தங்கையின் பேச்சைக் கேட்ட ரஞ்சனின் மனம் கொதித்தது. சுசீலா அத்தை கேட்ட சீதனமே மிக மிக அதிகம். அப்படியிருந்தும் ஒன்றும் சொல்லாமல் சம்மதித்ததற்கு காரணம், அப்பாவின் ஆசை மற்றும் நித்தியின் விருப்பம்.
இதில் சித்ரா போட்டோக்களைக் காட்டிச் செய்த குளறுபடிகளால் உண்டான கறுப்புப் புள்ளி வேறு அவன் மீது இருப்பதால், தாங்கள் கேட்பதை நிச்சயம் தருவான் என்று எண்ணித்தான் அவர்கள் அந்தளவு சீர் கேட்டார்கள் என்பதையும் அறிவான்!
இருந்தாலும், தங்கையின் திருமணத்தில் எந்தத் தடங்கலும் வரக்கூடாது என்று எண்ணி, தன் சக்தியையும் மீறிப் படாத பாடு பட்டுத்தான் அந்தத் திருமணத்தையே நடத்தி முடித்தான்.
வங்கியில், முதலில் அந்தக் கடை திறப்பதற்கும் பிறகு இந்தத் திருமணத்திற்கும் என்று அவன் வாங்கிய லோன் இன்னும் பத்து வருடங்களுக்கு இருக்கும். அதை இந்தக் கடைகளில் உழைத்துக் கட்டலாம் என்று எண்ணித்தான் வாங்கினான். அப்படியிருக்க நித்தி அந்தக் கடையையே கேட்டால் என்ன சொல்வது?
ஆத்திரத்தில் முகம் இறுக அவன் தாயைப் பார்க்க, “என்ன நித்தி இதெல்லாம்? உனக்கு என்ன குறை? சீரும் சிறப்புமாக சீதனமும் தந்துதானே இந்தக் கல்யாணத்தை முடித்து வைத்தான் உன் அண்ணா. பிறகும் ஏன் இப்படியெல்லாம் கேட்கிறாய்? வீடு ஆண் பிள்ளைகளுக்குக் கொடுப்பது தான் வழமை. கடை.. அது அவன் உழைப்பில் உருவானது.” என்றார் இராசமணி.
அவராலும் அனைவருக்கும் முன்னிலையில் மகளைக் கடிந்துகொள்ள முடியவில்லை. அதோடு அன்றுதான் திருமணம் முடித்த மகளிடம் கடுமையைக் காட்டவும் முடியவில்லை. முடிந்தவரை தன்மையாக ரஞ்சனின் நிலையை அவளுக்கு விளக்கினார்.
நித்தியின் முகத்தில் பிடிவாதம் இன்னுமே வலுத்தது.
“ஏன், வீட்டை ஆண்பிள்ளைகளுக்குத்தான் கொடுக்கவேண்டும் என்று சட்டம் ஏதும் இருக்கிறதா? நானும் அப்பாவின் மகள்தானே. எனக்கு அந்த வீடு வேண்டும்! அதோடு அந்தக் கடை அவரின் உழைப்பு என்றால் என்ன? யாருக்காக அண்ணா உழைக்கிறார், எனக்காகத்தானே. அந்தக் கடையையும் எனக்குத் தரச் சொல்லுங்கள். அவர்தான் பெரிய பணக்காரியைக் கட்டியிருக்கிறார். அவர்களிடம் எவ்வளவு கடைகள் இருக்கிறது. அது எல்லாம் அண்ணாக்குத்தனே வரப்போகிறது. இதை எனக்குத் தரட்டும்!” என்று அவள் ஆணித்தரமாகப் பிடிவாதக் குரலில் சொன்னபோது, இராசமணியே வாயடைத்துப் போனார் என்றால் ரஞ்சனின் மனமோ எரிமலையின் வெடிப்புக்களாய் வெடித்துக் கொண்டிருந்தது.
அதைவிட, இதென்ன கேவலம்?
இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கும் அவனது மாமனாரும் மாமியாரும் அவனைப் பற்றி என்ன நினைப்பார்கள்? ஏதோ அவர்களின் சொத்துக்காகத்தான் அவன் சித்ராவை மணந்தது போன்றல்லவா இருக்கிறது நித்தியின் பேச்சு!
சித்ராவுக்கோ நித்தியை இழுத்துவைத்து அறைந்தால் என்ன என்கிற அளவுக்கு ஆத்திரம் வந்தது.
இவ்வளவு பேருக்கும் முன்னால் கூடப் பிறந்த சகோதரனைப் பற்றி இப்படிச் சொல்கிறாளே. தன் கணவன் இதை எப்படித் தாங்கக் போகிறான் என்று நெஞ்சம் பதற அவள் அவனைப் பார்க்க அவனும் அவளைத்தான் அப்போது பார்த்தான்.
அவன் முகத்தில் தெரிந்த வேதனையைப் பார்த்துத் துடித்துப் போனவள், ஓடிச்சென்று அவனை ஆறுதலாக அணைத்துக்கொள்ளத் துடித்த மனதை அடக்கியபடி, வருந்தாதீர்கள் என்று விழிகளாலேயே அவனிடம் இறைஞ்சினாள்.
கண்களை இறுக மூடித் திறந்தவன் தங்கையிடம் திரும்பி, “அந்தக் கடையை வாடகைக்குத்தான் நான் நடத்துகிறேன். அதை எப்படி உனக்குத் தரமுடியும்?” என்று கேட்டான்.
“அப்படியே அதை எங்களுக்குத் தாருங்கள். இனி அதை இவர் நடத்திக்கொள்வார்!” என்றாள் அவன் அன்புத் தங்கை.
“உளறாதே! அவனுக்கு கடையைப் பற்றி என்ன தெரியும்? அதென்ன விளையாட்டுப் பொருளா எல்லோரும் எடுத்து விளையாட? ஒரு தொழில் நுணுக்கம் தெரியாமல், வியாபார யுக்தி தெரியாமல் அவன் எப்படி நடத்துவான்?”
“ஏன், நீங்கள் மட்டும் அதற்கு என்று தனியாகப் படித்துப் பட்டம் ஏதும் வாங்கினீர்களோ? வைத்தியருக்குப் படித்துவிட்டுக் கடையை நடத்தவில்லையா? அப்படி அவரும் நடத்துவார்.“ அப்போதும் கட்டியவனுக்காக வாதாடினாள் ரஞ்சனின் தங்கை.
“நித்தி சொல்வதிலும் ஒரு நியாயம் இருக்கிறது தானே. தங்கை ஆசையாகக் கேட்கும் கடையை கொடுக்கமாட்டேன் என்று ஏன் நீ இந்தப் பிடிவாதம் பிடிக்கிறாய். நடக்க இருந்த திருமணத்தை நிறுத்தி ரஞ்சனைக் கட்டிக்கொண்ட மகராசி தன் சொத்துக்களை கணவனுக்குக் கொடுக்க மாட்டாளா என்ன? உனக்கு இனி ஒரு பொறுப்பும் இல்லைத்தானே. அவள் கேட்பதைச் செய்!” என்றார், அதுவரை அமைதியாக நின்ற மல்லிகா- சாதனாவின் தாயார்.
பணம் காய்க்கும் மரமான ரஞ்சனை தன் மகளிடம் இருந்து சித்ரா பறித்துக்கொண்ட ஆத்திரத்தை இதில் காட்டினார் அவர்.
மல்லிகாவின் பேச்சு ரஞ்சனின் தன்மானத்தைச் சுரண்டிப் பார்த்தது.
“என்னைப் பற்றி என்ன நினைத்துக்கொண்டு இருக்கிறீர்கள் அத்தை. மாமனார் வீட்டில் உட்கார்ந்து உண்ண ஆசைப்படும் பெட்டைப்பயல் என்றா? அல்லது அடுத்தவரின் சொத்துக்கு அலையும் பேராசைக்காரன் என்றா?” சினம் மிகுந்த குரலில் கேட்டான் ரஞ்சன்.
“அப்படி என்றால் என் மகன் உன் வீட்டுச் சொத்துக்கு அலைகிறான் என்கிறாயா நீ? நன்றாக இருக்கிறது உன் பேச்சு. என்ன அண்ணி இதெல்லாம்? நாங்கள் என்ன காசு பணம் இல்லாமல் உங்கள் மகளைப் பெண் எடுத்தோம் என்று நினைத்தீர்களா? என் அண்ணாவின் மகள், சொந்தம் விட்டுப் போகக் கூடாது என்று பார்த்தால் உங்கள் மகன் இப்படிச் சொல்கிறான். அதைக் கேட்டுக்கொண்டு நீங்களும் பேசாமல் இருக்கிறீர்கள்?” என்று, ரஞ்சனிடம் ஆரம்பித்து இராசமணியையும் உசுப்பிவிட்டார் சுசீலா.
“அதுதானே அத்தை, நான் உங்களிடம் வந்து நித்தியைக் கட்டிக்கொள்வதற்கு நகை நட்டுத் தாருங்கள் என்று கேட்டேனா? எதற்கு உங்கள் மகன் என்னை இதில் இழுக்கிறார்?” என்று நவீனும் தன் பக்க நியாயத்தைக் கேட்டு, தான் ஒன்றும் தன் தாய்க்குச் சளைத்தவன் இல்லை என்று காட்டினான்.
நாலாபுறமும் இருந்துவந்த தாக்குதலில் ரஞ்சன் வெறுத்துப்போய் நிற்க, இராசமணியோ பதறிப்போனார். மகளுக்குத் திருமணம் முடிந்துவிட்டது என்று சந்தோசப் படமுடியாமல் ஏதும் பிரச்சினை ஆகிவிடுமோ என்று பதறியவர், “ரஞ்சன் கதைப்பதைக் கொஞ்சம் நிதானமாகக் கதை. இது உன் தங்கையின் வாழ்க்கைப் பிரச்சினை.” என்றார் கண்டிப்பான குரலில்.
தாயைச் சினத்தோடு பார்த்தான் ரஞ்சன்.
“நான் என்னம்மா பிழையாகக் கதைத்தேன்..” என்று அவன் சொல்லி முடிக்க முதலே, ஆத்திரத்தோடு இடையிட்டார் சுசீலா.
“நீ பிழையாகக் கதைக்காமல் வேறு எப்படிக் கதைத்தாய்? மறைமுகமாக என் மகனை அல்லவா குத்திக் காட்டினாய். உன் குத்தல் பேச்சை எல்லாம் கேட்டுக்கொண்டு உன் தங்கையோடு வாழவேண்டிய அவசியம் என் மகனுக்கு இல்லை. அதை நன்றாகப் புரிந்துகொள். உன் வீட்டையும் கடையையும் நான் கேட்டேனா இல்லை என் மகன்தான் கேட்டானா? கேட்டது உன் தங்கை. நீ எது கதைப்பதாக இருந்தாலும் அவளோடு கதை. அதை விட்டுவிட்டு எங்களைக் குத்திக் காட்டும் பேச்செல்லாம் இங்கே வேண்டாம் சொல்லிவிட்டேன்! உனக்கு உன் தங்கைக்கு சீர் கொடுக்க விருப்பம் இல்லை என்றால் சொல்லு, நீ தந்ததை எல்லாம் நாங்கள் திருப்பித் தந்துவிடுகிறோம். நாங்கள் ஒன்றும் வக்கில்லாமல் வாழவில்லை. உன்னை விட வசதியாகத்தான் இருக்கிறோம்!”
அவரின் சாதுர்யமான பேச்சில் ரஞ்சனே அயர்ந்துபோனான் என்றால், இராசமணிக்கோ அடிவயிறே கலங்க ஆரம்பித்தது.
இந்தப் புத்திகெட்ட பெண் என்னிடம் கேட்டிருக்கலாமே. நான் வாங்கிக் கொடுத்திருப்பேனே. எல்லோர் முன்னிலையிலும் தன் மரியாதையைக் கெடுத்துக் கொள்கிறாளே என்று மகள் மேல் ஆத்திரம் வந்தாலும் அதை அவளிடம் காட்டிக்கொள்ள முடியாமல் தவித்தார்.
இதில் நித்தி வேறு கண் கலங்கியபடி நின்றகோலம் அவரை வாட்டியது.
பின்னே, மகளை வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள் என்றால் அவளின் நிலை என்ன என்று நினைத்த மாத்திரத்திலேயே அவரது கோபம் முழுவதும் மகனிடமே திரும்பியது.
“என்னடா பார்த்துக்கொண்டு நிற்கிறாய். தங்கைக்குக் கொடுக்காமல் சொத்துக்களைச் சேர்த்து என்ன செய்யப் போகிறாய்? இவ்வளவு பேராசைக்காரனா நீ? திருமண நாள் அதுவுமா அவளைக் கண்ணைக் கசக்க வைக்கிறாயே. இதே இடத்தில் உன் அப்பா இருந்திருந்தால் அவள் கேட்கமுதலே தூக்கிக் கொடுத்திருக்க மாட்டாரா? எப்போது கதைத்தாலும் தங்கை என் பொறுப்பு என்று சொல்வாயே, இதுதான் நீ காட்டிய பொறுப்பின் லட்சணமா? இவ்வளவு சுயநலம் பிடித்தவனாக நீ இருப்பாய் என்று நான் கொஞ்சம்கூட நினைக்கவேயில்லை.” என்றவரை, நம்ப இயலாமல் பார்த்தான் ரஞ்சன்.
சந்தானம் தம்பதியரோ திகைத்துப் போயினர்.
சுயநலம் மிக்கவர்களின் பேச்சைக் கேட்டு ஏற்கனவே கசந்துபோய் நின்ற சந்தானம், மகளுக்காக மகனையே தூக்கி எறியும் சம்மந்தியைப் பார்த்து மலைத்தே போனார்.
இப்படியும் ஒரு தாய் இருக்க முடியுமா?
ரஞ்சனின் மனமோ தாயின் பேச்சைக் கேட்டுப் பலமாக அடிவாங்கியது. அதுவரை அவன் பட்ட கஷ்டங்கள் அனைத்தும் பாழாய்ப் போனதே! என்ன செய்து என்ன பலன் என்று விரக்தியாக எண்ணினான்.
மகளுக்காக இவ்வளவு பேசும் இந்த அம்மா தன்னைப் பற்றி ஒருநிமிடமாவது சிந்திக்கவே இல்லையா? அவனும் அவர் மகன்தானே! உள்ளே வலித்தது அவனுக்கு.
அம்மா தங்கை மேல் சற்று அதிகமாகவே பாசம் காட்டுவார் என்பதை அவன் அறிவான். வீட்டின் கடைக்குட்டி என்பதாலும் இன்னொரு வீட்டுக்குப் போகப்போகும் பெண் பிள்ளை என்பதாலும் அப்படிச் செய்கிறார் என்று எண்ணியவன் அதுநாள் வரை அதைப் பெரிதாக எடுத்துக் கொண்டதே இல்லை.
ஆனால் இன்று?
அவர்கள் இருவருக்குமாகத்தானே அவன் மனசாட்சியை அடகுவைத்து, தன்னுடைய மனதின் ஆசையைக் குழிதோண்டிப் புதைத்துவிட்டு, என்னென்னவோ செய்தான். இன்னும் என்னென்னவோ எல்லாம் செய்ய இருந்தான்.
அவனா சுயநலம் பிடித்தவன்? அவனா பேராசைக்காரன்?
அப்படி சுயநலமாகவும் பேராசைக்காரனாகவும் இருந்திருக்க மனதுக்குப் பிடித்தவளை சந்தோசமாகக் கைப்பிடித்து மகிழ்ச்சியாக வாழ்ந்திருப்பானே!
மனக்கொதிப்பை அடக்கவும் முடியாமல் வாயைத் திறந்து கொட்டவும் முடியாமல் தயை வெறித்தபடி நின்றவனைச் சந்தானம் நெருங்கினார்.
“ரஞ்சன், அவர்கள் எதைக் கேட்டாலும் கொடுத்துவிடு. உன் தங்கையின் வாழ்க்கை தான் முக்கியம். அதோடு உன்னிடம் உன் உழைப்பு இருக்கேப்பா. அதை யாரால் பிடுங்கமுடியும் சொல்லு? அதைவிட உன் மனைவியின் சொத்துக்கள் எல்லாமே உனக்குத்தானே சொந்தம்.” என்று சொன்னவரின் பேச்சில் ரஞ்சன் வெட்கிப் போனான்.
அப்போதும், அந்த நிலையிலும் என் சொத்துக்கள் என்று சொல்லாமல் உன் மனைவியின் சொத்துக்கள் என்று சொன்ன அந்தப் பெரியமனிதர், மேன்மக்கள் என்றும் மேன்மக்களே என்பதை மீண்டும் மிக அழகாக அவனுக்கு உணர்த்தினார்.
அவன்தான் அவர் முகம் பார்க்கமுடியாமல் கூனிக் குறுகிப் போனான்.
பின்னே, அவருக்கு அவன் செய்த காரியங்கள் அனைத்தும் தெரியவந்தால்?
அதற்கு மேலும் அங்கே நிற்கப் பிடிக்காமல், மணப்பெண் வீட்டாருக்கு என்று ஒதுக்கியிருந்த அறைக்குள் வேகமாகச் சென்று கதவை அறைந்து சாத்தினான் ரஞ்சன்.
கணவனின் நிலையை எண்ணிக் கண்களில் கசிந்த கண்ணீரோடு நின்ற மகளின் அருகே சென்று அவளுக்கு ஆதரவாக நின்றுகொண்டார் லக்ஷ்மி.
சந்தானத்துக்கும் என்ன செய்வது என்று தெரியவில்லை. ரஞ்சன் கடையையோ வீட்டையோ அவர்களுக்குக் கொடுப்பதில் அவருக்கு எதுவுமே இல்லை. அவரிடம் இல்லாத சொத்தா என்ன?
ஆனால், வாழ்வின் அடிமட்டத்தில் இருந்து எழுந்து மெல்ல மெல்ல முன்னுக்கு வந்தவன் அனைத்தையும் மீண்டும் இழப்பதை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதோடு அவனது கடின உழைப்பையும் கஷ்டத்தையும் அதே துறையில் இருக்கும் அவரையன்றி வேறு யாரால் மிகத் துல்லியமாக உணரமுடியும்?
அந்தக் கஷ்டத்தையும் உழைப்பையும் இன்னொருவர் நோகாமல் வந்து பிடுங்கிக் கொள்வதா? எண்ணங்கள் பல இப்படி ஓட, கலங்கி நின்ற மகளின் அருகில் சென்று துணையாக நின்றுகொண்டார் அவர்.
“அவரைப் பார்த்துவிட்டு வருகிறேன் அப்பா…” என்று தகப்பனிடம் சொல்லிவிட்டு கணவனிடம் செல்லக் காலடி எடுத்து வைத்தவளை சாதனாவின் பேச்சு நிறுத்தியது.
“பார்த்தீர்களா அத்தை, இவ்வளவு நடந்தும் உங்கள் மருமகள் வாயைத் திறக்கவே இல்லையே! நம்மிடம் இல்லாத பணமா காசா, அவர்கள் கேட்பதைக் கொடுங்கள் என்று சொல்லியிருக்க வேண்டாமா? இதுவே நானாக இருந்திருக்க ரஞ்சன் மச்சான் இப்படிக் கவலைப் படுவதைப் பார்த்துக்கொண்டு இருந்திருப்பேனா? அவர் கேட்க முதலே அனைத்தையும் கொடுத்திருப்பேன்.” என்றவளைப் பொசுக்கி விடுபவள் போல் பார்த்த சித்ராவால் அதற்கு மேலும் அமைதியாக இருக்க முடியவில்லை.
“யார்? நீயா அனைத்தையும் தூக்கிக் கொடுக்கிறவள். பணத்துக்காக பச்சோந்தியாக மாறும் நீயெல்லாம் என்னைப் பற்றிப் பேசாதே! நீயொரு பணப்பிசாசு! உன்னைப் பற்றி எனக்குத் தெரியாதா?” என்று சித்ரா ஆத்திரத்துடன் சொல்லி முடிக்க முதலே பலகுரல்கள் அவளை அதட்டின.
“வாயை அடக்கிப் பேசு!” இது மல்லிகா.
“யாரைப் பார்த்து பச்சோந்தி என்கிறாய். நீதான் பணப்பிசாசு!” என்றாள் சாதனா.
“சித்ரா! வாயை மூடு!” இது அவள் மாமியார்.
இப்படிக் கேட்ட பலகுரல்களுக்கு இடையில் லக்ஷ்மி பதட்டத்துடன் மகளின் கையைப் பற்றிக்கொள்ள, “சித்து! பேசாமல் இரு. இருக்கும் பிரச்சினையை நீ பெரிதாக்கதே!” என்றார் சந்தானம் கண்டிக்கும் குரலில்.
“சும்மா இருங்கள் அப்பா. வாயை மூடிக்கொண்டிருந்தால் வேலைக்கு ஆகாது!” என்று தந்தையிடம் ஆத்திரத்தோடு சொன்னவளிடம், “ஆமாமாம்! நீ எப்படி வாயை மூடிக்கொண்டு இருப்பாய். ரஞ்சனோடு பழகியதைப் போட்டோ எடுத்து எங்களுக்கு எல்லாம் அனுப்பியவள் தானே நீ..” என்றார் மல்லிகா ஏளனமும் எகத்தாளமுமாக.
“ஆமாம். அனுப்பினேன் தான். அதற்கு என்ன? அவரைக் காதலித்தேன். அவரோடு எடுத்த போட்டோக்களைத்தான் அனுப்பினேன். அதேபோல அவரையே கட்டிக்கொண்டேன். இதில் என்ன தவறு கண்டீர்கள்? நானென்ன உங்கள் மகளைப் போல ஒருவனோடு பழகுவதும் அவனிடம் பணமில்லை என்றதும் இன்னொருவனைப் பிடிப்பதும் என்று நேரத்துக்கு ஒரு மாப்பிள்ளை பிடிப்பவள் என்று நினைத்தீர்களா?” என்று அவள் கேட்டது, அங்கிருந்த அனைவரையுமே அது மிக நன்றாகத் தாக்கியது.
“ஏய்! யாரைப் பார்த்து என்ன பேசுகிறாய்..” என்று ஆங்காரமாக ஆரம்பித்த மல்லிகாவிடம், “உங்கள் மகளைப் பார்த்துத்தான் சொல்கிறேன்!” என்றாள் சித்ரா.
“நான் போட்டோ அனுப்பியதும் திருமணத்தை நிறுத்தும் அளவுக்கு மிக நல்லவர்களா நீங்கள் எல்லோரும்?” என்றாள் ஏளனமாக.
“அல்லது ஒருசில போட்டோக்களை மாத்திரம் பார்த்துவிட்டு திருமணத்தை நிறுத்தும் அளவுக்கு நீ என்ன பெரிய ஒழுக்கசீலியா?” என்று சாதனாவைப் பார்த்து அவள் கேட்டபோது தங்கள் குட்டு வெளிப்பட்டு விடுமோ என்று சுசீலாவும் மல்லிகாவும் வாயடைத்து நிற்க, இராசமணிதான் மருமகளை அதட்டினார்.
“யாரிடம் என்ன பேசுகிறோம் என்றில்லாமல் பேசாதே!” என்றவர், “இதுதான் உங்கள் பெண்ணை நீங்கள் வளர்த்த லட்சணமா?” என்று சந்தானத்தைப் பார்த்துக் கேட்கவும் தவறவில்லை.
சந்தானம் எதுவோ சொல்லவர, “கொஞ்சம் பொறுங்கள் அப்பா!” என்று தந்தையை அடக்கியவள், “யாரிடம் என்ன பேசுகிறோம் என்று தெரிந்துதான் பேசுகிறேன் அத்தை. இவர்களுக்கு நான் போட்டோக்களை மட்டும்தான் அனுப்பினேன். கடிதவுரையில் இருந்த எங்கள் வீட்டு விலாசத்தை வைத்து எப்படியோ எங்கள் வீட்டுத் தொலைபேசி இலக்கத்தைக் கண்டுபிடித்து, என்னோடு பேசினார்கள் இந்த அம்மாவும் அவர் மகளும்!” என்று அங்கிருந்த மல்லிகாவையும் சாதனாவையும் சுட்டிக் காட்டினாள் சித்ரா.
இதென்ன புதுக்கதை என்பதாக இராசமணி பார்க்க, “இதோ அவர்கள் முன்னால் தான் சொல்கிறேன். எங்கே சொல்லச் சொல்லுங்கள் பார்ப்போம், நான் சொல்வது எல்லாம் பொய் என்று. எனக்கு அழைத்து, இந்தப் போட்டோக்களைப் பார்த்ததும் திருமணத்தை நிறுத்திவிடுவோம் என்று நினைத்தாயா என்று கேட்டார்கள். அப்படி நிறுத்தாவிட்டால், ரஞ்சனின் கடைகளை வாங்கிய என் அப்பா அவரது கடை லோனையும் நிறுத்திவிடுவார், செருப்பும் எங்கிருந்தும் வந்திறங்காது என்று நான் மிரட்டியதற்கு, அப்படி நடுத்தெருவுக்கு வரும் பிச்சைக்காரனைக் கட்டி நான் என்ன செய்ய என்று உங்கள் அருமை மருமகள் சொன்னாள். அதன்பிறகுதான் திருமணத்தையே நிறுத்தினார்கள்.” என்று அவர்களின் குட்டை எல்லோர் மத்தியிலும் போட்டுடைத்தாள் சித்ரா.
மல்லிகா, சுசீலா குடும்பத்தவர்களைத் தவிர்த்து மற்றவர்கள் எல்லோருக்கும் இது அதிர்ச்சியாக இருந்ததில் அனைவருமே வாயடைத்து நிற்க, “பார்த்தீர்களா அம்மா அண்ணாவின் குணத்தை. அந்தக் கடைகள் இரண்டும் வாடகைக்கு எடுத்து நடத்துகிறேன் என்றுதானே நம்மிடம் சொல்லியிருந்தார். இப்போது இவரானால் அதுவும் அவர்கள் கடை என்கிறார். இதை அண்ணா நம்மிடம் சொல்லவில்லையே.” என்றாள் நித்யா.
அவளுக்கோ இப்போது கடையையும் தனக்குச் சொந்தமாக்கிக் கொள்ளலாம் என்கிற பேராசை வந்திருந்தது. அதில் தமையனைத் தாயிடம் போட்டுக்கொடுத்தாள்.
சித்ராவுக்கோ மொத்தமாக அவளை வெறுத்தே போனது.
“சேச்சே! நீயெல்லாம் என்ன பெண். அந்தக் கடைகளை வாங்கியது என் அப்பா. அதற்கு உன் அண்ணா இன்னமும் வாடகை கட்டிக்கொண்டுதான் இருக்கிறார். இப்படி எல்லோருக்கும் முன்னால் அவரை நிறுத்தி வைத்துக் கேள்வி கேட்கிறாயே, கொஞ்சம் கூடவா உனக்கு அவர்மேல் பாசம் இல்லை?”
“அதைப்பற்றி நீங்கள் ஒன்றும் கதைக்கத் தேவையில்லை. அது எனக்கும் அண்ணாவுக்குமான பிரச்சினை. அதுதான் எப்படியோ என் அண்ணாவைக் கட்டிக் கொண்டீர்கள் தானே. முடிந்தால் அவரை அந்தக் கடையையும் வீட்டையும் எனக்குத் தரச்சொல்லுங்கள்.” என்று, அப்போதும் தன் காரியத்தில் குறியாக நின்றாள் நித்யா.
அதற்கு மேலும் அவளிடம் பேச சித்ராவுக்குப் பிடிக்கவே இல்லை. நீயெல்லாம் ஒரு மனிதப் பிறவியா என்று அற்பபுழுவைப் பார்ப்பது போல் பார்த்தவள், அவளை அலட்சியம் செய்துவிட்டு கணவனை நாடிச் சென்றாள்.
அங்கிருந்த கட்டிலில் அமர்ந்திருந்தவன், இரண்டு கைகளாலும் தலையைத் தாங்கியபடி குனிந்திருந்த நிலை அவளை என்னவோ செய்ய, “ரஞ்சன்..!” என்றபடி ஓடிச்சென்று அவன் தலையைத் தன் வயிற்றோடு சேர்த்து அணைத்துக்கொண்டாள் சித்ரா.
தாளமுடியாத வேதனையோடு அவளை ஒருநொடி நிமிர்ந்து பார்த்தவன், அடுத்தநொடியே அவள் இடையை இறுக்கிக் கட்டிக்கொண்டு அவள் வயிற்றுக்குள் தன் முகத்தைப் புதைத்துக் கொண்டான்.
ஆறுதல் தேடும் குழந்தையாய் நடந்துகொண்டவனின் செயலில் முகம் கனிய அவன் தலையைக் கோதிவிட்டவளின் விழிகளில் நீர் திரண்டது.
அவன் மீது அவளுக்குக் கோபம் இருக்கிறதுதான். அவளை ஏமாற்றப் பார்த்தான் என்கிற ஆறா வடு இருக்கிறதுதான்! ஆனால் அதற்கும் மேலே காதல் இருகிறதே! நேசம் இருகிறதே! பைத்தியம் போல் அவனையே சுற்றும் மனம் இருகிறதே! இன்று அவன் துடிக்கையில் தன் உயிரைக் கொடுத்தாவது அவன் வேதனையைப் போக்கவேண்டும் என்கிற வெறி இருக்கிறதே!
தன் வயிற்றில் ஈரத்தை உணர்ந்தவளுக்கும் விழிகளில் நீர் மல்கியது. அந்த நொடியில் தன்னால் முடிந்ததாய் எண்ணி அவனை அரவணைத்தபடி நின்றாள் சித்ரா.