என் சோலை பூவே 31(1)

ஒரு கம்பீரமான ஆண்மகனை, வாழ்க்கைப் போராட்டத்தில் எப்போதுமே எதிர்நீச்சல் போடும் ஒரு போர்வீரனாக மட்டுமே பார்த்துப் பழகியவனை இன்று இப்படி ஓய்ந்து ஒடிந்துபோனவனாகப் பார்க்கவே முடியவில்லை அவளால்.

தாய் தங்கையரின் செயலில் கோபமாக இருப்பான் என்றுதான் எண்ணினாளே தவிர இந்தளவு தூரத்துக்கு வருந்துவான் என்று நினைக்கவே இல்லை!

தன் துயரை அடக்கிக்கொண்டு அவன் தலையை இதமாகக் கோதிவிட்டபடி அவள் நிற்க, அவனோ அவள் வயிற்றுக்குள் புதைத்த தலையை நிமிர்த்தவும் இல்லை. அவள் இடையை இறுக்கமாகக் கட்டியிருந்த கரங்களைத் தளர்த்தவும் இல்லை!

அதில் இருந்தே அவன் இன்னும் தன்னைச் சமன்படுத்திக் கொள்ளவில்லை என்பது புரிந்தாலும், வெளியே அந்த வல்லூறுகள் காத்திருக்கின்றனவே என்று எண்ணியவள், அவன் தலையைக் கோதியபடியே, “ரஞ்சன்..!” என்று இதமான குரலில் அழைத்தாள்.

அப்போதும் அவன் அசையாமல் இருக்க, “வெளியே எல்லோரும் காத்திருக்கிறார்கள் ரஞ்சன். நாம் இப்படியே எவ்வளவு நேரத்துக்கு இங்கேயே இருக்க முடியும்…” என்று அப்போதைய நிலைமையை அவனுக்கு எடுத்துரைத்தாள் மனைவி.

அதுவரை தனக்குள்ளேயே மூழ்கிப் போயிருந்தவனுக்கும் சூழ்நிலை மெல்லப் புரிய, அவளது இடையிலிருந்த கரங்களை விலக்காது முகத்தை மட்டும் நிமிர்த்தி அவளை அண்ணாந்து பார்த்தான்.

சிவப்பேறிப் போயிருந்த அவன் விழிகளில் தெரிந்த பரிதவிப்பில், வலியில், அடிபட்ட தோற்றத்தில் அவள் நெஞ்சு துடித்தது.

“ரஞ்சன்..” என்றாள் கலங்கிவிட்ட விழிகளோடு.

“ஏன் யாழி அம்மா இப்படி எல்லாம் பேசுகிறார். நானும் அவர் மகன்தானே. அவர்கள் இருவருக்குமாகத்தானே எல்லாமே செய்தேன்.” என்று நெஞ்சை உருக்கும் குரலில் அவன் கேட்டபோது, எவ்வளவோ அடக்க முயன்றும் முடியாமல் அவள் விழிகளில் இருந்து உருண்ட கண்ணீர்த் துளிகள் இரண்டு அவன் கன்னங்களில் விழுந்து சிதறியது.

“விடுங்கள் ரஞ்சன். அவள் பெண்பிள்ளை இல்லையா.. அதனால்தான் அப்படிப் பேசியிருப்பார். மற்றும்படி அத்தைக்கு உங்கள் மேல் பாசம் இல்லாமல் இருக்குமா? அதனால் அவர்கள் கேட்பதைக் கொடுங்கள்.” என்றாள் சமாதானமாக.

அவளும் வேறு என்னதான் சொல்வாள்? எல்லாவற்றையும் விட கணவனின் நிம்மதி முக்கியமே!

ஆனால், அதைக் கேட்ட ரஞ்சனின் முகத்தில் மெல்ல மெல்லத் தீவிரத் தன்மை குடியேற, தலையோ மறுப்பாக அசைந்தது.

“இல்லை யாழி. அது முடியாது! அந்தக் கடைகளைத் திறப்பதற்கு நான் பட்ட பாடுகளும் செய்த வேலைகளும் உனக்குத் தெரியாது. உன் அப்பாவின் கடையில் இருந்து ப….” என்று இறுகிய குரலில் அவன் சொல்லிக்கொண்டு இருக்கையிலேயே அவளது தளிர் விரல்கள் கணவனது இதழ்களை மூடின.

கேள்வியாகப் பார்த்தவனை கனிவோடு நோக்கி, “அதெல்லாம் இப்போது எதற்கு ரஞ்சன். உங்கள் தங்கைக்குத்தானே கடையைக் கொடுக்கப் போகிறீர்கள். அதனால் யோசிக்காமல் முழுமனதோடு கொடுங்கள். நாம் மற்றக் கடையை வைத்தே முன்னேறலாம். அதுவும் உங்களால் நிச்சயம் முடியும். எனக்கு அந்த நம்பிக்கை நிறையவே இருக்கிறது..” என்று உறுதியோடு சொன்னவளை, பெருமிதமாகப் பார்த்துப் புன்னகைத்தவன் அவளை மீண்டும் அணைத்துக்கொண்டான்.

அவன் அணைப்புக்குள்ளேயே நின்றபடி, “நீங்கள் முன்னின்று நடத்திய திருமணம் இடையில் குழம்பியதாக இருக்கவேண்டாம் ரஞ்சன். அதனால் நித்தி கேட்பதைக் கொடுத்து அவளைச் சந்தோசமாக கணவன் வீட்டுக்கு அனுப்பி வையுங்கள்.” என்றாள் மெல்ல.

“அப்படி எல்லாவற்றையும் கொடுத்தால் நாம் கடன்காரர்களாக நடுவீதியில் நிற்போம். அதனால் உனக்கு ஒன்றும் இல்லையா? உன் அப்பாவிடம் எதற்கும் கையேந்த எனக்கு விருப்பமில்லை.” என்றான் அவள் மனநிலையையும் அறியும் விதமாக.

“அப்படி ஒருநிலை நமக்கு வராது ரஞ்சன். நீங்கள் வர விடமாட்டீர்கள்! அப்படியே நின்றாலும் என்ன, உங்களோடுதானே நிற்கப் போகிறேன். அதனால் எனக்கு எந்தக் கவலையும் இல்லை. இருவருமாக வாழ்க்கையில் போராடித்தான் பார்ப்போமே.” என்று வெகு இலகுவாகச் சொன்னவளை, வேகமாக எழுந்து அதைவிட வேகமாகக் கட்டிக்கொண்டான் கணவன்.

சில நொடிகளிலேயே அவளிடம் இருந்து விலகியவனின் முகம் இப்போது தெளிந்திருந்தது.

“வா..” என்று அவளையும் அழைத்தவன், அவளின் கரம்பற்றியே வெளியே அழைத்துச் சென்றான்.

அங்கிருந்த எல்லோரும் அவர்களையே பார்க்க, ஒருவிதக் கூச்சத்துடன் சித்ரா அவனிடமிருந்து கையை உருவிக்கொள்ள முயன்றாள். அந்தச் செயலில் முகத்தைத் திருப்பி அவளைக் கூர்மையாகப் பார்த்தவன் அவள் கையை இன்னும் அழுத்தமாகப் பற்றிக் கொண்டான்.

அப்படியே தாயின் முன்னால் சென்று நின்று, “அந்த வீட்டை நித்தியே எடுத்துக் கொள்ளட்டும்..” என்று அவன் சொல்லி முடிக்க முதலே,

“அப்போ கடை..?” என்று அவசரமாகக் கேட்டது நித்யா.

“அதைத் தரமுடியாது!” உறுதியான குரலில் சொன்னான் ரஞ்சன்.

“ஏன் தரமுடியாது. அந்தக் கடையும் உங்களின் சொந்தக் கடைதானே. அதுவும் எனக்கு வேண்டும்.” என்றவளை வெறுப்போடு பார்த்தான் ரஞ்சன்.

“வாயை மூடு! இனி என்னிடம் எதையும் கேட்கும் உரிமையோ பேசும் உரிமையோ உனக்கு இல்லை! இன்றோடு எல்லாமே முடிந்தது! இதற்கு மேலும் எதையாவது பேசினாயானால் அந்த வீட்டைக் கூடத் தரமாட்டேன்!” என்று கடுமையான குரலில் அவன் சொன்னபோது, நித்தி படக்கென்று வாயை மூடிக்கொண்டாள்.

பின்னே, தேவையில்லாமல் எதையாவது கதைத்து அந்த வீட்டையும் இழந்துவிட்டால்?

ஆனால், மகனின் பேச்சில் இராசமணிக்குக் கோபம் வந்தது.

“இதென்ன ரஞ்சன், தங்கையிடம் அதுவும் திருமணமான பெண்ணிடம் இப்படி எடுத்தெறிந்து பேசுகிறாய். எங்கிருந்து இப்படிப் பேசக் கற்றுக்கொண்டாய்?”

“எல்லாம் நீங்களும் உங்கள் மகளும் கற்றுத் தந்த பாடம்தான்!” என்று தாயிடமும் சீறினான் அவன்.

அவனை அதிர்ந்துபோய்ப் பார்த்தார் அவர். அவன் கோபக்காரன் என்பதும் அவரிடம் கோபமாகப் பேசுவான் என்பதும் அவருக்குத் தெரிந்ததே. ஆனால், இத்தனை பேர் முன்நிலையில் அதுவும் சம்மந்தி குடும்பத்தையும் வைத்துக்கொண்டு அவன் காட்டிய கடுமையில் அவருக்கு அவமானமாக இருந்தது.

“இதென்னடா பழக்கம். எல்லோரும் கூடியிருக்கும் இடத்தில் வைத்து அம்மாவிடம் மட்டு மரியாதை இல்லாமல் கதைக்கிறாய்?” என்று கடிந்துகொண்டவரை ஏளனமாகப் பார்த்தான் ரஞ்சன்.

“எல்லோர் முன்னிலையிலும் பேச்சை ஆரம்பித்து என்னைக் குற்றவாளி ஆக்கியது யார்? நீங்கள்தானே. இவ்வளவு பேரும் நிற்கிறார்கள் என்று அப்போது தெரியவில்லையா உங்களுக்கு? இனித் தனியாகக் கதைப்பதற்கு எதுவுமே இல்லை. இன்றே இப்போதே எல்லோர் மத்தியிலும் எல்லாவற்றையும் பேசி முடித்துவிடலாம்..” என்று முடிவாகச் சொன்னவனை மனம் துணுக்குறப் பார்த்தார் இராசமணி.

“என்னடா என்னென்னவோ எல்லாம் பேசுகிறாய்..”

“ரஞ்சன்.. ப்ளீஸ் அமைதியாகக் கதையுங்கள்..” என்று அருகில் நின்று முணுமுணுத்த மனைவிஇடம் அவன் ஒன்றுமே சொல்லாதபோதும், அவன் கரம் அவள் கரத்தை அழுத்தி ஆறுதல் கொடுத்தது.

“அப்படிப் பேசவைத்தது நீங்கள் தானே! இவ்வளவும் நடந்ததன் பிறகும் இனியும் நான் அமைதியாக இருப்பதில் அர்த்தமில்லை.” என்றான் தாயிடம் அழுத்தமான குரலில்.

அதைக் கேட்டவருக்கு மகன் பேசும் விதமே சரியில்லை என்று பட, பேச்சு முற்ற முதலே விஷயத்தை முடிக்க நினைத்தார்.

“அதைப் பிறகு ஆறுதலாக நாம் பேசலாம் ரஞ்சன். முதலில் அவள் விருப்பப் பட்டது போல அந்த வீட்டையும் கடையையும் அவளுக்கே கொடுத்துவிடு. இனி நீ உழைப்பது எல்லாம் உனக்குத்தானே.” என்றார் அவசரமாக.

தாயை வெறுப்போடு பார்த்த ரஞ்சன், “நானும் அப்பாவுக்குத் தானேம்மா பிறந்தேன்.” என்றான் திடீரென!

“ரஞ்சன்!!” என்று கூவியபடி அமர்ந்திருந்த கதிரையில் இருந்தே எழுந்துவிட்டார் இரசமணி.

“உனக்கு என்ன பைத்தியமா? எதையும் கதைக்க முதலில் யோசித்துக்கதை!”

“ஏன், நான் கேட்டதில் என்ன தப்பு? நித்திக்காக இவ்வளவு கதைக்கும் நீங்கள் எனக்காக என்ன செய்தீர்கள்? கடை திறப்பதற்காக வீட்டை அடமானம் வைக்கக் கூடத் தரமாட்டேன் என்றுவிட்டீர்களே! அந்த வீட்டில் வைத்த பற்றில் கொஞ்சத்தைக் கூட நீங்கள் என்மேல் வைக்கவில்லையே! எப்போது பார்த்தாலும் அப்பா, அப்பா கட்டிய வீடு, அவரின் செல்ல மகள், அவரின் ஆசை என்று சொல்வீர்களே, நானும் அதே அப்பாவின் பிள்ளை தானே. அது மட்டும் மறந்து போனதா உங்களுக்கு?” என்று கேட்டவனை வாயடைத்துப்போய்ப் பார்த்தார் அவர்.

“நன்றாக யோசித்துப் பாருங்கள். என்றாவது எனக்காக எதையாவது செய்தீர்களா நீங்கள்? ஆனால் நான், ஆசையாகப் படித்த படிப்பை விட்டு, கௌரவம் பாராமல் செருப்புக் கடைக்கு வேலைக்குப் போய், கஷ்டப்பட்டு உழைத்து முன்னேறி அனைத்தையும் செய்தது யாருக்காக? உங்கள் இருவருக்குமாகத்தானே. இவ்வளவு செய்தும் எனக்குக் கிடைத்தது என்னம்மா? பொறுப்பில்லாதவன், பேராசைக்காரன், சுயநலக்காரன் என்கிற பெயர்கள்தானே.”

அதைக் கேட்டதும் இராசமணிக்கு ஆத்திரம்தான் வந்தது. “பெற்ற தாய்க்கும் கூடப் பிறந்த தங்கைக்கும் செய்ததைச் சொல்லிக் காட்டுகிறாயே.. நீயெல்லாம் என்ன மனிதன்? நானோ உன் தங்கையோ வந்து உன்னிடம் கேட்டோமா எங்களுக்காகக் கஷ்டப்பட்டு என்று. அல்லது உன் படிப்பை விடச்சொல்லி நான் சொன்னேனா? நீயாகப் படிப்பை விட்டுவிட்டு வேலைக்குச் சேர்ந்துவிட்டு இப்போது வந்து இப்படியெல்லாம் சொல்கிறாய். எனக்கு நீ இனி எதுவுமே செய்யத் தேவையில்லை. ஆனால் உன் தங்கை கேட்பதை மட்டும் கொடு. அந்தக் கடையைக் கொடுப்பதால் நீ ஒன்றும் குறைந்து போகமாட்டாய். உனக்குத்தான் இன்னொரு கடை இருக்கிறதே. அதோடு, நீதான் வசதியானவீட்டு மாப்பிள்ளை ஆயிற்றே!” என்று சொன்னவரை முற்றிலும் வெறுத்துப்போய்ப் பார்த்தான் அவன்.

“தாயும் பிள்ளையுமாக இருந்தாலும் வாயும் வயிறும் வேறு என்பதை நிரூபித்துவிட்டீர்கள்!” என்றான் கசப்போடு.

அதற்கு மேலும் அவருடன் பேசுவதில் அர்த்தமில்லை என்று எண்ணியவன், “நித்திக்குச் செய்யவேண்டிய அத்தனையையும் ஒரு குறை இல்லாமல் செய்து முடித்துவிட்டேன். அதோடு, வீட்டையும் தருகிறேன். ஆனால் கடையைத் தரமுடியாது! அப்பாவின் சொத்துக்களை ஏமாற்றி பறித்த இந்த சுயநல கூட்டத்திடம் என் சொத்துக்களையும் இழக்க நான் தயாரில்லை!” என்றான் முடிவாக.

“ஏன் உனக்கு இவ்வளவு பிடிவாதம். அந்தக் கடையில் அப்படி என்ன இருக்கிறது என்று அதைப் பிடித்துக்கொண்டு இப்படித் தொங்குகிறாய்?” என்றவரிடம், “அதில் இருப்பது என் உழைப்பு! நான் பட்ட கஷ்டம்!!” என்றான் மகன் ஆத்திரத்தோடு!

“என் உழைப்பை யாருக்கும் தாரைவார்க்க என்னால் முடியாது! அண்ணா கடையை எனக்குத் தா என்று நித்தி பாசமாகக் கேட்டிருக்க கட்டாயம் கொடுத்திருப்பேன். அதை விட்டுவிட்டு இவ்வளவு பேருக்கும் முன்னால் வைத்து, மறுக்க முடியாத நிலையில் என்னை நிறுத்திக் கேட்டால், அவளின் மிரட்டலுக்குப் பணிவேன் என்று நினைத்தாளா? பாசத்துக்கு அடங்கலாம் ஆனால் மிரட்டலுக்கு அடங்க முடியாது. என் அம்மா என் தங்கை என்று நான் வாழ்ந்ததும் போதும்! பட்டதும் போதும்! இனியாவது என் மனைவி என் குடும்பம் என்று எனக்காக வாழ்ந்துகொள்கிறேன். அதனால் நாங்கள் இனி உங்கள் வீட்டுக்கு வரவில்லை. தனியாகவே போய்க்கொள்கிறோம்.” என்று அழுத்தமான குரலில் உறுதியாகச் சொன்னவனை அதிர்ச்சியோடு பார்த்தனர் எல்லோரும்.

இராசமணியோ மகன் இப்படிச் சொல்வான் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை.

அவன் பேச்சில் உறைந்து நின்றவரை விரக்திப் புன்னகையோடு பார்த்தவன், “கவலைப் படாதீர்கள். என் கடமையை என்றும் நான் செய்யாமல் விடமாட்டேன். உங்கள் செலவுக்கு அடுத்தவரின் கையை நீங்கள் எதிர்பார்க்காத அளவுக்கு, உங்கள் பெயரில் வங்கியில் பணம் போட்டுவிடுகிறேன். அதோடு அப்பாவின் பென்ஷன் பணமும் நான் இன்னும் திருப்பித் தரவில்லையே! அதையும் வட்டியோடு தந்துவிடுகிறேன்! உங்கள் மகளோடே நீங்கள் இருந்து கொள்ளுங்கள்!” என்று முடிவாகச் சொன்னவன், அவர்களின் பதிலை எதிர்பாராமல் மனைவியை அழைத்துக்கொண்டு மாமனாரிடம் வந்தான்.

“அங்கிள், இன்று ஒருநாளைக்கு இவள் உங்கள் வீட்டில் தங்கட்டும்.” என்றான் அவரிடம்.

“ரஞ்சன், இதென்ன ஒருநாள் என்கிறாய்? காலம் பூரா நீங்கள் எங்களுடனே இருக்கலாம். எங்களுக்கும் வேறு யார் இருக்கிறார்கள். யார் யாரோ என்னென்னவோ சொல்கிறார்கள் என்று அதையெல்லாம் காதில் போடாதே! மனதைப் போட்டுக் குழப்பிக் கொள்ளாமல் நீயும் வா. நாம் எல்லோரும் ஒன்றாகவே இருக்கலாம்.” என்றவரிடம் எதுவும் சொல்லாமல் ஒரு புன்னகையை மட்டும் சிந்தியவன், “அப்பாவுடன் வீட்டுக்குப் போ..” என்றான் மனைவியைப் பார்த்து.

சம்மதமாகத் தலையை ஆட்டியவளின் விழிகளில் காதலும் பெருமிதமும் நிரம்பி வழிந்தது. பின்னே, அதுநாள் வரை அம்மா, தங்கை என்று இருந்தவன், அவளை மனைவியாக மனமார அங்கீகரிக்காமல் இருந்தவன் இன்று அனைவரின் முன்னாலும் அவளை என் மனைவி என்று சொல்லிவிட்டானே!

தான் பட்ட கஷ்டங்களும் துன்பங்களும் வீணாகவில்லை என்று நினைத்தவளுக்கு அவனை விட்டுப் போகவே மனமில்லை.

“நீங்கள்..?” என்று கேட்டாள்.

“அதுதான் நீயே சொன்னாயே. எதையும் இடையில் விடாமல் முழுதாகச் செய்து முடியுங்கள் என்று. அவர்களை வீட்டில் விட்டுவிட்டு மிகுதி வேலைகளையும் முடித்துக்கொண்டு வருகிறேன்.” என்றான் அவன்.

“வருவீர்களா?” ஏக்கத்தோடு கேட்டவளின் குரலில் நம்பிக்கையின்மை அப்பட்டமாகவே வெளிப்பட்டது.

அவளுக்கு ஏனோ அவனைப் பிரியவே மனமில்லை. அப்படியே அவனுடன் ஒட்டிக்கொள்ள மாட்டோமா, அவன் கைச்சிறைக்குள் அடங்கிவிட மாட்டோமா என்று மனம் துடித்தது.

என்றும் போல் அன்றும் மனையாளின் விழிகள் பேசிய மொழிகள் புரிய உள்ளே மனம் தடுமாறினாலும், “கண்டிப்பாக வருவேன். நீ போ..” என்றான் எதையும் காட்டிக் கொள்ளாது.

வேறு வழியின்றி சரி என்பதாக தலையை ஆட்டிவிட்டு நடந்தவள், அவனைத் திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டே சென்றாள்.

அவள் சென்று மறையும்வரை அவளையே பார்த்திருந்த ரஞ்சனும், தன் வேலைகளைப் பார்க்கச் சென்றான்.

வீட்டுக்கு வந்துசேர்ந்த சித்ராவின் மனம் கணவனையே சுற்றிச் சுற்றி வந்தது.
அதுநாள் வரை அவளை ஏமாற்றிவிட்டு இன்னொருத்தியை மணக்க நினைத்தவன் தானே என்று எண்ணியவளால் இன்று அப்படி நினைக்க முடியவில்லை.

தாயையும் தங்கையையும் மட்டுமே முதன்மையாக எண்ணி வாழ்ந்தவனுக்குத் தான் இரண்டாம் பட்சமாகத் தெரிந்திருக்கிறோம் என்கிற உண்மை, அவன் தாயுடன் கதைத்ததைக் கேட்டபிறகு மெல்ல மெல்லப் புலப்பட்டது.

ஆனாலும், அன்று கடையில் வைத்து நடந்த சம்பவத்துக்குப் பிறகும் இன்னொருத்தியை மணக்கத் தயாரானதை எப்படி ஏற்கமுடியும்?

எந்தச் சமாதானத்தைச் சொல்லியும் அந்த மனக்குறையை அவளால் நீக்கவே முடியவில்லை.

கணவனைப் பற்றிய எண்ணங்களிலேயே உழன்றவள் தாய் இரவு உணவுக்கு அழைக்க, பசியில்லாதபோதும் அவர் சாப்பிடாமல் விடமாட்டார் என்பதால் பெயருக்குக் கொறித்துவிட்டு தன் அறைக்குள் புகுந்துகொண்டாள்.

திருமணத்துக்குச் சென்றுவந்த களைப்பு நீங்க உடல் கழுவி, புழுங்கிக் கொண்டிருந்த மனதுக்கும் உடலுக்கும் இதமாக நைட்டியை அணிந்துகொண்டாள்.

அப்படியிருந்தும் அவளருகில் தூக்கம் வருவேனா என்றது.

நேரம் இரவு ஒன்பது மணியைத் தாண்டியிருந்தது. இனியும் அவன் வீட்டுக்கு வருவான் என்று கொஞ்சமாக இருந்த நம்பிக்கையும் பறந்தோடியது. சாப்பிட்டு இருப்பானா? எங்கே தங்குவான் என்கிற கேள்விகள் தோன்ற, அதற்கு மேலும் சும்மா இருக்க முடியாமல் அவனுக்கு அழைத்தாள்.

error: Alert: Content selection is disabled!!
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock