நீ தந்த கனவு 16 – 1

அஜய் கொழும்புக்கு ஓடி வந்து ஒரு வாரமாயிற்று. தரமில்லாத விடுதி ஒன்றின், காற்றே இல்லாத அறைக்குள் அடைபட்டுக் கிடந்ததில், அவனுக்கு வாழும் வாழ்க்கையே வெறுத்துப் போயிற்று.

எதிர்காலத்தின் நிலை என்ன என்கிற கேள்வி மருட்டியது. இரவுகளில் உறக்கம் இல்லை. பகல்களில் நிம்மதி இல்லை. ஒவ்வொரு நொடித்துளியும் என்னாகுமோ, யாரும் வந்து பிடித்துக்கொண்டு போய்விடுவார்களோ என்று, நெஞ்சு நடுங்கிக்கொண்டே இருந்தது.

அறைக்கு வெளியே காலடிச் சத்தங்கள் கேட்டாலே பதறினான். ஒழுங்கான உறக்கமில்லை; உணவில்லை. இந்த நான்கு நாள்களையும் கடப்பதற்குள்ளேயே முழு நரகத்தை அனுபவித்திருந்தான்.

இப்போதெல்லாம் இப்படி வந்தது தவறோ, அங்கேயே இருந்து பிரச்சனைகளை எதிர்கொண்டிருக்க வேண்டுமோ என்று யோசிக்க ஆரம்பித்திருந்தான்.

அவன் தலைமறைவாகிவிட்டான் என்று நண்பர்களுக்குச் செய்தி போயிருக்கும்; ஊராருக்குத் தெரிந்திருக்கும். சாகித்தியன் அவனைப் பற்றி என்ன நினைப்பான்? இனி எப்படிப் பல்கலைக்கழகத்தில், அந்த ஊரில் தலை காட்டுவான்? முழு எதிர்காலமும் பாழாகிப் போயிற்றே.

விரலில் அணிந்திருந்த மோதிரத்தை வைத்துத்தான் இந்த ஹோட்டல் அறைக்கான செலவையும், இத்தனை நாள்களுக்கான உணவையும் பார்த்தான். இன்னும் சொற்பமே மிஞ்சிக் கிடந்தது. அது முடிந்த பிறகு?

ஆக, அதற்கு முதல் ஏதாவது செய்தாக வேண்டும்.

என்ன செய்யலாம் என்று யோசித்துவிட்டு ஆதினிக்கு அழைத்தான். அவள் அழைப்பை ஏற்கவில்லை. மீண்டும் மீண்டும் முயற்சித்துப் பார்த்தான். பலனில்லை.

கொஞ்ச நேரம் யோசித்துவிட்டுக் கைகள் நடுங்க தந்தைக்கு அழைத்தான்.

“ஹலோ” அவரின் குரல் நலிந்து ஒலித்தது.

“அப்பா…” என்றவனுக்கு மேலே வார்த்தைகளே வரவில்லை. “எனக்கு… அங்க வரப் பயமா இருக்கு.” என்றான் திக்கித் திணறி.

அந்தப் பக்கத்திலிருந்து சத்தமே இல்லை. அஜய்க்கு அழுகை வரும்போல் இருந்தது. “அப்பா…” என்றான் மீண்டும்.

“ம்… இருக்கிறன். என்ன செய்யலாம் எண்டு யோசிச்சனான். நீ பேசாம அனுராதபுரத்தில இருக்கிற சித்தி வீட்டுக்கு வா.” ஒட்டாத குரலில் குரலில் சொன்னார் அவர்.

பெற்ற பாவத்திற்கு இதையும் செய்வோம் என்று நினைக்கிறாரோ? “போலீஸ் கண்டு பிடிக்காதா?” பெற்ற தந்தையிடம் தன்னைக் குறித்து இப்படியெல்லாம் பேசும் நிலை உண்டானதில் வெட்கினான்.

“கொழும்பிலேயே நிண்டாத்தான் பிடிப்பாங்கள். நீ இங்க கொழும்புக்கு டிக்கட் வாங்கினது, அங்க ரெயில்வே ஸ்டேஷன்ல இருந்து வெளில போனது எல்லாம் கவனிச்சு இருக்கினம். அதால உன்னக் கொழும்பிலதான் தேடுவினம். நீ அனுராதபுரம் வாறதுதான் நல்லது. அங்க வந்ததும் சித்தின்ர நம்பர்ல இருந்து கதை. இனி உன்ர ஃபோன பாவிக்காத!” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்தார் அவர்.

சற்று நேரம் அப்படியே அமர்ந்திருந்தான் அஜய். ஏன் இப்படி நடந்தாய் என்று கேட்காத அவரின் செய்கையில் தனக்குள் குன்றினான். அவருக்கும் சேர்த்து எவ்வளவு பெரிய அவப்பெயரை உண்டாக்கிவிட்டான். எப்படியாவது இதிலிருந்து வெளியே வர வேண்டும். எப்படி என்றுதான் புரியமாட்டேன் என்றது. ஆதினியிடம் ஏதாவது வழி கேட்கலாம் என்றுதான் அழைத்தான். அவளும் கை விட்டுவிட்டாள். இனி?

ஆனால், இந்த நான்கு நாள்களும் கும்மிருட்டாகத் தெரிந்த வாழ்வில் தந்தையின் துணை இருக்கிறது என்கிற நம்பிக்கை சிறு தெம்பைத் தர, வேகமாக அனுராதபுரத்துக்குப் புறப்பட்டான்.

*****

நண்பர்கள், அறிந்தவர்கள், தெரிந்தவர்கள் என்று தன் வட்டத்தினருக்குப் புது இலக்கத்தினைக் கொடுத்திருந்த ஆதினி, பழைய கைப்பேசியைப் பயன்படுத்துவதில்லை. ஆனாலும் அது, அவளின் மேசை இழுப்பறைக்குள்தான் இன்னும் இருந்தது. அன்று காலையில் பல்கலைக்குச் செல்வதற்காகக் குளியலறை சென்று வந்தவளின் காதில், பழைய கைப்பேசியின் ஓசை விழவும் எடுத்துப் பார்த்தாள்.

அஜயின் பெயரைக் கண்டதும் திக் என்று இருந்தது. அவனால் கற்றுக்கொண்ட அனுபவப் பாடம், இந்த முறை யோசிக்காமல் செயலாற்ற விடவில்லை. அதில்தான் அழைப்பை ஏற்காமல் விட்டாள்.

கூடவே, ஒரு பெண்ணின் தற்கொலைக்கு ஏதோ ஒரு வகையில் காரணமாக இருப்பான் என்று சந்தேகிக்கப்படுகிறவனின் அழைப்பைப் புறம் தள்ளிவிட்டுப் போகவும் விருப்பமில்லை.

இதற்கு முதல் தெரியாமல் செய்த தவறுக்குத் தன்னால் முடிந்ததாக எண்ணி, எல்லாளனிடம் சொல்வோமா என்று யோசித்தாள். அவனைப் பார்க்கவோ, அவனோடு கதைக்கவோ விருப்பம் இல்லை. அதில், வேகமாகப் புறப்பட்டு, கதிரவனின் பொறுப்பில் இருக்கும் காவல் நிலையத்திற்குச் சென்றாள்.

அந்தக் காலை நேரத்தில் அவளைக் கண்டதும், ‘இண்டைக்கு என்ன ஏழரையக் கூட்டப் போறாளோ?’ என்றுதான் கதிரவனுக்கு ஓடியது. கூடவே என்ன, ஏது என்று கேட்காமல் துரத்தி விடுவோமா என்கிற அளவுக்கு ஒரு கோபமும் முகிழ்த்தது.

அவன் பதவியும், அதற்குண்டான நடைமுறைகளும், பொறுப்பும் அவனைத் தடுத்துப் பிடிக்க, எதையும் காட்டிக்கொள்ளாமல் அழைத்துச் சென்று, அமர வைத்தான்.

“சொல்லுங்கோ, என்ன விசயமா என்னைப் பாக்க வந்திருக்கிறீங்க?”

அவன் முகத்தில் எந்த உணர்வுகளும் இல்லை. மறைக்க முயன்றும் முடியாத ஒரு வெறுப்புதான் தெரிந்தது. ஆதினிக்கு முகம் கன்றிவிடப் பார்த்தது. அதை மறைத்துக்கொண்டு வந்த விசயத்தைச் சொன்னாள்.

“ஓ!” என்று கேட்டுக்கொண்டவனுக்கு இதை எல்லாளனிடம் சொல்வதை விட்டுவிட்டுத் தன்னிடம் ஏன் வந்தாள் என்கிற கேள்வி உண்டாயிற்று.

அதை வெளியே காட்டாமல், “நீங்க ஒண்டுக்கும் யோசிக்காதீங்க. இனி அவன் எடுத்தா எப்பவும் கதைக்கிற மாதிரியே கதைங்க. போனமுறை மாதிரி ஏதும் உதவி கேட்டாலோ, வெளில சொல்ல வேண்டாம் எண்டு எதையாவது சொன்னாலோ மட்டும் எங்களிட்டச் சொல்லுங்க. எதையும் நீங்களாத் தூண்டித் துருவப் போக வேண்டாம். அவனாச் சொன்னாக் கேட்டு வச்சுக்கொள்ளுங்க. அந்தளவும் போதும்.” என்றான்.

சரி என்று கேட்டுக்கொண்டு எழுந்து புறப்பட்டாள். அவளின் ஸ்கூட்டி வரையிலும் கூடவே வந்தான் கதிரவன். அவள் புறப்படும் வேளையில் என்ன தோன்றியதோ, “கவனமாப் போவீங்கதானே?” என்றான்.

“ம்.” என்றவளுக்கு இந்த அக்கறையும் கவனிப்பும் அவளுக்கானதா என்கிற கேள்வி எழுந்ததும் முகம் வெளிப்படையாகவே கன்றிப் போனது. அதற்குமேல் சமாளிக்க முடியாமல், “சொறி!” என்றாள், தடுமாறும் குரலில்.

மெல்லிய ஆச்சரியம் விழிகளில் படர்ந்தாலும் கேள்வியாகப் பார்த்தான் கதிரவன்.

“அது… இவ்வளவு நாளும் உங்களிட்ட நடந்துகொண்ட முறைக்கு.”

இதைக் கதிரவனால் நம்பவே முடியவில்லை. அவள் மீது வெறுப்பிருந்தாலும் எல்லாளனுக்காகவும் இளந்திரையனுக்காகவும் மட்டும்தான் வாசல் வரைக்கும் வந்ததும், கவனமாகப் போவாயா என்று கேட்டதும். அவளானால் மன்னிப்புக் கேட்கிறாள்.

“பரவாயில்ல விடுங்க!” என்றான் தன்னை மீறி.

அது கூட அவளை இன்னுமே குன்ற வைக்க, ஒரு தலையசைப்புடன் அங்கிருந்து வெளியேறினாள்.

*****
பல்கலையில் மூன்றாவது பாடவேளை முடிந்திருந்தது. இலேசாக வயிறு கடிக்கவும் எதையாவது கொறிப்போம் என்றெண்ணி வெளியே வந்த ஆதினி, அவளை நோக்கி வந்துகொண்டிருந்த எல்லாளனைக் கண்டதும் ஒரு கணம் நின்றாள்.

அவன் மீது மலையளவு கோபம் இருந்த போதிலும் அந்தப் பெரிய பல்கலை வளாகத்தில், காக்கி உடையில், கம்பீரமாக நடந்து வந்தவனைக் கண்டு, ஒரு கணம் தடுமாறித்தான் போனாள்.

இத்தனைக்கும் பிறகுமா? மனம் கசந்து விட, வேகமாகப் பார்வையை அகற்றப் போனவள், அந்த வளாகத்தில் ஆங்காங்கே நின்றிருந்த மாணவர்களும் அவனைக் கவனிப்பதைக் கண்டு, சினம் கொண்டாள்.

சாதாரண உடையிலாவது வந்திருக்கலாம். இனி என்ன? அவளைத் தேடி வந்து கதைத்து, மொத்த மாணவர்களின் வாய்க்கும் விருந்து வைக்கப் போகிறானா? அவனுக்கும் அவளுக்கும் எதிர்காலத்தில் திருமணம் என்று, அவள் உளறியது வேறு இன்னுமே உலவிக்கொண்டு இருக்கிறதே!

அவனைக் காணாதது போன்று விறுவிறு என்று கண்டீனை நோக்கி நடக்கத் தொடங்கினாள். அதற்கு விடாமல், வேக எட்டுகளில் விரைந்து வந்து, “நான் உன்னத் தேடி வந்தா, நீ எங்க போறாய்?” என்றான் எல்லாளன்.

“உங்களை ஆரு இஞ்ச வரச் சொன்னது?” நடையை நிறுத்தாது மெல்லிய குரலில் சிடுசிடுத்தாள்.

அவளை ஒருமுறை திரும்பிப் பார்த்துவிட்டு, “உனக்குப் பசி போல. வா, சாப்பாடு வாங்கித் தாறன்.” என்றான் அவன்.

நடை நிற்க, அவனை நேராகப் பார்த்து, “என்ன விசயம்?” என்றாள் நிதானமாக.

சீறுவாள், சினப்பாள் என்று நினைத்ததற்கு மாறான இந்த நிதானம் உள்ளூர வியப்பைத் தோற்றுவிக்க, “சாப்பிட உனக்கு என்ன வேணும்?” என்று கேட்டான் அவன்.

“என்ன விசயம் எண்டு கேட்டனான்?”

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock