“அன்று அவள் செய்தது பிழை. அதற்காக ஆத்திரப் பட்டோம். இன்று நீ செய்வது பிழை. அதுதான் உன்மீது கோபப் படுகிறேன்.”
“அன்று அவள் செய்த பிழைக்குப் படிப்பினை வேண்டாமா?”
“என்னடா சொல்கிறாய்?” என்று அதிர்ச்சியோடு கேட்டான் சுகந்தன்.
அவன் நண்பன் நெஞ்சில் வஞ்சம் வைத்துப் பழிவாங்கும் அளவுக்குக் கெட்டவனா? அதுவும் ஒரு பெண்ணை? நம்ப முடியவில்லை அவனால்.
“நானாக எதுவும் செய்ய நினைக்கவில்லை. அவளாக வந்து மாட்டிக் கொண்டாள். அதை நான் பயன்படுத்திக் கொள்கிறேன்.” என்றான் அவன் அசட்டையாக.
“அவளாக வந்தால் எதையும் செய்வாயா நீ?” என்று கோபத்தோடு கேட்டவனிடம், “இதைப் பற்றி இதற்கு மேல் எதுவும் கதைப்பதற்கு இல்லை சுகந்தன். முன்னெடுத்து வைத்த காலை இனி நான் பின்னெடுப்பதாக இல்லை. இனி எதையும் யோசிப்பதாகவும் இல்லை. நான் முன்னேற வேண்டும். இதுதான் என் தேவை. அதற்காக எதையும் செய்யத் தயாராக இருக்கிறேன். முடிந்தவரை நேர்வழி. முடியவில்லையா, எந்த வழியானாலும் சரிதான். போய்ச் சேருமிடம் நான் நினைத்த இடமாக இருந்தால் சரிதான்.” என்றவன், அதற்குமேல் சுகந்தனிடம் எதுவுமே கதைக்கவில்லை.
சுகந்தன் மூலம் அனைத்தையும் அறிந்து கதைக்க வந்த ஜீவனிடம் பிடிகொடுக்கவில்லை அவன்.
“சரி! எதையும் வாயைத் திறந்து சொல்லாதே! உன்னோடே வைத்துக்கொள்! ஆனால், கடை திறப்பது பற்றி யாருக்கும் தெரியாது என்றாய், பிறகு எப்படி அவள் வந்தாள்?” என்று சுகந்தன் கேட்டபிறகே, ரஞ்சனுக்கும் அந்தக் கேள்வி தோன்றியது.
சிறிது யோசித்துவிட்டு, “கண்ணன் அண்ணாவிடம் கேட்டிருப்பாள். அவர் என் நண்பர்கள் கடை திறப்பதாகவும், நான் அதற்குப் போயிருப்பதாகவும் சொல்லியிருப்பாராய் இருக்கும்..” என்றவனுக்கு, இல்லையே என்று தோன்றியது.
அங்கே பின்னறையில், அவனைக் கட்டியபடி வாழ்த்தினாளே ‘இந்தக் கடையும் நீங்களும் இன்னும் முன்னுக்கு வரவேண்டும்’ என்று.. அது எப்படி? அவளுக்கு இது அவன் கடை என்று தெரியுமா? கண்ணன் அண்ணா சொல்லியிருப்பாரா? இருக்காதே! அப்படி அவர் பேச்சு மாறுகிறவர் அல்லவே!’
அல்லது நண்பர்களோடு அவனையும் வாழ்த்தினாளா?
குழம்பி நின்றவன் அதைத் தெரிந்துகொள்ள அவளிடம் கேட்கவேண்டும் என்று நினைக்கவே இல்லை. அதுவே அவனது திட்டங்களுக்குத் தடையாக வந்துவிட்டால்?
ஏதோ, அவள் வந்த வரையில் மகிழ்ச்சி. அதுவே போதும் என்று தன்னைச் சமாளித்துக் கொண்டவன், அதுபற்றியும் நண்பர்களிடம் வாய் விடவில்லை.
நினைவுகளில் இருந்து வெளி வந்தவனுக்கு, அவன் செய்வது சரிதானா என்கிற கேள்வி எழுந்தது.
அந்தக் கேள்வியே அவனைப் புரட்டிப் போடப் பார்க்க, தலையை உலுக்கி அதில் இருந்து வெளியே வந்தான் ரஞ்சன்!
அது சரியோ பிழையோ, இப்போதைக்கு அந்த முடிவு அவனுக்குச் சரியானதே! சாதகமானதே! அந்தளவும் போதும்.
அடுத்து நடப்பதை நடக்கும்போது பார்க்கலாம் என்று, எதற்கும் தயாராகியது அவன் மனது!
ஒரு முடிவுடன் கைபேசியில் மீண்டும் இலக்கங்களை அழுத்தியவன், இரண்டரை லட்சங்களுக்கு செருப்புக்களை ஆர்டர் கொடுத்தான்.
அடுத்தநாள் மனைவியுடன் வந்த சந்தானம் அந்த வாரத்து வியாபாரப் பணமான மூன்றரை லட்சங்களை எப்போதும் போல் வங்கியில் வைப்புச் செய்யும்படி அவனிடம் கொடுத்தார்.
அதைப் பெற்றுக் கொண்டவன் நேரே சென்றது தன் கடைக்கே.
அங்கே சுகந்தனை உள்ளறைக்கு அழைத்துச் சென்றவன், வியாபாரப் பணத்திலிருந்து ஐம்பதினாயிரமும் சந்தானத்தின் பணத்திலிருந்து இரண்டு லட்சங்களையும் எடுத்து மொத்தமாகக் இரண்டரை லட்சங்களை அவனிடம் கொடுத்தான்.
கேள்வியாக ஏறிட்டவனிடம், “நாளைக்குச் செருப்புகள் வந்திறங்கும். அதற்குக் கொடுக்க.” என்றான்.
“அது சரிதான்டா.. ஆனால் இவ்வளவு பணம் ஏது உனக்கு?” என்று கேட்டான் சுகந்தன்.
அந்தக் கேள்விக்குப் பதிலைச் சொல்லாது, “நாளைக்கு செருப்புகள் எப்போது வந்திறங்கும் என்று தெரியாது. அப்போது நான் நிற்பேனா என்றும் தெரியாது. அதனால் எல்லாவற்றையும் பார்த்து இறக்கு.” என்றவன், என்னென்ன வகையான செருப்புகள் ஆர்டர் கொடுத்தான் என்பதையும் சொன்னான். “அவை எல்லாம் சரியாக வந்திருக்கிறதா என்று கவனித்துக் கொள்.” என்றான்.
“எல்லாம் சரிதான். நான் கவனிக்கிறேன். ஆனால்.. இந்தப் பணம் உனக்கு எப்படிக் கிடைத்தது என்று இன்னும் நீ சொல்லவில்லையே ரஞ்சன்..”
சற்று நேரம் அவனையே பார்த்துவிட்டு, “ஏன்டா, என் மீது உனக்கும் நம்பிக்கை இல்லையா?” என்றான் கசந்த குரலில்.
“நம்பிக்கை இல்லாமல் என்னடா? ஆனால் அன்று நீ சொன்னது..” என்று இழுத்தவனையே பார்த்தான் ரஞ்சன்.
“முடிந்தவரை நேர்வழி என்றும் சொன்னேனே சுகந்தன். இது கடனாகத்தான் கிடைத்தது.” என்றவன், அதோடு அந்தப் பேச்சை முடித்துக் கொண்டான்.
சுகந்தனுக்கும் சற்றே ஆறுதலாக இருந்தது. முடிந்தவரை நேர்வழி என்று சொல்லியிருக்கிறானே.. அவன் தப்பு வழி போகமாட்டான் என்று நிச்சயமாக நம்பினான். இதுவரை அப்படி நடந்து கொண்டது இல்லை என்பது அவனது நம்பிக்கைக்குக் காரணமாக இருந்தது.
எனவே ரஞ்சன் சொன்னது போலவே நடந்து கொண்டான்.
இங்கே சித்ராவோ எப்போதடா சனிக்கிழமை வரும் என்று காத்துக் கிடந்தாள். அதைவிட ரஞ்சன் மீது பெருங் கோபத்தில் இருந்தாள்.
அன்று திங்கட்கிழமை அவன் கடைக்குச் சென்று வந்தபிறகு அவனை அவள் காணவும் இல்லை. கைபேசி வழியாகக் கதைக்கவும் முடியவில்லை.
கடைக்கு சென்றாவது அவனைப் பார்க்கலாம் என்றால், அப்பாவுக்கு முடியாததில் அம்மாவும் கூடவே கடைக்குச் செல்லத் தொடங்கி இருந்தார். அவர்கள் நிற்கையில் இவளும் போனால், ஏன் வந்தாய் என்று கேட்டால் என்ன சொல்வது?
அப்பா மட்டும் என்றாலாவது எதையாவது சொல்லிச் சமாளிக்கலாம். அம்மாவிடம் எதுவுமே முடியாது. சரி, அவர்கள் இல்லாத நேரத்தில் போகலாம் என்றால், யாராவது அதையும் பெற்றவர்களின் காதில் போட்டுவிட்டால்?
அவனது கடைக்குப் போவோம் என்றால், அவள் நடத்திய துப்புத் துலக்கலில் ரஞ்சன் மதியமும் இரவுமே அங்கு செல்கிறான் என்று தெரிய வந்திருந்தது. மதியம் கல்லூரி இருந்தது. இரவில் அவள் வெளியே போகமுடியாது.
முழு ரொட்டிக்கு அரை ரொட்டியாவது பரவாயில்லை என்று எண்ணி அவனுக்கு அழைத்தால், அவன் அதை எடுக்கவே காணோம். மெசேஜும் அனுப்பிப் பார்த்துவிட்டாள். அதற்கும் பதிலில்லை.
‘சனிக்கிழமை இருக்குடா உனக்கு..’ என்று மனதில் கருவிக் கொண்டாள்.
அன்று சனிக்கிழமை காலையிலேயே எழுந்து தயாரானவள், “அப்பா கடைக்குப் போவோமா..?” என்று கேட்டாள்.
சாய்மனைக் கதிரையில் ஓய்வாக அமர்ந்து பத்திரிகை படித்துக் கொண்டிருந்த சந்தானம் வியப்போடு மகளைப் பார்த்தார் என்றால், அவருக்குத் தேநீர் கொண்டுவந்த லக்ஷ்மி சந்தேகமாகப் பார்த்தார்.
இருவரின் பார்வையையும் உணர்ந்து, “என்ன! ஏதோ என்னை இன்றுதான் பார்ப்பது போல் பார்க்கிறீர்கள்?” என்று கேட்டாள் அவர்களின் அருமைப் புதல்வி.
“புதிதாகத்தான் இருக்கிறது. இவ்வளவு அக்கறையாகக் கடைக்குப் போவோம் என்று நீ கேட்பது. அங்கே என்ன செய்யப் போகிறாய்?” சந்தேகம் மாறாத குரலில் தாய் கேட்கவும், கொஞ்சம் அவசரப் பட்டு விட்டோமோ என்றிருந்தது அவளுக்கு.
ஆனாலும், அதைக் காட்டிக் கொள்ளாமல், “அங்கு என்ன, உங்களோடு சண்டையா பிடிக்க முடியும்? கணக்குத்தான் பார்க்க முடியும். அப்பா நேற்றுக் கணக்குப் பார்த்துத் தலை வழிக்கிறது என்று சொன்னாரே, அவருக்குக் கொஞ்சம் உதவியாக இருப்போம் என்று பார்த்தால்..” என்றவள் தோள்களைக் குலுக்கி, “எனக்கென்ன வந்தது. நான் வரவில்லை.” என்று முறுக்கிக் கொண்டாள்.
பிறகு, “அப்பா, நான் புது வருடத்துக்கு புதுச் சுடிதார் ஒன்று எடுக்கப் போகிறேன். நாதன் மாமாவுக்கு அழைத்துச் சொல்லிவிடுங்கள், அவர் கடைக்கு நான் வருவதாக.” என்றவள், கைப்பையை எடுத்துக்கொண்டு வாசலை நோக்கி நடக்கத் தொடங்கினாள்.
“ஏய்! நில்லுடி!” என்று அதட்டல் போட்டார் லக்ஷ்மி.
அந்த ஏய் என்ற அழைப்பு ரஞ்சனை நினைவு படுத்த இன்னுமே கடுப்பானாள் அவர் மகள்.
“அம்மா! என்னை ஏய் என்று சொல்லாதீர்கள். நான் என்ன ஆடா மாடா?”
“இரண்டில் ஒன்றுதான்!” என்றவர் கணவரிடம் திரும்பினார்.
“பாருங்கள் அவளை. உடுப்பெடுக்கக் கடைக்குப் போகப் போகிறேன் என்று அனுமதி ஏதும் கேட்டாளா? போகிறேன் என்று அறிவிக்கிறாள். இதையெல்லாம் கண்டிக்க மாட்டீர்களா நீங்கள்.” என்ற மனைவியின் பேச்சைக் கேட்டவர், மகளைக் கேள்வியாகப் பார்த்தார்.
“என்னப்பா இது? நான் இன்னும் என்ன குழந்தையா? இருபத்தியொரு வயதில் அவரவர் வெளிநாடுகளுக்கே தனியாகப் போகிறார்கள். நான் டவுனுக்குப் போவது ஒரு பிரச்சினையா? அந்த டவுன் எனக்குப் புதிதா? அல்லது நாதன் மாமா கடைதான் புதிதா?” என்று ஆத்திரப் பட்டாள் மகள்.
அர்த்தத்தோடு மனைவியைப் பார்த்தார் சந்தானம்.
“ஏனப்பா, நான் எப்போதாவது எங்கேயாவது உங்களிடம் சொல்லாமல் போயிருகிறேனா? அல்லது ஏதாவது பிழை செய்து இருக்கிறேனா? வீட்டில் சும்மா இருக்க போரடிக்கிறது. அதுதான் கடைக்குப் போவோம் என்றால், அதற்கும் அம்மா சந்தேகமாகப் பார்க்கிறார். உடுப்பு எடுக்கப் போவோம் என்றால் அதற்கும் இத்தனை விசாரணைகளா?” என்று அவள் அலுக்கவும், லக்ஷ்மிக்கே ஒரு மாதிரி ஆகிவிட்டது.
ஒற்றைப் பிள்ளையாக நின்றுவிட்டவள் எவ்வளவு நேரம்தான் வீட்டிலேயே இருக்க முடியும். அதுதான் நண்பர்களுடன் எப்போதும் வெளியே சுற்றுகிறாள்.. என்று எண்ணியவர், அப்போதுதான் நினைவு வந்தவராக, “எங்கேடி உன் நண்பர்கள் கூட்டம்? ஒருவரையும் காணோமே..” என்று கேட்டார்.
“அவர்களோடு நான் கதைப்பதில்லை..”
“ஏன்? என்னவாகிற்று? இவ்வளவு நாளும் ஒன்றாகத்தானே சுற்றினீர்கள்..” என்று தன் விசாரணையை மீண்டும் ஆரம்பித்தார் லக்ஷ்மி.
“அதை எல்லாம் உங்களிடம் சொல்லமுடியாது.” மகளிடமிருந்து பட்டென்று வந்த பதிலில் மீண்டும் கடுப்பானார் லக்ஷ்மி.
“பாருங்கள்..” என்றபடி, எப்போதும் போல் கணவரிடம் முறையிடத் திரும்பியவர், அவர் வந்த புன்னகையை அடக்கியபடி தலையைக் குனியவும் பல்லைக் கடித்தார்.
கணவரிடம் சொல்லி ஆகப்போவது ஒன்றுமில்லை என்பதை உணர்ந்து மகளிடமே திரும்பி, “சரிடி. நான் ஒன்..றுமே கேட்கவில்லை. நீ இரு. அப்பா தேநீர் குடித்ததும் உன்னோடு வருவார். நம் கடைக்கே போ.” என்றவர், ‘அவளோடு போங்கள்!’ என்கிற உத்தரவைக் கணவரிடம் கண்ணால் கட்டிவிட்டு அகன்றார்.