என் சோலை பூவே – 2

 

முகத்தில் எந்த உணர்வுகளையும் காட்டாது அவர்களை நெருங்கியவனிடம், ஒரு செருப்பை நீட்டிக் காட்டி, “இதில் சைஸ் முப்பத்தியெட்டு இங்கே இல்லை. உள்ளே இருக்கிறதா என்று பார்த்துச் சொல்லுங்கள்.” என்றாள் சித்ரா.

அவள் நீட்டியதைக் கையில் வாங்காது பார்த்துவிட்டு, “இருக்கிறது.” என்று சுருக்கமாகச் சொன்னவன், திரும்பி உள்ளே நடந்தான்.

அவன் போவதையே பார்த்தபடி, “என்னடி, முதலாளியின் மகள் நீ. உன்னைப் பார்த்து ஒரு சிரிப்பில்லை. ஒரு பணிவில்லை. இருக்கிறது என்று மட்டும் திமிராகச் சொல்லிவிட்டுப் போகிறான். செருப்பைக் கொண்டுவருவானா அல்லது அதற்கு இன்னொருவனைக் கூப்பிட வேண்டுமா?” என்று கேட்டாள் அவள் தோழி ராகினி.

“அவன் அப்படித்தான். யாரிடமும் அதிகமாகக் கதைக்க மாட்டான். ஆனால் பார் செருப்பைக் கொண்டுவந்து தருவான். வேலையில் கெட்டிக்காரன்.” என்று உறுதியாகச் சொன்னவளிடம்,

“என்னடி சித்து, அவனை நன்றாகத் தெரிந்து வைத்திருக்கிறாயே, என்ன விசேசம்?” என்று குறுகுறுப்போடு கேட்டாள் ராகினி.

“அதுதானே?” என்று கோரஸ் பாடின மீதிக் குரல்கள்.

அவர்களின் ஆர்வத்தையும் குறுகுறுப்பையும் பார்த்தவள், கலீரெனச் சிரித்தாள். அவள் சிரிக்கையில் மின்னிய முத்துப் பற்களுக்குப் போட்டியாக, உதட்டின் மேலேயும் மூக்கு நுனியிலும் பூத்திருந்த வியர்வைத் துளிகள் மினுமினுத்தன.

“சிரித்து மழுப்புவதை விட்டுவிட்டுச் சேதியைச் சொல்லடி என் தோழி.” என்று ராகமிழுத்தாள் ராகினி.

அப்போதும் குறையாத புன்னகையோடு, “சிரிக்காமல் வேறு என்ன செய்யச் சொல்கிறாய்? மூன்று வருடங்களாக எங்கள் கடையில் வேலை செய்கிறவனைப் பற்றி எனக்குத் தெரியாமல் இருக்குமா? அதற்கு நீங்களாக ஏதேதோ கற்பனை செய்தால் எனக்குச் சிரிப்பு வராமல் வேறு என்னதான் வரும்?” என்றவளின் மெல்லிய நீண்ட விரல்கள், காற்றில் மோதி அவள் கண்ணோடு விளையாடிய முடியை நளினமாகக் காதோரம் ஒதுக்கி விட்டது.

“அதுதானே பார்த்தேன். இந்தத் திருகோணமலையில் இருக்கும் பணக்காரர்களின் பிள்ளைகள் எல்லாம் உன் பின்னால் சுற்ற, நீ போயும் போயும் உன் கடையில் வேலை செய்பவனையா சைட் அடிக்கப் போகிறாய்?” என்ற தோழிகளிடம், “அது புரிந்தால் சரி!” என்றாள் அவள்.

இப்படியே எதையெதையோ வளவளத்தவர்களின் கண்கள், ஷெல்ப் போன்று அமைக்கப்பட்ட தட்டுக்களில் அடுக்கப்பட்டிருந்த அழகழகான செருப்புகளை ஆராய்ந்து கொண்டிருந்ததன.

அந்தக் கடையின் நடுவில், வாடிக்கையாளர்கள் சுற்றிப் பார்த்து வாங்குவதற்கு வசதியாக இரண்டிரண்டு ‘ஷெல்ப்’ களை ஒன்றாகப் போட்டு, இரண்டு பக்கமும் உள்ள தட்டுக்களில் செருப்புகள் அடுக்கப் பட்டிருந்தது. மேலதிகமாக இருந்த செருப்புகள் பெரிய அட்டைப் பெட்டிகளில் அடைக்கப்பட்டு அந்த ‘ஷெல்ப்’ களுக்கு மேலே வைக்கப்பட்டிருந்தது.

அங்கிருந்த ஒரு ‘ஷெல்ப்’ இன் மேல்தட்டில் வைக்கப்பட்டிருந்த ஒரு செருப்பைக் கண்டுவிட்டு, “ராக்கி, அங்கே பார். அந்தக் கறுப்பில் வெள்ளை முத்துக்கள் பதித்திருக்கும் செருப்பு நன்றாக இருக்கிறது..” என்று காட்டினாள் சித்ரா.

“ஆமாம்டி. என்னுடைய வெள்ளைச் சுடிக்கு பொருத்தமாக இருக்கும்..” என்ற ராகினி, அதை எட்டி எடுக்கப் பார்த்தாள்.

முடியாமல் போகவே, ”நீதானேடி எங்களுக்குள் உயரமானவள். எட்டி அதை எடு பார்ப்போம்.” என்று சித்ராவை ஏவினாள்.

“எனக்கும் எட்டாதுடி..” என்றபடி எட்டியெட்டிப் பார்த்தவளுக்கு அதை எடுக்கவே முடியவில்லை. 

“மகி, நீபோய் அதோ அங்கிருக்கும் ஏணியை எடுத்துவா..” என்று ஒரு தோழியை அனுப்பினாள் சித்ரா.

அவள் வரும்வரை சும்மா இருக்க முடியாமல், குதிக்காலில் நின்றபடி கீழ்த்தட்டில் இருந்த இன்னொரு செருப்பை எடுத்து மேலே இருந்த செருப்பைத் தட்டிக் கீழே விழுத்த முயன்றாள். 

“கொஞ்சம் கொஞ்சமாக  வருகிறது. இன்னும் கொஞ்சம் பலமாகத் தட்டுடி..” என்றாள் ராகினி.

அவளின் பேச்சைக் கேட்டு, அந்தத் ‘ஷெல்ப்’பை ஒரு கையால் இறுக்கிப் பிடித்தபடி, இன்னும் எம்பித் தட்டியவள் தடுமாறி விழப் பார்த்தாள். அப்படி விழுந்துவிடாமல் இருக்க, சட்டென்று இரண்டு கைகளாலும் அந்த ‘ஷெல்ப்’ஐ இறுகப் பற்றிக்கொண்டு அதன்மேலேயே சாய்ந்தாள் சித்ரா. எந்தப் பிடிமானமும் இல்லாமல் கடையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஸெல்ப் அவள் சாய்ந்ததில் ஆட்டம் கண்டது. 

இப்போது அது விழுந்துவிடப் போகிறதே என்று பதறி, அதை இறுகப் பற்றி விழாமல் தடுத்தவள், “அப்பாடி! விழவிடாமல் பிடித்துவிட்டேன்..” என்றாள் மூச்சு வாங்கியபடி.

ஆனால், ‘ஷெல்ப்’ இன் மேலே இருந்த அட்டைப் பெட்டி ஒன்று ஆட்டம் கண்டு மெல்ல மெல்லக் கீழே நழுவிக் கொண்டிருந்தது.

அதைக் கவனியாமல், “போடி! உன் கதையைக் கேட்டு செருப்பைத் தட்டப் போய்க் கீழே விழுந்திருப்பேன். நல்லகாலம் தப்பிவிட்டேன்.” என்றாள் ராகினியிடம்.

“அதுதான் விழவில்லையே விடு. அதோ மகி ஏணி கொண்டுவருகிறாள்.” என்ற ராகினியும் அதைக் கவனிக்கவில்லை.

ஆனால், சித்ரா சொன்ன செருப்பை எடுத்துக்கொண்டு அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்த ரஞ்சன் அதைக் கண்டுவிட்டான்.

அந்தப் பெரிய பெட்டி அவள் தலையில் விழுந்துவிடப் போகிறதே என்று பதறி, “ஏய் தள்ளு…” என்று கத்தியபடி அவளை நோக்கி ஓடிவந்தான் அவன்.

அந்த ‘ஏய்’யில் அதிர்ந்து, அப்பாவின் கடையில் வேலை செய்யும் ஒருவன் அவளை மரியாதை இல்லாமல் அழைப்பதா என்கிற ஆத்திரத்தோடு, திரும்பிப் பார்த்தவளின் விழிகள் அவனை முறைத்தது. ‘நீ சொல்லி நான் கேட்பதா..’ என்கிற வீம்புடன் நின்ற இடத்திலேயே நின்றாள்.

வேகமாக ஓடிவந்து, “கண் என்ன குருடா உனக்கு? அந்தப் பெட்டி உன் மேல் விழப்போகிறது.” என்று இரைந்தவன், அவளின் கையைப் பிடித்து வேகமாக இழுத்தான்.

அதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை அவள். அவன் அவள் கையைப் பிடித்ததே அதிர்ச்சி என்றால், வேகமாக அவன் இழுத்ததில் அவள் முன்பக்க மேனி அவனோடு சென்று மோதியது பேரதிர்ச்சியாக இருந்தது.

அதில் ‘பெட்டி உன் மேல் விழப்போகிறது’ என்று அவன் சொன்னதோ அல்லது சத்தத்துடன் விழுந்த பெட்டியோ அவள் மூளையில் உறைக்கவே இல்லை.

அவன் சொன்ன ‘ஏய்’ உம் ‘கண் என்ன குருடா’ என்று கேட்டதும், கையைப் பிடித்து இழுத்ததும், அவள் சென்று அவனோடு மோதிக்கொண்டதும் என்று நடந்த அனைத்தும் அதிக ஆத்திரத்தைக் கிளப்ப, அந்த ஆத்திரம் அனைத்தையும் ஒன்றாகத் திரட்டிப் ‘பளார்’ என்று அவன் கன்னத்தில் அறைந்தாள் சித்ரா.

விழுந்த அறையில் நொடியில் திக்பிரமை பிடித்து நின்றுவிட்டான் ரஞ்சன். ஒருகணம் கடையே நிசப்தமாகியது. எல்லோர் பார்வையும் ரஞ்சன் மேலேயே குவிய, அவமானத்தில் கன்றிச் சிவந்தது அவன் முகம். வெறுப்பும் ஆத்திரமுமாக அவளை முறைத்தவன், பிடித்திருந்த அவளது கையை உதறிவிட்டு அந்த இடத்தை விட்டு வேகமாக நகர்ந்தான்.

“ஏன்டி அவனை அடித்தாய் லூசு. அந்தப் பெட்டி உன் தலையில் விழுந்திருக்க என்ன ஆகியிருக்கும்?” என்று கடிந்தாள் ராகினி.

“அதற்காக என் கையைப் பிடித்து இழுக்களாமாடி? திமிர் பிடித்தவன்! நான் அவன்.. அவன் மீது.. ச்சே!” என்று அவமானமும் ஆத்திரமுமாகக் குமுறினாள் சித்ரா. அவளுக்கு அவனோடு மோதியதை ஜீரணிக்கவே முடியவில்லை.

அவர்கள் பேசிக்கொண்டது அத்தனையும் காதில் விழ, அந்தப் பக்கம் சென்றவனின் முகம் ஆத்திரத்திலும் அவமானத்திலும் கன்றிச் சிவந்திருந்தது.

நடந்ததை எல்லாம் பாத்திருந்த அங்கு வேலை செய்யும் கண்ணன், “விடு ரஞ்சன். ஏதோ தெரியாமல் கோபத்தில் செய்துவிட்டாள். இந்தா நீ கொஞ்சம் தண்ணீரைக் குடி..” என்று அவனை ஆசுவாசப் படுத்த முயன்றார்.

ஆத்திரத்தோடு வேண்டாம் என்பதாகக் கையை காற்றில் விசுக்கிவிட்டுத் தனிமையில் சென்று நின்று கொண்டவனுக்கு உள்ளம் கொதித்தது. அத்தனை பேர் முன்னாலும் அவமானப் படுத்திவிட்டாளே! அவளை இழுத்து வைத்துக் கன்னம் கன்னமாக அறைய வேண்டும்போல் வெறி வந்தது.

அப்படி அறைந்தால் வேலை போய்விடுமே என்று நினைத்த மாத்திரத்தில் எழுந்த இயலாமையும் சுயபச்சாதாபமும் மிகுந்த வெறுப்பைக் கொடுக்க, சுவற்றில் ஓங்கிக் குத்தியவனுக்குக் கை வலிக்கவே இல்லை. அந்தளவுக்குக் கொதித்துக் கொண்டிருந்தான்.

அந்த மனக் கொதிப்பு அடங்க முதலே அவனை நோக்கி மிகக் கோபமாக வந்தார் சந்தானம், சித்ராவின் அப்பா.

“அங்கிள்..” என்றவனை மேலே பேச விடாது கையை நீட்டித் தடுத்தவர், கடைக்கு வெளியே கையை நீட்டி, “வெளியே போ. இனிமேல் என் கடையில் உனக்கு வேலை இல்லை.” என்று, அவன் கழுத்தைப் பிடித்துத் தள்ளாத குறையாகச் சீறினார்.

திகைத்துப்போனான் ரஞ்சன். அவள் மேல் எழுந்த ஆத்திரத்தை அடக்கி, அவளைத் திருப்பி அடிக்காமல் வந்ததற்குக் காரணமே இந்த வேலை பறி போய்விடக் கூடாது என்பதால் மட்டுமே!

அப்படியிருக்க, சந்தானம் இப்படிச் சொன்னால்?

நியாயம் இல்லாது நடக்கும் மனிதர் அல்ல அவர். நான்தான் இந்தக் கடையின் முதலாளி என்கிற பெருமை இல்லாது, அவரை யாரும் ‘பாஸ்’ என்று அழைப்பதைக் கூட விரும்பாதவர். எல்லோரும் அவரவரது வயதுக்கு ஏற்ப அங்கிள் அல்லது அண்ணா என்றுதான் அழைப்பார்கள்.

அப்படியான ஒருவர் நடந்தது என்ன என்று அவனிடம் கேட்காது வேலையை விட்டுத் தூக்கியது வேதனையைக் கொடுத்தது என்றால், ஒருவித கர்வத்தோடும் ஏளனத்தோடும் அவனைப் பார்த்துக்கொண்டு நின்ற சித்ராவைப் பார்த்து அவனுக்குள் வன்மம் சூழ்ந்தது.

இதற்கெல்லாம் காரணம் அவனது ஏழ்மை தானே. அந்த ஏழ்மையையும், அதனால் உண்டான இயலாமையையும் எண்ணி மனதுக்குள் நொந்தபடி, “நடந்தது என்ன என்று தெரியாமல் முடிவு எதையும் எடுக்காதீர்கள் அங்கிள்.” என்றான் ரஞ்சன்.

“எல்லாம் எனக்குத் தெரியும். நீ ஒன்றும் சொல்லத் தேவை இல்லை. முதலில் வெளியே போ. என் கண் முன்னால் நிற்காதே. நல்லவன் என்று நம்பி வேலைக்குச் சேர்த்ததற்கு நல்ல வேலை பார்த்தாய். இருக்கிற கோபத்தில் அடித்தாலும் அடித்து விடுவேன். என்னிடம் வேலை செய்த ஒருவனுக்கு அடிக்கக் கூடாதே என்று பார்க்கிறேன். உன் சம்பளத்தைக் கணக்குப் பார்த்து கண்ணனிடம் கொடுத்துவிடுகிறேன். வாங்கிக் கொள். இப்போது போ வெளியே!” என்றவர், அவன் முகம் பார்க்கவும் பிடிக்காதவராய் வெறுப்போடு முகத்தைத் திருப்பிக் கொண்டு சென்றார்.

அந்தக் கடையில் வேலை செய்யும் அத்தனை பேரின் முன்பும், அதைவிட சித்ரா, அவளின் தோழிகள் எல்லோரும் வேடிக்கை பார்க்க, அவர் செய்த அவமதிப்பில், அனைவர் முன்னாலும் கூனிக் குறுகி நின்றான் ரஞ்சன்.

எல்லோரும் அவனைக் கீழ்த்தரமானவனாகப் பார்ப்பது போல் இருந்தது. யார் முகத்தையும் நிமிர்ந்து பார்க்க முடியவில்லை. இப்படியே மண்ணுக்குள் புதைந்துபோனால் என்ன என்று கூடத் தோன்றியது. அந்தளவுக்கு அவமானமாக உணர்ந்தான்.

குனிந்த தலை நிமிராது, அவமானத்தில் கன்றிவிட்ட முகத்தோடு கடையை விட்டு வெளியேறப் போனவனை ஓடிவந்து மறித்தார் கண்ணன். “ரஞ்சன், கொஞ்சம் பொறு. அவருக்கு நடந்தது முழுவதும் தெரிந்திருக்காது. சித்து தவறாகச் சொல்லியிருப்பாள். நீ கொஞ்சம் பொறுடா. நான் அவரிடம் போய் நடந்ததைச் சொல்லிவிட்டு வருகிறேன்..” என்றார், அவன் கையைப் பிடித்துக் கெஞ்சலாக.

அவர் பிடித்த கையை, “விடுங்கண்ணா!” என்று உதறி விடுவித்தவன், கோபத்தோடு விறுவிறுவென்று வெளியேறினான்.

அவன் குடும்ப நிலையைக் கண்ணன் அறிவார். கோபத்தில் வெளியேறும் அவன், அது தணிந்ததும் வேலைக்குப் படப்போகும் கஷ்டத்தை நினைத்துப் பார்த்தவர் ஒரு வேகத்துடன் சந்தானத்தைத் தேடிச் சென்றார்.

அங்கே, தன்னை அவமதித்த ரஞ்சனை வேலையை விட்டே தூக்கிவிட்ட மகிழ்ச்சியோடு, தோழிகளோடு சேர்ந்து குளிர்பானம் அருந்திக் கொண்டிருந்தாள் சித்ரயாழி.

உள்ளே கோபத்தோடு வந்த கண்ணனைப் புருவம் சுருக்கிக் கேள்வியாகப் பார்த்தார் சந்தானம். அவரைத் தொடர்ந்து அங்கிருந்த எல்லோரும் கண்ணனைப் பார்க்க, “என்னம்மா சித்ரா இப்படிச் செய்துவிட்டாய்? உனக்கு அவன் நல்லதுதானே செய்தான். நீயானால் வேலையைப் பறித்து அவன் வயிற்றில் அடித்துவிட்டாயே.” என்றார் கண்டனக் குரலில்.

நெடுங்காலமாக அங்கே வேலை செய்பவர் என்பதாலும், சிறு வயதிலிருந்தே சித்ராவை அறிந்தவர் என்பதாலும் உரிமையோடு கோபப்பட்டார் கண்ணன்.

பிறகு சந்தானத்தின் பக்கம் திரும்பி, “நீங்களும் என்ன நடந்தது என்று முழுமையாக விசாரிக்காமல் அவனை வேலையில் இருந்து தூக்கி விட்டீர்களே அண்ணா. இனி அவன் வேலைக்கு என்ன செய்வான் என்று யோசித்தீர்களா?” என்றார் மனத்தாங்கலுடன்.

“அப்போ அவன் என் மகளின் கையைப் பிடித்து இழுத்தது சரி என்கிறாயா கண்ணா?” என்று நிதானமாகச் சந்தானம் கேட்டபோதும், அவர் குரலில் கோபம் குறையாமலேயே இருந்தது.

அவருக்குப் பதிலைச் சொல்லாமல் சித்ராவின் புறம் திரும்பினார் கண்ணன். “சும்மா நின்ற உன்னையா கையைப் பிடித்து இழுத்தான்?” 

அந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல் சிலநொடிகள் தடுமாறியபோதும், “அவன் என்னை மரியாதை இல்லாமல் ‘ஏய்’ என்று கூப்பிட்டான். போதாததுக்கு கையை வேறு பிடித்து இழுத்தான்.” என்று கண்ணனைப் பார்த்துச் சொன்னவள், தான் அவனோடு சென்று மோதியதைச் சொல்லமுடியாமல் முகம் கன்றத் தலையைக் குனிந்தாள்.

“உன்னைக் காப்பாற்றும் அவசரத்தில் ஏய் என்று கூப்பிட்டது ஒரு குற்றமா சித்ரா? அவன் உன்னை விடப் பெரியவன் தானே. அப்படிக் கூப்பிட்டால் நீ என்ன குறைந்தா போய்விடுவாய்? அதைவிட இதற்கு முதல் எப்போதாவது இப்படி மரியாதை இல்லாமல் அல்லது தப்பாக உன்னிடம் நடந்திருக்கிறானா அவன்?” என்று கேட்டார் கண்ணன்.

அவரின் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் நின்றவளைக் கூர்ந்து பார்த்து, “ஆனால், நீதான் உன்னைவிட வயதில் பெரியவனைப் பார்த்து எப்போதும் அவன் இவன் என்று கதைக்கிறாய். இவ்வளவு கதைக்கும் நீ மட்டும் அவனை அறைந்தது சரியா? ஒரு ஆண்பிள்ளையைக் கைநீட்டி அடிக்கலாமா?” என்றார் குற்றம் சாட்டும் குரலில்.

இது புதுத் தகவல் சந்தானத்துக்கு. அதிர்ச்சியில், “என்னது?” என்று சற்று உரக்கவே கேட்டார் அவர்.

தந்தையைப் பார்க்க முடியாமல் சித்ராவின் தலை தானாகக் குனிந்தது. அவள் தோழிகளோ செய்வது அறியாமல் கைகளைப் பிசைந்தபடி நின்றனர்.

“கண்ணன் சொல்வது உண்மையா?” என்று கேட்டவருக்குப் பதில் சொல்ல முடியாமல் நின்றாள் சித்ரா.

“இந்தப் பழக்கம் எல்லாம் எங்கே பழகினாய்? அவன் திருப்பி அடித்திருந்தால் என்ன செய்திருப்பாய்? பெண்பிள்ளைகள் அடக்கமாக இருக்க வேண்டாமா?” என்று மகளிடம் சீறியவர், “என்ன நடந்தது கண்ணா? இவள் அவன் தன் கையைப் பிடித்து இழுத்ததாக மட்டும்தான் சொன்னாள்.” என்றார் கண்ணனிடம்.

சந்தானத்திடம் நடந்தவைகளைச் சொன்ன கண்ணன், “அவன் விலகு என்று சொல்லியும் இவள் அந்த இடத்திலேயே நின்றாள். அதனால்தான் கையைப் பிடித்து இழுத்தான். அது பிழையா? அல்லது உங்கள் மகளின் தலையில் பெட்டி விழுந்தாலும் பரவாயில்லை என்று வேடிக்கை பாத்திருக்க வேண்டுமா?” என்று கோபமாகவே கேட்டார்.

சித்ராதான் சின்னப்பிள்ளை, அவசரப்பட்டு ஒன்றைச் செய்துவிட்டாள் என்றால், அனுபவம் மிக்க சந்தானமும் அவள் சொன்னதை மட்டுமே நம்பி ரஞ்சனைக் கடையில் இருந்து வெளியேற்றியது கண்ணனுக்கு மிகுந்த கோபத்தைக் கொடுத்திருந்தது.

கண்ணன் சொன்னதைக் கேட்ட சந்தானம் மகளின் பேச்சைக் கேட்டு அவசரப்பட்டு விட்டோமே என்று வருந்தினார். ‘செருப்புகளைப் பார்த்துக்கொண்டிருந்த என்னைக் கையைப் பிடித்து இழுத்தான் ரஞ்சன்..’ என்று கண்கலங்க மகள் சொன்னது அவரை நிதானம் இழக்க வைத்தது.

பெண் பிள்ளையை நட்டநடுக் கடையில் கையை பிடித்து இழுப்பது சாதாரண விஷயம் அல்லதானே!

ஆனால், இப்போது ஆத்திரத்தில் அவசரப் பட்டுவிட்டேனே என்று தன்னைத் தானே நொந்துகொண்டார் சந்தானம்.

சித்ராவுக்கோ இவ்வளவு நேரமும் அவன் செய்ததுதான் பிழை என்று இருந்த வீம்பு மெல்ல அகல, ‘அவன் வயிற்றில் அடித்துவிட்டாயே’ என்று கண்ணன் சொன்னதில், தப்புச் செய்து விட்டோமோ என்று தோன்றத் தொடங்கியது.

அதோடு அவன் திருப்பி அடித்திருந்தால்? இனி வேலைக்கும் சாப்பாட்டுக்கும் என்ன செய்வான்? அனுபவம் இல்லாதவளின் உள்ளம், கொள்ளை அடிப்பானோ? களவு எடுப்பானோ? என்று பல பயங்கரங்களை எண்ணிக் கலங்கியது. 

அவன் அப்படி நடந்தால் அதற்குக் காரணம் அவள் அல்லவா? நினைக்கவே பயமாக இருந்தது அவளுக்கு.

தலையில் பெட்டி குத்தி, வைத்தியசாலையில் கிடந்து, அங்கு போடுகிற ஊசியின் வலி, மாத்திரைகளின் கசப்பை நினைக்கவே அவளுக்கு கசந்து வழிந்தது.

இதெல்லாம் நடந்திருக்க, அவளின் தாய் லக்ஷ்மி வேறு, ‘பெண்பிள்ளை இப்படி நடக்கலாமா, அப்படிச் செய்யலாமா’ என்று அவளைப் போட்டுப் படுத்தி எடுத்திருப்பார். இதில் எல்லாம் இருந்து விடுதலை கிடைத்திருக்கிறது. அதற்குக் காரணம் அவன். ஆனால் அவளோ கையை நீட்டிவிட்டாள்.

உள்ளம் குன்ற, “சாரி கண்ணாண்ணா..” என்றாள், மெலிந்துவிட்ட குரலில்.

“என்னிடம் சாரி சொல்லி என்னம்மா பிரயோசனம்? அவன் கடையை விட்டுப் போய்விட்டானே.”

“அவனின்.. அவரின் கைபேசி நம்பர் இருந்தால் தாங்கண்ணா. அழைத்துச் சாரி கேட்கிறேன்.” என்றவளை முறைத்தார் சந்தானம்.

“உன் பேச்சைக் கேட்டு நானும் அவனைத் திட்டிவிட்டேனே. இனியாவது கொஞ்சம் பொறுப்போடு நடக்கப் பழகு. நம்மிடம் வேலை செய்பவர்களை நாம் மதிக்க வேண்டும். அவர்களால் தான் நாம் இந்த நிலைமையில் இருக்கிறோம். அதை என்றைக்கும் மறக்காதே.” என்றார் கண்டிப்புடன்.

தந்தையின் கண்டிப்பில் கண்கள் கலங்கத் தலையைக் குனிந்துகொண்டாள் சித்ரா. 

அதைப் பார்த்துவிட்டு, “சரி விடு. நானே அழைத்து அவனிடம் மன்னிப்புக் கேட்கிறேன். நீங்கள் உங்களுக்குப் பிடித்த செருப்புகள் எடுத்து விட்டீர்களா?” என்று, அவர்கள் எல்லோரிடமும் பொதுவாகக் கேட்டுப் பேச்சை மாற்றினார்.

அப்போதும் முகம் தெளியாமல், “சாரிபா..” என்றாள் சித்ரா. தோழிகளோ என்ன சொல்வது என்று தெரியாது அமைதியாகவே நின்றனர்.

மகளின் தலையைத் தடவி, “அதுதான் விடு என்று சொல்லிவிட்டேனே. இனி இப்படி நடக்காமல் பார்த்துக்கொள்.” என்று அவளைச் சமாதனப் படுத்தினார்.

“போங்கள். போய் உங்களுக்கு விருப்பமான செருப்புகளை எடுங்கள்.” என்று அவர்களை அனுப்பிவிட்டு, கைபேசியை எடுத்து ரஞ்சனுக்குத் அழைத்தார். அந்தப் பக்கம் மணி ஒலித்தபோதும் அவன் எடுக்கவில்லை.

“இன்னும் கோபமாக இருக்கிறான் போல. எடுக்கிறான் இல்லை.” என்றார் கண்ணனைப் பார்த்து.

“நான் அழைத்துப் பார்கிறேன்..” என்ற கண்ணன், கைபேசியைக் காதுக்குக் கொடுத்த வண்ணம் அந்த இடத்தை விட்டு அகன்றார்.

“அவன் கதைத்தால் அவனை நான் இங்கே வரச் சொன்னதாகச் சொல்லிவிடு கண்ணா..” என்றார் சந்தானம்.

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock