இதயத் துடிப்பாய்க் காதல் 3 – 3

அதற்கு மேல் எதையும் தூண்டித்துருவவில்லை அவன். அது அவனுக்குப் பழக்கமில்லாத ஒன்றும் கூட.

“உன் மனதில் என்னவோ இருக்கிறது. உனக்கு எப்போது சொல்லத் தோன்றுகிறதோ அப்போது சொல்.” என்றவன், “உன் கைபேசி நம்பரைத் தா….” என்று கேட்டான்.

அவள் கேள்வியாகப் பார்த்தாள்.

“தா….” என்றான் மீண்டும்.

“எதற்கு..?” இப்போது வாயைத் திறந்து கேட்டாள் சனா.

“கைபேசி நம்பரை எதற்கு வாங்குவார்கள். கதைக்கத்தான்!” அவன் குரலிலும் கொஞ்சம் அழுத்தம் வந்திருந்தது.

தயக்கம் இருந்தபோதும், அத்தானுக்குத் தெரிந்தவன் தானே என்று நினைத்து நம்பரைச் சொன்னாள்.

உடனேயே தன் கைபேசியில் இருந்து அவளதுக்கு அழைத்துச் சரி பார்த்துக்கொண்டான் சூர்யா. அவளின் இலக்கத்தை பதிகையில் பெயர் கேட்ட இடத்தில் சுருக்கமாக பதிவதாக நினைத்து லட்சனாவை ‘லட்டு’ என்று பதிந்துகொண்டான்.

“என் இலக்கம் உன்னுடையதில் இருக்கும். பதிந்துகொள்…” என்று அவளிடம் சொன்னவன், “போகலாமா…?” என்று கேட்டான்.

“ம்… நான் வருகிறேன்..” என்றவள் திரும்பி நடக்கத் தொடங்கவும்,

“என்னோடு வா லட்சனா. உன் வீட்டில் இறக்கிவிடுகிறேன்..” என்று அழைத்தான் சூர்யா.

“இல்லை. நான் நடந்தே போகிறேன்…” என்றவளை முறைத்தவன், அவள் புருவங்களைச் சுருக்கிப் பார்க்கவும் பார்வையை திருப்பிக்கொண்டான்.

அவளின் இயல்பைக் கணிக்க முடியாமல் போனதில் உண்டான இயலாமையோடு தலைமுடியை அழுந்தக் கோதிக்கொண்டான் சூர்யா.

“உன்னை என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை லட்சனா. என்னோடு காரில் வருவதால் என்ன நடந்துவிடும் என்று நினைக்கிறாய்..? எதற்கு உன்னை அழைத்தாலும் உன் பதில் இல்லை என்பதாகத்தான் இருக்கிறது. என்னைப் பார்த்தால் உனக்கு எப்படித் தெரிகிறது?” என்று அவளைப் பார்த்து நிதானமாகக் கேட்டவனின் குரலில் கோபம் இருந்தது.

பதில் சொல்லத் தெரியாது தடுமாறி நின்றவளிடம் ஒரு கோபப் பார்வையை வீசிவிட்டுத் திரும்பி நடந்தான் சூர்யா.

அவனின் கோபம் அவளை என்னவோ செய்தது. நட்போடு பழகிய ஒருவனை தான் அளவுக்கு அதிகமாக ஒதுக்குகிறோமோ என்று தோன்றியது. அவனுடன் பழக விருப்பமாக இருந்தபோதும் அவனின் செய்கைகள் பல அவளை முகம் சுளிக்கவும் வைத்தது.

எது எப்படியானாலும், அவன் கோபமாகப் போவதைத் தாங்க முடியாமல் ஓடிச்சென்று அவனை அடைந்தவள், “நானும் உங்களோடு வருகிறேன்…” என்றாள் மெல்ல.

திரும்பிப் பார்த்து அவளைக் கூர்ந்தவனின் முகம் மலர்ந்தது. அதுவரை வேகமாக நடந்தவன் இப்போது அவளின் நடைக்கு ஏற்ப தன்னுடைய நடையின் வேகத்தைக் குறைத்தான்.

அவனின் காரில் அவனுக்கு அருகில் ஏறி அமர்ந்தவளுக்கு, தானும் டிரைவிங் பழகி தனக்கென்றும் ஒரு கார் வாங்கவேண்டும் என்கிற அவளின் ஆசை இன்னும் வலுத்தது.

“நீங்கள் லைசென்ஸ் எடுத்து எவ்வளவு காலம்..?”

“என் பதினெட்டு வயதிலேயே எடுத்துவிட்டேன். இங்கே எல்லோரும் அப்படித்தானே..” காரில் திறப்பைப் போட்டு கிளப்பிக்கொண்டே சொன்னான்.

“இப்போ உங்களுக்கு இப்போது எத்தனை வயது..?”

“இருபத்தியைந்து முடிந்து இருபத்தியாறு நடக்கிறது. ஏன் கேட்கிறாய்..?”

“இல்லை சும்மா கேட்டேன்…” என்றவள், என்னைவிட மூன்று வயது பெரியவன் என்று நினைத்துக்கொண்டாள்.

“உனக்கு டிரைவிங் பழக விருப்பம் இல்லையா..?”

“விருப்பம் இல்லையாவா..? எப்போதடா பழகுவேன் என்று இருக்கிறது…” என்றவளின் குரலில் அந்த ஏக்கம் நன்றாகவே இருந்தது.

“பிறகு என்ன, பழக வேண்டியதுதானே..?”

“காசு வேண்டாமா..?” என்றாள் வீதியில் பார்வையைப் பதித்து.

வளைவொன்றில் காரை வளைத்தவாறே கேள்வியாக அவளைப் பார்த்தான் அவன்.

“அக்காவும் அத்தானும் என்னை வைத்துப் பார்ப்பதே பெரிய விஷயம். அதற்கு மேலும் அவர்களிடம் எதையும் கேட்க எனக்கு விருப்பமில்லை. கேட்டால் நிச்சயம் செய்வார்கள்தான். நான்தான் கேட்கவில்லை. கபேடேரியாவில் வேலை செய்யும் காசைச் சேர்த்துக்கொண்டு இருக்கிறேன். எப்படியும் இன்னும் இரண்டு மாதத்தில் பழக ஆரம்பித்து விடுவேன்.” என்றாள், அவன் பார்வையில் இருந்த கேள்வி புரிந்து.

சில நொடிகள் அமைதியில் கழிந்தது.

“உனக்கு ஏதாவது உதவி வேண்டுமானால் எப்போதும் என்னிடம் நீ தயங்காமல் கேட்கவேண்டும்..” என்றான் அவன் உள்ளத்தில் இருந்து.

ஏனோ மனம் நெகிழ்ந்தது அவளுக்கு. அவன் உதவி அவளுக்கு தேவைப்படுகிறதோ இல்லையோ, அது வேறு. ஆனால், இப்படி ஒரு வார்த்தையைச் சொல்வதற்கு அவளுக்கும் ஒருவன் இருக்கிறான். உறவுகளை நாடி அலைந்துகொண்டிருக்கும் அவளின் உள்ளத்துக்கு பெரும் ஆறுதலாக இருந்தது அவனின் வார்த்தைகள்.

“நன்றி…!” என்றாள் குரல் நெகிழ.

‘இதற்கெல்லாமா நன்றி சொல்வாய்…’ என்பதாய் அவளைப் பார்த்தவன், அவளின் வீட்டடியில் தன் காரை நிறுத்தினான்.

அதை அப்போதுதான் உணர்ந்தாள் அவள்.

புன்னகையோடு, “வருகிறேன்…” என்றவள், திறப்பதற்காக காரின் கதவில் கையை வைக்க மற்றக்கையைப் பற்றினான் சூர்யா.

கேள்வியாக அவள் நோக்க, அவன் கைக்குள் அடங்கியிருந்த அவளின் கையை அழுத்தி, “ச்சூஸ்..(பாய்)” என்றான் புன்னகையோடு.

அந்த நிமிடம் காரைவிட்டு இறங்கவே மனமில்லை அவளுக்கு. ஏன், அவனிடம் சிக்கியிருந்த கையை இழுக்கும் எண்ணம் கூட வரவில்லை. ஏனோ தொண்டை அடைத்தது.

நெஞ்சம் தவிக்க, “ம்..” என்றவள் இறங்குவதற்காக கதவைத் திறக்க அவனும் அவளின் கையை விட்டான்.

வீட்டின் வாசல்வரை சென்றவள், அவளையே பார்த்தபடி காருக்குள் இருந்தவனைப் பார்த்துத் தலையை அசைத்துவிட்டு, கதவைத் திறந்துகொண்டு உள்ளே சென்றாள்.

error: Alert: Content selection is disabled!!
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock