நிலவே நீயென் சொந்தமடி 1 – 2

அவன் தோளில் ஒன்று போட்டாள் சசி. “உனக்கு படிப்பு வரேல்லை எண்டதுக்காக ஏன் அவேன்ர குடும்பத்தையே குறை சொல்ற. அவள் நல்லவள். அவள் மட்டுமில்ல அவளின்ர அம்மா, அப்பா, மாமா எல்லாரும்.”

“பூ விஷயத்துலேயே அது நல்லாத் தெரியுது.” தங்கையின் பேச்சைக் காதில் வாங்குவேனா என்று மல்லுக்கட்டியபடியே சென்று அவளைக் கோயில் வாசலில் இறக்கிவிட்டான்.

“வரேக்க உன்ர பிரெண்ட்டுட்ட சொல்லு, உன்ன கொண்டுவந்து விடச்சொல்லி.” சசி அவளுக்காக பரிந்து பேசிய கடுப்பில் சொன்னான்.

“பூசை முடியவே இருட்டிடும் அண்ணா. பிறகு அவள் என்ன கொண்டுவந்து விட்டுட்டு அவளின்ர வீட்ட போக இன்னும் இருட்டிடும். நீயே வா.”

அவனும் வராமல் இருக்கப்போவதில்லை தான். அதைக் காட்டிக்கொள்ளாமல், “ஒரு உதவி செய்யாதவள் எல்லாம் பிரெண்ட். இதுல நீ அவளுக்கு வக்காலத்து!” என்றபடி வண்டியை திருப்பினான் செந்தூரன்.

“உனக்கு அவளை குறை சொல்லாட்டி சாப்பிட்டது செமிக்காதே. மறக்காம வா அண்ணா.” என்றபடி நேரமாகிவிட்டதில் உள்ளே ஓடினாள் சசி.

கோவிலுக்குள் சென்றதும்தான் தோழிக்கு கட்டிய பூமாலையை தமையனின் வண்டியிலேயே விட்டுவிட்டது நினைவு வர வேகமாக அவனுக்கு அழைத்தாள்.

“அண்ணா, பூவை கொண்டுவர மறந்திட்டன்.” தமையன் திட்டப் போகிறான் என்று தெரிந்த தயக்கத்தில் அவள் சொல்ல,

“நல்லவிசயம்! அவளை பூ வைக்காம கும்பிடச் சொல்லு!” என்றான் இவன் கூலாக.

“அண்ணா ப்ளீஸ்!”

“நான் இங்க அரைவாசி தூரம் வந்திட்டன் சசி! ஒரு நாளைக்கு பூ இல்லாட்டி அந்த படிப்ஸ் ஒண்டும் குறைஞ்சு போகாது. சுவாமியும் கண்ணைக் குத்தாது.” என்றான் நக்கலாக.

“ஐயோ அண்ணா, மறக்காதையடி எண்டு இப்ப வர முதலும் மெசேஜ் அனுப்பினவள். அவள் மட்டும் தலையில பூ இல்லாம நிண்டா பாவமெல்லோ.” கவலையோடு சொன்னாள்.

அந்த படிப்ஸ்க்கு மனமிறங்காத போதும் தோழிக்காக கெஞ்சிய தங்கையிடம் மறுக்க மனமின்றிப் போனது!

“கெதியா வெளில வா! எனக்கு மேட்சுக்கு நேரம் போகுது!” என்றான் வேறு ஒன்றும் சொல்லாமல்.

தமையன் சம்மதித்துவிட்டதில் சந்தோஷமாகிப்போனாள் அவள்.

“என்ர செல்ல அண்ணா எல்லே. இப்ப அவள் வருவாள். அவளிட்டயே குடுத்துவிடன். நான் எழும்பி வந்தா என்ர இடம் போய்டும். இண்டைக்கு வெள்ளிக்கிழமை வேற, இங்க நிறைய ஆக்கள் கோயிலுக்க” என்றாள் இன்னும் கெஞ்சலாக.

மறுக்கவேண்டும் என்றுதான் இருந்தது அவனுக்கு. ஆனால், என்ன மறுத்தாலும் கெஞ்சிக்கொண்டு நிற்பாள் சசிரூபா. எனவே, “சரியா அஞ்சு நிமிஷம் தான் பாப்பன். அதுக்குள்ள வராட்டி தூக்கி எறிஞ்சிட்டு போயிடுவன்.” என்றுவிட்டு, திரும்பவும் வண்டியை திருப்பி கோவில் பார்க்கிங்க்கு விட்டான். பார்க் பண்ணிவிட்டு இறங்கி கைகளையும் கட்டிக்கொண்டு அதன் மேலேயே சாய்ந்து நின்றுகொண்டான்.

வீதி மீது விழிகளை பதித்தவனுக்கு, ஒரு பெண்ணுக்காக, அதுவும் அவள் தலைக்கு வைக்கப் போகும் பூவை கொடுப்பதற்காக காத்திருக்கிறோம் என்கிற எண்ணமே கசந்து வழிந்தது!

‘அவள் எல்லாம் ஒரு ஆள் எண்டு.. எல்லாம் சசியால வந்தது.’

‘ப்ச்! எங்க இன்னும் காணேல்ல.. இன்னும் நாலு நிமிஷம்தான்!’

பொறுமையற்று நொடிக்கொருதரம் மணிக்கட்டை திருப்பி திருப்பிப் பார்த்தபடி நின்றவனுக்குத் தெரியவில்லை, அவளுக்காக.. அவளின் ஒற்றை வார்த்தைக்காக தான் காலம் காலமாகக் காத்திருக்கப் போகிறோம் என்று!

மூன்று.. இரண்டு.. ஒன்று.. நிமிடங்கள் ஒவ்வொன்றும் வருடங்களாக கழிந்துகொண்டிருந்தது. ‘ம்ஹூம்! இதுக்கு மேல எல்லாம் முடியாது’ என்றபடி எழப்போனவன் அவளைக் கண்டான்!

அங்கே, ஸ்கூட்டியில் சேலை அணிந்து ஹெல்மெட் போட்டு வந்துகொண்டிருந்தாள் கவின்நிலா.

‘என்னடா இவ நண்பன் படத்துல வர்ற இலியானா மாதிரி வர்றா..’ நக்கலாக ஓடியது மனதில். அவனது உதடுகளின் ஒரு பக்கம் சற்றே கீழாக வளைந்து நக்கல் சிரிப்பை உதிர்க்க அவளையே பார்த்திருந்தான்.

பூசை ஆரம்பிக்கும் நேரமாதலால் வெளியே யாருமில்லை. அவன் மட்டுமே அமர்ந்திருந்து இவளையே பார்த்திருந்ததில் அவளும் இவனைக் கண்டுவிட்டாள்.

‘இவன் ஏன் என்னையே பாக்கிறான்.’ பதட்டம் தொற்றிக்கொண்டது அவளுக்கு.

அந்தச் சிரிப்பு வேறு சீண்டியது!

‘உனக்கு மட்டும்தான் பார்க்கத் தெரியுமா? எனக்கும் தெரியும்!’ அவளும் வேண்டுமென்றே அவனையே பார்த்தாள்.

அதைக் கண்டுகொண்டான் அவன். ‘ஓ.. அவ்வளவு தைரியமா? எங்க பாரு பாக்க?’ கண்களில் சீண்டலோடு அவன் பார்க்க, அந்தப் பக்கம் இந்தப்பக்கமும் அசையாத அவன் பார்வை.. அவள் அவனை நெருங்க நெருங்க இன்னுமே அவளை நெருங்குவதாய் தோன்றியது. ஒரே நேர்கோட்டில் அவன் விழிகளோடு தன் விழிகளை மோதவிட முடியாமல் அவளின் விழிகள் தன்னிச்சையாக விலகிக்கொண்டது.

அவன் உதட்டோரம் சின்னதாய் வெற்றிச் சிரிப்பு மின்னியதில் உள்ளம் கொதிக்கத் தொடங்கியது அவளுக்கு.

‘ச்சே! நானும் விடாம பாத்திருக்கோணும்! விட்டுடன்!’ அவனோ இன்னும் பார்ப்பதை விடவில்லை.

முகத்தைச் சுளித்து, ‘நீ பார்ப்பது எனக்குப் பிடிக்கவில்லை’ என்று அவள் உணர்தியும் விடவில்லை அவன்.

அவள் பள்ளிக்கும் டியுஷனுக்கும் போகும் பாதையில்தான் இவனது ‘சசி மொபைல்ஸ் அண்ட் எலக்ட்ரானிக்ஸ்’ இருக்கிறது. பெரும்பான்மை நாட்களில் அவன் நண்பர்களுடன் வெளியே சிரித்துக் கதைத்தபடி நிற்பதைக் கண்டிருக்கிறாள்.

அப்போதெல்லாம் இவள் கடக்கும்வரை இவளையே பார்ப்பான். இதைப்போலவே ஒரு நக்கல் சிரிப்பு உதட்டோரம் நெளியும். அது எதற்காக என்று இன்றுவரை அவளுக்குத் தெரியாது. நேரே பார்வையை வைத்து அவனைக் கடந்தாலும் பக்கப் பார்வையில் அவள் மறையும் வரை அவன் பார்வை தொடர்வதை கவனித்திருக்கிறாள். முறைப்பு, கோபம் என்கிற வரையறைக்குள் கொண்டுவர முடியாத போதும், ஏதோ ஒன்று அவனுக்கு அவளை அவ்வளவாகப் பிடித்தமில்லை என்பதாக உணர்ந்திருக்கிறாள்.

அப்படிப் பிடிக்காமல் போகுமளவுக்கு எதுவுமே நடந்ததில்லை. ஏன், இதுநாள் வரை அவனை நேருக்கு நேரே கூட அவள் சந்தித்ததில்லை. ஒர் வார்த்தை கதைத்ததில்லை. இவள் வேறு பள்ளிக்கூடம். சசி வேறு பள்ளிக்கூடம். ஆனால், எட்டாம் வகுப்பிலிருந்து டியுஷன் இருவருக்கும் ஒன்று.

இருவருமே ‘ஏஎல்’ கடைசிவருடம் படித்துக்கொண்டு இருக்கிறார்கள்.
சசி இவள் வீட்டுக்கு ஏதாவது பரீட்சை அல்லது ஏதாவது விளங்கவில்லை என்றால் வருவாளே தவிர இவள் ஒருநாளும் அவர்கள் வீட்டுக்குப் போனதில்லை. அங்கே இளம் ஆண்பிள்ளையாக இவன் ஒருவன் இருக்கிறான் என்பதே காரணம்.

ஏன் என்னை அவனுக்குப் பிடிக்கவில்லை என்றெல்லாம் அவள் சிந்தித்ததே இல்லை. அப்படி சிந்திக்கும் அளவுக்குக் கூட ஒரு பொருட்டானவனாக அவளின் வரையறைக்குள் அவன் வந்ததில்லை. பத்தோடு பதினொன்று!! அல்லது அதுவுமில்லை. காரணம், ‘ஏஎல்’ உடன் படிப்பை நிறுத்திவிட்டு நண்பர்களோடு கூடிப் பொழுதைக் கழிக்கும் அவனை அவளுக்கும் பிடிக்காது.

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock