சித்ரா சென்ற திசையையே பார்த்தபடி நின்றான் ரஞ்சன். அவள் சொன்னவற்றை அவன் பெரிதாக எடுக்கவில்லை. கோபத்தில் அவள் கேட்ட கேள்விகளில் நியாயம் இருப்பது புரிந்தாலும், எடுத்துவிட்ட முடிவை அவனால் மாற்றவே முடியாது!
அவனுக்குப் பிடிக்கிறதோ இல்லையோ சாதனாதான் அவனது வருங்காலத் துணைவி. இது அவனே எடுத்துக்கொண்ட முடிவு. அதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது என்று எண்ணுகையிலேயே உள்ளே எங்கேயோ முணுக்கென்று வலித்தது. ஆனாலும், எதைப் பற்றியும் சிந்திக்கவோ, எடுத்த முடிவைப் பரிசீலனை செய்யவோ அவன் தயாராக இல்லை!
அந்தச் சின்ன வயதில், அவனுக்கு விழுந்த முதல் அடி சாதனாவிடம் இருந்தே! அவனது தன்மானத்துக்கு விழுந்த அந்த அடியை மறக்க இயலவில்லை!
அது அவனுடைய கௌரவப் பிரச்சினை. போன கௌரவத்தை, விழுந்த அடியை அவளைக் கட்டியே நேராக்க நினைத்தான்.
அவளிடம் இருந்து கிடைத்த மறுப்பும் புறக்கணிப்பும் அவன் மனதில் மாறா வடுவை உண்டாக்கியதில், அவளுடனான திருமணமே அந்த வடுவுக்கான மருந்து என்பது அவன் கண்டறிந்த பதில். அப்படியிருக்க சித்ராவை எப்படி ஏற்றுக்கொள்வது?
அடுத்ததாக அவனது ஆருயிர் தந்தையின் ஆசையும் அதுவல்லவா! அவர் உயிராய் மதித்த எந்தச் சொந்தங்கள் அவனையும் அவன் குடும்பத்தையும் தூக்கி எறிந்ததோ அந்தச் சொந்தங்களை மீண்டும் தன்னிடம் வரவைப்பதற்கான வழியாகவும் அவனதும் அவன் தங்கையினதும் திருமணத்தை நினைத்தவனுக்கு, அதில் எந்த மாற்றம் வருவதிலும் உடன்பாடு இல்லை.
ஆனால் சித்ரா?
அவனுக்கு அவளைப் பிடிக்காமல் இல்லை. ஆனால், துடுக்குத் தனத்துடனும் துருதுருப்புடனும் சிட்டுக் குருவியைப் போன்ற அழகான இளம் பெண்ணொருத்தி அவனையே சுற்றிச் சுற்றி வந்தால் சலனம் உண்டாவது சகஜம் தானே.
இதில் அவள் வேறு உருகி உருகி அவனைக் காதலிக்கையில், ஓரளவுக்கு மேல் அவளை அவனால் விலக்க முடியவில்லை என்பது நிஜம்!
ஆனால் அன்று அவர்கள் இருவருக்குமிடையில் நடந்தது?
அதை நினைக்கையில் அவன் முகம் கன்றிக் கருத்தது. அதற்கான முழுக்காரணமும் அவனே என்பதை மிக நன்றாகவே அறிவான்.
ஆனால், எதையும் அவன் திட்டமிட்டுச் செய்யவில்லையே! அவள் வாழ்க்கையை நாசமாக்கவும் நினைத்ததில்லையே! முடிந்தவரை அவளைத் தவிர்க்கத்தானே எண்ணினான்.
அவளைத் திருமணம் செய்யவேண்டும் என்கிற எண்ணம் அவனுக்கு இருந்ததில்லை என்பது எவ்வளவு உண்மையோ, அந்தளவுக்கு அவளிடமிருந்து அவன் விலக நினைத்ததும் உண்மையே!
அவர்களுக்குள் காதல் என்பது அவனே எதிர்பாராமல் உண்டான ஒன்று!
அப்போதும், இந்தக் காலத்தில் ஒரு பெண் அதுவும் சித்ராவைப் போன்ற தெளிவான பெண் காதலையோ காதல் தோல்வியையோ பெரிதாக நினைக்கமாட்டாள், அதனால் அவளை இலகுவாக விலக்கிவிடலாம் என்றுதானே நினைத்தான்.
ஆனால், அவன் நினைத்ததற்கு மாறாக அவள் அவனிடம் நியாயம் கேட்டு வந்து நின்றது பெரும் அதிர்ச்சி என்றால், அவளின் சவாலை நினைக்கையில் ஆத்திரமும் வந்தது.
அவர்களுக்குள் தவறு நடந்துவிட்டதுதான். ஆனால், கணவன் இறந்தால் மனைவி இன்னொரு திருமணம் செய்வதில்லையா? அவனுடன் வாழ்வதில்லையா? அப்படி அவனையும் அவனுடன் பழகியதையும் இறந்தகாலமாக ஒதுக்கிவிட்டு அடுத்தது என்ன என்பதைப் பார்க்காமல் எதற்கு அவனை தொந்தரவு செய்கிறாள்?
அப்படி அவளால் என்ன செய்துவிட முடியும் என்று எண்ணியவனுக்கு, அதற்கு மேல் கடையில் வேலை ஓடும்போல் தோன்றவில்லை.
அந்தக் கடை முழுவதும் அவளின் நினைவுகளே அவனைச் சுற்றிச் சுழன்று வந்து தாக்கியது.
வீட்டுக்குப் போய் அப்படியே மதிய உணவை முடித்துவிட்டு வரலாம் என்று எண்ணியவன், கடையில் வேலைக்கு நின்றவர்களிடம் சொல்லிக்கொண்டு தன் வண்டியில் புறப்பட்டான்.
சித்ராவைப் பற்றிய சிந்தனைகளோடு சென்று கொண்டிருந்தவனின் முகம், அங்கே வீதியில் வந்துகொண்டிருந்த கண்ணனைக் கண்டதும் மலர்ந்தது.
அதிகமான வேலைப்பளுவால் கண்ணனோடு கதைக்கும் சந்தர்ப்பம் அவனுக்கு நிறைய நாட்களாக அமையவே இல்லை.
இன்று அவரைக் கண்டதும், அவனின் இன்றைய முன்னேற்றத்துக்கு காரணமானவர் அவர் என்கிற நினைவும் தோன்ற மகிழ்ச்சியோடு வண்டியை நிறுத்தி, “கண்ணண்ணா..” என்று, சத்தமாக அழைத்தான்.
யார் என்பதாகத் திரும்பிப் பார்த்தவரின் முகம் ரஞ்சனைக் கண்டதும் மலர்வதற்குப் பதிலாக இறுகியது. அது புத்தியில் பட்டாலும் பெரிதாக எடுக்காமல், “நில்லுங்கள் கண்ணன் அண்ணா..” என்றவன், தன் வண்டியை வீதியின் ஓரமாக நிறுத்திவிட்டு அவரிடம் சென்றான்.
“எப்படி இருக்கிறீர்கள்?” மகிழ்ச்சியோடு கேட்டவனிடம்,
“ம்.. இருக்கிறேன்.” என்றார் அவர் சுருக்கமாக.
“வேலை எல்லாம் எப்படிப் போகிறது? எனக்கு நேரம் இல்லை அண்ணா. அதுதான் அங்கே கடைக்கு வரமுடியவில்லை. கோபிக்காதீர்கள்.”
“வேலைக்கு என்ன குறை? நேர்மையான முதலாளி. நல்ல வேலை. பிறகு என்ன?” என்றார் அவர் பட்டும் படாமல்.
அப்போதுதான் அவர் தன்னைப் பற்றி ஒன்றும் விசாரிக்கவில்லை என்பதும், தான் கேட்கும் கேள்விகளுக்கு மட்டுமே பட்டும் படாமலும் பதில் சொல்கிறார் என்பதும் புரிய, முகம் சுருங்கியது அவனுக்கு. “என்ன கண்ணன் அண்ணா. ஏன் ஒருமாதிரி இருக்கிறீர்கள்? ஏதாவது பிரச்சினையா?” என்று விசாரித்தான்.
அவனை நிமிர்ந்து பார்த்த கண்ணன், “நான் எப்போதும் போலத்தான் இருக்கிறேன் ரஞ்சன். ஆனால் நீதான் மாறிவிட்டாய். அதுதான் உனக்கு அப்படித் தெரிகிறது.” என்றார் ஒருமாதிரிக் குரலில்.
புருவங்கள் நெரிய, “நான் மாறிவிட்டேனா? இல்லையே… அதே ரஞ்சன்தான்.” என்றான் அவன்.
தலை மறுப்பாக அசைய, “நிச்சயமாக இல்லை! எனக்குத் தெரிந்த, என்னுடன் வேலை பார்த்த ரஞ்சன் கோபக்காரனாக இருந்தாலும் நல்லவன். நேர்மை உள்ளவன். உழைப்பாளி!” என்றார் அவர்.
மனம் துணுக்குற, “அண்ணா…” என்று இழுத்தவன், “இப்போதும் நான் உழைப்பாளி தான்.” என்றான், தன் மனதை அவருக்குக் காட்டாதிருக்க முயன்றபடி.
“உழைப்பாளி தான். ஆனால், நேர்மை அற்ற உழைப்பாளி. உண்ட வீட்டுக்கே இரண்டகம் செய்த உழைப்பாளி.” என்றார் கடுமையான குரலில்.
அதைக்கேட்ட ரஞ்சனால் சற்று நேரம் எதுவுமே சொல்ல முடியவில்லை. நன்றி கெட்டவன் என்று அவர் மறைமுகமாகச் சொல்கிறார். அவன் பெரிதாக மதிக்கும் ஒருவரின் மதிப்பில் தான் தாழ்ந்து போனோம் என்பது மிகுந்த வேதனையைக் கொடுத்தது.
அதோடு, அவனுக்கு அவனே எத்தனையோ நியாயங்களைக் கற்பித்து செய்த ஒரு செயலை இன்னொருவரின் வாயால் கேட்கையில் அவமானமாக உணர்ந்தான்.
“ஏன் இப்படியெல்லாம் கதைக்கிறீர்கள்?” உணர்ச்சிகளைத் தொலைத்த குரலில் கேட்டான்.
“வேறு எப்படிச் சொல்லச் சொல்கிறாய் ரஞ்சன்?” என்று ஆத்திரப்பட்டார் அவர்.
அதே குரலில், “சித்ரா பாவமடா. நான் பார்க்க வளர்ந்த பெண். வாய்த் துடுக்கு இருந்தாலும் எவ்வளவு நல்ல பிள்ளை தெரியுமா அவள். அவளைப் போய் ஏமாற்றி இருக்கிறாயே? எப்படி மனம் வந்தது உனக்கு? உனக்கும் ஒரு தங்கை இருக்கிறாள் தானே. அவளுக்கு யாராவது இப்படிச் செய்தால் எப்படி இருக்கும்?” என்று கேட்டார் அவர்.
பணப் பிரச்சினை அவருக்குத் தெரியாது என்பதில் ஆசுவாசமாக உணர்ந்தபோதும், அவரின் எந்தக் குற்றச் சாட்டுக்குமே பதில் சொல்லாது, விழிகள் இடுங்க, “இதை உங்களுக்கு யார் சொன்னது?” என்று கேட்டான் ரஞ்சன்.
“யார் சொன்னால் தான் என்ன? நான் சொன்னதில் பொய் இல்லையே. பிறகு என்ன?” என்று சூடாகக் கேட்டவர், “சந்தானம் அண்ணாவின் கடையில் வேலை செய்தாலும் அவரின் சகோதரன் போலத்தான் நான். நான் மட்டுமல்ல, அந்தக் கடையில் வேலை செய்யும் எல்லோரையும் அவர் அப்படித்தான் பார்க்கிறார்.” என்றவரின் பேச்சில், அப்படியான மனிதருக்கு நீ கேடு செய்துவிட்டாய் என்கிற மறைமுகக் குத்தல் இருந்தது.
“தனியாக ஒரு கடையை ஆரம்பித்து நீ முன்னுக்கு வரவேண்டும் என்று ஆசைப்பட்டவன் நான். ஆனால், சித்ராவின் வாழ்க்கையையே நீ அழிப்பாய் என்று தெரிந்திருக்க அதைச் சொல்லியே இருக்கமாட்டேன்.”
அவனுக்கு எப்போதும் நல்லதையே செய்யும் கண்ணன் அண்ணாவா இப்படி எல்லாம் பேசுகிறார் என்று அதிர்ந்துபோய் அவரைப் பார்த்தான் ரஞ்சன்.
அவரோ, “உன்னை சந்தானம் அண்ணா இப்படியே விட்டுவிடுவார் என்று மட்டும் நீ கனவிலும் நினையாதே.” என்று கோபத்தோடு சொல்லிவிட்டு, “நீ நடத்தும் கடைகளுக்கு யார் முதலாளி?” என்று கேட்டார்.
இதென்ன கேள்வி என்பதாக அவரைப் பார்த்தவன், “நாதன் அண்ணாவும்..” என்று சொல்கையிலேயே கண்ணனின் தலை மறுப்பாக ஆடியது.
“இல்லை! உன் கடைகளின் முதலாளி இப்போது சந்தானம் அண்ணா!”
அதைக் கேட்டதும் மீண்டும் அதிர்ந்துபோனான் ரஞ்சன்.
“என்ன அதிர்ச்சியாக இருக்கிறதா?” என்கிறார் ஏளனமாக.
“நீ இந்த டவுனுக்கு வேலைக்கு வந்து எவ்வளவு காலம் இருக்கும்? ஒரு நான்கு அல்லது ஐந்து வருடங்கள்? ஆனால் அவர், எனக்குத் தெரிந்தே இருபத்திஐந்து வருடங்களாகக் கடை நடத்துகிறார். அவர் ஆலமரம்டா. சிறு செடி நீ அவரை ஆட்டிப் பார்க்கிறாயா? மரியாதையாக சித்ராவையே கட்டிக்கொள். இல்லையானால் இருக்கும் இடம் தெரியாமல் அழிந்து போவாய்.” என்று கோபமாகச் சொன்னவர், அதற்கு மேலும் அவனோடு நின்று கதைக்காது சென்றுவிட்டார்.
அதைக் கேட்டவனுக்கு இப்போது அதிர்ச்சியை விட ஆத்திரமே மேலோங்கி நின்றது.
இதுதான் அவளது மிரட்டலா? கடையை அவள் அப்பா வாங்கினால் நான் பயந்து விடுவேனா? பார்க்கலாம், அவளா நானா என்று மனம் ஆவேசம் கொள்ள வீட்டுக்குச் சென்றவனைக் கண்டதும் நித்யா வெறுப்போடு பார்த்தாள்.
மனதில் சித்ராவின் மேல் இருந்த கோபத்தில் அதைக் கவனியாது, தன்னறைக்குள் புகுந்து கொண்டான். கூண்டுப் புலியாக அறைக்குள் நடை பழகியவனுக்கு, ஏன் என்று இல்லாமலேயே கோபம் கோபமாக வந்தது.
தன்னை உடன்பிறவாத தம்பியாக மதிக்கும் கண்ணனின் பேச்சு அவனைப் பெரிதாகக் காயப் படுத்தியது. அதோடு, அவளா நானா பார்க்கலாம் என்று மனம் சவால் விட்டபோதும், தன்னுடைய முன்னேற்றத்துக்கு மீண்டும் ஏதாவது தடைக்கல் வந்துவிடுமோ என்று ஆழ்மனது தடுமாறியது.
சந்தானத்தால் அப்படி என்ன செய்துவிட முடியும் என்று கோபம் எழுந்த அதேவேளை ஏதும் செய்து விடுவாரோ என்கிற அச்சமும் சேர்ந்தே வந்தது.
ஒரு நிலையில் நிற்க முடியாமல் தடுமாறித் தடதடத்த மனதோடு தனிமையில் இருக்க முடியாது அறையை விட்டு வெளியே வந்தவன், “அம்மா! சாப்பாட்டைப் போடுங்கள்..” என்றபடி மேசையில் சென்று அமர்ந்தான்.
எப்போதும் அவன் அழைத்ததும் ஓடிவந்து பரிமாறும் தாய் உடனேயே வராதது கூட இன்னும் எரிச்சலைக் கிளப்ப, “அம்மா!!” என்றான் சத்தமாக.
அவனுக்குக் குறையாத கோபத்தை முகத்தில் தேக்கியபடி, “என்னடா?” என்று கேட்டபடி வந்தார் அவர்.
அவரின் கேள்வியில் இன்னுமே சினம் உண்டாக, “என்ன என்னடா? ஒரு மனிதன் சாப்பிட வந்தால் சாப்பாடு போடமாட்டீர்களா? உள்ளே இருந்து என்ன செய்கிறீர்கள்?” என்று எரிந்து விழுந்தான்.
“கண்டவளோடும் ஊர் சுற்றும் உனக்கு நான் எதற்கு சாப்பாடு போட?” என்றார் அவரும் ஆத்திரத்தோடு.
விழிகளால் தாயை உறுத்தவன், “என்ன உளறுகிறீர்கள்?” என்று பொறுமையை இழுத்துப் பிடித்த குரலில் கேட்டான்.
“ஆமாடா! இப்போ எல்லாம் நான் கதைப்பது உனக்கு உளறலாகத்தான் தெரியும். இனிக்க இனிக்கப் பேசி மயக்கி வைத்திருக்கிறாளே அவள். அவளைப் பற்றி ஒன்று சொன்னதும் என்னமாதிரி கோபம் வருகிறது உனக்கு? சந்தேகப்பட்டு நான் கடையில் வைத்துக் கேட்டதற்கு மூடி மறைத்தாயே. இப்போதுதானே தெரிகிறது உன் வண்டவாளம்.” என்றார் வெறுப்போடு.
கண்ணனின் பேச்சால் விளைந்த கோபத்தில் இருந்தவனுக்கு தாயின் பேச்சு இன்னும் கோபத்தைக் கொடுக்க, “சொல்வதைத் தெளிவாகச் சொல்லித் தொலையுங்கள். யாரைப் பற்றிக் கதைக்கிறீர்கள்?” என்றான் சினத்தோடு.
அவன் சொல்லிமுடிக்க முதலே அவன் முன்னாள் வந்து விழுந்தன சில போட்டோக்கள்.
அதைப் பார்த்ததும் திகைத்துப்போனான். அது அன்று சித்ராவின் பிறந்தநாளின் போது, அவனோடு சேர்ந்து அவள் எடுத்துக்கொண்ட செல்பிக்கள்.
அவன் இடையை அவள் கட்டியபடி, கன்னத்தோடு கன்னம் இழைந்தபடி, அருகருகே அமர்ந்து உண்டபடி, மோட்டார் வண்டியில் இருவரும் அமர்ந்தபடி என்று பலது கிடந்தது.
இது எப்படி இங்கே என்று யோசனை ஓடும்போதே எப்படி வந்திருக்கும் என்று தெரியவர பல்லைக் கடித்தான் ரஞ்சன்.
“இவ்வளவு நேரமும் துள்ளிய வாய் எங்கே போனது உனக்கு? அன்று உனக்கும் அவளுக்கும் என்ன தொடர்பு என்று கேட்டதற்கு உன் பழைய முதலாளியின் மகள் என்றாய். முதலாளியின் மகளோடு இப்படித்தான் எல்லோரும் பழகுவார்களா? அவளைப் பற்றி ஒன்று சொன்னதும் என்னையே மிரட்டினாயே, இதை மறைக்கத்தானா?” என்று அவர் கேட்ட எந்தக் கேள்விக்குமே அவன் பதில் சொல்லவில்லை.
அதிர்ச்சியிலும் ஆத்திரத்திலும் வாயடைத்து நின்றான் ரஞ்சன். சித்ரா இப்படியொரு காரியத்தைச் செய்வாள் என்று கனவிலும் நினைக்கவில்லை.
“அப்படியே இதையும் பார்.” என்றபடி ஒரு கடிதத் துண்டையும் அவன் முன் தூக்கிப் போட்டார் அவர்.
அதில், ‘உங்கள் மகனுக்கும் எனக்கும் வெகு விரைவில் திருமணம் நடக்க இருக்கிறது. ஆசிர்வாதம் செய்வதற்குத் தயாராக இருங்கள். இப்படிக்கு உங்கள் மருமகள், சித்ரயாழி’ என்று எழுதப் பட்டிருந்தது.
அதைப் பார்த்தவனுக்குக் கண்மண் தெரியாத கோபம் வர, அந்தக் கடிதத்தைக் கசக்கி எறிந்தவன், அமர்ந்திருந்த கதிரை சடார் என்று பின்னால் விழ வேகமாக எழுந்து தன் அறையை நோக்கிச் சென்றான்.
“நில்லுடா! எங்கே போகிறாய்? நான் கேட்..”
அப்போது அவர்கள் வீட்டுத் தொலைபேசி அலற, அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டுச் சென்று அதை எடுத்துக் காதுக்குக் கொடுத்து, “ஹலோ..” என்றார் இராசமணி.
“அண்ணி, நான் மல்லி கதைக்கிறேன். சாதனாவுக்கும் ரஞ்சனுக்கும் செய்ய இருந்த கல்யாணத்தை நிறுத்திவிடலாம்.” என்று எடுத்ததுமே அவர் சொன்னதைக் கேட்டதும் அதிர்ந்து போனார் இராசமணி.
அவரைப் புருவங்கள் சுருங்கப் பார்த்தவனை முறைத்தபடி, “என்ன மல்லி இப்படிச் சொல்கிறாய். இந்தத் திருமணம் உங்கள் அண்ணாவின் விருப்பம். அதோடு நீங்கள் எல்லோரும் விரும்பிச் சம்மதித்துத்தானே இருந்தீர்கள். இப்போது திடீர் என்று வேண்டாம் என்றால் என்ன அர்த்தம்?” என்று சற்றுக் கோபமாகவே கேட்டார் இராசமணி.
“நாங்கள் விரும்பித்தான் சம்மதித்தோம். இல்லை என்று சொல்லவில்லை. ஆனால், அண்ணாவின் விருப்பத்துக்காகவோ, நாங்கள் சம்மதம் சொன்னோம் என்பதற்காகவோ இப்போது கட்டி வைத்துவிட்டுப் பிறகு என் பெண் காலம் பூராக கண்ணீர் வடிப்பதைப் பார்க்க என்னால் முடியாது. அதற்குக் கல்யாணத்தை நிறுத்துவதே நல்லது.”
“உன் மகள் எதற்குக் கண்ணீர் வடிக்க வேண்டும். நான் அவளை இன்னொரு மகளாகப் பார்க்க மாட்டேனா? அல்லது என் மகன்தான் அவளை நன்றாக வைத்திருக்க மாட்டானா? இப்போது அவன் இரண்டு கடைகளுக்கு முதலாளி. இன்னும் இன்னும் நன்றாக வருவான்..” என்றவரை இடைமறித்தார் மல்லிகா.
“என்ன அண்ணி, பேச்சு ஒரு மாதிரி இருக்கிறது. சாதனா காசுக்காக உங்கள் மகனைக் கட்ட ஆசைப்பட்டதாக நினைத்துவிட்டீர்களோ? என் அண்ணாவின் ஆசை என்பதாலும், அண்ணாவின் மகன் ரஞ்சன் என்பதாலும் தான் இந்தத் திருமணத்தைச் செய்ய நினைத்தோம். ஆனால், உங்கள் மகனானால் ஒழுக்கம் கெட்டவனாக இருக்கிறானே..” என்றார் அவர் ஒருவிதக் குரூரத்துடன்.
அதில் சட்டென மூண்ட கோபத்தோடு, “மல்லி! கதைப்பதை யோசித்துக் கதை. நரம்பில்லா நாக்கால் கண்டதையும் சொல்லாதே. என் மகனின் ஒழுக்கத்தில் என்ன குறை கண்டாய் நீ?” என்றவருக்கு, ஆத்திரத்தில் குரல் படபடத்தது.
“சும்மா கத்தாதீர்கள் அண்ணி. நீங்கள் குரலை உயர்த்துவதால் உண்மை பொய்யாகாது. அன்றைக்கு கடைக்கு வந்தாளே அந்தப் பெண், அவளோடு உங்கள் மகன் கூடிக் குலாவியபடி இருக்கும் போட்டோக்கள் எங்களுக்கு வந்திருக்கிறது. அதைப் பார்த்துவிட்டும் சாதனாவை அவனுக்குக் கட்டிவைக்கச் சொல்கிறீர்களா? அன்றே பார்த்தேனே அவளை. நாங்கள் அவ்வளவு பேரும் நின்றபோதும் கொஞ்சம் கூட அடக்கம் இல்லாமல், பயம் என்பதே இல்லாமல் விளக்கை ஏற்றியவள் அவள். அதை ரஞ்சனும் வேடிக்கை தானே பார்த்தான். அவளை எதிர்த்து ஒன்று சொல்லவில்லையே! அப்படியான உங்கள் மகனுக்கு என் மகளைக் கொடுத்துவிட்டு, எப்போது என் பெண்ணின் வாழ்க்கையில் அவள் நுழைவாளோ என்று பயந்து கொண்டிருக்க என்னால் முடியாது. அதனால் இந்தக் கல்யாணம் வேண்டாம்!” என்றார் அவர் உறுதியான குரலில் முடிவாக.
அதைக் கேட்டதும் இராசமணியால் சில வினாடிகளுக்கு வாயையே திறக்க முடியவில்லை.
ஒருவழியாகத் தன்னை மீட்டவர், “மல்லி..” என்று ஆரம்பிக்க, “அண்ணி, இதற்கு மேல் இதைப்பற்றி நாம் கதைக்க வேண்டாம். நீங்கள் என்ன சொன்னாலும் என் பெண்ணை உங்கள் மகனுக்குத் தரமாட்டேன். நீங்கள் வேறு பெண்ணைப் பாருங்கள்.” என்று இடையிட்டுச் சொல்லிவிட்டு தொலைபேசியை வைத்துவிட்டார் மல்லிகா.
தானும் பட்டென்று தொலைபேசியை வைத்தவர், “இப்போது சந்தோசமாடா உனக்கு? சாதனாவை உனக்குத் தரமாட்டார்களாம். அவள் அங்கேயும் இந்தப் போட்டோக்களை அனுப்பியிருக்கிறாள். இப்படிக் கேவலமான வேலைகளைச் செய்பவளோடு பழகி உன் அப்பாவின் ஆசையை மண்ணோடு மண்ணாகப் புதைத்து விட்டாயே. இப்போது திருப்தியா?” என்று கத்தியவருக்கு ஆக்ரோசத்தில் உடல் நடுங்கியது.
அவன் அவளை மறுக்க, அவளானாள் சாதனாவை அவனை வேண்டாம் என்று சொல்ல வைத்துவிட்டாளே! பழிக்குப் பழி வாங்குகிறாளா?
ஆத்திரத்தில் விழிகள் சிவக்க, பதில் சொல்ல முடியாமல் நின்றவனின் முழுக் கோபமும் சித்ராவின் மீது திரும்ப, அப்போது வெளியே செல்லத் தயாராகி தன் அறையை விட்டு வெளியே வந்தாள் நித்யா.
அங்கே நின்ற ரஞ்சனை ஒரு பொருட்டாகவே மதியாமல், “அம்மா! நான் படத்துக்குப் போகிறேன். பின்னேரம் தான் வருவேன்..” என்றாள், செருப்பை மாட்டியபடி.
அதைக் கேட்ட ரஞ்சனுக்கு இருந்த கோபத்தில் இன்னும் ஏற, “அவள் தியேட்டருக்குப் போகிறேன் என்கிறாள். நீங்கள் பேசாமல் இருக்கிறீர்கள். இதென்னம்மா பழக்கம்? நீங்கள் ஒன்றும் சொல்வதில்லையா?” என்று தாயிடம் பாய்ந்தவன், தங்கையிடம் திரும்பி, “ஒரு இடமும் நீ போகத் தேவையில்லை. உள்ளே போ!” என்றான் கடுமையான குரலில்.
அவனை அலட்சியமாகப் பார்த்து, “அதை நீங்கள் சொல்லத் தேவையில்லை.” என்று எடுத்தெறிந்து பேசினாள். “அவரே பெண்களோடு ஊர் மேய்கிறார். ஒழுங்காக இருக்கத் துப்பில்லை. இதில் என்னைச் சொல்ல வந்துவிட்டார்..” என்று முணுமுணுத்தாள், அவனுக்குக் கேட்கும் விதமாகவே.
தங்கையே அவனைக் குத்திக் காட்டியதில் உண்டான கோபம், தாயின் கேள்விக்குப் பதில் சொல்ல முடியாத இயலாமை, சித்ராவின் மீதிருந்த ஆத்திரம் என்று எல்லாமாகச் சேர்ந்து அவனை நிதானம் இழக்க வைக்க, நித்தியின் கன்னத்தில் ‘பளார்!’ என்று அறைந்தான் ரஞ்சன். “முளைத்து மூன்று இலை விடவில்லை. அதற்குள் எதிர்த்தா பேசுகிறாய்? ராஸ்கல்! மரியாதையாக உள்ளே போ!” என்றான் கடுமையான குரலில்.
எதிர்பாராமல் அறை விழுந்ததில் தடுமாறி, “அம்மா!” என்று கத்தியபடி சுழன்று விழப்போன மகளை ஓடிவந்து தாங்கித் தன்னோடு அணைத்த இராசமணி, “அவளை எதற்கு அடிக்கிறாய். அவள் கேட்டதில் என்ன தப்பு? மூத்தது நீ ஒழுங்காக இருந்தால் தான் உனக்குப் பின்னால் வருவதும் ஒழுங்காக இருக்கும். முதலில் நீ உன்னைத் திருத்து.” என்றவர், மகளையும் இழுத்துக்கொண்டு தன்னறைக்குள் நுழைந்து கதவை அறைந்து சாத்தினார்.
ஆத்திரத்தோடு திரும்பியவனின் பார்வையில், அவனோடு சேர்ந்து சிரித்தபடி நின்ற சித்ராவின் படம் கண்ணில் பட்டது.
‘எல்லாம் இவளால் வந்தது..’ என்று எண்ணியபடி கைபேசியை எடுத்து அவளுக்கு அழைத்தான்.


