கண்கள் மின்ன அவளைப் பார்த்தான். ஒருகணம் பிடிபட்டுவிட்ட உணர்வில் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தாள் யாமினி.
அடுத்தகணம், “என்ர ஃபோனை உங்கள யாரு நோண்டச் சொன்னது? தாங்கோ!” என்று அவள் பறிக்க முனைய,
“நோண்டின படியாத்தானே பல உண்மைகள் வெளிவந்திருக்கு.” கொடுக்காமல் விளையாட்டுக்குக் காட்டிக்கொண்டே ஒரே ஜம்ப்பில் எழுந்தான் விக்ரம்.
அவளும் வேகமாக எழுந்து அவனிடம் பறிக்கப் பார்க்க, அன்றுபோலவே இன்றும் அவன் விளையாட்டுக் காட்ட, தாய் தகப்பனுக்குள் நடக்கும் விளையாட்டைக் கண்டு தன் மண் மாளிகையையே மறந்துவிட்டு கைகொட்டிச் சிரிக்கத் தொடங்கினாள் சின்னவள்.
“இப்ப தரப்போறீங்களா இல்லையா?” அவள் மிரட்ட,
“நீ பாக்கத்தான் அந்தப் போட்டவ கேட்டனி எண்டு சொல்லு, தாறன்.” என்றான் அவன்.
“மாட்டன்! நீங்க ஃபோனைத் தாங்கோ!”
“அப்ப, முடிஞ்சா நீயா வாங்கு” என்றான் அவன்.
அவனது ஒரு தோளையே பற்றி, எம்பி மற்ற கையில் இருக்கும் ஃபோனை பிடுங்க அவள் முயல அப்படியே அவளை வளைத்தான் விக்ரம்.
திமிறியவளை ஒற்றைக் கையாலேயே அடக்கி, மற்ற கையால் ஃபோனின் கலரிக்குள் போக, தன் குட்டு அத்தனையும் வெளி வரப்போகிறது என்று வேகமாக அவள் அதைத் தடுக்க முயல, அவளோடு சேர்த்து அவளின் கரங்களையும் சிறைப் பிடித்தான் அவன்.
ஒன்றும் செய்யமுடியாமல் அவள் திணற, அங்கிருந்த ஃபோட்டோக்களைக் கண்டவன் ஒருகணம் ஆனந்தமாக அதிர்ந்துதான் போனான்.
அவள் தனக்காகத்தான் ஃபோட்டோவை கேட்டாள் என்பது அவன் அறிந்ததுதான்! ஆயினும், அதை நேரிலேயே கண்டபோது மனம் பரவசமாகிப் போனது.
‘போட்டோ அப்’ பின் உதவியுடன் அவனையும் அவளையும் பல போஸ்களில் இணைத்திருந்தாள் யாமினி.
அதுவும் அவனது போட்டோ ஒன்றுதான். அந்த விக்ரமை காதலோடு பார்க்கும் யாமினி.. குறும்போடு பார்க்கும் யாமினி.. செல்லமாய் முறைக்கும் யாமினி.. என்று அவளைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் அவன் மனக்கண்ணுக்குள் வந்து நிற்கும் யாமினிகளையே அவனுக்கு இணையாக்கி இருந்தாள்.
அவள் தன்னிடம் சொல்லாத நேசத்தைத் தன் ஃபோட்டோவிடம் சொல்லியிருப்பதைக் காணக் காண அவன் அணைப்பு இறுக்கிக்கொண்டு போயிற்று!
“அப்பா! பப்ளிக் பிளேஸ்..” என்று திணறியபடி மகளைப் பார்க்க, அவளோ ‘இதுகள் இரண்டும் இப்ப அடிபடும் அடுத்த நிமிஷம் ஒற்றுமையாகும்’ என்று தெரிந்தவள் போன்று தன் வீட்டுக்கு விளையாடப் போயிருந்தாள்.
விக்ரமோ, அவள் சொன்னதைக் காதில் வாங்கியதற்குச் சான்றாக, பிடியைச் சற்றே தளர்த்தினானே தவிர, நிலையை மாற்றவில்லை.
‘என்ன இவன் சொல்லியும் கேக்காம!’ என்று அவள் பார்க்க, அங்கிருந்த ஃபோட்டோவை கண்டவளுக்கு மூச்சடைத்தது. அவளின் ரகசியம் முழுமையாக அம்பலத்துக்கு வந்திருந்தது!
விக்ரமுக்கு ஒரு சிகப்பு ரோஜாவை நீட்டிக்கொண்டிருந்தாள் யாமினி. காதலைச் சொல்லும் கண்களோடு!
அவளது இதயம் ஒருகணம் நின்று ஆனந்த அதிர்வில் படபடவென்று அடித்துக்கொள்ளத் தொடங்க, அதை உணர்ந்து அவளைப் பார்த்தான் விக்ரம்.
அதே சிவப்பு ரோஜாக்கள் அவள் கன்னத்திலும் பூக்க, ரசனையோடு பார்த்தவனின் பார்வை மாறியது!
இந்தச் சிவப்பும், அவள் காட்டும் வெட்கமும் தன்னை முழுமையாகச் சுழற்றிப் போடுவதை உணர்ந்தான் விக்ரம்! அந்த வெட்கத்துக்கும் சிவப்புக்கும் அவன் ரசிகனாகிக் கொண்டிருந்தான்! சாதாரணமாக அல்ல, மிக மிக மோசமான ரசிகனாக! தன் தலைவிக்காக எதையும் செய்யத் துடிக்கும் ரசிகனாக!
அந்தப் பார்வையின் பொருள் விளங்கியும் விளங்காமல் அவளுக்குள் இறங்க, தன்னைக் கட்டிப்போட்ட அவன் பார்வையின் வீச்சிலிருந்து விடுபடமுடியாமல் தடுமாறினாள் யாமினி.
தன் ஆழ்மனம் அவனோடு கொண்டுவிட்ட நேசத்தை.. அவனிடம் காட்டத்தெரியாமல் கூச்சத்தோடு ஒளித்துவைத்த அன்பை அவனாகவே அவளுக்குள் நுழைந்து கண்டுகொள்வது போலிருக்க, அதற்குமேலும் தாளாமல் தலை குனிந்தவளை மனமெங்கும் இன்பம் பொங்க தன் தோளில் சாய்த்துக்கொண்டான் விக்ரம்.
அவனுக்கும் அவளுக்குமான வாழ்க்கைப் பாதையில் நேசப்பூக்கள் மெல்ல மெல்ல அரும்பத் தொடங்கியிருப்பதை இருவருமே அறியாமலில்லை. இப்போதோ அந்தப் பூக்கள் சடசடவென்று பூத்து, வெகுவேகமாக அவர்களைச் சுற்றி படர்ந்துகொண்டிருப்பதைப்போல் உணர்ந்தவன் மனம் உவகையில் துள்ளியது!!
தன் நினைவுகளெங்கும் நீக்கமற அவள் எப்படி நிறைந்தாளோ அப்படித் தானும் அவளுக்குள் நிறைந்திகொண்டிருக்கிறோம் என்பதைச் சந்தோசமாக உள்வாங்கிக் கொண்டான்!
தங்களிடம் வந்த மகளைக் கண்டு மனைவியை மெல்ல விட்டான்.
“செல்லம்மா வாங்க..” என்று அவளைத் தூக்கிக்கொண்டு, மனைவியையும் அழைத்துக்கொண்டு வீடு சென்றவனுக்கு அன்றைய தன் பிறந்தநாளுக்கு மனைவி தந்த பரிசுகள் விலைமதிப்பற்ற வைரங்களாகவே தோன்றிற்று!
வீட்டுக்குப் போனதும் வடை சுட்டு தேநீரோடு பரிமாறினாள் யாமினி. அவன் முன் வரவே முடியாமல் வெட்கமும் கூச்சமும் தடுத்தாலும், அவனுக்குப் பிடித்ததைச் செய்து கொடுப்பதில்தான் அவளின் சந்தோசமே அடங்கிக் கிடந்தது!
அவள் திரும்பவும் சமையலறை செல்லப்போக, “நீயும் வா.. சேந்து சாப்பிடுவம்.” என்று அவளையும் தன்னருகில் அமர்த்திக்கொண்டான். கடற்கரையில் ஆடியதாலோ என்னவோ அவன் மடியில் தலைவைத்து ஏற்கனவே உறங்கிப் போயிருந்தாள் சந்தனா.
“தாங்கோ, கட்டில்ல கிடத்துவம்” என்று அவள் கேட்க,
“விடு.. படுக்கட்டும்” என்றான் அவன்.
தான் போனபிறகு கட்டிலில் தானே கிடப்பாள் என்று விக்ரம் நினைக்க, இந்தச் சந்தோசமும் மயக்கமும் இன்னும் கொஞ்ச நாட்களுக்குத் தானே.. என்று எண்ணி உள்ளூர மருகினாள் யாமினி.
நாளை திங்கட்கிழமை. டொச் வகுப்புக்கு போகவே மனமில்லை. அவன் நிற்கும் நாட்களில் அவள் வகுப்புக்குப் போக, அவன் போனபிறகு என்ன செய்வாள்?
அவன் தோளில் மெல்லச் சாய்ந்துகொண்டாள்.
“என்னம்மா?” அவளை உணர்ந்தவனாகக் கேட்டான் விக்ரம்.
“நீங்க நிக்கிற வரைக்கும் நான் வகுப்புக்கு போகேல்ல. அதை வந்து நாளைக்கு டீச்சரிட்ட சொல்லிவிடுங்கோ.” என்றாள் அவனின் கையைப் பற்றிக்கொண்டு.
என்னவோ, முதல் வகுப்புப் படிக்கும் பெண் ‘நான் இண்டைக்குப் பள்ளிக்கூடம் போகேல்லப்பா’ என்று கெஞ்சுவது போலிருந்தது அவனுக்கு.
இதழ்களில் அரும்பிய புன்னகையோடு அவளையே பார்க்க, ‘என்ன பதிலை காணோம்’ என்று நிமிர்ந்து பார்த்தாள் அவள்.
“பிறகு ஒண்டும் விளங்காதே.. படிக்கக் கஷ்டமே.” அவள் கண்களோடு கண்களைக் கலந்தபடி சொன்னான்.
“அது விளங்கும். நான் படிச்சிடுவன். சந்தியாட்ட பேப்பர்ஸ கொண்டுவர சொன்னா, அவள் கொண்டுவருவாள். தெரியாதத நீங்க சொல்லித் தரமாட்டீங்களா? நீங்க நிக்கமட்டும் தானே.” எனும்போதே அவள் குரல் தழுதழுத்தது.
இப்போதுவரை ‘எத்தனைநாள் லீவில் வந்தீங்க?’ என்றோ, ‘எப்ப திரும்பப் போறீங்க?’ என்றோ அவள் கேட்கவேயில்லை. கேட்க பயம். நாளைக்கு.. இல்லை இன்னும் ரெண்டு நாளில் என்று சொல்லி விடுவானோ என்று.
எப்படியும் போகத்தான் போகிறான் என்று தெரியும். அந்த நாளை தெரிந்துகொண்டு இன்னும் ரெண்டுநாள் இன்னும் ஒருநாள் என்று துடிக்க அவள் தயாராயில்லை. அவனோடான ஒவ்வொரு நிமிடத்தையும் அனுபவித்து வாழ்ந்திட தவியாய் தவித்துக் கொண்டிருந்தாள்.
“நீதான், அந்தப் போட்டோவ உனக்காகக் கேக்கேல்ல. பிறகும் ஏன் வகுப்புக்கு போகாம நிக்கிற?” என்று ஆரம்பித்தான் அவன்.
அவன் கையிலேயே ஒன்று போட்டாள் யாமினி. “அதுதான் எல்லாத்தையும் பாத்தாச்சு எல்லோ. திரும்பவும் ஏன் அந்தக் கதைய ஆரம்பிக்கிறீங்க?” எனும்போதே கண்களால் சிரித்தான் அவன்.
“நான் வந்து சொன்னா எனக்கு என்ன தருவாய்?” அவன் பேரம் பேச,
“என்ன வேணும் சொல்லுங்கோ?” என்று தைரியமாகக் கேட்டாள்.
அவன்தான் சாப்பாட்டுப் பிரியனாயிற்றே! அதுவும் அவளின் கைச்சமையல் பிரியன்! மிஞ்சி மிஞ்சிப் போனால் என்ன உறைப்பா எதையாவது செய்துதரச்சொல்லி கேட்பான் என்று நினைத்துக்கொண்டு அவள் கேட்க,
“ஒரு கிஸ்! தரவேண்டிய இடமும் வேற.” என்றான் அவன் அவளின் இதழ்களையே மொய்த்தபடி.
அதை எதிர்பாராத அதிர்ச்சியில் விழிகளை விரித்தாள் யாமினி. அவன் கண்களில் தெரிந்த சிரிப்பில், “நான் மாட்டன்!” என்றபடி அவனின் தோளில் முகத்தைப் புதைத்துக்கொண்டாள்.
“அப்ப, நானும் மாட்டன்!” என்றான் அவன்.
“உங்கள!!!!” என்று முறைத்தவள், அவன் எதிர்பாராத அந்த வேளையில் பட்டென்று தன் இதழ்களை அவன் கன்னத்தில் ஒற்றி எடுத்துவிட்டு, “இந்தளவுதான் தருவன். மரியாதையா நாளைக்கு வந்து சொல்றீங்க! இல்ல..” என்று ஒற்றை விரல் நீட்டி எச்சரித்தாள்.
அவன் சிரிக்கத் தொடங்கவும், “நடக்கிறதே வேற!” என்று மிரட்டிவிட்டு உள்ளே ஓடியேபோனாள்.
“மேம்” என்ற அழைப்பில் சட்டெனக் கண் விழித்தவள், முன்னே நின்ற விமானப் பணிப்பெண்ணைப் பார்த்து ஒருகணம் விழித்தாள்.
பிறகுதான் விமானத்தில் பறந்துகொண்டிருக்கிறோம் என்று விளங்க, எழுந்த சிரிப்பை அடக்கியபடி அந்தப் பெண்ணை ஏறிட்டாள்.
உணவு கொண்டுவந்திருந்தாள்! தனக்கும் மகளுக்குமானதை வாங்கி, உண்டதும் சற்றுநேரம் முன்னிருந்த திரையில் சார்லி சாப்ளினை ஓடவிட்டாள். மனமோ அவரில் நிலைக்காமல் கணவனோடு அவள் சென்ற யாழ்ப்பாணப் பயணத்துக்கே ஓடியது!