“இப்பிடி ஒரு முடிவா நிக்காத விக்ரம். தப்பித்தவறி கல்யாணம் நடக்காட்டி நீ வேற தேடுற ஆளும் இல்ல.” நண்பனை அறிந்தவன் பதறிப்போய்ச் சொன்னான்.
“நடக்காட்டித்தானே?” அசோக்குக்கு இருந்த பதற்றம் அவனுக்குச் சற்றுமில்லை.
அவனைத் திரும்பிப் பார்த்தான் அசோக். “அந்தளவுக்கு அந்தப் பிள்ளையப் பிடிச்சிருக்கா?”
முதலில் ஒன்றும் சொல்லவில்லை விக்ரம். கொஞ்சத் தூரம் நடந்தான். பின், “தெரியேல்ல மச்சான். ஆனா, இனி அவளை என்னால விட ஏலாது.” என்றான்.
“என்ன பதிலடா இது?” குழம்பிப்போய்க் கேட்டான் அசோக்.
அதே குழப்பம்தானே அவனுக்குள்ளும். அவளிடம் நேரடியாகவே கல்யாணம் பற்றிப் பேசிவிட்டு, குழந்தையின் மனதில் தான்தான் அப்பா என்று பதிந்துபோன பிறகு, தனக்கும் அவள்தான் வேண்டும் என்று மனம் சொன்னபிறகு அவனால் அவளைக் கட்டாமல் இருக்க முடியாது. ஆனால் பிடித்தம்? தெரியவில்லை!
கதைத்துக்கொண்டே யாமினியின் வீட்டருகே வந்துவிட்டிருந்தனர் இருவரும்.
“ப்பா…” என்றபடி குடு குடுவென்று ஓடிவந்து அவனைக் கட்டிக்கொண்டாள் சந்தனா.
“என்ன…து? அப்பா…வா?” அதிர்ச்சியாகிவிட்டான் அசோக்.
அவனையெல்லாம் கவனிக்கும் நிலையில் அவர்கள் இருவருமே இல்லை. மாலை நேரக் குளியல் போட்டு, முகம் முழுவதும் பௌடரால் அபிசேகம் செய்திருக்க, பெரிய கறுப்புப் பொட்டுடன் காலைக் கட்டிய குழந்தையை, “ஹேய் செல்லம்மா.” என்றபடி அவன் தூக்கிக்கொள்ள, சின்னவள் அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு செல்லம் கொஞ்சினாள்.
கண்ணிமைக்கவும் மறந்து வாயைப் பிளந்தபடி பார்த்திருந்தான் அசோக்.
மகளின் பின்னால் ஓடிவந்த யாமினி மூவரையும் பார்த்ததும் பதறிப்போனாள். அதுவும், குழந்தை அப்பா என்றபடி விக்ரமின் கழுத்தைக் கட்டிக்கொண்டிருப்பதை அசோக் பார்த்துக்கொண்டிருக்கிறான் என்று கண்டதும் முகம் கருத்துப் போனது. “சந்தனா இறங்கு!” என்றாள் அதட்டலாக.
“ம்ஹூம்! ப்பா… ப்பா…” என்று அவன் கழுத்தை இன்னும் இறுக்கமாகக் கட்டிக்கொண்டாள் குழந்தை.
பதறிப்போய் அவசரமாக அசோக்கைப் பார்த்தாள். அவனும் அவளைத்தான் பார்த்துக்கொண்டிருந்தான். மிகுந்த அவமானமாகிப் போயிற்று. அவனின் அம்மாவிடம் கல்யாணம் வேண்டாம் என்று அவ்வளவு திடமாக மறுத்துவிட்டு, இந்தப் பக்கம் குழந்தைக்கு விக்ரமை அப்பாவாகக் காட்டியிருக்கிறாளே என்று நினைப்பானே. அழுகையே வந்துவிடும் போலாயிற்று அவளுக்கு.
பதட்டத்தில் என்ன செய்கிறோம் என்பதையும் மறந்து விக்ரமை நெருங்கி, “சந்தனா வா!” என்றபடி குழந்தையை அவனிடமிருந்து பிரிக்க முயன்றாள்.
சின்னவள் சிணுங்கத் தொடங்கவும், “விடு யாமினி! எதுக்குப் பிள்ளையப் பிடுங்குறாய்?” என்று அவளின் கையைப் பற்றித் தடுத்துச் சொன்னான் விக்ரம்.
பதறி விலகினாள் யாமினி. கை கால்கள் எல்லாம் நடுங்கத் தொடங்கின அவளுக்கு. “அவளை இறக்கி விடுங்கோ!” என்றாள் அதட்டலாக.
“இருக்கட்டும் விடு! ஓடிவந்து ஆசையாக் காலைக் கட்டுற பிள்ளைய ஏன் இறக்கோணும்?” சந்தனாவின் தலைக் கேசத்தை ஒதுக்கிவிட்டபடி சொன்னான் விக்ரம்.
‘ஐயோ! விளங்கிக் கொள்கிறான் இல்லையே…’ என்று தவித்தாள் யாமினி.
அசோக் இன்னும் தங்களையே வைத்தகண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருப்பது வேறு இன்னும் பதற வைத்தது.
“இறக்கி விடுங்கோ முதல்!” என்றாள் திரும்பவும். குரல் இன்னும் அழுத்தமாக வந்தது.
வீதியால் போனவர்கள் சுவாரசியமாக இவர்களைத் திரும்பிப் பார்க்கவும், “ப்ச்! முதல் வீட்டுக்க போ நீ!” என்று அவள் தோளைப் பற்றித் திருப்பிவிட்டு, குழந்தையோடு தானும் நடந்தான் விக்ரம்.
அசோக் என்பவன் அவன் நினைவிலேயே இல்லை.
விழுந்தடித்துக்கொண்டு உள்ளே சென்றவள், “இனியாவது அவளை இறக்கி விடுங்கோவன்!” என்றாள் ஆற்றாமையில் விளைந்த கண்ணீரும் பதட்டமுமாக.
“ஏன்?” புருவங்கள் சுருங்கக் கேட்டான் விக்ரம். அவளின் அளவுக்கதிகமான இந்தப் பதட்டம் ஏன் என்று அவனுக்கு விளங்கவில்லை.
“உங்கட பிரெண்ட் என்ன நினைப்பார்? பாக்கிறவே என்னத்தான் பிழையாச் சொல்லுவீனம். இவள் வேற அப்பா எண்டு கத்துறாள்.”
“இதத்தான் நேற்றே சொன்னனான் உனக்கு. அவளுக்கு நான்தான் அப்பா. உனக்கு நான் யார் எண்டு நீதான் முடிவு செய்யோணும். ஊர் பாக்குது உலகம் பாக்குது என்றதுக்காக, பிள்ள அப்பா எண்டு ஓடி வரேக்க என்னை யாரோ மாதிரி போகச் சொல்றியா?” என்றான் அதட்டலாக.
அப்பா என்று சொல்லச் சொல்லி அவன் சொல்லிக்குடுக்கவில்லை. அவளாக நினைத்துக் கூப்பிடும்போது, வந்து காலைக் கட்டும்போது அவன் என்ன செய்ய?
முன்னாள் மனைவியின் இந்நாள் கணவனுக்குப் பிறந்த குழந்தையைக் கூட வெறுக்க முடியாதவனால், தன்னை அப்பா என்று கூப்பிடும் குழந்தையை, தான் பாசம் வைத்துவிட்ட செல்வத்தை வெறுக்க முடியுமா?
யாமினிக்கு அழுகை வந்துவிட்டது. “என்னை ஏன் இப்பிடிச் சித்ரவதை செய்றீங்கள்? நான் உண்டு என்ர பிள்ளை உண்டு எண்டு நிம்மதியா இருந்தனான். திடீரெண்டு வந்து எல்லாத்தையும் தலைகீழா மாத்திப்போட்டு இப்ப என்னைப் பிழை சொல்றீங்கள். இந்த ஊருல உங்களுக்கு வேற பொம்பிளையலே கிடைக்கேல்லையா? என்ன விட்டுடுங்கோவன்.” முகத்தைக் கைகளால் மூடிக்கொண்டு அழுதவளைப் பார்க்க மனம் கனத்துப்போனது அவனுக்கு. இந்தக் கண்ணீருக்குக் காரணம் அவன்தானே.
“யாமினி, என்ன இது? அழாத. குழந்தை பாக்கிறாள் எல்லோ.” என்றபடி அவளின் தலையை அவன் வருட, “கடவுளே! தயவுசெய்து என்னைத் தொடாதீங்கோ.” என்று வேகமாகப் பின்னுக்கு நகர்ந்தவள் இன்னும் அழுதாள்.
விக்ரமுக்கு என்ன சொல்லி அவளைச் சமாதானம் செய்வது என்றே தெரியவில்லை. அதுநாள் வரை கம்பீரமாக நிமிர்ந்து நின்றவளின் கண்ணீரைக் காண முடியவில்லை.
கையிலிருந்த குழந்தையோடு சட்டென்று வெளியேறி நடக்க, “பிள்ளையைத் தூக்கிக்கொண்டு வெளிய போகாதீங்க. யாரும் பாத்தா?” என்று அதற்கும் பதறினாள் அவள்.
இப்போது அவனுக்கு மெய்யாகவே கோபம் வந்துவிட்டது. வேகமாக அவளை நெருங்கி வந்து, “இப்பிடி வீட்டுக்க மட்டும் யாரும் பாக்காத நேரம் பிள்ளையத் தூக்கினா உனக்குச் சரியா?” என்று கேட்டான்.
கன்னத்தில் வழிந்த கண்ணீர் கூட அப்படியே உறைய அதிர்வுடன் அவனையே பார்த்தாள் யாமினி. அது இதைவிட இன்னும் கேவலம் இல்லையா!
“என்னை என்னதான் செய்யச் சொல்றீங்கள். ஊர் பாத்தா என்னைத்தானே கேவலமாக் கதைக்கும். சும்மாவே ஒருத்தரும் என்ன மதிக்கிறேல்ல. இதுவும் தெரிஞ்சா…” நடுங்கிற்று அவள் குரல்.
“கல்யாணத்துக்குச் சம்மதிச்சா எல்லாப் பிரச்சினையும் முடிஞ்சிடும்தானே.” பொறுமையாகக் சொன்னான் விக்ரம்.
“அதத் தவிர வேற வழியே இல்லையா?” இயலாமையுடன் கேட்டாள் அவள்.
அழுது சிவந்த முகம். ஓய்ந்துபோன தோற்றம். கலக்கத்தில் தவித்த விழிகள். இதற்கு ஏதாவது தீர்வைச் சொல்லேன் என்று நின்றவளைப் பார்த்து, “உனக்கு என்னைப் பிடிக்கேல்லையா யாமினி?” என்று ஆழ்ந்த குரலில் கேட்டான் விக்ரம்.
அந்தக் குரல் அவளை என்னவோ செய்தது. அவனை நிமிர்ந்து பார்க்கவும் வைத்தது. அவனுடைய தோற்றம் அப்போதும் கருத்தில் பதியவில்லை. அந்தளவுக்குக் கலங்கிப்போயிருந்தாள்.
“நான் அந்தளவுக்கு யோசிக்கவே இல்லை. எனக்கு என்ர பிள்ளை மட்டும் போதும். கல்யாணமும் வேண்டாம் நீங்களும் வேண்டாம். அவளை என்னட்டையே தந்திட்டுப் போங்கோ. இனிமேலும் தயவுசெய்து இங்க வராதீங்கோ. எங்கள எங்கட பாட்டுக்கு நிம்மதியா இருக்க விடுங்கோ, ப்ளீஸ்.” என்றாள் கண்ணீரோடு.
இதற்குமேல் என்ன சொல்லி அவளைச் சம்மதிக்க வைக்க என்று தெரியாத இயலாமை தந்த கோபத்தில், “இந்தா பிடி! உன்ர மகளை உன்னட்டையே தந்திட்டன். அவள் அப்பா அப்பா எண்டு ஏங்கிறதுதான் உனக்குச் சந்தோசம் எண்டா நான் என்ன செய்ய?” என்றுவிட்டு, கழுத்தைக் கட்டிக்கொண்டு போக மறுத்துக் கத்திய சந்தனாவைத் தன்னிடமிருந்து வலுக்கட்டாயமாகப் பிரித்து அவளிடம் கொடுத்துவிட்டு, அந்தச் சின்ன மொட்டின் கதறலைக் கேட்கும் சக்தி அற்றவனாகக் கிட்டத்தட்ட அங்கிருந்து விரைந்து மறைந்தான்.