இளந்திரையனின் முன்னால் காண்டீபன் தந்த அட்மிஷன் போர்மை வைத்தாள் ஆதினி. புருவங்கள் சுருங்க அவற்றின் மீது பார்வையை ஓட்டியவர், வேகமாக நிமிர்ந்து, “என்னம்மா இது?” என்றார்.

“எனக்குக் கொழும்பில படிக்க விருப்பமா இருக்கப்பா.”

“இதென்ன திடீரெண்டு. முதல் அப்பிடி எப்பிடியம்மா கொழும்புக்கு, அதுவும் தனியா விடுறது? நீ சின்னப்பிள்ளை.”

“எனக்கு இருபது வயசாகப் போகுது அப்பா. இன்னும் சின்னப்பிள்ளை எண்டு சொல்லுவீங்களா?”

அப்படிச் சொன்னவளைச் சற்று நேரம் இமைக்காமல் பார்த்துவிட்டு, “அப்பாவில இருந்த கோபம் போகேல்லையாமா? இல்ல, அம்மாதான் இல்ல இனி அப்பாவும் வேண்டாம் எண்டு நினைக்கிறியா?” என்றதும் துடித்துப்போனாள் ஆதினி. “அப்பா என்னப்பா..” என்றாள் தொண்டை அடைக்க.

“எனக்கு எண்டு இருக்கிறது நீங்க மூண்டுபேரும் தான். எல்லாளனை உனக்குக் கட்டிவைக்க நினைச்சதுக்கு இன்னொரு காரணம், காலத்துக்கும் எனக்குப் பக்கத்திலேயே இருப்பாய் எண்டுறதும் தான். அப்பிடி நான் நினைச்சா நீ விலகிப்போறன் எண்டு சொல்லுறாய். அதுதான் உன்ர விருப்பம் இல்லாம இனி எதுவும் நடக்காது எண்டு சொல்லிட்டேன் தானே. பிறகும் என்னம்மா?”

“அப்பா ப்ளீஸ்!” என்றாள் ஆதினி கெஞ்சலாக. “அதுக்காகப் போகேல்ல. இது எனக்கு விருப்பமா இருக்கு. இன்னும் ஒரு ரெண்டரை வருசம்தான். அது பாத்துக்கொண்டு இருக்க ஓடிடும். படிச்சு முடிச்சிட்டு இங்கதான் வருவன்.”

“இவ்வளவு காலமும் இல்லாம திடீர் எண்டு இந்த முடிவு எடுக்க என்ன காரணம்? எனக்கு உண்மை வேணும்!”

தகப்பனின் அந்தக் கேள்விக்குப் பதில் சொல்லத் திணறினாள் ஆதினி. அதேநேரம், தன்னை விளக்காமல் அவர் சம்மதிக்க மாட்டார் என்றும் விளங்கிற்று. அதில், “இங்க என்ர அடையாளம் நீதிபதி இளந்திரையன்ர மகள், ஏசிபி அகரனின்ர தங்கச்சி எண்டுறது அப்பா. இவ்வளவு காலமும் எனக்கும் அது நல்லாத்தான் இருந்தது. ஆனா இப்ப இப்ப அது பிடிக்கேல்ல. இங்க என்னால நானே நினைச்சாக்கூட அந்த அடையாளங்கள் இல்லாம இருக்கேலாது. அதோட… உங்க எல்லாரையும் விட்டுக் கொஞ்சம் விலகி இருக்கவேணும் மாதிரியும் இருக்கு.” என்று கடைசி வார்த்தைகளை, அவர் முகம் பாராமல் சொல்லிமுடித்தாள்.

நடந்த நிகழ்வுகள் எல்லாம் அவளை இந்தளவு தூரத்துக்குப் பாதித்திருக்கிறது என்பது அவருக்கும் மெல்லிய அதிர்ச்சிதான். ஒன்றும் சொல்லாமல் அவளையே பார்த்தார். ஆதினி தடுமாறினாள். கேள்விகளுக்குக் கூடப் பதில் சொல்லிவிடலாம். இந்தப் பார்வைக்கு?

அணிந்திருந்த கண்ணாடியைக் கழற்றி வைத்துவிட்டு முகத்தைக் கைகளால் துடைத்தார் இளந்திரையன். ஆதினிக்கு விழிகள் இலேசாகக் கலங்கிற்று. “சொறி அப்பா.” என்றாள் அடைத்தகுரலில்.

“இந்த விலகல் தற்காலிகமா இல்ல நிரந்தரமா?” என்றார் நிமிர்ந்து அவளைப் பார்த்து.

“அப்பா என்னப்பா நீங்க?” என்று பரிதவித்துப்போனாள் ஆதினி. “என்னாலயும் நிறைய நாளைக்கு உங்களை எல்லாம் விட்டுட்டு இருக்கேலாது. என்னவோ விலகி இருக்க வேணும் மாதிரியே இருக்கு. எனக்கான அடையாளத்தை நானே தேடவேணும் மாதிரி இருக்கு. இவ்வளவு ஸ்ட்ரோங்கா என்ர மனம் இதுக்கு முதல் இப்பிடி எதையும் நினைச்சதே இல்ல. ஒருக்கா போய்த்தான் பாக்கிறேனே. நீங்க ஆரும் இல்லாத வெறும் ஆதினியா மட்டுமே வாழ்ந்து பாக்கறேனே.” என்றபோதுதான் அவளின் எண்ணம் புரிந்தது அவருக்கு. அவள் தன்னைத் தேட ஆரம்பிக்கிறாள். அவளின் சுயத்தைக் கண்டுபிடிக்க விரும்புகிறாள்.

அதற்குமேல் அவர் மறுக்கவில்லை. இத்தனை நாட்களாகத் தன் சிறகுகளுக்குள் வைத்துப் பாதுகாத்தார். அதன்பிறகு எல்லாளனின் கைகளுக்குள் கொடுக்க எண்ணினார். யோசித்துப்பார்க்க அதுகூடத் தவறாகத்தான் தோன்றிற்று. அவள் அவளாக மிளிர்வதுதானே அழகு. செல்லப்பெண். அவளைப் பிரிந்திருப்பது இலகுவான காரியமல்ல. அந்த வீடு அவளில்லாமல் அதன் சோபையை இழந்துவிடும்; துள்ளலை மறந்துவிடும். ஆனாலும், வேறு வழியில்லை. அவள் தன்னைத் தேடி எடுத்துக்கொண்டு வரட்டும் என்று எண்ணிச் சம்மதித்தார்.

அன்றைய இரவு உணவின்போதே அவளின் முடிவை அறிவித்தார் இளந்திரையன். அகரனுக்கு மிகுந்த அதிர்ச்சி.

“அவள்தான் சின்னப்பிள்ளை. யோசிக்காமச் சொன்னா நீங்க ஏனப்பா ஓம் எண்டு சொன்னீங்க?”

“ஆசைப்படுறா. ஏன் தடுக்க? அதைவிட, என்ர நண்பன் குணசேகரன் கிரிமினல் லோயரா கொழும்பில தானே இருக்கிறான். அவன்ர வீட்டிலேயே தங்கிப் படிக்கட்டும். பயமில்லை.” என்றார் அவர்.

அவர் தன் முடிவில் தெளிவாக இருக்கிறார் என்றதும் தங்கையிடம் திரும்பினான் அகரன். “ஏன் ஆதிம்மா, அண்ணாவில இருக்கிற கோபம் உனக்குப் போகவே போகாதா? அண்டைக்குப் பிறகு நீ என்னோட பழைய மாதிரிக் கதைக்கிறதே இல்ல. போகப் போகச் சரியாகிடும் எண்டு நம்பிக்கொண்டு இருந்தனான். ஆனா நீ..” என்று வேதனையோடு சொன்னவன், “இது நீ எனக்குத் தாற தண்டனையா?” என்று வலி நிறைந்த குரலில் வினவினான்.

அவள் பதில் பேசவில்லை. அது அவனை வதைத்தது. “நீ போகக்கூடாது ஆதி!” என்றான் அழுத்தமாக.

“எண்ட்ரன்ஸ் எக்ஸாமுக்குப் போட்டுட்டன்.” அறிவிப்பு போல் சொன்னாள் அவள். தமையன் தவித்துப்போனான். “என்னப்பா இது? இதுக்கு நீங்களும் ஓம் எண்டு சொன்னது கொஞ்சமும் எனக்குப் பிடிக்கேல்ல அப்பா. சும்மாவே செல்லமா வளந்தவளுக்குக் கைய நீட்டிட்டனே எண்டு நான் கவலைப்படாத நாள் இல்ல. இப்ப இது இன்னுமே என்னை வதைக்கப் போகுது.” என்றவனுக்கு மேலே பேசமுடியாமல் போயிற்று.

சியாமளாவுக்குக் கணவனின் வேதனையைக் கண்டு கண்ணீரே வரப்பார்த்தது. கூடவே, இதையெல்லாம் ஆரம்பித்து வைத்தவள் அவள் என்கிற குற்ற உணர்வும் உண்டாயிற்று. அதில், “என்னாலயா ஆதினி. அண்டைக்கு நான் கதைச்சதாலயா? அதுதான் சொறி சொல்லிட்டேனே. இப்பவும் சொல்லுறன், அண்டைக்கு நான் அப்பிடியெல்லாம் கதைச்சிருக்கக் கூடாது. உன்ர அண்ணாவும் உனக்குக் கை நீட்டி இருக்கக் கூடாது. எங்க ரெண்டுபேரையும் மன்னிச்சுக்கொள்ளு. ஆனா எங்களை விட்டுட்டுப் போகாத, பிளீஸ். இது என்னைக் காலத்துக்கும் குற்ற உணர்ச்சில தள்ளப் போகுது, ஆதினி. அதுதான் உன்ர விருப்பமா?” என்றதும் விழுக்கென்று கோபத்துடன் நிமிர்ந்தவள், புதிதாகப் பயின்ற பாடமாகத் தன்னை அடக்கி நிதானமாகப் பேசினாள்.