என் சோலை பூவே – 5

‘ரிபோக்’ கடையின் மேல் தளத்தில் அன்று காலையிலேயே வேலைகள் பரபரப்பாக நடந்து கொண்டிருந்தது. அது வருடக் கடைசி என்பதாலும் வரவிருக்கும் கிறிஸ்மஸ் கொண்டாட்டம், ஆங்கிலப் புத்தாண்டு அதைத் தொடர்ந்து தைத் திருநாள் என்று பண்டிகை நாட்கள் அடுத்தடுத்து வருவதாலும் புது வகையான செருப்புகள் புதிதாக வந்து இறங்கியிருந்தது.

வீதியில் இருந்து பார்க்கும் போதே விசாலமாகக் காட்சி தரும் அந்தக் கடையின் பின் பகுதியில், சந்தானத்தின் கணக்கு வழக்குகளைப் பார்ப்பதற்கு வசதியாக அலுவலக அறை ஒன்று அமைந்திருந்தது. அதோடு வேறு பிற தேவைகளுக்கு என்று இன்னொரு அறையும், வேலை செய்பவர்கள் அமர்ந்து உண்பதற்காக ஒரு அறையுமாக மொத்தம் மூன்று அறைகளையும் குளியலறையையும் கொண்டிருந்தது அந்தக் கடையின் பின் பகுதி. கடையோடு இவை எல்லாவற்றையும் சேர்த்து அமைந்திருந்த மேல் தளம் ‘ஸ்டோர் ரூம்’ ஆகப் பயன்படுத்தப் பட்டு வந்தது.

அங்கு பெட்டி பெட்டியாக வந்திறங்கியிருந்த செருப்புக்களை மற்றக் கடைகளுக்கும் பிரித்துக் கொண்டிருந்தார்கள் கண்ணனும் ரஞ்சனும். அவர்களுக்கு உதவியாக இன்னும் மூன்று பேர்.

சந்தானத்துக்குச் சொந்தமாக ஐந்து கடைகள் இருந்தாலும், எல்லாவற்றிலும் பெரிய கடை இதுதான். வியாபாரம் அதிகமாக நடப்பதும் இங்கேதான். அதனால் மொத்தமாகக் கொள்வனவு செய்யும் செருப்புகள் இங்கேயே வந்திறங்கும். இங்கிருந்தே மற்றக் கடைகளுக்கும் பிரித்து அனுப்புவார் சந்தானம்.

அதைத்தான் கண்ணனும் ரஞ்சனும் செய்து கொண்டிருந்தனர். ஆனால், வேலையைச் செய்ய விடாமல், கீழே இருந்து வந்துகொண்டிருந்த சிரிப்பும் கனைப்பும் ரஞ்சனுக்குச் சினத்தைக் கிளப்பிக் கொண்டிருந்தது.

கண்ணனுக்கும் அப்படித்தானா என்று அறிய அவரைத் திரும்பிப் பார்த்தான். அவரோ வெகு இயல்பாக வேலை செய்து கொண்டிருந்தார்.

அவன் பார்வையை உணர்ந்து, “என்ன?” என்று கேட்டவரிடம் ஒன்றுமில்லை என்பதாகத் தலையை அசைத்துவிட்டு வேலைகளைப் பார்த்தவனுக்கு, கலீர் என்று கேட்ட சித்ராவின் சிரிப்பில் எரிச்சல் தான் வந்தது.

பின்னே, எப்போதெல்லாம் புது வகையான செருப்புக்கள் வந்திறங்குகிறதோ அப்போதெல்லாம் தன்னுடைய குரங்குப் பட்டாளங்களையும் கூட்டிக்கொண்டு வந்துவிடும் அவளை நினைத்தாலே அவனுக்குப் பற்றிக்கொண்டு வந்தது.

அன்று மன்னிப்புக் கேட்கிறேன் என்கிற பெயரில் அவள் காட்டிய திமிருக்குப் பிறகு அவளின் முகம் பார்ப்பதைக் கூடத் தவிர்த்துவிட்டான். அந்தளவுக்கு வெறுப்பு மூண்டிருந்தது.

ஆனால், எப்போதாவது எதிர்பாராமல் இருவரினதும் விழிகளும் சந்திக்கையில் அவள் விழிகளில் தெரியும் அலட்சியத்தையும் திமிரையும் பார்க்கையில், பார்வையாலேயே அவளை எரித்து விட்டுத்தான் செல்வான் ரஞ்சன்.

அவளோ அவன் பார்வையைக் கண்டு கொண்டதும் இல்லை. அவனை அதற்கு மேல் பொருட் படுத்தியதும் இல்லை. அன்று செய்தது பிழை என்று உணர்ந்து மன்னிப்புக் கேட்டுவிட்டாள். அவன் திமிராகக் கதைத்ததற்குப் பதிலும் கொடுத்துவிட்டாள். அவளைப் பொறுத்த மட்டில் அதோடு அந்தப் பிரச்சினை முடிந்தது. ‘திமிர் பிடித்த சிடுமூஞ்சி’ இதைத் தாண்டி அவன் சம்மந்தமான எந்த எண்ணமும் அவளிடம் இல்லை.

அதன்பிறகு கிட்டத் தட்ட மூன்று மாதங்கள் கழிந்திருந்தது. முன்புமே ரஞ்சன் யாருடனும் பெரிதாக ஒட்டுதல் காட்டமாட்டான். அந்தச் சம்பவத்துக்குப் பிறகு, கண்ணனுடன் சற்று நெருக்கமாகிப் போனாலும் மற்றவர்களிடம் இருந்து இன்னுமே விலகியிருந்தான்.

மனதில் மட்டும் அவனை அவமானப் படுத்திய அத்தனை பேருக்கும் முன்னால் வாழ்ந்து காட்டவேண்டும் என்கிற நெருப்பொன்று எரிந்துகொண்டே இருந்தது. அவர்களை அவனைத் தேடி வரவைக்க வேண்டும் என்கிற உறுதி நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே சென்றது. சில திட்டங்கள் அவன் மனதில் இருந்தாலும் அதற்கான நேரத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தான்.

என்னென்னவோ சிந்தனைகளுடன் வேலையில் மூழ்கி இருந்தவனை, “கண்ணன் அண்ணா, லாரி வந்துவிட்டது. இந்தப் பெட்டிகளை ஏற்றவா?” என்று அங்கிருந்த பெட்டிகளைக் காட்டிக் கேட்ட முருகனின் பேச்சுக் கலைத்தது.

“ம்.. ஏற்று.” என்ற கண்ணன், “ரஞ்சன், பெட்டிகளை ஏற்றியதும் நீயும் போய் எந்தக் கடைக்கு எத்தனை பெட்டிகள் என்று பார்த்து இறக்கிவிடு.” என்றார்.

“சரிண்ணா..” என்றவனும், அவர்களுடன் சேர்ந்து பெட்டிகளை லாரியில் ஏற்றலானான்.

ஒரு பெட்டியை வீதியில் நின்ற லாரியில் ஏற்றிவிட்டு கடைக்கு உள்ளே வந்து கொண்டிருந்தவனை, “ஹலோ” என்கிற அழைப்புத் திரும்பிப் பார்க்க வைத்தது.

செய்து கொண்டிருந்த வேலைக்கு இடைஞ்சலாக வந்த அழைப்பும், ஹலோ என்று அழைத்த விதமும் கொடுத்த எரிச்சலோடு திரும்பிப் பார்த்தவனை, “இங்கே வாருங்கள்.” என்று கைநீட்டி அலட்சியமாக அழைத்தான் முகேஷ்; சித்ராவின் நண்பன். அவனோடு இன்னும் சிலர்.

கடைக்குள் வாடிக்கையாளர்களைக் கவனிப்பதற்காக என்று வேலையாட்கள் அங்கங்கே நின்றபோதும் அவனை அவர்கள் அழைத்ததில் மூண்ட சினத்தை அடக்க முயன்றபடி ‘அந்தத் திமிர் பிடித்தவள் எங்கே’ என்று தேடியது அவன் விழிகள்.

அவள் அங்கே இல்லாததை உறுதி செய்தவன், அவளைப் போல்தானே அவள் நண்பர்களும் இருப்பார்கள் என்று எண்ணியபடி அவர்களை நெருங்கி, “என்ன?” என்று கேட்டான்.

சற்று அதட்டலாக இருந்த அந்த ‘என்ன’வில் அங்கு நின்ற நண்பர்களின் பார்வைகள் அவசரமாகச் சந்தித்துக் கொண்டன.

‘சொன்னேனே.. அவன் திமிரைப் பார்த்தாயா..’ என்று முகேஷிடம் பார்வையாலேயே சொன்னாள் ராகினி.

‘நடப்பதைப் பார்..’ என்பதாக அவனும் விழியசைவில் அவளிடம் காட்டிவிட்டு, ரஞ்சனின் முகத்துக்கு நேராக செருப்பு ஒன்றை நீட்டி, “இந்தச் செருப்பு எனக்குப் பொருந்தவில்லை. அடுத்த சைஸ் இல்லையா?” என்று கேட்டான்.

அந்தச் செயலிலேயே அவர்களது எண்ணத்தை ஓரளவுக்கு ஊகித்துக் கொண்டபோதும், நின்ற இடத்தில் இருந்து அசையாது, “உன் கால் என்ன சைஸ்?” என்று கேட்டான் ரஞ்சன்.

“நாற்பது. இதுவும் நாற்பதுதான். ஆனாலும் அளவில்லை.”

“அப்படி அளவில்லாமல் போகாது. ஒழுங்காகப் போட்டுப்பார்.”

“ஒழுங்காகப் போட்டுப் பார்க்காமல் சும்மா சொல்வேனா? வேண்டுமானால் என் காலுக்கு நீங்களே போட்டுப் பாருங்கள்.” என்றான் முகேஷ். விழிகளோ நண்பர்களிடம், ‘எப்படி?’ என்று கேட்டது.

அவன் கெட்டித்தனத்தை மெச்சும் பார்வையை அவன் புறம் வீசிவிட்டு, ரஞ்சனின் அடுத்த கட்ட நடவடிக்கைக்காக மிகுந்த ஆவலுடன் காத்திருந்தனர் மூவரும்.

தன் கூரிய விழிகளால் நால்வரினதும் முகத்தை அளந்தவன், எதையும் காட்டிக் கொள்ளாது, “அந்த முக்காலியில் அமர்ந்துகொள். போட்டுப் பார்க்கலாம்..” என்றான் முகேஷிடம்.

அவர்களது பார்வைகளோ வெற்றிக் களிப்பில் மின்னியது. “இதோ..” என்றபடி வேகமாக அமர்ந்து காலை நீட்டினான் முகேஷ்.

செருப்பின் கொளுக்கியைக் கழட்டிவிட்டு கீழே குனிந்து முகேஷின் காலில் அதை மாட்ட முயன்றான் ரஞ்சன். குனிந்திருந்தவனின் அடர்ந்த கருமை நிறக் கேசத்தைப் பார்த்து நக்கலாகச் சிரித்துக் கொண்டார்கள் நால்வரும்.

அவனைத் தன் காலைப் பிடிக்க வைத்துவிட்ட பெருமை மின்ன நண்பர்களைப் பார்த்த முகேஷை நோக்கி வெற்றி என்பதாக கட்டை விரலை உயர்த்திக் காட்டினர் மற்றவர்கள்.

அப்போதுதான் தந்தையின் அறையில் இருந்து வெளியே வந்த சித்ரா, அந்தக் காட்சியைக் கண்டதும் ஒருநொடி திகைத்து நின்றுவிட்டாள்.

ரஞ்சன் அப்படிச் செய்வது அதுதான் முதல் முறை என்றல்ல. அவளே பலமுறை பார்த்திருக்கிறாள். அதுவும் வயதானவர்களுக்கு முகம் மாறாமல் சரளமாகக் கதைத்துச் செருப்பை மாட்டி விடுகையில், சின்னக் குழந்தைகளிடம் அவர்களுக்கு ஏற்ற வகையில் சிரித்துக் கதைத்தபடி போட்டுவிடுகையில் எல்லாம் ‘இந்தச் சிடுமூஞ்சிக்கு இவ்வளவு பொறுமை இருக்கிறதா..’ என்று வியந்திருக்கிறாள்.

ஆனாலும், முகேஷிற்கு அவன் அதைச் செய்வதைப் பார்த்ததும் ஆத்திரம் வந்தது. அதுவும் அவன் வேலைதான். என்றாலும், அவனை வேண்டுமென்றே செய்ய வைத்துவிட்டு, ஏதோ பெரிதாக சாதித்தது போன்று கட்டை விரலை உயர்த்திக் கொண்டாடிய நண்பர்களின் செயல் அவளுக்குப் பிடிக்கவில்லை.

அவர்களை வேகமாக நெருங்கி, “இதயரஞ்சன், எழுந்திருங்கள்!” என்றாள் அதட்டலாக. “டேய்! உன் செருப்பை உனக்குப் போடத் தெரியாதா? காலை நீட்டிக்கொண்டு ஹாயாக அமர்ந்திருக்கிறாய்.” என்று முகேஷிடமும் பாய்ந்தாள்.

“நான் எங்கே போடமாட்டேன் என்று சொன்னேன். இது எனக்குச் சின்னது என்று சொல்லியும் கேட்காமல் அவராகத்தான் மாட்டுகிறார்..” என்றான் முகேஷ், ரஞ்சனிடம் கொடுத்த காலை இழுக்காமலேயே.

ஆத்திரத்தில் என்ன செய்வது என்று தெரியாது நின்றவள், “அவனே போட்டுக் கொள்ளட்டும். நீங்கள் எழும்புங்கள் இதயரஞ்சன்.” என்றாள் ரஞ்சனிடம் படபடப்பான குரலில்.

அவனோ அவளை நிமிர்ந்தும் பாராமல், முகேஷின் காலில் செருப்பை மாட்டிவிட்டே எழுந்தான். “உன் காலுக்கு இந்தச் செருப்புத்தான் சரியான அளவு. இதையே வாங்கு. அடுத்த சைஸ் என்றால் காலை விட்டுக் கழன்றுவிடப் பார்க்கும்.” என்றுவிட்டு, அந்த இடத்தை விட்டு அகன்றான்.

தன்னையும் தன் பேச்சையும் பொருட்படுத்தாமல் செல்பவனின் முதுகையே முறைத்துக் கொண்டு நின்றாள் சித்ரா.

அவளைப் பிடித்து அருகே இழுத்த ராகினி அவள் காதருகில் குனிந்து, “அன்று உன் அப்பாவிடம் உனக்குத் திட்டு வாங்கித் தந்தவனை முகேஷ் தன் காலைப் பிடிக்க வைத்துவிட்டான், பார்த்தாயா..” என்றாள் மகிழ்ச்சியோடு.

ரஞ்சனின் அலட்சியத்தினால் உண்டான ஆத்திரமும் சேர்ந்துகொள்ள, “லூசாடி நீ? அன்று நான் செய்தது பிழை. அதுதான் அப்பா திட்டினார். அதற்கு எதற்கு அவனை அவமானப் படுத்துகிறீர்கள்?” என்று கோபத்துடன் கேட்டவளை மேலும் கீழுமாகப் பார்த்தாள் ராகினி.

“என்னடி அவனுக்குச் சார்பாகக் கதைக்கிறாய்?” சந்தேகக் குரலில் கேட்டவளை முறைத்தாள் சித்ரா.

“உளறாதே! நான் யார் பக்கமும் கதைக்கவில்லை. உண்மையைச் சொல்கிறேன்.” என்றாள் பல்லைக் கடித்தபடி.

“சரி. நீ சொல்வது உண்மையாகவே இருக்கட்டும். ஆனால், அவன் இவன் காலைப் பிடித்ததில் என்ன தப்பு? அது அவன் வேலைதானே. அதற்கு எதற்கு உனக்குக் கோபம் வரவேண்டும்?”

“தேவைக்கு ஒன்றைச் செய்வது வேறு ராக்கி. நீங்கள் நால்வரும் வேண்டுமென்றே அவனை அப்படிச் செய்ய வைத்தது பிழை. அன்று அப்பாவிடம் அவன் ஒன்றுமே சொல்லவில்லை. சொன்னது கண்ணன் அண்ணா. அதுவும் உண்மையைத்தான் சொன்னார்.” என்றாள் சித்ரா.

ஏதோ சொல்லத் தொடங்கிய ராகினியை முந்திக்கொண்டு, “சரி சரி விடுங்கள். இதற்கு மேல் இதைப்பற்றி எதுவும் கதைக்க வேண்டாம். சித்து சொல்லு, இன்று எங்கே போகலாம்? சினிமா அல்லது ஏதாவது நல்ல ஹோட்டல்?” என்று கேட்டான் மோகன்.

“ப்ச்! எனக்கு இப்போது எங்கும் வரும் ‘மூட்’ இல்லை..” என்று சலித்தவளிடம்,

“ஏன்?” என்று கேட்டான் முகேஷ் ஒருமாதிரிக் குரலில்.

“அதுதான் ‘மூட்’ இல்லை என்கிறேனேடா..” என்று சிடுசிடுத்தாள்.

முகேஷுக்கு சித்ராவின் கோபத்தில், சலிப்பில் அதிருப்தி உண்டாகி இருந்தது. அவளுக்காகத்தானே ரஞ்சனை அவமானப் படுத்தினான். சந்தோசப்படுவாள், அவனைப் பாராட்டுவாள் என்று பார்த்தால் அவளோ அந்த ரஞ்சனுக்காகக் கதைக்கிறாளே. இது நல்லதில்லையே என்று ஓடியது அவன் சிந்தனை. சித்ராவின் மீதான அவனுடைய ஒருதலைக் காதலுக்கு ஏதாவது ஆபத்து வந்துவிடுமோ என்று பயந்தான் முகேஷ்.

அவன் காதலை அறிந்திருந்த ராகினியின் விழிகளும் முகேஷின் விழிகளும் சங்கேதமாகப் பேசிக் கொண்டன.

“அதென்ன திடீரென்று மூட் சரியில்லை. இவ்வளவு நேரமும் நன்றாகத்தானே இருந்தாய். நீ வருகிறாய். நாம் ஏதாவது படத்துக்குப் போகிறோம்.” என்றான் முகேஷ் பிடிவாதமாக.

சித்ராவுக்கு அப்போதே தலைவலி ஆரம்பித்து இருந்தது. இதில் சினிமாவுக்கு வேறு போய் அதை இன்னும் அதிகரிப்பதா என்று நினைத்தவள், “சினிமா வேண்டாம். ஏதாவது ஹோட்டலுக்குப் போகலாம்.” என்றாள்.

“சரி, ஹோட்டலுக்கே போகலாம். சித்து நீ அங்கிளிடம் சொல்லிவிட்டு வா.” என்று அவளை அனுப்பினாள் ராகினி.

“மகி நீ மோகனின் வண்டியில் வா. மோகன் போய் வண்டியை எடு.” என்று அவர்களையும் அனுப்பியவள், முகேஷிடம் திரும்பினாள்.

“இன்னும் எத்தனை நாளைக்கு சித்துவிடம் காதலைச் சொல்லாமல் மறைக்கப் போகிறாய். அவளை முதல் நாள் கல்லூரியில் பார்த்ததில் இருந்தே காதலிக்கிறேன் என்று சொல்கிறாய். நாம் கல்லூரியில் சேர்ந்தே இரண்டு வருடமாகிவிட்டது. கல்லூரி முடிந்தாலும் நீ காதலைச் சொல்வாய் போல் எனக்குத் தெரியவில்லை. காத்திருந்தவன் நீ பாத்திருக்க வந்தவன் அவளைத் தூக்கிக் கொண்டு போகப் போகிறான். பிறகு நீ தாடியை வளர்த்துக் கொண்டு தேவதாசாக அலை.”

“அப்படிச் சொல்லாதே ராக்கி. எனக்கு மட்டும் சொல்ல விருப்பம் இல்லையா என்ன. பயமாயிருக்குடி. அந்த ரஞ்சனை அடித்த மாதிரி என்னையும் அடித்துவிட்டாள் என்றால் என்ன செய்வது?” என்றவனை முறைத்தாள் ராகினி.

“பயந்த கோழி! உனக்கெல்லாம் எதற்கடா காதல். இன்று ஹோட்டலில் வைத்து அவளிடம் உன் விருப்பத்தைச் சொல்கிறாய். இல்லை என்றால் அவள் என்ன அடிப்பது நானே உன் கன்னம் பழுக்க நாலு போட்டுவிடுவேன்.”

அவனுக்கும் அதே எண்ணம் ஏற்கனவே இருந்ததில், “சொல்கிறேன். சொல்லத்தான் வேண்டும்..” என்றான், அங்கே பெட்டியை லாரியில் ஏற்றிவிட்டு உள்ளே வந்து கொண்டிருந்த ரஞ்சனைப் பார்த்தபடி. அவனைத் தொடர்ந்த ராகினியின் பார்வையும் பொருளோடு முகேஷைப் பார்த்தது.

சற்று நேரம் பொறுத்துப் பார்த்துவிட்டு, “எங்கேடா உள்ளே போன சித்துவை இன்னும் காணோம்?” என்று பொறுமையற்றுக் கேட்டாள் ராகினி.

“அங்கிளிடம் சொல்லிவிட்டு வரவேண்டாமா. கொஞ்சம் பொறு.” என்றான் முகேஷ்.

அவர்கள் யாருக்காகக் காத்திருக்கிறார்களோ அவள் கடையின் பின்பக்கம் சென்று, மேலே ஸ்டோர் ரூமுக்குப் படியேறிக் கொண்டிருந்த ரஞ்சனை பின் தொடர்ந்துகொண்டிருந்தாள்.

அவள் வருவதை உணராது, உள்ளே சென்று ஒரு பெட்டியைத் தூக்கிக் கொண்டிருந்தவன், “நீங்கள் எதற்கு அவன் காலில் செருப்பை மாட்டி விட்டீர்கள்?” என்று, திடீரென்று கேட்ட சித்ராவின் குரலில் சற்றே திகைப்புற்று, பெட்டியைத் தூக்குவதை விட்டுவிட்டுத் திரும்பிப் பார்த்தான்.

அவளைக் கண்டதும் அவனுக்கு ஆத்திரம்தான் வந்தது. அந்த விசாலமான மேல் தளத்தில் பெட்டிகள் நிறைந்து கிடக்க, அங்கு அவனும் அவளும் மட்டுமே. அதை யாராவது பார்த்தால் என்ன நினைப்பார்கள்? ஒரு பெண்ணாக அவள் இதை யோசிக்க வேண்டாமா?

அந்த இடத்தில் அவளோடு நிற்கப் பிடிக்காமல் வெளியே செல்ல நினைத்தவன், அவள் கேட்டது காதிலேயே விழாதது போன்று பெட்டியைத் தூக்க முயல, அவன் கையைப் பிடித்துத் தடுத்தாள் சித்ரா. “நான் கேட்டதற்குப் பதிலைச் சொல்லுங்கள்?” என்றாள் பிடிவாதக் குரலில்.

அவளின் அந்தப் பிடிவாதக் குரலும், அவன் கையை அவள் பிடித்ததும் உண்டாக்கிய சினத்தில், ஒரே உதறலில் உதறி அவன் தன் கையை விடுவித்த போது, ஒன்றுக்கு மேல் ஒன்றாக அடுக்கி வைக்கப் பட்டிருந்த பெட்டிகளோடு மோதிக்கொண்டு நின்றாள் சித்ரா. அந்தளவுக்கு ஆக்ரோஷம் நிறைந்திருந்தது அவன் உதறலில்.

விழிகளில் நெருப்புப் பறக்க, “வெளியே போ!” என்று உறுமினான் ரஞ்சன்.

அதில் சற்றும் அசராமல், “கேட்ட கேள்விக்குப் பதிலைச் சொல்லுங்கள். நான் போகிறேன்.” என்றவளைப் பொசுக்கி விடுவது போன்று முறைத்தான் ரஞ்சன்.

அவளின் பிடிவாதத்துக்கு வளைந்துகொடுக்க சற்றும் மனமில்லாத போதும், யாராவது அவர்கள் இருவரையும் பார்த்தால்? ஏற்கனவே அவள் கையைப் பிடித்து இழுத்ததாகப் பெயர். இதில் இது வேறா?

அவள் கேட்ட கேள்வியும் அவனைத் தாக்க, அதில் உண்டான தாக்கத்தில், “அது என் வேலைதானே. அதைத்தானே செய்தேன்.” என்றான் நக்கலாக.

அதைச் சொல்கையில் அவன் குரலில் என்ன இருந்தது?

அதைப் புரிந்துகொள்ள முடியாமல் நின்றவளிடம், “உன் கேள்விக்குப் பதில் சொல்லிவிட்டேன். இப்போது போகிறாயா வெளியே?” என்றான் ரஞ்சன்.

“அது உங்கள் வேலை என்பதற்காக யாரின் காலையும் பிடிப்பீர்களா? அவன் வேண்டுமென்றேதான் உங்களைச் செய்யச் சொல்கிறான் என்று தெரியாதா?” என்று அவளும் குறையாத கோபத்தோடு கேட்டாள்.

“ஏன் தெரியாமல்? நன்றாகத் தெரியும். அதுவும் அவன் உன் நண்பன்தானே. உன்னைப் போலத்தானே இருப்பான்.” என்றான் ஏளனமாக.

அவளுக்கு கோபம்தான் வந்தது.

முதலும் கோபம் இருந்ததுதான். அது, முகேஷின் காலை இவன் பிடித்தானே என்பதாலும், அவன் அதை வேண்டுமன்றே ரஞ்சனைச் செய்ய வைத்தானே என்பதாலும் உண்டானது. இப்போது வந்த கோபமோ முகேஷ் வேண்டுமென்று செய்ததையும் அவள் சிந்தியாமல் செய்ததையும் ஒன்றாக ரஞ்சன் சொல்கிறானே என்பதால் உண்டானது.

அந்தக் கோபத்தில் தன்னை மறந்து, என்ன சொல்கிறோம் என்பதையும் உணராமல், “நான் உங்களை அடிப்பேன். என்னவும் செய்வேன். அதற்காக யார் என்ன சொன்னாலும் செய்வீர்களா? கொஞ்சமும் ரோசம் என்பதே இல்லையா உங்களுக்கு?” என்று அவனிடமே கேட்டாள், அவனால் திமிர் பிடித்தவள் என்று நாமம் சூட்டப் பட்டவள்.

அதைக் கேட்டவனின் நிதானம் முற்றிலும் பறந்தது. “ஏய்!” என்று உறுமியவனின் கை மிக வேகமாக அவளின் கழுத்தைப் பற்றிப் பெட்டியோடு பெட்டியாக அழுத்தியது. “என்னைப்பற்றி என்னடி நினைத்துக் கொண்டிருக்கிறாய் உன் மனதில்? உன் வீட்டு வேலைக்காரன் என்றா? அல்லது நீ சொல்வது எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருக்க என்னை என்ன பெட்டை என்று நினைத்தாயா? எப்படி எப்படி? என்னை நீ அடிப்பாயா? தொலைத்துவிடுவேன் ராஸ்கல்! பெண்ணாக இருக்கிறாயே என்று பொறுமையாகப் போனால் உனக்கு என்னைப் பார்க்கக் கையாலாகதவன் போல் தெரிகிறதோ?” என்று ஆத்திரத்தில் இரைந்தான் ரஞ்சன்.

அதற்குக் கொஞ்சமும் பயப்படாது, என் அப்பாவின் கடையில் இவனால் என்னை என்ன செய்துவிட முடியும் என்கிற தைரியத்தோடு, “கையை எடு. கழுத்து வலிக்கிறது.” என்றாள் அவன் விழிகளைப் பார்த்து.

தனியாக மாட்டி, அவள் கழுத்தை அவன் நெரித்துக் கொண்டிருக்கும் அந்த நிலையிலும் அவன் கண்களைப் பார்த்துப் பயப்படாமல் நிதானமாகச் சொன்னவளின் அந்தத் தைரியம் அவனை இன்னுமே உசுப்பியது.

“கையை எடுக்காவிட்டால் என்னடி செய்வாய்?”

“கத்தி எல்லோரையும் கூப்பிட்டு அன்று போல இன்றும் உன்னை அவமானப் படுத்துவேன்..” என்றாள் அசராமல்.

அவனை அவமானப் படுத்துவேன் என்ற அவளின் வார்த்தைகளில் வெகுண்டு போனான் ரஞ்சன்.

கழுத்தை விட்டுவிட்டு பிடரியில் கையைக் கொடுத்து அவள் முகத்தைத் தன்னருகே இழுத்து,  “எங்கே தைரியம் இருந்தால் கத்து பார்ப்போம்.” என்றான் அவனும்.

அவன் இழுத்ததில் தடுமாறியவள், அன்றுபோல் இன்றும் அவனுடன் மோதிவிடாமல் இருக்க, அவன் நெஞ்சில் தன் கைகளை வைத்து அவனுக்கும் தனக்குமான இடைவெளியை உண்டாக்கிக் கொண்டே, “கத்தினால் என்ன செய்வாய்?” என்று அஞ்சாது கேட்டாள்.

“என்ன.. செய்வேனா?” என்று கேட்டவனின் விழிகள் நிதானமாக அவள் மேனியை ஒருமுறை வலம் வந்தது.

அந்தப் பார்வையில் சித்ராவின் நெஞ்சுக் கூட்டுக்குள் முதன் முதலாக ஒருவித பய அதிர்வொன்று தாக்கியது. கைகால்களில் நடுக்கம் பரவியது. இப்படித் தனியாக அவனிடம் வந்து மாட்டியது தவறோ என்று முதன் முறையாக யோசித்தாள். ஆனாலும், அப்படி அவனால் அவளை என்ன செய்துவிட முடியும்? முருகனோ கண்ணனோ எப்போது வேண்டுமானாலும் வரலாம். கீழே அப்பா இருக்கிறார் என்று தைரியத்தைத் திரட்டினாள். அவன் பார்வையைச் சளைக்காது எதிர்கொண்டாள்.

அவனோ, அவள் கழுத்தில் அவளைப் போலவே அலட்சியமாகக் கிடந்த ஷாலை தன்னுடைய மற்றக் கையில் சுத்திக் கொண்டே, “கத்த நினைக்கும் வாயைக் கதைக்க முடியாமல் செய்துவிடுவேன்.” என்றான் வெறியுடன்.

அதைச் சொல்கையில் அவளை நெருங்கிய அவன் முகத்தைப் பார்த்தவளுக்குப் பேச்சு மறந்து.. மறந்தே போனது. கதைக்க முடியாமல் செய்வேன் என்றால் என்ன செய்வான் என்கிற திகிலுடன் அவனைப் பார்த்தாள்.

இடுங்கிய அவன் விழிகளில் தெரிந்த கடுமை, நீண்ட நாசியில் தெரிந்த கோபம், முகத்தில் வேகமாக வந்து மோதிய அவன் மூச்சுக் காற்றில் கூடக் கலந்திருந்த ஆத்திரம், அழுத்தமாக வளைந்த உதடுகளில் இருக்கும் பிடிவாதம், அதற்கு மேலே அடர்த்தியாக அவன் முகத்தையே கம்பீரமாகக் காட்டும் அந்த மீசையில் தெரிந்த வீரம் என்று அவள் விழிகள், ஆத்திரத்தில் ஜொலித்த அவன் முகத்தை ஒருவித அதிர்ச்சியோடு சுற்றிச் சுழன்றது.

மெல்ல மெல்ல பயம்.. பயமே அவள் விழிகளில் தோன்றியது.

அவள் முகத்தில் தோன்றிய கலக்கம், தடுமாற்றம், பயம் என்று அத்தனை உணர்வுகளையும் துல்லியமாகப் படித்தவனின் உதடுகளில் ஆத்திரத்துடன் கூடிய திருப்தியான சின்னப் புன்னகை ஒன்று ஏளனத்துடன் உதித்தது.

“இப்போது புரிந்ததா? பெண் என்றைக்கும் பெண்தான். அந்நிய ஆடவனிடம் அளவுக்கு அதிகமாகத் திமிரைக் காட்டக் கூடாது. அதுவும் என்னிடம் வாலாட்டினாய் என்று வை. ஒட்ட நறுக்கி விடுவேன்!” என்றவன், அப்போதுதான் அவளை விட்டான்.

சட்டென்று இரண்டடி விலகி நின்றாள் சித்ரா.

ஆனால் அதுவரை அவள் கழுத்தில் கிடந்த ஷாலோ இப்போது அவன் கையில்  சுற்றுப் பட்டுக் கிடந்தது.

அந்த ஷாலையும், அது இன்றி நின்றவளையும் ஒரு பார்வை பார்த்தவனின் உதடுகள் ஏளனமாக வளைந்தது. “இனியாவது ஒழுங்காக இரு.” என்றவன், ஷாலைக் கழற்றி அவள் முகத்தில் வீசினான்.

சட்டென்று அதை எடுத்துத் தன்னைச் சுற்றிப் போட்டுக் கொண்டவளுக்கு, எந்தச் சேதாரமும் இன்றி அவனிடம் இருந்து தப்பிவிட்டோம் என்று அப்போதுதான் நிம்மதியாக இருந்தது.

தன்னை மெல்ல நிலைப்படுத்திக் கொண்டவளுக்கு, மிரட்டியபோதும் அத்துமீறி நடக்காமல் இருந்தவனின் அந்தக் கண்ணியம் மெல்ல உறைத்தது. அதை எண்ணி உள்ளூர வியந்து கொண்டாள்.

அதை அவனிடம் காட்டிக் கொள்ளாது கதவு வரை அமைதியாக நடந்தவள் நின்று திரும்பி, “டேய் சிடுமூஞ்சி, இப்போது போகிறேன். ஆனால் இனி உன்னை விடமாட்டேன்டா. அதென்ன உனக்குப் பெண் என்றால் அவ்வளவு இளக்காரமா? இனிப் பார்க்கலாம் நீயா நானா என்று?” என்றாள் சவாலாக.

அதைக் கேட்டவனின் முகத்தில் உண்டான கடுப்பை ரசித்தபடி, “பாய் சிடுமூஞ்சி” என்றுவிட்டு மின்னெலெனப் பாய்ந்து படிகளில் இறங்கி ஓடினாள் சித்ரயாழி.

error: Alert: Content selection is disabled!!
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock