“இப்படிச் சொன்னால் எப்படி சூர்யா? தயவுசெய்து விட்டுவிடுங்கள். இந்த மணமே எனக்கு என்னவோ செய்கிறது…” என்றாள் முகத்தைச் சுளித்தபடி.
“ஓ.. சாரி. இனி உன்னருகில் புகைக்கவில்லை….” என்றவன் உடனேயே காரிலிருந்து இறங்கி, அருகே இருந்த குப்பை வாளியில் அதைப் போட்டுவிட்டு வந்தான்.
“ப்ச் சூர்யா! புரியாமல் பேசாதீர்கள். என்னருகில் மட்டுமல்ல எப்போதுமே புகைக்காதீர்கள்.” மீண்டும் வந்து காருக்குள் அமர்ந்தவனிடம் சொன்னவள், அங்கிருந்த பியர் டின்னைக் காட்டி, “இந்தக் கருமத்தையும் குடிக்காதீர்கள்..” என்றாள் கோபத்தோடு.
“என்னால் அது முடியும் என்று நான் நினைக்கவில்லை லட்டு.” என்றான் அவன்.
“எனக்காகத்தன்னும் விடமாட்டீர்களா சூர்யா..:?” அவளுக்காக அவன் எதையும் செய்வான் என்கிற நம்பிக்கையில் கேட்டாள்.
“அதென்ன உனக்காக விடுவது..? எனக்குப் பிடித்தால் தான் ஒன்றை என்னால் செய்யமுடியும் லட்டு! அவ்வப்போதுதான் என்றாலும் என்னால் இவை இல்லாமல் இருக்கமுடியாது.” என்றான் அவன் தெளிவாக.
அதில் அவள் உள்ளம் தான் பெரிதாக அடிபட்டது. கண்கள் வேறு கலங்கியது. மறுபக்கமாகத் தலையைத் திருப்பி, இமைகளை மூடித் திறந்து கண்களில் சேரப்பார்த்த நீரைத் தடுத்தாள்.
“உங்களுக்குப் பிடிகிறது என்றுதானே நான் கண்களுக்கு லென்ஸ் வைத்தேன். அதேபோல எனக்குப் பிடிக்கவில்லை என்பதற்காக உங்களால் இதை விடமுடியாதா.?” என்று வாதாடினாள்.
“இதென்ன புதுக்கதை? லென்ஸ் உனக்கு அழகாக இருக்கும், அதைவிட வசதியாக இருக்கும் என்றுதான் சொன்னேன். உனக்கும் அது பிடித்ததில் செய்தாய். நான் உன்னைக் கட்டாயப்படுத்தவில்லையே! அதேபோல நீ சொல்லும் ஒன்று எனக்கும் பிடிக்க வேண்டாமா? பிடிக்காமல் ஒன்றைச் செய்ய என்னால் என்றுமே முடியாது.” என்றான் உறுதியான குரலில்.
அவளுக்கு வலித்தது. லென்ஸ் வைத்தபிறகு அவளுக்கு அது பிடித்துவிட்டதுதான். ஆனால் வைக்கச் சென்றது அவனுக்குப் பிடிகிறது என்பதால் தானே! அது புரியவில்லையா அவனுக்கு?
அவள் முகத்தில் எதைக் கண்டானோ, “முடிந்தவரை குறைக்கப் பார்க்கிறேன் லட்டு…” என்றான்.
அவளுக்கும் அதற்கு மேல் அவனைக் கட்டாயப்படுத்த வாயெழவில்லை. உனக்காக என்னால் செய்யமுடியாது என்று அவன் சொன்னது பெரிய அடியாக இருந்தது. ஆனாலும் குறைக்கப் பார்க்கிறேன் என்றதில் ஆறுதல் கொண்டாள்.
“ம்.. முடிந்தவரை நன்றாகக் குறையுங்கள் சூர்யா. உங்கள் உடல் நலமும் இதில் அடங்கியிருகிறது.” என்றாள், அவன் மேல் கொண்ட அக்கரையில்.
“கட்டாயம்…” என்று அவன் சொல்ல, இதற்காவது சம்மதித்தானே என்று இருந்தது அவளுக்கு!
“அதுசரி சூர்யா. அந்த பியரை ஏன் வாங்கினீர்கள்?”
“இந்தப் பேச்சை விடவே மாட்டாயா…?” அலுத்துக்கொண்டான் அவன். “இப்போது குடிக்கலாம் என்றுதான் வாங்கினேன். அதுதான் நீ கத்துகிறாயே.”
“அதைக் குடித்துவிட்டுக் காரை ஓடுவது தப்பில்லையா சூர்யா? தப்பித்தவறி போலிஸ் மறித்தால் என்ன செய்வீர்கள்..?”
“பியர் தானே லட்டு. இல்லாவிட்டாலும் உன்னை உன் வீட்டில் இறக்கிவிட்டு, என் வீட்டுக்குப் போக ஒரு பத்து நிமிடம் பிடிக்குமா? அதுவே அதிகம். அதற்குள் வெறிக்காது, நான் எப்போதும் செய்வதுதான். ”
“எப்போதும் செய்வதாலே ஒன்று நியாயம் ஆகிவிடாது சூர்யா. இதை விடத்தான் உங்களால் முடியாது என்று விட்டீர்கள். குடித்துவிட்டுக் காரோட மாட்டேன் என்றாவது சொல்லுங்கள். நீங்கள் சொல்லித்தான் ஆகவேண்டும்!” என்று உறுதியான குரலில் கேட்டாள் லட்சனா.
அவன் பதில் சொல்லாது அவளைப் பார்க்க, “ப்ளீஸ் சூர்யா.. உங்கள் நல்லதுக்காகத்தான் கேட்கிறேன். இல்லையானால் நீங்கள் குடித்துவிட்டு ஓடி எங்கே என்ன நடந்ததோ என்று எனக்கு ஒரே பயமாக இருக்கும். எனக்…” எனக்காக என்று சொல்லப் பார்த்தவள், அவன் அவளுக்காகச் செய்யமாட்டானே என்று நினைவில் வர, தொண்டை அடைக்க அதற்கு மேல் எதுவும் சொல்லாது நிறுத்தினாள்.
“சரி! உனக்காக இனிக் குடித்துவிட்டுக் கார் ஓடவில்லை.. சரிதானா..” என்றவன் அவள் தோளைச் சுற்றிக் கையைப் போட்டான்.
அந்த மெல்லிய அணைப்பில் அவள் உள்ளம் பெரும் அமைதி கொண்டது. இதைத்தானே.. அவனின் இந்த அருகாமையைத்தானே அவள் விரும்புவது!
சில நொடிகள் கண்களை மூடி அவனிடமிருந்து கிடைக்கும் அந்தக் கதகதப்பை அனுபவித்தாள். விலக மனம் இல்லாதபோதும் வீட்டுக்குச் செல்லவேண்டுமே என்று தோன்ற, “நான் கிளம்பவா சூர்யா…” என்று மெல்லக் கேட்டாள்.
அவனுக்கும் அதில் விருப்பம் இல்லை போலும். சற்று நேரம் அமைதியாக இருந்தவன், “ம்.. வா வீட்டில் இறக்கி விடுகிறேன்…” என்றபடி அவள் தோளில் இருந்து கையை எடுத்தான்.
“இல்லை சூர்யா. நான் இப்படியே நடந்து போகிறேன். வீடு கிட்டத்தானே..” என்றவளிடம், “இவ்வளவு தூரம் காரில் வந்துவிட்டு இப்போது என்ன..?” என்று கேட்டான் அவன்.
லென்ஸ் வைத்ததுக்கே அக்காவிடம் கேள்வி எழும்பும், இதில் இவனோடு போய் இறங்குவதை அவர்கள் கண்டால் அதுவேறு அடுத்த பிரச்சினை. வீட்டில் மறைக்கும் எண்ணம் இல்லாதபோதும் இப்போதைக்கு வேண்டாம் என்றே அவளுக்குத் தோன்றியது. அவனிடம் இதைச் சொன்னால் மீண்டும் ஒரு வாக்குவாதம் வரும். இருக்கும் நல்ல நிலையை கெடுத்துக்கொள்ள அவள் தயாரில்லை.
அதனால், “இன்று முழுவதுமே காரில் சுத்துகிறேன். நடந்தால் நல்லதுதானே சூர்யா…” என்றவள், அவன் எதிர்பாராத நேரத்தில் தன் பட்டிதழ்களை அவன் கன்னத்தில் அழுத்தமாகப் பதித்தாள்.
வியப்பில் அசந்து நின்றவனிடம், “பை சூர்யா! நாளைக்குப் பார்க்கலாம்…” என்று மலர்ந்த புன்னகையோடு சொன்னவள் காரை விட்டு வேகமாக இறங்கினாள்.
“ஹேய் லட்டூ! என்னைச் சொல்லிவிட்டு நீ இப்படிச் செய்யலாமா…?” என்று, அவள் முத்தத்தை அனுபவித்த ஆனந்தக் குரலில் அவன் கேட்க,
“நான் செய்யலாம். ஆனால் நீங்கள் செய்யக் கூடாது…” என்றாள் அவள் கலகலத்துச் சிரித்தபடி.
அவளின் சிரிப்பில் மலர்ந்த முகத்தோடு, “ராட்சசி! இன்று தப்பிவிட்டாய். நாளை மாட்டுவாய் தானே. அப்போது இருக்கிறது…” என்றான் அவன் உல்லாசக் குரலில்.
“நாளை விஷயத்தை நாளை பார்க்கலாம்! பாய் சூர்யா!” என்றவள் அங்கிருந்து சிட்டாகப் பறந்தாள்.