நீ தந்த கனவு 17 – 1

இளந்திரையனைப் பார்க்க அவர்களின் வீட்டுக்கு வந்திருந்தான் எல்லாளன். ஆதினியைச் சமாதானம் செய்துவிட்டால் அவரோடு கதைப்பது இலகுவாக இருக்கும் என்று எண்ணித்தான் இத்தனை நாள்களும் அவரோடான சந்திப்பைத் தள்ளிப்போட்டிருந்தான்.

அவள் இப்போதைக்கு மலையிறங்குவது போலில்லை. அதில், அவரைப் பார்த்து விடுவது என்று முடிவெடுத்திருந்தான்.

அனுபவம் மிக்க மனிதர் அவர். தன் மனத்திலிருப்பதைக் காட்டிக்கொள்ளாமல் அவனைச் சாதாரணமாகவே எதிர்கொண்டார்.

அதுவே தவறிழைத்தது போன்ற சங்கடத்தில் ஆழ்த்த,
“சொறி அங்கிள்.” என்று சொன்னான் எல்லாளன்.

“பிழையான எண்ணத்தோட கதைக்காட்டியும் சியாமளா கதைச்ச விதம் பிழைதான் அங்கிள். அதுக்கு அண்டைக்கே அவளைக் கண்டிச்சிட்டன். இனி இப்பிடி ஏதும் நடக்காது. அதே மாதிரி உங்களுக்கு நான் தந்த சம்மதமும் எண்டைக்கும் மாறாது!” என்று தன் நிலையையும் அவருக்குத் தெரியப்படுத்தினான்.

அவரின் தலை மறுப்பாய் அசைந்தது. “இனி அந்தச் சம்மதத்துக்கு எந்த அர்த்தமும் இல்ல எல்லாளன். எதுவா இருந்தாலும் என்ர பிள்ளைக்குப் பிடிக்காதது, விருப்பம் இல்லாதது நடக்காது.” என்றார் தெளிவாக.

“அண்டைக்கு உங்கள நான் மறைமுகமா வற்புறுத்தினது உண்மைதான். அதுக்குக் காரணம், செல்லமா வளத்த பிள்ளையை நல்லவன் ஒருத்தன்ர கைல பிடிச்சுக் குடுத்திடோணும் எண்டுற ஆசையும், கண்ணுக்கு முன்னால இருக்கிற திறமையானவனக் கைநழுவ விட்டுடக் கூடாது எண்டுற அவசரமுமே தவிர, என்ர பிள்ளையைக் கட்டிக் குடுக்க ஏலாம இல்ல.” என்று சொன்னவரை முகம் கன்ற வேகமாக இடை மாறித்தான் எல்லாளன்.

“பிளீஸ் அங்கிள், இப்பிடியெல்லாம் நீங்க விளக்கம் சொல்ல வேண்டாம். எனக்கு உங்களையும் தெரியும், உங்கட மனதையும் தெரியும். நானும் உங்கள அப்பிடி நினைக்கேல்ல. யோசிக்காம ஓம் எண்டு சொல்லவும் இல்ல. இதை நீங்க நம்போணும். இனி ஆதினி என்ன முடிவு எடுப்பாளோ எனக்குத் தெரியாது. ஆனா, எனக்கு அவள்தான். உங்களுக்கு நான் தந்த சம்மதத்தின்ர பொருள் என்னளவில எண்டைக்கும் மாறாது, அங்கிள்.”

இதையெல்லாம் ஏற்கனவே அவர் யோசித்திருந்தார். அதனால், அவன் சொன்னதைத் தலையசைத்து ஏற்றுக்கொண்டவர், “உங்களுக்கும் என்ர பிள்ளைக்கும் கலியாணம் நடந்தா, அதைவிடப் பெரிய சந்தோசம் எனக்கு வேற எதுவும் இருக்கப் போறேல்ல எல்லாளன். ஆனா, ஏற்கனவே சொன்ன மாதிரி, இனி எதுவா இருந்தாலும் அவான்ர விருப்பம்தான்.” என்று முடித்துக்கொண்டார்.

அதன் பிறகான அவர்களின் பேச்சு, ஊருக்குள் நடக்கும் பிரச்சனைகளுக்குத் தாவி இருந்தது. அவரின் அறையிலிருந்து அவன் வெளியே வந்தபோது, ஆதினி மாடியிலிருந்து இறங்கி வந்துகொண்டிருந்தாள்.

அவன் ஒருவன் அங்கு நிற்கிறான் என்று காட்டிக்கொள்ளாமல் அவள் வாசலுக்கு நடக்க, “எங்க வெளிக்கிட்டுட்டாய்?” என்று கேட்டு அவளை நிறுத்த முயன்றான்.

அவன் நிற்பதையே அலட்சியம் அவன் குரலையா செவிமடுக்கப் போகிறாள்? தொடர்ந்து நடந்தாள்.

“ஆதினி!”

எரிச்சலுடன் திரும்பியவள் பார்வையில் சினம் மிகுந்திருந்தது. “இப்ப என்ன வேணும் உங்களுக்கு?”

“ஒரு தேத்தண்ணி. ரெண்டு பேருக்கும் ஊத்திக்கொண்டு வா, குடிப்பம்.” அவனும் இளந்திரையனும் பேசிக்கொண்டு இருந்தபோது சாந்தி கொண்டுவந்து தந்தார்தான். என்றாலும் இன்னுமொரு முறையும் அவனுக்கு வேண்டும் போல்தான் இருந்தது.

“சாந்தி அக்காவைக் கேளுங்க, தருவா.”

“ஏன், நீ தரமாட்டியா?”

“எனக்கு ஊத்தத்(ஊற்ற) தெரியாது.”

“இவ்வளவு வாயடிக்கிற உனக்கு ஒரு தேத்தண்ணி ஊத்தத் தெரியாதோ?”

அர்த்தமே இல்லாத தர்க்கம். என்னவோ அவனுக்கு இருக்கிற அழுத்தங்களுக்கு இவளோடு மல்லுக்கட்டுவது மனத்தை இலேசாக்குவது போலிருந்தது.

“இப்ப என்ன வே…” என்று திரும்பவும் கேட்க ஆரம்பித்தவள், அவன் மீண்டும் தேநீரில் வந்து நிற்பான் என்று தெரிந்து, வாயை இறுக்கி மூடிக்கொண்டாள்.

எல்லாளனுக்குச் சிரிப்பு வந்தது. சாந்தி அக்காவை அழைத்துத் தேநீருக்குச் சொல்லிவிட்டு, “வந்து இரு. அந்த அஜயைப் பற்றி உன்னட்டச் சொல்லோனும்.” என்றான்.

அப்படி அவன் என்னதான் செய்தான் என்று அறிந்துகொள்ள வேண்டி, ஆதினியும் வந்து அமர்ந்தாள். அவனும் நடந்ததை எல்லாம் சொன்னாள். அவளுக்கு மிகுந்த அதிர்ச்சி.

“இப்ப விளங்குதா? அவன் என்னத்துக்கு உன்னோட அங்க வந்தவன் எண்டு? வேவு பாக்க வந்திருக்கிறான். என்ன நடக்குது எண்டு ஆராய வந்திருக்கிறான். தன்னைப் பற்றி ஏதாவது சந்தேகம் வந்திருக்கா எண்டு கவனிக்க வந்திருக்கிறான். ஆரா இருந்தாலும் கொஞ்சம் கவனமா இரு, பொறுப்பா நட எண்டு இதுக்குத்தான் சொல்லுறது. நீ கேக்கவே மாட்டாய். கவனமா இருக்கவும் மாட்டாய். அந்தக் கோபத்திலதான் என்னென்னவோ கதைச்சு, அது…” நடந்ததைப் பற்றிப் பேச வேண்டாம் என்று அவன் பேச்சை நிறுத்தி விட, அவளுக்கு முகம் கன்றிப் போனது.

அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்கள் ஒவ்வொன்றும் அவளின் பொறுப்பற்ற செய்கைகளை அப்பட்டமாகத் தோலுரித்துக் காட்டுவது போலிருக்க, அவன் முகம் பார்க்க முடியவில்லை.

கன்றிச் சிவந்திருந்த முகமும், அவன் பார்வையைத் தவிர்க்கும் விதமும் ஏதோ ஒரு விதத்தில் அவனைப் பாதித்தது. அவளைச் சமாதானம் செய்துவிட விரும்பி, “விடு! இனிக் கவனமா இரு, போதும்!” என்றான் தன்மையாக.

“அவன் ஒரு உதவி கேட்டான், நீ செய்தாய். உன்னளவில அவ்வளவுதான். அது எனக்கு விளங்குது. ஆனா, ஆராவது வந்து எதேற்சையா உதவி கேக்கிறதுக்கு நீ சாதாரண வீட்டுப் பிள்ளை இல்ல. எங்க மூண்டு பேர்ல ஆரோ ஒருத்தர்ல இருக்கிற கோபத்தைக் காட்டவோ, இல்ல, எங்களை அடக்க நினைச்சோ உன்னை ஒரு துருப்புச் சீட்டாப் பயன்படுத்த சான்சஸ் இருக்கு. இத உன்னப் பயப்பிடுத்தச் சொல்லேல்ல. எப்பவும் கவனமா இருக்கோணும் எண்டுறதுக்காகத்தான் சொல்லுறன். அதே மாதிரி, உனக்கு அப்பிடி ஒண்டும் வராது. வர நாங்க விடமாட்டம், சரியா?” என்றான் கனிவோடு.

பெரிய அக்கறை! உதட்டோரம் வளைய, “அதுதான் அண்டைக்கு ஸ்டேஷனுக்கு கொண்டுபோய் விசாரிப்பன் எண்டு சொன்னீங்க போல! இதில நீயும் சேர்ந்துதான் கொன்றியா எண்டு கேள்வி வேற!” என்றாள் அவள் ஏளனமாக.

அவனுக்குப் பேச்சற்றுப் போனது.

“இவ்வளவு நாளும் பொறுப்பில்லாமத்தான் இருந்திருக்கிறன் எண்டு எனக்கும் விளங்குதுதான். அதுக்காக, நீங்க எல்லாரும் சேர்ந்து செய்தது இருக்குத்தானே…” என்றவள், மேலே பேச முடியாமல் விருட்டென்று எழுந்து வீட்டுக்குள் நடந்தாள்.

அப்படியே அமர்ந்துவிட்டான் எல்லாளன். அவள் பேசிவிட்டுச் சென்ற விடயமும் விதமும் மனத்தை என்னவோ செய்தது.

திடீரென்று எல்லாளனின் கைப்பேசி அனுங்கியது. அப்போதுதான் தன்னிலையை மீட்டு அழைப்பை ஏற்றான்.

“சேர், ஆளைப் பிடிச்சாச்சு! சாமந்தி கேஸ் இனி முடிவுக்கு வந்திடும்.” அந்தப் பக்கமிருந்து உற்சாகமாக அறிவித்தான் கதிரவன்.

error: Alert: Content selection is disabled!!
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock