இதயத் துடிப்பாய்க் காதல் 18 – 1

சூர்யாவின் கையைப் பிடித்து பெற்றவர்களின் அருகே அழைத்துச் சென்றாள் லட்சனா.

“நல்லவர் ஒருவரின் கையில் என்னைப் பிடித்துக் கொடுக்க வேண்டும் என்பதுதான் இவர்களின் கனவு சூர்யா. இன்று என்னைச் சுற்றியிருக்கும் காற்றோடு காற்றாய்க் கலந்திருக்கும் அவர்களுக்கு, இருக்கும் ஒரே கவலையும் அதுவாகத்தான் இருக்கும். நீங்கள் எனக்குக் கிடைத்துவிட்டதை நினைத்து, என்னைவிட அவர்கள் தான் மிகவும் சந்தோசப்படுவார்கள்.” என்று கண்களில் திரண்ட நீர்ப் படலத்துடன் அவனைப் பார்த்துச் சொன்னவள், இப்போது பெற்றவர்களின் படங்களைப் பார்த்து,

“அம்மா, அப்பா, அண்ணா இவரைப் பாருங்கள். இவர்தான் என் உயிர். உங்களுக்கு இப்போது சந்தோசம் தானே. உங்கள் மகள் நீங்கள் ஆசைப்பட்டது போல் இனிக் காலமெல்லாம் சந்தோசமாக வாழ்வாள்…” என்றாள் நிறைந்த மனதோடு.

மகிழ்ச்சி, சந்தோசம், உற்சாகம் என்று உள்ளமெல்லாம் துள்ளலோடு அவர்களைப் பார்த்துச் சொன்னவளைப் பார்த்தவர்களின் பார்வையில் பரிதாபம் இருந்ததோ? தவிப்பு இருந்ததோ? வேதனை இருந்ததோ?

‘இல்லை மகளே இல்லை! உன் சோதனைக் காலம் இன்னும் முடியவில்லை…’ என்று உரத்துச் சொல்ல முயன்றார்களோ? அல்லது அவர்கள் ஆவியாக நின்று சொன்னது அவள் காதில்தான் விழவில்லையோ?

கண்ணில் கனிவோடு அவளையே பாத்திருந்த சூர்யாவின் தோளில் உரிமையோடு சாய்ந்துகொண்டாள், வரப்போவதை முன்னே அறியும் திறனற்றவள்!

பெற்றவர்களிடம் அவனை அறிமுகப் படுத்தி வைத்ததில், ஏதோ அவர்களே முன்னின்று திருமணத்தை நடத்தி வைத்தது போன்ற நிறைவை உணர்ந்தாள்.

வெளியே போகலாம் என்று அவனை நச்சரித்து அழைத்தவள், அதை மறந்து ஒருவித சுகமான மனநிறைவில் மயங்கி நின்றாள்.

அவளின் நிலையை உணர்ந்துகொண்ட சூர்யா, “உன் பெற்றவர்களிடம் நம்மைப் பற்றிச் சொல்லிவிட்டாய். இனி என்ன லட்டு. வா நாம் ரெஸ்டாரன்ட் போய் இந்தச் சந்தோசத்தைக் கொண்டாடுவோம்..” என்று அவளை அந்தச் சூழலில் இருந்து வெளியே கொண்டுவர முயன்றான் சூர்யா. அதில் அவள் வயிற்றைக் கவனிக்கும் எண்ணமும் கலந்திருந்தது.

“ம்ம்..” என்றவள் அசையவே இல்லை. மோனம் கலையாமல் அப்படியே நின்றாள்.

“இப்போது என்ன, உன்னை நான் தூக்கிப் போகவா..?” என்றவன், குறுஞ்சிரிப்போடு அவளைத் தூக்குவதுபோல் குனிய, அந்தக் கையிலேயே ஒரு தட்டுத் தட்டியவள், “சந்தர்ப்பம் எப்போது கிடைக்கும் என்று காத்திருப்பீர்களே..? வாருங்கள், போகலாம்..” என்றாள் புன்னகையோடு.

ரெஸ்டாரன்ட் ஒன்றில் அவளின் மதிய உணவை முடித்தவர்கள், வெயிலில் எங்கும் வெளியே திரிய முடியாமல் கண்ணில் படும் கடைகளுக்குள் எல்லாம் புகுந்தார்கள்.

அதுவும் ஆண்களுக்கு என்றே பிரத்தியேகமாக உடைகள் விற்கும் கடைக்குள் புகுந்து, தனக்குப் பிடித்த கட்டம் போட்ட டிஷர்ட்களை அவனுக்காக அவள் தெரிவு செய்தபோது, “நான் இப்படியானவை போடுவதில்லை லட்டு.” என்றான் சூர்யா.

“உங்களுக்கு இது நன்றாக இருக்கும் சூர்யா…” என்றாள் லட்சனா, ஆசையோடு அந்த டிஷர்ட்டை தடவியபடி.

“அதற்காக பிடிக்காததை போடமுடியாதே.” என்று அவன் எவ்வளவு சொல்லியும் அவள் தன் பிடியிலேயே நிற்க, ‘எதற்கெடுத்தாலும் பிடிவாதமா..’ என்று தோன்றியது அவனுக்கு.

அதன்பிறகோ எடுத்த ஒவ்வொன்றையும் “போட்டுக் காட்டுங்கள் சூர்யா..” என்றபோது, “எனக்கு என் அளவு தெரியும் லட்டு. இது அளவாக இருக்கும்.” என்றான் அவன்.

அப்போதும், “ஒரு தடவை இதைப் போட்டுக் காட்டுங்களேன்.…” என்று கண்களைச் சுருக்கி, தலையைச் சரித்துக் கெஞ்சி அவள் தன் விருப்பத்தைச் சாதித்துக்கொண்ட போது, அவனுக்குச் சினமாக இருந்தது.

தன் இயல்பை தானே தொலைத்துக்கொண்டிருப்பது போல் ஒரு மாயை அவனிடத்தில்.

ஒருவழியாக அவற்றை வாங்கிக்கொண்டு அவளை அங்கிருந்து அழைத்து வந்தவன், பெண்களுக்கான கடைக்குச் சென்று அவளுக்கு உடைகள் எடுக்கவும் மறக்கவில்லை. ஆனால் அவளைப் போலன்றி, “உனக்குப் பிடித்திருக்கிறதா..?” என்று கேட்டே எடுத்துக்கொடுத்தான்.

கைகளைக் கோர்த்தபடி வீதி வீதியாய்ச் சுற்றினார்கள். ஆங்காங்கே வெயிலுக்கு இதமாக குளிர்பானத்தை அருந்திக் கொண்டார்கள்.

சம்மர் காலங்களில், அதைக் கொண்டாடும் முகமாக ஏதாவது ஒரு கலைநிகழ்ச்சியோ அல்லது பாட்டுக் கச்சேரியோ ஜெர்மனியில் அந்தந்த ஊர்களில் பெரும்பாலும் நடந்துகொண்டே இருக்கும்.

ஊரின் ஒதுக்குப் புறமாய் அமைந்திருந்த திறந்தவெளி அரங்கில், நடந்துகொண்டிருந்த கலைநிகழ்ச்சியைக் கண்டுவிட்டு, நடந்து நடந்து கால்கள் வலித்ததில், “அங்கு போய் அமர்வோமா..?” என்று கேட்டாள் சனா.

“வா…” என்று அழைத்துச் சென்றவனுக்கு, அந்த வெயிலும், அங்கிருந்தவர்களின் கைகளில் மிதந்த பியரையும் பார்க்கையில் தானும் அருந்தவேண்டும் போல் பெரும் தாகமே எடுத்தது.

அவள் அருகில் இருக்கையில் அவனால் குடிக்கவும் முடியாது. உண்டு இல்லை என்று ஆக்கிவிடுவாள். ஆசைகளை அடக்கிப் பழக்கம் இல்லாதவனுக்கு, தன்னைத் தானே கட்டுப்படுத்திக்கொண்டு அமர்ந்திருப்பதும் கடினமாகவே இருந்தது.

‘என்ன வாழ்க்கையடா இது..’ என்றிருந்தது அவனுக்கு.

அவளோ அவன் தோளில் சாய்ந்துகொண்டு, அவனின் ஒற்றைக் கையைத் தன் இரண்டு கைகளுக்குள்ளும் அடக்கி, என்னென்னவோ கதைத்தபடி இருந்தாள்.

உலகை மறந்தாள். தன்னைச் சுற்றிக் குழுமியிருந்த மக்களை மறந்தாள். அங்கு ஒலித்துக்கொண்டிருந்த இசையை மறந்தாள்.அவள் நினைவுகளை மொத்தமாக ஆட்சி செய்பவன் அவனாகவே இருந்தான்.

அவனோ அவள் சொல்வதற்கு எல்லாம் கடமைக்காக ஒரு “ம்” கொட்டிக்கொண்டு இருந்தான்.

இரவு எட்டைக் கடந்தபோதும் இருள் கவ்வாமல் பொழுது இருந்ததில், அவளுக்கு வீட்டுக்குப் போகும் எண்ணமே இல்லை.

“போகலாமா..?” என்று அவன் கேட்ட போதெல்லாம், “இன்னும் கொஞ்ச நேரம் சூர்யா…” என்று கெஞ்சிக் கெஞ்சியே, மாலை நன்றாக மங்கும் வரை அவனோடேயே இருந்தாள்.

வீட்டுக்குப் போய் தனியாக இருக்கவேண்டும் என்பதனால் அப்படிக் கேட்கிறாள் என்று புரிந்ததில், அவனாலும் அதை மறுக்க முடியவில்லை. இருந்தாலும் இன்று அம்மாவின் கோபத்துக்கு ஆளாகப் போகிறோம் என்பதும் மிக நன்றாகவே புரிந்தது அவனுக்கு.

தாயிடம் என்ன சொல்வது என்று எவ்வளவு யோசித்தும் அவனால் ஒரு வழியையும் கண்டுபிடிக்க முடியவில்லை.

கடைசியில் இரவு ஒன்பது மணியை நெருங்கும் நேரம், அவன் அம்மாவே அழைத்து, “இவ்வளவு நேரமாக எங்கே நின்று என்ன செய்கிறாய்..?” என்று கடுமையான குரலில் கேட்டபோது, “இதோம்மா.. வருகிறேன்…” என்று மட்டும் சொல்லி வைத்தான்.

“இதற்கு மேலும் இருக்க முடியாது. வா, போகலாம்..” என்று எழுந்தவன், அவள் பதிலை எதிர்பாராது நடந்தான்.

அவள் வீட்டருகில் காரை அவன் நிறுத்தியபோது, அவன் தோளில் அதுவரை சாய்ந்திருந்தவள், “பாய் சூர்யா. நாளை பார்க்கலாம்…” என்றாள் இறங்க மனமே இல்லாமல்.

“ம்ம்…”அவன் இருந்த மனநிலையில் அது மட்டும்தான் அவனால் சொல்ல முடிந்தது. அவளோ அவனைப் பிரியும் ஏக்கத்தோடு காரை விட்டு இறங்கினாள்.

தானும் இறங்கி, அவளின் பொருட்கள் அடங்கிய பையை டிக்கியிலிருந்து எடுத்துக் கொடுத்தவன், காரைக் கிளப்பிக்கொண்டு சென்றுவிட்டான்.

வீட்டின் உள்ளே சென்றவளை மீண்டும் தனிமை தாக்கியது. அவனோடு அவன் வீட்டுக்கே சென்றுவிடமாட்டோமா என்று மனம் ஏங்கியது.

error: Alert: Content selection is disabled!!
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock