என் சோலை பூவே 29

காலச் சக்கரத்தின் ஓட்டத்துக்கு ஏற்ப நாட்கள் மிக வேகமாக நகர்ந்தது. அன்று காலையில் வழமை போன்று கடைக்குச் செல்லத் தயாரான ரஞ்சனும் சித்ராவும் அவர்கள் அறையில் இருந்து கீழே இறங்கி வந்தபோது, அவர்களைக் கண்ட இராசமணியின் முகம் கடுத்தது.

“இங்கே ஒரு வயதுக்கு வந்த பெண் வீட்டில் இருக்கிறாள் என்கிற அக்கறை யாருக்காவது இருக்கிறதா? நான் பெற்றதுக்குத்தான் அக்கறை இல்லை என்றால் வந்ததுக்கும் கூடவா இல்லை. அதுசரி, எப்போது எவன் கிடைப்பான், அவனை மடக்கிப் போடலாம் என்று அலைந்ததுகளுக்கு என்ன அக்கறை இருக்கப் போகிறது. தங்கையை வைத்துக்கொண்டு திருமணம் செய்தது போதாது என்று ஜோடியாக வேறு திரிகிறதுகள்.” என்று அவர்களுக்கு கேட்கும் விதமாகவே சத்தமாக முணுமுணுத்தார் அவர்.

தாயின் குரல் கேட்டு தன் அறையிலிருந்து வெளியே வந்த நித்தி, “என்னம்மா?” என்று கேட்க, அவளிடமும் தன் வயிற்றெரிச்சலைக் கொட்டினார் அவர்.

“என்ன நொன்னம்மா?போயும் போயும் இந்த வீட்டில் வந்து பிறந்திருக்கிறாயே! இப்படியே காலம் முழுக்க இங்கேயே கிட. கல்யாணம் காட்சி என்று பார்க்கவும் நீ கொடுத்து வைத்திருக்க வேண்டும். உனக்கு எங்கே அதெல்லாம் கிடைக்கப் போகிறது. அதிர்ஷ்டம் கெட்ட என் வயிற்றில் வந்து பிறந்திருக்கிறாயே!” என்றார் ஆத்திரத்தோடு.

தலையும் புரியாமல் வாலும் புரியாமல் நித்தி முழிக்க, கோபத்தோடு தாயிடம் எதையோ சொல்லத் தொடங்கிய ரஞ்சனின் கையைச் சட்டெனப் பிடித்துத் தடுத்தாள் சித்ரா.

அவன் திரும்பிப் பார்க்க ஒன்றும் கதைக்கவேண்டாம் என்று கண்ணசைவால் காட்டிவிட்டு, பிடித்த கரத்தை விடாது அவனை அவள் வெளியே அழைத்துச் செல்ல, “இந்தக் கருமத்தை எல்லாம் என் கண்ணால் பார்க்க வேண்டியிருக்கிறது!” என்று சத்தமாகவே சொன்னார் ரஞ்சனின் தாயார்.

“என்னை எதற்கு இழுத்துக்கொண்டு வந்தாய்?” தாய் மேல் இருந்த கோபத்தில் எரிந்து விழுந்தான் ரஞ்சன்.

“பின்னே வேறு என்ன செய்யச் சொல்கிறீர்கள்? மாமி சொல்வதில் என்ன பிழை? உங்கள் தங்கையை வைத்துக்கொண்டு நம் திருமணம் நடந்ததே பிழை. இதில் இவ்வளவு நாட்களாகியும் நீங்கள் அவள் திருமணத்துக்கு ஏற்பாடு செய்யவும் இல்லை. அவர் கத்தாமல் வேறு என்ன செய்வார். அன்று நவீனின் வீட்டுக்குப் போய்க் கதையுங்கள் என்று நான் சொன்னதற்கு என் வேலையை எனக்குப் பார்க்கத் தெரியும் என்றீர்கள். அப்படி நீங்கள் அதை அன்றே செய்திருக்க இன்று இந்தப் பேச்சு வந்திராதே!” என்றாள் சித்ராவும் சூடான குரலில்.

அவளை முறைத்தபடி, “எல்லாம் உன்னால் தானே வந்தது. நீ செய்த வேலைகளுக்கு எந்த முகத்தை வைத்துக்கொண்டு என்னை அங்கே போகச் சொல்கிறாய்? அவர்களின் கோபம் கொஞ்சம் ஆறட்டும் என்று காத்திருந்தேன்..” என்றான் அவனும் ஆத்திரத்துடன்.

இந்த முசுட்டு மூஞ்சியை வைத்துக்கொண்டுதான் என்று சூடாகச் சொல்லத் துடித்த நாவை அடக்கியபடி, “சரி, எல்லாமே என்னால் நடந்ததாகவே இருக்கட்டும். நடந்தவைகளை இனி மாற்ற முடியாது இல்லையா. அதனால் இனியாவது போய்க் கதையுங்கள்.” என்றாள் பொறுமையாக.

“ம்ம்..”

அவள் சொல்கிறாள் என்பதற்காகவே மறுக்கும் வேகம் எழுந்தாலும், வேறு வழியின்றி எரிச்சலோடு ‘ம்’ கொட்டினான்.

“நானும் உங்களுடன் வரவா?”.

“இல்லை! வேண்டாம்.” என்றான் அவன் சட்டென.

விழிகள் கூர்மை பெற அவள் அவனைப் பார்க்க, “ப்ச்! உன்னை அவர்கள் எதுவும் சொல்வார்கள். அதுதான் வேண்டாம் என்றேன்.” என்றவன், வண்டியில் ஏறியமர்ந்து அதை இயக்கினான்.

அவளும் அவன் பின்னால் ஏறியபடி, “என்னை கடையில் இறக்கி விட்டுவிட்டு நீங்கள் போய்வாருங்கள்!” என்றாள்.

“ம்ம்..” என்றபடி ரஞ்சன் வண்டியை ‘ரிபோக்’க்கு விட்டான்.

அங்கே சந்தானத்திடம் இரண்டு வார்த்தை பேசிவிட்டு, சித்ராவிடம் விழிகளால் விடை பெற்றுக்கொண்டு வெளியே வந்தவனோடு சேர்ந்து வந்தாள் சித்ரா.

என்ன என்பதாக அவன் பார்க்க, “அவர்கள் என்ன சொன்னாலும் கோபப்படாமல் பார்த்துப் பேசுங்கள். நமக்கு முக்கியம் நித்தியின் திருமணம் மட்டுமே.” என்றாள் சித்ரா.

சட்டென மூண்ட எரிச்சலோடு, “என்ன, திடீரென்று என் தங்கையின் மேல் பாசமழை பொழிகிறாய்?” என்று, நீண்ட நாட்களுக்குப் பிறகு குத்தலாகக் கேட்டான் ரஞ்சன்.

தாயின் பேச்சு அடங்கியிருந்த அவன் மனக் கோபத்தைக் கிளறியிருந்தது.

நித்தியின் வாழ்க்கையைக் கெடுப்பேன் என்றவளின் இந்த அக்கறை நடிப்பாகவே தோன்றியது.

சித்ராவும் அவனுக்குச் சளைத்தவள் அல்லவே!

“உங்களைக் கட்டியிருக்கிறேன் இல்லையா. அதுதான் திடீர் திடீரென்று மாறும் உங்களின் புத்தி எனக்கும் வந்துவிட்டது. எல்லாம் பழக்கதோஷம்!” என்று சூடாகவே திருப்பிக் கொடுத்தாள்.

அவளைக் காதலிப்பதாகச் சொல்லிவிட்டு சாதனாவைத் திருமணம் செய்வதாக அவன் எடுத்த முடிவைக் குத்திக் காட்டுகிறாள் என்று புரியவே அனலைக் கக்கும் விழிகளால் அவளை முறைத்துவிட்டுச் சென்றான் ரஞ்சன்.

இந்தத் திருமணம் எந்தத் தடங்கலும் இன்றி நன்றாக நடக்கவேண்டும் என்று வேண்டிக்கொண்டது சித்ராவின் மனம்.

இல்லாவிட்டால் அந்தப் பழியும் அவள் மீதல்லவா விழுந்துவிடும். அதையும் தாண்டி, கணவன் மேல் கோபம் இருந்தாலும் அவன் போகும் காரியம் கைகூடவேண்டும் என்றும் எதிர்பார்த்தது மனது.

போனவன் மதியமாகியும் திரும்பாததில் தவித்துப் போனாள் சித்ரா.

போனகாரியம் என்னவோ ஏதோ என்று அவள் யோசித்தபடி இருக்க, “என்னம்மா, ஏன் ஒருமாதிரி இருக்கிறாய்?” என்று மதிய உணவோடு வந்த தாய் கேட்டபோது, “ஒன்றுமில்லை அம்மா. எப்போதும் போலத்தான் இருக்கிறேன்.” என்று சமாளித்தாள்.

அதற்கு மேலும் அங்கே இருக்க முடியாமல், தங்கள் இருவருக்குமான உணவை எடுத்துக்கொண்டு ரஞ்சனின் கடைக்கு அவள் செல்லவும் அங்கே அவன் வரவும் சரியாக இருந்தது.

களைத்துப் போய் வந்தவனிடம் எதுவும் கேட்காமல் உணவைப் பரிமாறினாள். அமைதியாக உண்டபோதும் அவன் முகத்தில் சிந்தனை ரேகைகள் ஓடிக்கொண்டே இருந்தது.

உணவுவேளை முடிந்ததும், “அவர்கள் என்னவாம்? திருமணத்திற்கு சம்மதம் சொன்னார்களா?” என்று கேட்டாள் சித்ரா.

“ம்.. சம்மதித்தார்கள்..” என்று இழுத்தவனிடம், மலர்ந்த முகத்தோடு, “பிறகு என்ன யோசனை?” என்று கேட்டாள் சித்ரா.

“ஐம்பது பவுன் நகையும் இருபது லட்சம் பணமும் கேட்கிறார்கள்..”

சற்று அதிர்ச்சியாகத்தான் இருந்தது சித்ராவுக்கு. சொந்தத்துக்குள் நடக்கும் திருமணம், அதற்கே இவ்வளவு சீதனமா? திருமணம் செய்கிறார்களா அல்லது மகனை நல்ல விலைக்கு விற்கிறார்களா?

“அதற்கு நீங்கள் என்ன சொன்னீர்கள்?”

“தருவதாகச் சொல்லியிருக்கிறேன். இந்தத் திருமணம் எப்படியாவது நடக்கவேண்டும்!”

அவனை யோசனையுடன் பார்த்தாள் சித்ரா. ரஞ்சன் இப்போது வசதியாகத்தான் இருக்கிறான். ஆனால் இவ்வளவு சீதனம் கொடுக்கும் வசதி இருக்கிறதா என்கிற கேள்வி எழுந்தது அவளுக்கு.

அதை வெளிப்படையாகக் கேட்க முடியாமல், “நம்மால் முடியுமா?” என்று பொதுவாகக் கேட்டாள்.

முடியுமா முடியாதா என்று சொல்லாமல், “முடியவேண்டும்!” என்றான் அவள் கணவன் பிடிவாதக் குரலில்.

“இதை உங்கள் அம்மாவிடம் சொன்னீர்களா? அவர் என்ன சொல்கிறார்?”

“அவருக்குச் சம்மதம்தான். சீதனம் அதிகம் என்றாலும் நித்திக்கு அவனைப் பிடித்திருக்கிறதே. அதைவிட இதிலாவது அப்பாவின் விருப்பத்தை நிறைவேற்று என்கிறார் அவர்!”

அதென்ன ‘இதிலாவது’ என்று கோபமாகக் கேட்கத் தோன்றியபோதும் அதை அடக்கிக் கொண்டாள்.

“பிறகு என்ன, எல்லோருக்கும் சம்மதம் என்றால் சரிதானே. திருமணத்தை எப்போது செய்வது என்று ஏதாவது சொன்னார்களா?”

“இன்னும் இரண்டு வாரத்தில் எங்களுக்குள் நிச்சயத்தைச் செய்துவிட்டு அடுத்த மாதம் திருமணம் வைக்கலாம் என்று யோசனை.”

“ஓ..! ஆனால், அதற்குள் அவர்கள் கேட்ட சீருக்குப் பணத்தைத் தயார் செய்ய முடியுமா? திருமணத்துக்கும் பணம் வேண்டுமே!”

அவனும் அதைப்பற்றித்தான் யோசித்துக் கொண்டிருந்தான்.

அதையே அவளும் கேட்டதில், “ஏன், உன் பிச்சைக்காரக் கணவனிடம் ஏது பணம் என்கிற சந்தேகம் வந்துவிட்டதா உனக்கு?” என்று சுள்ளென்று கேட்டான் ரஞ்சன்.

“ஏதோ நீங்கள் என் கணவன் என்பதாவது உங்களுக்கு நினைவில் இருக்கிறதே. அந்தவரையில் சந்தோசம் தான்.” என்றவள் அவனைக் கூர்மையாகப் பார்த்தபடி, “என்ன, இன்று அளவுக்கு அதிகமாகவே கோபம் வருகிறது. அங்கே உங்கள் அத்தை மகள் ரத்தினம் நின்றாளோ. அவளைக் கண்டதும் இழப்பின் அளவு பெரிதாகத் தெரிகிறதோ?” என்று குத்தலாகக் கேட்டவள் அந்த இடத்தை விட்டு வெளியேறினாள்.

நெஞ்சோ கனத்துப் போனது. கோபப் படவேண்டிய அவளே பொறுமையாகப் போக அவனானால் அவளைக் குத்திக்கொண்டே இருக்கிறானே!

திருகோணமலையில் அமைந்திருந்த மிகப் பெரிய திருமண மண்டபம், மக்களால் நிறைந்து கிடந்தது.

மணமேடையில் மணமக்கள் வீற்றிருக்க, ஐயர் அக்கினி வளர்த்து மந்திரத்தை ஓதிக் கொண்டிருந்தார்.

நித்தியும் நவீனும் ஒருபக்கம் ஐயர் சொல்லும் சடங்குகளைச் செய்து கொண்டிருந்தாலும் மறுபக்கம் விழிகளால் காதல் மொழி பேசிக்கொள்வதும், மாலைகளின் மறைவில் விளையாடுவதும் என்று தங்களது திருமண வாழ்க்கையை மிகுந்த எதிர்பார்ப்புடனே எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.

அவர்களைக் பார்த்தும் பார்க்காததுபோல் பார்த்த சித்ராவுக்குள் ஒருவித உணர்வுகளின் தாக்கங்கள்.

மனதுக்குப் பிடித்தவனே மணவாளனாக அமைவது என்பதே ஒவ்வொரு பெண்களுக்கும் மிகப் பெரிய வரம்! அப்படியானவனை சொந்த பந்தங்களின் முன்னிலையில் சுற்றங்கள் வாழ்த்தக் கணவனாக அடைவது என்பது பெரும் பேறு!

இவை எதுவும் அவளுக்குக் கிட்டியதில்லை!

காதலனாக எண்ணியவன் கணவனாக மாலையிட்டபோது கல்லாக இறுகிப் போயல்லவா அவளருகில் நின்றான்!

நித்தியின் வெட்கச் சிரிப்பையும், அதை ஆசையோடும் ஆவலோடும் பார்க்கும் நவீனையும் பார்க்கப் பார்க்கத் தெவிட்டவில்லை அவளுக்கு. அதேவேளை அவளுக்குள் இருந்த ஏக்கமும் அதிகரித்துக்கொண்டே சென்றது.

இராசமணியின் அன்பு மகளாக, ரஞ்சனின் ஒரேயொரு தங்கையாக, கணவனாகப் போகிறவனின் மனதுக்குப் பிடித்த இனியவளாக நிற்கும் நித்தியைப் பார்க்கையில் மெல்லிய பொறாமை கூட எட்டிப் பார்த்தது.

இது எதுவும் அவளுக்கு வாய்க்கவில்லையே என்று எண்ணியபடி அங்கே முன் வரிசையில் அமர்ந்திருந்த தாய் தந்தையரைத் திரும்பிப் பார்த்து மெலிதாகப் புன்னகைத்தாள் சித்ரா.

இன்னொரு பெண்ணின் திருமணத்தில் கூட மருமகனோடு சேர்ந்து நின்றிருந்த மகளின் மீதே பார்வையைப் பதித்திருந்த அவர்களும், அவளின் புன்னகையைக் கண்டுவிட்டு மலர்ந்து சிரிக்க கண்ணைக் கரித்தது அவளுக்கு.

அவளும் மகிழ்ச்சியாக இல்லை. அவளைப் பெற்றவர்களுக்கும் சந்தோசத்தைக் கொடுக்க முடியவில்லை அவளால்.

அவளுக்குமட்டும் ஏன் இப்படியான ஒரு வாழ்க்கை ? நித்தியை விட அவள் எதில் குறைந்து போனாள்?

இதோ அவள் உயிராகக் காதலித்து, பிடிவாதமாகக் கட்டிக்கொண்ட கணவன் அவளுக்கு அருகில், சொல்லப் போனால் அவளது தோளோடு தோள் உரசிக்கொண்டுதான் நிற்கிறான்.

ஆனால், மனதளவில் பல மைகளுக்கு அப்பால் அல்லவா நிற்கிறான்! அந்த மைல்களைக் கடந்து அவனை நெருங்க முடியாமல் தடையாக நிற்பது அவளது சுயமரியாதை அல்லவா!

என்ன இருந்தாலும் என்னை ஏமாற்றிவிட்டு இன்னொருத்தியைக் கட்டத் துணிந்தவன் தானே என்கிற எண்ணம் உண்டாக்கிய கசப்போடு அவள் அவனைத் திரும்பிப் பார்க்க, அவளது அசைவை உணர்ந்து திரும்பியவன் கேள்வியாக புருவங்களை உயர்த்தினான்?

அதை எதிர்பாராத சித்ரா முதலில் தடுமாறி பிறகு ஒன்றுமில்லை என்பதாகத் தலையை அசைத்துவிட்டு, மணமேடையில் பார்வையைப் பதிப்பவள் போன்று நின்றுகொண்டாள்.

யோசனையோடு மனைவியையே பார்த்த ரஞ்சனின் விழிகளில், அன்றைய திருமணத்துக்காக மையிட்டிருந்த அவள் விழிகளில் தெரிந்த வலி தென்பட்டது.

ஏன் இப்படியிருக்கிறாள்? காலையில் இருந்து நன்றாகத்தானே இருந்தாள்?

அன்று காலையில் நேரத்துக்கே எழுந்த ரஞ்சன், அவன் அறையில் சித்ரா தயாராவதால் அருகிலிருக்கும் மற்றொரு அறையில் குளித்து, வேட்டி சட்டையில் தயாராகி அவனது அறைக்குள் வந்தபோது, அங்கு மயில் வண்ணப் பட்டுச் சேலையில் அழகிய பதுமை என நின்றவளைப் பார்த்து ஸ்தம்பித்துத்தான் போனான்.

தலைக்குக் குளித்துத் தளரப் பின்னிய கூந்தலுடன், விற்புருவங்கள் நீண்டு கிடக்க, கருவண்டு விழிகள் மையில் தோய்ந்திருக்க, செப்பிதழ்கள் உதட்டுச் சாயத்தில் நனைந்திருக்க, அவனது திட மனதை நீண்ட நாட்களுக்குப் பிறகு அசைத்துப் பார்த்தது அவளின் பேரழகு!

அவள் மேல் ரசனையுடனும் ஆசையுடனும் படிந்த விழிகளை அசைக்க முடியாது நின்ற இடத்திலேயே வேரோடி நின்றவனை எதேர்ச்சையாக நிமிர்ந்து பார்த்த சித்ராவுக்கும் பார்வையை அகற்ற முடியவில்லை.

அன்று, அவர்களது திருமணத்துக்கும் அவன் வேட்டி சட்டைதான் உடுத்தியிருந்தான். ஆனாலும், மனதில் இருந்த வெறுப்பினால் அவனை நிமிர்ந்தே பார்க்கவில்லை.

இன்றோ, அவனது கம்பீரமும், திடகாத்திரமான உடற்கட்டும், அவனுக்கு மிக நன்றாகப் பொருந்திப் போயிருந்த வேட்டி சட்டையும் அவள் மனதை அசைத்துப் பார்த்தது என்றால், அவன் விழிகளின் பாவம் அவளை அப்படியே கட்டிப் போட்டது!

இருவரும் மற்றவரின் மேலிருந்த கோபத்தை மறந்து, தங்களை மறந்து, ஒருவரை ஒருவர் பார்த்தபடி நிற்க, கீழேயிருந்து கேட்ட இராசமாணியின் குரலில் அவர்களைச் சூழ்ந்திருந்த மாயவலையில் இருந்து சட்டென மீண்டனர்.

கன்னங்கள் கதகதக்க நின்றவளை ஆழ்ந்த பார்வையால் அளந்தபடி, “கிளம்பிவிட்டாய் என்றால் போகலாமா?” என்று கேட்டான் ரஞ்சன்.

அவன் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் தலை கவிழ, “ம்..” என்று முணுமுணுத்துவிட்டு அவள் முன்னே நடக்க, அவளின் பின்னழகைப் பார்த்த ரஞ்சனின் ஆண்மனது ஆடித்தான் போனது.

அதிலிருந்து தப்பிக்க எண்ணித் தலையை உலுக்கிக் கொண்டவன், வேகமாகச் சென்று அவளுடன் சேர்ந்தே படியிறங்கினான்.

மகனும் மருமகளும் ஒன்றாக இறங்கி வருவதைப் பார்த்த இராசமணி கூட அருமையான ஜோடிப்பொருத்தம் என்று எண்ணி வியந்துதான் போனார். அதையும் கவனிக்கத் தவறவில்லை ரஞ்சன்.

அப்படி, அவர்களின் மேல் கோபத்தில் இருந்த தாயையே வியக்க வைத்த அழகு குன்றாமல் நிற்கும் மனைவியின் விழிகளில், இப்போது ஏன் இந்த வலி என்று ஓடிய அவன் சிந்தனையை ஐயர் சொன்ன ‘கெட்டிமேளம் கெட்டிமேளம்’ என்ற வார்த்தைகள் கலைத்தது.

நவீனின் கரங்கள் தங்கையின் கழுத்தில் தாலியை அணிவிப்பதைப் பார்த்தவனின் மனதில் பெருத்த சந்தோசமும் நிம்மதியும் படர்ந்தது. எதையோ பெரிதாகச் சாதித்து விட்டதைப்போன்று உணர்ந்தான்.

தன் கடமையையும் தந்தையின் ஆசையையும் நிறைவேற்றிவிட்ட மன நிறைவோடு, அதைப் பகிர்ந்துகொள்ள பக்கத்தில் நின்ற மனையாளைத் திரும்பிப் பார்த்தவனின் மனதை அவள் நின்ற கோலம் மீண்டும் அசைத்தது.

இதழ்களில் நெளிந்த புன்னகையோடு அர்ச்சதையைத் தூவிக் கொண்டிருந்தவளின் விழிகளில் மெலிதாகக் கண்ணீர் கசிந்திருக்க அந்த முகத்தில் தெரிந்த ஏக்கத்தில் ஆடித்தான் போனான் ரஞ்சன்.

அது போதாது என்று, ஆசையோடும் ஆவலோடும் விழியகற்றாமல் அவள் பார்க்க, அப்படி எதைப் பார்க்கிறாள் என்று எண்ணியபடி மணமேடையைப் பார்த்தான் ரஞ்சன். அங்கே நேசம் பொங்க நித்தி தன் கணவன் ஆகிவிட்டவனைப் பார்க்க அவனோ அவளைத் தன் தோளோடு தோள் சேர்த்து அணைத்துக் கொண்டிருந்தான்.

ரஞ்சனையும் அந்தக் காட்சி பாதித்தபோதும், மனைவியின் நிலை இன்னும் அதிகமாகப் பாதித்தது.

மணமக்களையும் அவர்கள் ஒருவரையொருவர் அணைத்துக் கொள்வதையும் இவ்வளவு ஆசையோடும் ஆர்வத்தோடும் பார்க்கிறாள் என்றால், அவள் மனதில் எந்தளவுக்கு ஏங்கிப் போயிருக்கிறாள் என்பது புரிய மிகவும் வேதனையாக உணர்ந்தான்.

இது எதையும் அவனிடம் அவள் காட்டிக் கொண்டதே இல்லையே! நெஞ்சுக்குள் என்னவோ உடைய அவளது காரத்தைப் பற்றி மெதுவாக அழுத்தினான்.

திடுக்கிட்டுத் தன் மோனநிலை கலைந்து அவனைத் திகைப்போடு பார்த்தவள், சட்டெனத் தன் உணர்வுகளை மறைத்துக்கொண்டாள்.

அதைப் பார்த்தவனின் நெஞ்சில் வலித்தது. அந்த நிமிடமே அவள் மனதில் இருக்கும் ஏக்கத்தை எப்பாடு பட்டாகினும் போக்கிவிட வேண்டும் என்கிற வெறியே எழுந்தது.

மனம் கனிய, “நித்தியின் தலை முழுவதும் அர்ச்சதை கிடக்கிறது பார். அதைக் கொஞ்சம் தட்டிவிடு..” என்றவனின் குரலும் கனிந்து கிடந்தது.

உள்ளம் உள்ளே அலைபாய்ந்து கொண்டிருந்ததில் அவன் குரலில் இருந்த மாற்றத்தை உணராது, இயந்திர கதியில் அவன் சொன்னதைச் செய்தாள் சித்ரா.

அதன்பிறகான திருமணச் சடங்குகள் அனைத்துமே அதன்பாட்டில் நடந்து கொண்டிருந்தபோதும் அவ்வப்போது மனைவியைக் கவனிக்கத் தவறவில்லை ரஞ்சன்.

அனைவரோடும் சிரித்த முகமாக உரையாடி, சாப்பிடாதவர்களை சாப்பிடச் சொன்னபடி, சாப்பிட்டவர்களுக்கு காபியோ, குளிர்பானமோ அவரவர்க்கு ஏற்ப எடுத்துக் கொடுத்தபடி நின்றவளைப் பார்த்து வியந்தான்.

அந்தத் திருமண மண்டபத்தில் அவன் மனைவியாக, நித்தியின் அண்ணியாக, அவன் தாயாரின் மருமகளாக இயல்பாகப் பொருந்தி அனைத்து வேலைகளையும் முழு ஈடுபாட்டுடன் செய்து கொண்டிருக்கும் இவளா அன்று ‘உன் தங்கையின் வாழ்க்கை கெட்டாலும் பரவாயில்லையா’ என்று அவனிடம் கேட்டாள்.

தன் சிந்தனை முழுவதும் மனைவியே நிறைந்து இருக்கிறாள் என்பதை உணராமலேயே அவளைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தான் ரஞ்சன்.

ஒருவழியாகத் திருமணமும் முடிந்து மதிய உணவும் முடிந்து, வந்தவர்கள் அனைவரும் மணமக்களை வாழ்த்தி மெல்ல மெல்ல விடைபெற, அவர்களின் சொந்தங்கள் மட்டுமே எஞ்சியிருந்தனர்.

மணமக்கள் ஓய்வாக அமர்ந்திருக்க, சித்ராவின் பெற்றோர்கள் உட்பட நெருங்கிய சொந்தங்கள் ஆங்காங்கே அவர்களுக்கு அருகே அமர்ந்திருந்தனர்.

அப்போது அங்கே வந்த ரஞ்சன், “இனி வீட்டுக்குக் கிளம்பலாம் அம்மா. கார் வெளியே நிற்கிறது. உங்களை வீட்டில் விட்டுவிட்டு நான் திரும்ப வரவேண்டும்.” என்று சொல்ல, தன் அத்தை சுசீலாவை ஒருபார்வை பார்த்துவிட்டு, “அண்ணா!” என்று அழைத்தாள் நித்யா.

“என்ன நித்தி? ஏதாவது வேண்டுமா?”

இன்றிலிருந்து அவள் இன்னொருவனுடைய மனைவியாக வேறு வீட்டுக்குச் செல்லப் போகிறாள் என்பதால் உண்டான கனிவோடு அவன் விசாரிக்க, “உங்களோடு கொஞ்சம் கதைக்கவேண்டும். இப்படி அமருங்கள்.” என்று ஒரு இருக்கையைக் காட்டினாள் அவள்.

நேரம் போகிறதே என்று எண்ணியபோதும் அவளது பேச்சைத் தட்டாமல் அமர்ந்தவன், “சொல்லு.” என்றான்.

மீண்டும் ஒருமுறை அத்தையைப் பார்த்துவிட்டு, “எனக்கு நம் வீடும் உங்கள் கடையும் வேண்டும்!” என்றாள் நித்யா பட்டென.

புரிந்தும் புரியாமல், அதிர்ச்சியா குழப்பமா என்று வரையறுக்க முடியாத உணர்வுகளோடு தாயையும் தங்கையையும் மாறிமாறிப் பார்த்தான் ரஞ்சன்.

பார்த்தளவில் தாய்க்கும் அது புதுச் செய்தியே என்பது மட்டும் புரிந்தது.

மீண்டும் தங்கையிடமே பார்வையைப் பதித்து, “விளங்கவில்லை?” என்றான்.

“என்ன அண்ணா விளங்கவில்லை? நாம் இப்போது இருக்கும் அப்பாவின் அந்த வீடும், நீங்கள் புதிதாகத் திறந்த பெரிய கடையும் எனக்கு வேண்டும்!” என்றாள் அவன் தங்கை சற்றே குரலை உயர்த்தி.

கழுத்தில் ஏறிய மாங்கல்யம் அந்தத் துணிவைக் கொடுத்ததா? அல்லது அவளது அத்தையின் போதனையா?

ஏதோ ஒன்று!

எல்லோர் முன்னிலையிலும் சத்தமாகவே கேட்டாள் நித்யா.

அப்படிக் கேட்டவளை முகம் இறுகப் பார்த்தான் ரஞ்சன்!

ஒரு குறையுமில்லாது அவர்கள் கேட்ட சீரையும் கொடுத்து சிறப்பாக திருமணத்தையும் முடித்தபிறகு இது என்ன?

அவள் அப்படிக் கேட்டது ஒருபக்கம் ஆத்திரம் என்றால், ஏதோ தனியாகக் கேட்டால் அவன் தரமாட்டான் என்பது போல் எல்லோர் முன்னிலையிலும் அதுவும் சித்ராவின் பெற்றோரும் இருக்கையில் இப்படி உரக்கக் கேட்டது அவனுக்குப் பெரிய அடியாக இருந்தது!

அவமானமும் ஆத்திரமுமாகத் தாயைப் பார்த்தவனின் விழிகள், ‘என்னம்மா இதெல்லாம்?’ என்று சினத்தோடு வினவின.

error: Alert: Content selection is disabled!!
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock