அடுத்த வாரமும் வேகமாக நகர்ந்து கொண்டிருந்தது. இன்னும் இரண்டு வாரங்களில் கடை ரஞ்சனின் கைக்கு வந்துவிடும். நண்பர்கள் கொடுத்த பணத்துக்கு செருப்புகளுக்கும் ஆர்டர் கொடுத்தாகிவிட்டது. சனிக்கிழமை அதுவும் வந்திறங்கி விடும்.
நாதன் ஒருபக்கம் தன் பொருட்களை ஒதுக்க, ரஞ்சன் தன் வேலைகளை மறுபக்கம் ஆரம்பித்து விட்டிருந்தான். காரணம் அடுத்த மாதத் தொடக்கத்திலேயே கடையைத் திறந்துவிட நினைத்திருந்தான். சும்மா நாட்களைக் கடத்துவதில் அர்த்தமில்லையே!
சனிக்கிழமை வந்திறங்கிய செருப்புகளைப் பார்த்தால், ‘இது எந்த மூலைக்கு’ என்றுதான் தோன்றிற்று. அவ்வளவு சொற்பமாக இருந்தன அவை. கடை முழுவதும் நிரப்ப வேண்டாம் என்றாலும், பார்ப்பதற்கு நிறைவாகத் தோன்றும் வண்ணமாகத் தன்னும் இருக்க வேண்டாமா?
ஒரு அறை போன்ற அமைப்பில் இருந்த கடையின் நான்கு பக்கங்களில் ஒரு பக்கம் முகப்பாக இருந்தால், மிகுதி மூன்று பக்கச் சுவர்களுக்கும் நண்பர்களே ராக்கைகள் அடித்திருந்தார்கள்.
அதில் ஒருபக்கச் சுவருக்கு மட்டுமே செருப்புக்கள் போதுமாக இருந்தது. மிகுதி இரண்டு பக்கத்துக்கும் என்ன செய்வது? வெறுமனே விடமுடியாதே!
“என்னடா செய்வது?” என்று கேட்டான் ஜீவன்.
“உன் முதலாளி சுகமாகி விட்டாரா? அவரிடம் கேட்டுப் பாரேன்.” என்றான் சுகந்தன்.
அவன் சந்தானத்தைப் பற்றிச் சொன்னபோதுதான், இன்னும் தெளியாத அவர் முகமும், அந்த வாரமும் வராத சித்ராவின் நினைவும் அவனுக்கு வந்தது.
அங்கிளுக்கு உடம்பு முடியவில்லை என்பது காரணம் என்றால், அவளுக்கு என்னவாகிற்று? முகேஷால் வேறேதும் பிரச்சினையோ? அன்று நடந்ததைப் பெரிதாக எடுக்கும் சுபாவம் அவளுக்கு இருப்பதாகவும் அவனுக்குத் தோன்றவில்லை.
சித்ராவைச் சுற்றிக் கொண்டிருந்த அவன் சிந்தனையை, “என்னடா அவரிடம் கேட்கிறாயா?” என்று மீண்டும் கேட்ட சுகந்தனின் பேச்சுக் கலைத்தது.
“ம்.. கேட்கத்தான் வேண்டும். திங்கள் கேட்கிறேன்.” என்றவனுக்கு இரண்டு லட்சங்களை அவரிடம் எப்படிக் கேட்பது? கேட்டாலும் தருவாரா? இல்லாவிட்டால் என்ன செய்வது? என்று பல யோசனைகளில் மண்டை காய்ந்தது.
அதிலிருந்து தன்னை வெளியே கொண்டுவர, “உங்கள் முதலாளியிடம் வேலையை விடப் போவதாகச் சொல்லிவிட்டீர்களாடா?” என்று கேட்டான்.
“ஓ.. நான் அன்றே சொல்லிவிட்டேனே..” என்றான் ஜீவன்.
“ஆமாம்டா. பிறகு சொல்லலாம் என்று நான் சொன்னதையும் கேட்காமல், சந்தோசத்தில் அன்றே சொல்லிவிட்டான் இவன். அவர் முகம் போன போக்கைப் பார்க்கவேண்டுமே.” என்றான் சுகந்தன் சிரிப்புடன்.
“பின்னே? நாங்கள் தனக்கு வாய்த்த அடிமைகள் என்று நினைத்திருப்பார். இனி அது இல்லை என்றதும் பெரும் சோகமாகப் போயிற்று அந்தக் கஞ்சனுக்கு.” என்ற ஜீவனைக் காட்டி,
“இவன் அவரிடம் என்ன சொன்னான் என்று கேளு..” என்றான் சுகந்தன்.
“என்னடா சொன்னாய்?”
“இல்லை மச்சான். அடுத்த மாதத்தில் இருந்து வேலையை விடுகிறோம் என்று நான் சொல்கிறேன். அதற்கு அந்தக் கஞ்சன், அவனை விட்டால் வேறு யாரும் எங்களுக்கு வேலை தரமாட்டார்களாம் என்கிறான். தெருத்தெருவாகத் தட்டு ஏந்தப் போகிறீர்களா என்று நக்கலாகக் கேட்கிறான். எனக்கு வந்ததே கோபம்.” என்றவனின் குரலில் அப்போதும் கோபம் மிச்சம் இருந்தது.
“சரிடா. அதற்கு நீ என்ன சொன்னாய்?” என்று மீண்டும் கேட்டான் ரஞ்சன்.
“தட்டு ஏந்தமாட்டோம். திருகோணமலைக் கடலில் போகும் கப்பல்கள் பழுதாகி நடுவில் நின்றால் இறங்கித் தள்ளப் போகிறோம் என்றேனா, அவன் முகம் போன போக்கைப் பார்க்கவேண்டுமே..” என்றவனுக்கு, இப்போதும் அதை நினைத்துச் சிரிப்புத்தான் வந்தது. அவனுக்கு மட்டுமல்ல மற்ற இருவருக்குமே!
நண்பர்கள் மூவருமே மனம் விட்டுச் சிரித்தனர். அந்த நேரத்தில் அது அவர்களுக்குத் தேவையாகவே இருந்தது.
அன்று திங்கட்கிழமை. காலையிலேயே வேலை சூடு பிடித்திருந்தது ‘ரிபோக்’கில். ஒரு வயதான பெண்மணியுடன் வந்திருந்த அவரது பேத்திக்கு ஷூ ஒன்றினைப் போட்டு விட்டுவிட்டு , “இது பிடித்திருக்கிறதா என்று பாருங்கள் ஆன்ட்டி..” என்றபடி நிமிர்ந்தவனின் பார்வையில் விழுந்தாள் சித்ரா.
சேலையில் அழகிய மாலையென வந்து கொண்டிருந்தவளைக் கண்டவனின் விழிகள் அவளிடமே நிலைகுத்தி நின்றன!
அன்று சந்தானத்திடம் பணம் கேட்பதற்காக, அவரின் வருகைக்காகக் காத்திருந்தவன் ஒரு கண்ணைக் கடையின் வாசலிலேயே வைத்திருந்தான். ஆனால் சித்ராவைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவளின் வரவு எப்போதும் வார இறுதிகளில் மட்டுமே இருக்கும்.
கிட்டத் தட்ட இரண்டு வாரங்களாகக் காணாததும், முதன் முதலாய் அவளைச் சேலையில் கண்டதும் அவனையும் மீறி, அவனது கட்டுப்பாட்டையும் மறந்து அவன் விழிகள் வியப்போடும் ரசனையோடும் அவளைத் தழுவியது.
தங்க நிறத்தில் மெல்லிய ஜரிகை பிடித்த ரோஜா வண்ணச் சேலையில், விரித்து விட்டிருந்த கூந்தலில் காதோரமாய் சிவப்பு நிற ரோஜா சிரிக்க, நெற்றியில் திருநீறு, சந்தனம் தாங்கி, அம்சமாய், அழகாய், ஒரு நிலவு மங்கையென கடைக்குள் நுழைந்து கொண்டிருந்தாள் அவள்.
வீதியில் இருந்து மூன்று படிகள் உயரத்தில் கட்டப் பட்டிருந்தது அந்தக் கடை. கீழ்ப் படியில் இருந்து கடைக்குள் ஒரு காலைத் தூக்கி வைக்கையில் சேலை தடுக்கி விடாமல் இருக்க, சற்றே சேலையைத் தூக்கிப் பிடித்திருந்தாள். அப்போது வெளியே எட்டிப் பார்த்த வெண்பஞ்சுப் பாதத்தையும், அதன் கழுத்தாரமாய்க் கிடந்த காற்சலங்கையையும் பார்த்தவனின் இளம் நெஞ்சம் வேகமாய்த் துடித்தது.
இப்போது கடைக்குள் வந்துவிட்டிருந்தவளின் சேலை மடிப்பில் விழுந்த அவன் விழிகள் மெல்ல உயர்ந்து தேய்பிறையாய் மின்னிக் கொண்டிருந்த எலுமிச்சை நிற இடையைக் கண்டதும் கூசியது என்றால், இதயமோ இருந்த இடத்தை விட்டு எம்பிக் குதிக்கப் பார்த்தது.
கஷ்டப்பட்டு அந்த இடத்தில் இருந்து விழிகளை உயர்த்தியவனின் பார்வை படக்கூடாத இடங்களில் பட்டதில், அதுவரை அனுபவிக்காத அவஸ்தைகளை அனுபவித்தது அவனது ஆண் நெஞ்சம்!
கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவ விடாது, அவள் பொன் மேனியுடன் மிக நன்றாக ஒட்டிக்கொண்ட சேலை காட்டிய ஆபத்தான வளைவு நெளிவுகளில் விழுந்து எழுந்து நிலையின்றித் தடுமாறியது அவன் விழிகள்!
சங்குக் கழுத்துத் தாங்கி நின்ற மதி போன்ற வதனத்தைப் பார்த்தவன் சொக்கித்தான் போனான்.
அன்றுதான் அவன் கண்களுக்கு அவள் பெண்ணாகத் தெரிந்தாள்! அழகியாகத் தெரிந்தாள்!
என்ன அழகு என்று வியக்காமல் இருக்க முடியவில்லை அவனால். நீள விழிகளின் பளிச்சிடலும், விரியக் காத்திருக்கும் மல்லிகை மொட்டைப் போன்ற மூக்கும், சிவந்த சின்ன இதழ்கள் மெல்லப் பிரிய எட்டிப் பார்த்த முத்துப் பற்களுடன் அவள் இதழ்கள் சிந்திய மோகனப் புன்னகையில் அவன் மனது ஆட்டமல்ல பேராட்டம் கண்டது.
தன்னை மறந்து, நிற்கும் இடம் மறந்து, உலகை மறந்து விழி வழி நுழைந்த அழகியவளின் யவ்வனத்தில் ஸ்தம்பித்துப்போனான் இதயரஞ்சன்.
கடைக்குள் நுழையும் போதே அவனைக் கண்டுகொண்ட சித்ராவின் விழிகள் அவனது பார்வையில் இருந்த வித்தியாசத்தை உணர்ந்து தடுமாறின.
அவனது கூரிய விழிகளில் இருந்த ரசனை, ஆச்சர்யம், வியப்பு, அதையும் தாண்டிய இன்னும் ஏதோ ஒன்று அவளை என்னவோ செய்தது. அதுவரை நாளும் அவனது பார்வைகளை அவளது விழிகள் தயங்காது சந்திப்பதும் பதிலடி கொடுப்பதும்தான் வழமை!
அவன் கோபப் பார்வையை எதிர் கொண்டிருக்கிறாள், வெறுக்கும் விழிகளை அலட்சியப் படுத்தி இருக்கிறாள், ஏளனப் பார்வையைக் கேலி செய்திருக்கிறாள், ஏன், அன்று தனியறையில் அவளை மிரட்டியவனின் விழிகளில் பறந்த நெருப்பை, ஆத்திரத்தைக் கூடத் தாங்கி அவன் விழிகளையே தயங்காது நோக்கியவளால் இன்று ஏனோ முடியவில்லை.
கூச்சமா, தடுமாற்றமா, சங்கடமா ஏதோ ஒன்று அவளைப் படாத பாடு படுத்தியது.
தலை அவள் சம்மதம் இன்றியே நிலம் பார்க்க, கன்னக் கதுப்புகள் காரணம் இன்றியே சூடாகின. கைவிரல்களில் மெல்லிய பதட்டம். நெஞ்சுக் கூட்டுக்குள் இதயம் பலமாகத் துடித்தது.
அவனை நிமிர்ந்து பார்க்கச் சொன்ன அதே மனது அவனது பார்வையை தாங்க முடியாமல் தடுமாறியது.
அவன் விழிகளில் அப்படி என்னதான் இருந்தது? காந்த சக்தியா? அல்லது மாயவலையா? ஏதோ ஒன்று!
ஆனால், அது அவளை அவன்பால் மொத்தமாகக் கட்டியிழுக்கப் பார்த்தது.
புதுவிதமான உணர்வுகளின் வலைக்குள் சிக்கிக் கொண்டு, தடுமாறி நின்றவளைக் கண்ட கண்ணன், “என்ன சித்ரா இன்று கடைக்கு வந்திருக்கிறாய். அதுவும் சேலையில். என்ன விசேசம்?” என்று கேட்டார்.
ரஞ்சனின் பார்வையில் இருந்து தப்பிக்க எண்ணி, சட்டென்று அவர் புறமாகத் திரும்பினாள் சித்ரா.
இதழ்கள் புன்னகையில் மலர, “இன்று என் பிறந்தநாள் அண்ணா. கோவிலுக்குப் போய்விட்டு அப்படியே இங்கே வந்தேன். அப்பாவுக்குக் கொஞ்சம் முடியவில்லை. ஏதோ பில் இன்று வங்கியில் போட வேண்டுமாம். அதை உங்களிடம் கொடுத்துவிடச் சொன்னார்.” என்ற சித்ராவுக்கு, அப்போதும் ரஞ்சனின் பார்வை தன்னைத் துளைப்பதை உணர முடிந்தது.
“இன்று உன் பிறந்தநாளா? என்றைக்கும் எந்தக் குறையும் இன்றி வாழ என்னுடைய அன்பான வாழ்த்துக்கள் சித்ரா.” என்று மனமார வாழ்த்தினார் அவர்.
“நன்றி அண்ணா..” என்றவளின் விழிகள், எதிர்பார்ப்போடு ரஞ்சனின் புறமாகத் திரும்பின.
அவனோ சட்டென்று அவளுக்கு முதுகுகாட்டித் திரும்பிக் கொண்டான். திரும்பியவனின் ஒரு கை உயர்ந்து, தடுமாறிக் கொண்டிருந்த நெஞ்சைத் தடவிக் கொடுத்தது.
இவ்வளவு நேரமும் அவளைப் பார்த்தது பொய்யோ என்று நினைக்கும் வகையில் இருந்த அவனது முகத் திருப்பலைப் பார்த்து குழம்பிப் போனாள் சித்ரா.
அதைவிட, பிறந்தநாள் என்று அவள் சொல்லியும் கூட அவன் வாழ்த்துச் சொல்லாததில் ஏமாற்றம் படர்ந்தது. அவனுக்குக் கேட்கவேண்டும் என்பதற்காகவே கண்ணனிடம் சற்று உரக்கவே சொல்லியிருந்தாள்.
அவனும் அவளும் எப்போதும் மோதிக்கொள்வார்கள் தான். என்றாலும் ஒரு பிறந்தநாளில் வாழ்த்தாமல் இருக்கும் அளவுக்கு அவர்களுக்குள் ஒன்றும் இல்லையே!
அதுவரை அவளை ரசித்தவனுக்குத் திடீரென என்னவாகிற்று? அதுவும் சாதாரண ரசிப்பு அல்ல! உலகை மறந்த ரசிப்பு. எப்போதும் கவனமாகவும் இறுக்கமாகவும் இருப்பவனிடமிருந்து அப்படியான ஒரு பாவனை மிக அதிகப் படியே!
அப்படி ரசித்தவன் இப்போது எதற்காக அவளுக்கு ஒரு வாழ்த்துச் சொல்லாமல் நிற்கிறான்.
குழம்பி நின்றவளைத் தாண்டிச் சென்றவனையே கேள்வியுடன் பார்த்த சித்ராவின் மனதில் ஒருவித ஏமாற்றம் சூழ, அதுவரை இருந்த சந்தோசமான மனநிலை மாற, அப்பாவின் அறைக்குச் சென்றாள்.
அங்கு அவர் சொல்லியிருந்த வேலைகளைக் கைகள் பார்த்தபோதும், மனதோ அவனது புறக்கணிப்புக்கான காரணத்தைத் தேடி அலைந்தது.
கடையில் வேலை செய்யும் அனைவரும் ஒவ்வொருவராய் வந்து பிறந்தநாள் வாழ்த்தினைச் சொல்லச் சொல்ல அவன் ஏன் சொல்லவில்லை என்கிற கேள்வி எழுந்துகொண்டே இருந்தது.
எப்போதும் போல் அவன் பாராமுகமாக இருந்திருக்க அவளுக்கு இந்தக் குழப்பம் வந்திராதே!
எதிர்பாராதபோது காணததைக் கண்டவன் போன்று ரசித்துவிட்டு, எதிர்பார்ப்போடு அவள் பார்த்தபோது எதற்காக முகத்தைத் திருப்பிக் கொண்டான்?
சிடுமூஞ்சி சிடுமூஞ்சி! எனக்கென்று வந்து வாய்த்திருக்கிறான்! மனதில் என்ன நினைக்கிறான், என்ன செய்கிறான் என்றே கணிக்க முடியவில்லை என்று பொருமியவள், அதற்கு மேலும் அங்கே தனிமையில் இருந்து புலம்ப முடியாமல் எழுந்து கண்ணனை நாடிச் சென்றாள்.
“கண்ணன் அண்ணா, இந்தாருங்கள் பில். இதை அப்பா இன்றே வங்கியில் போட்டுவிடச் சொன்னார்.” என்றபடி ‘பில்’லை நீட்டினாள்.
“உன் அப்பாவும் வரமாட்டார் என்றால் நான் எப்படிக் கடையை விட்டு வெளியே போவது?” என்று அவளிடமே கேட்டவர், “சரி, தா. நான் ரஞ்சனிடம் கொடுத்துப் போடச் சொல்கிறேன்..” என்றபடி, வாங்கக் கையை நீட்டினார்.
கொடுக்காது, “ஏன் கண்ணன் அண்ணா, அவன் எதற்கு எப்போது பார்த்தாலும் இஞ்சியைத் தின்ற மங்கி மாதிரியே இருக்கிறான்.. சரி சரி முறைக்காதீர்கள். இருக்கிறார்.” என்று, அவரின் முறைப்பில் அவனுக்கு மரியாதையைக் கொடுத்துக் கேட்டாள் சித்ரா.
அவராவது அவளின் குழப்பத்தைத் தெளிவிக்க மாட்டாரா என்கிற ஆவல் அவளுக்கு. பில் கொடுக்கும் சாட்டில் அவள் கண்ணனைத் தேடி வந்ததும் அவனைப் பற்றி அறிந்துகொள்ளவே!
அவளது எண்ணம் அறியாத அவரும் ரஞ்சனைப் பற்றிச் சொன்னார். “அவனும் உன்னைப் போல இளம்பிள்ளை தானே சித்ரா. இந்த வயதில் அதுவும் செருப்புக் கடைக்கு வேலைக்கு வந்தால் கவலையாக இராதா? அதுவும் வைத்தியனாக ஆசைப்பட்டு, இரண்டு வருடங்கள் படித்துவிட்டு அதை விடுவது என்றால் சும்மாவா?” என்று அவர் கேட்டபோது, வியந்துதான் போனாள் சித்ரா.
படிக்காமல் வீட்டில் இருந்தால் அம்மா கல்யாணப் பேச்சை எடுத்துவிடுவாறே என்று பயந்து கல்லூரிக்குச் செல்பவள் தான் அவள். அவளைப் பொறுத்த மட்டில் அந்தக் கல்லூரியும் படிப்பும் அவளுக்கான ஒரு பொழுது போக்கு! அவ்வளவுதான்!
அவனானால் மருத்துவப் படிப்பைப் படித்துவிட்டு இடையில் விட்டுவிட்டானே என்று நினைத்தவளுக்கு அவனை எண்ணி வேதனையாக இருந்தது.
“ஏன் அண்ணா படிப்பை விட்டார்?”
“விடாமல் என்ன செய்வது? அவன் வேலைக்கு வந்தபடியால் தான் அவர்கள் குடும்பமே வாழ்கிறது.” என்றவர் தொடர்ந்தார்.
“அவனும் உன்னைப் போல வசதியான குடும்பத்துப் பொடியன் தான் சித்ரா. நன்றாக வாழ்ந்தவன். அப்பா ஒரு டாக்டர். அவரும் இறந்துவிட சொந்த பந்தங்களும் சொத்துக்களைச் சுருட்டி விட்டார்கள். குடும்பத்துக்காக படிப்பையும் விட்டுவிட்டு கௌரவம் பாராமல் இங்கே வந்து வேலை செய்வது என்றால் சும்மாவா? அதுதான் ரோஷமும் கோபமும் கொஞ்சம் அதிகமாக வருகிறது. ஆனாலும் மிகவும் நல்லவன். எனக்கே அவனை நினைத்தால் ஆச்சர்யம் தான். அதனால்தான் எனக்கு அவனை நிரம்பவும் பிடிக்கும்..” என்றவரின் பேச்சைக் கேட்டவளின் மனதுக்கும் அவனைப் பிடித்துத்தான் போனது.
பிடிப்பு மட்டும் அல்ல வியப்பு, ஆச்சர்யம், பெருமை கூட உண்டாகிற்று!கிற்று!