சொன்னவன், “நீயாவது இஞ்ச இருந்து போ மச்சான்.” என்றான் கிரியிடம்.
அவர்கள் இருவரையும் ஒருமுறை பார்த்துவிட்டு கிளம்பினான் கிரி.
இன்னுமே மிச்சமாக இருந்த அவமானக் கன்றலுடன் அவனைப் பாராமல் வேறு எங்கோ பார்த்து நின்றவளைக் கண்டு இப்போதும் சகாயனுக்கு என்ன பேசுவது என்று தெரியவில்லை.
“சொறி!” எதற்காக இந்த மன்னிப்பு என்றில்லாமல் மன்னிப்பை வேண்டினான்.
“ஏதாவது கதைக்கோணுமா?” அவன் மன்னிப்பைப் புறம் தள்ளி இப்போது அவன் முகம் பார்த்து நேராக வினவினாள் அவள்.
நிறைய இருந்தது. ஆனால் பிடிவாதமாக நின்று இப்படிக் கேட்பவளும் அதற்கான மனநிலையில் இல்லை என்று தெரியும். பிறகு என்ன கதைக்க? இல்லை என்று தலையைக் குறுக்காக அசைத்தான்.
அடுத்த நொடியே அவள் புறப்பட்டுவிட கோயில் படிக்கட்டிலேயே அமர்ந்துவிட்டான் சகாயன்.
இவள் வந்ததை அவனும் கண்டாந்தான். அவள் இந்த உள்பாதையில் திரும்பியதும் கிரி பின்னால் பைக்கை எடுத்துக்கொண்டு வரவும் அதிர்ந்துபோனான் சகாயன்.
சும்மாவே அவர்கள் இருவருக்குள்ளும் ஒத்து வரவே வராது. இதில் கிரி போகும் வேகத்தைப் பார்க்கும்போதே அடுத்த பிரச்சனையைக் கிளப்பப் போகிறான் என்று தெரிந்துபோயிற்று. அதுதான் பின்னால் ஓடி வந்தான். அவள் விரல் நீட்டி நண்பனைப் பேசவும் சட்டென்று மூண்ட கோபத்தில் கையில் அடித்துவிட்டான். ஆனால் அது இப்படி மாறும் என்று அவன் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.
எல்லாம் அவனால்தான். அவனுக்கே தெரியும். இதனைச் சீராக்க வேண்டியவனும் அவன்தான். எப்படி என்றுதான் புரியமாட்டேன் என்றது.
“டேய் நண்பா.” அவள் புறப்பட்ட பின்னும் இவன் வரவில்லை என்றதும் திரும்பி வந்திருந்தான் கிரி.
நிமிர்ந்து பார்த்தான் சகாயன்.
“நான் அவளோட கதைக்கத்தான்டா வந்தனான். அவள்தான் கோபத்தை கிளப்பினவள்.”
“உன்னை ஆரடா அவளோட கதைக்கச் சொன்னது?
“என்ன மச்சான் இப்பிடிச் சொல்லுறாய்? நீ என்ர நண்பன்டா. உனக்காக நான் கதைக்காம வேற ஆர் கதைக்கிறது?”
அலுப்புடன் தலையைக் கோதினான் சகாயன்.
“என்னடா?”
“எனக்கும் அவளுக்கும் நடுவில வராத கிரி.” என்றான் அவனைப் பாராமல்.
“மச்சான்?”
“…”
“என்னடா நீ, அந்தளவுக்கு நான் ஆரோவாடா உனக்கு?”
“டேய்! என்னோட என்ன வேணுமெண்டாலும் கதை. அவளோட கதைக்காத எண்டு சொல்லுறன்.”
“அந்தளவுக்கு…” என்றவனை வேகமாக இதையிட்டு, “வேணாம் மச்சான்!” என்றான் சகாயன் வேகமாக.
கிரிக்கு இதுதான் கோபம். இதுதான் பிடிப்பதும் இல்லை. சகாயனை முறைத்துவிட்டு பைக்கை உதைத்துக் கிளப்பிக்கொண்டு புறப்பட்டான்.


