நீ தந்த கனவு 28 – 2

“இதவச்சு என்ன விளையாடினீங்க?”

“இதுல தண்ணி நிரப்பிப் பூக்கண்டுக்கு விட்டனாங்க. ஒருக்கா விதுரா குடிச்சும் பாத்தவள். அதோட மயங்கிட்டாள்.” என்றாள்
அவள்.

வீட்டின் வெளியே வந்து, அந்த வேலியை ஆராய்ந்தபடி நடந்தவனின் கைகளில், இன்னும் இரண்டு ஊசிகள் சிக்கின. அவற்றை இலேசாக முகர்ந்து பார்த்தான். அதிலிருந்து வந்த நெடி, அவை என்ன ஊசிகள் என்று சொல்லிற்று.

வீடுகள் செறிந்து இருக்கும் இடம் அது. இங்கு யார்? கேள்வியுடன் விழிகளைச் சுழற்றியபோது, ஒரு அம்மா இவன் பார்வைக்கு மறைவதைக் கண்டான்.

ஆனாலும் கவனித்தது போன்று காட்டிக்கொள்ளாமல், அந்த மூன்று ஊசிகளையும் எடுத்துக்கொண்டு புறப்பட்டான். அங்கு, இந்துஜா மயக்கம் தெளிந்திருந்தாள். ஆனாலும் தலை சுற்றல், வயிற்றுப்போக்கு, மெல்லிய மயக்க நிலை என்றிருந்தாள். ஆபத்தில்லை, இரண்டு நாள்களில் வீட்டுக்கு விட்டுவிடுவோம் என்று வைத்தியர் சொன்னதைக் கேட்டுக்கொண்டு புறப்பட்டான்.

அடுத்த அரைமணி நேரத்தில், சாதாரண உடையில், அதே தெருவின் கடைசியில் இருக்கும் வீட்டின் பெல்லை அழுத்தினான் எல்லாளன். கதிரவனும் கூட வந்திருந்தான்.

வந்து திறந்த பெண்மணியின் முகத்தில் இவனைக் கண்டதும் அப்பட்டமான அதிர்ச்சி.

அதைக் குறித்துக்கொண்டபடியே, “உங்களோட கொஞ்சம் கதைக்கோணும் அம்மா. உள்ளுக்க வரலாமா?” என்று வினவினான்.

அவருக்குப் பயத்தில் நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக்கொண்டது. மறுக்க முடியாமல் மெல்ல விலகி வழிவிட்டார்.

“வீட்டுல ஆர் ஆர் இருக்கிறீங்க?”

“நான், இவர், மகள், மகன் நாலு பேர்.” அவருக்கு நடுங்கியது.

“எங்க மற்ற எல்லாரும்?”

“இவர் சுகாதாரத் திணைக்களத்தில வேல. வேலைக்குப் போய்ட்டார். மகளும் டீச்சரா இருக்கிறா. மகன் கம்பஸ் போய்ட்டார்.”

“இதுல ஆரம்மா போதை ஊசி பாவிக்கிறது?” இதுவரையில் விசாரித்துக்கொண்டிருந்த அதே சாதாரணக் குரலில்தான் கேட்டான்.

அவருக்கோ வியர்த்து வழிய ஆரம்பித்தது. “இல்ல, அப்பிடி ஆரும் இல்ல.” என்று தடுமாறினார்.

“உங்களிட்டக் கடுமை காட்ட எனக்கு விருப்பம் இல்ல. அதோட, அயலட்டையில தேவையில்லாம உங்களைக் காட்டிக் குடுக்க வேண்டாம் எண்டுதான், சாதாரண உடுப்பில வந்து விசாரிக்கிறம். உங்கட வீட்டுல ஆரோ ஒரு ஆளுக்குத்தான் இந்தப் பழக்கம் இருக்கு. அது உங்களுக்கும் தெரிஞ்சிருக்கு. தெரிஞ்சும் திருத்தாம மறைக்கிறதே சட்டப்படி குற்றம். அது, அந்த நபரின்ர எதிர்காலத்துக்கும் நல்லமில்ல. நீங்க உண்மையச் சொன்னா, நானும் உங்களுக்கு உதவி செய்வன். இல்லாட்டி, மொத்தக் குடும்பத்தையும் கொண்டுபோய் ஸ்டேஷன்ல வச்சு விசாரிக்க வேண்டி வரும்.” என்றவனின் பேச்சில் உடைந்தார் அவர்.

கிட்டத்தட்ட மூன்று வருடங்களாக அவர் சுமக்கும் பாரம் அழுகையோடு வெளியே வந்தது.

“என்ர மகன்தான் தம்பி. எவ்வளவோ பாடுபட்டும் என்னால அவனை மாத்தேலாமாப் போயிட்டுது. கடைசில மானத்துக்கு அஞ்சி மறைச்சுப்போட்டன். இவர் பொல்லாத கோவக்காரர். தெரிஞ்சா நொருக்கிப் போடுவார். மகள் கலியாணத்துக்கு நிக்கிறா. இது தெரிய வந்தா என்ன ஆகும் சொல்லுங்கோ? கௌரவமா வாழுற குடும்பம். இப்பிடி எண்டு தெரிஞ்சா ஊர் உலகம் காறித் துப்பும் எண்டுற பயத்தில, அவன் அடிச்சாலும் வாங்கிக்கொண்டு, வாய மூடிக்கொண்டு இருக்கிறன் தம்பி.” என்று அழுதவரை அதிர்ச்சியோடு பார்த்தனர் இருவரும்.

பெற்ற தாய்க்கு அடிக்கிற அளவுக்கு ஒருவனை மூர்க்கமாக்கி இருக்கிறது இந்தப் போதைப் பழக்கம். சமையலறையைத் தேடிப்போய்த் தண்ணீர் கொண்டுவந்து கொடுத்தான் கதிரவன்.

அருந்தி ஆசுவாசம் ஆனதும், “ஆழாதீங்கோ அம்மா. அழாம என்ன எல்லாம் நடந்தது எண்டு விவரமாச் சொல்லுங்கோ!” என்றான் எல்லாளன்.

“இது கிட்டத்தட்ட மூண்டு வருசமா நடக்குது தம்பி. காசு கேப்பான். குடுக்காட்டி அடிப்பான். கையக் கால உடைப்பான். நான் வீட்டில ஒருத்தருக்கும் சொல்லுறேல்ல. ஒவ்வொரு முறையும் அங்க விழுந்திட்டன், இங்க விழுந்திட்டன் எண்டு பொய்யைச் சொல்லிச் சமாளிக்கிறது. இப்ப, காசு பிடுங்கி முடிஞ்சு, நகையைப் பிடுங்க ஆரம்பிச்சிட்டான். சத்தியமா எனக்கு என்ன செய்ய எண்டு தெரியேல்ல!” என்றவரின் பேச்சைக் கேட்கையில் கோபம்தான் வந்தது.

“ரகசியமாத் தன்னும் எங்களிட்ட வந்து சொல்லி எல்லோம்மா இருக்கோணும்? மானம், மரியாதை, குடும்ப நிம்மதி எண்டு நீங்க மறைச்சதுதான் அவனுக்கு அவ்வளவு தைரியத்தைக் குடுத்திருக்கு. இல்லாம உங்களுக்கு அடிக்கிற அளவுக்கு வந்திருப்பானா? சில விசயங்களை முளையிலேயே கிள்ளோணும் அம்மா. அந்தச் சின்ன பிள்ளைக்கு உயிராபத்து ஏதும் வந்திருந்தா என்ன செய்து இருப்பீங்க?” இதமாகப் பேசினாலும் கண்டிப்போடே வினவினான்.

“ஓம் தம்பி. நானும் நல்லாக் கலங்கிப் போனன். அப்பதான் இவ்வளவு நாளும் எவ்வளவு பெரிய பிழை செய்திருக்கிறன் எண்டு விளங்கினது. ஐயா, உங்களிட்டக் கெஞ்சிக் கேக்கிறன். நீங்க அவனை என்ன எண்டாலும் செய்ங்கோ. எனக்கு எப்பயோ அவனில இருந்த பிள்ளைப் பாசம் அற்றுப் போயிற்றுது. ஆனாப்பு ஒரு மகள் இருக்கிறா. அவவின்ர வாழ்க்கைக்கு எந்தப் பிரச்சினையும் வரக் கூடாது. பிறகு, இந்தக் கேவலத்தை எல்லாம் நான் பொறுத்துப் போனதுக்கு அர்த்தமே இல்லாமப் போயிடும்.” என்று இன்னும் அழுதார் அவர்.

“சரியம்மா அழாதீங்க. நாங்க உங்களிட்ட வரவும் இல்ல, நீங்க எங்களிட்ட எதுவும் சொல்லவும் இல்ல, சரியா? மிச்சத்தை நாங்க பாக்கிறம். இனியும் நீங்க இதைப் பற்றி ஆரிட்டயும் கதைக்காதீங்க. முக்கியமா உங்கட மகனுக்கு முன்னால எப்பவும் போல இருங்க.” என்றுவிட்டுக் கதிரவனோடு புறப்பட்டான் எல்லாளன்.

“இனி என்ன சேர்? இந்த அம்மான்ர மகனைப் பிடிக்கிறதா?”

“அவனை ஆறுதலாப் பிடிக்கலாம். முதல், அவன் எங்க வாங்குறான் எண்டு கண்டு பிடிப்பம்.” என்றவன் சிந்தனை, ‘தமயந்தி சத்தியசீலன்’ கேஸுக்கு சென்று வர, “கம்பஸையும் அதைச் சுத்தி இருக்கிற இடங்களையும் கண்காணிக்கோணும் கதிரவன்.” என்றவன் அன்றே காரியத்தில் இறங்கினான்.

ஒற்றை பைக்கில் இருவராக வந்தவர்கள், ஆளுக்கொரு பைக்கை எடுத்துக்கொண்டு, பல்கலைக்கழகத்தின் இரு திசையிலும் நின்றுகொண்டனர்.

இரண்டு மணிநேரக் காத்திருப்பின் பின்தான் வெளியே வந்தான் அவன். கைப்பேசியில் இருந்த புகைப்படத்தில் சரி பார்த்துக் கொண்டனர். அவன் பைக், எல்லாளன் இருந்த புறமாகப் புறப்பட, அவனுக்குச் சந்தேகம் வராத இடைவெளியில் இவர்களும் பின் தொடர்ந்தனர்.

ஊரின் உட்புறம் அமைந்திருந்தது ஒரு பெட்டிக்கடை. அங்கே சென்றான் அவன். அவனைக் கண்டதும் கடைக்காரரின் மாறிய உடல்மொழியும், போனதும் வந்ததுமாக அவனிடம் இருந்த வேகமும் அவர்களுக்குள் என்ன விற்பனைப் பரிமாற்றம் நடந்திருக்கும் என்று சொல்லிற்று.

எல்லாளனைத் திரும்பிப் பார்த்தான் கதிரவன். அவனையும் பிடிக்கவில்லை, கடைக்காரனையும் மடக்கவில்லை எனும்போது அடுத்து என்ன என்கிற கேள்வி அவனிடம்.

“இந்தக் கடைக்காரனுக்கு ஆர் சப்லை எண்டு கண்டு பிடிக்கோணும் கதிரவன். இரவு பகல் பாக்காமச் சிரமப்பட்டு, ஒருத்தனைக் கூட விடாம நாங்க பிடிச்சு உள்ளுக்குப் போட்டா, புதுசா ஆரோ ஒருத்தன் இந்த வேல பாத்துக்கொண்டே இருக்கிறான். அவனைப் பிடிக்கோணும்.” என்றான் பல்லைக் கடித்தபடி.

நேரம் ஆகிக்கொண்டே இருந்தது. இருவரும் மற்றவர்களின் கவனத்தைக் கவராதபடிக்கு அந்தக் கடையைக் கண்காணித்தபடி, எதிரெதிர் திசையில் நின்றுகொண்டனர். எதிர்த்தரப்புக்கு எந்த விதத்திலும் செய்தி சென்று, அவர்கள் உசாராகி விடக் கூடாது என்பதற்காக, வேறு ஆட்களை இதற்குள் புகுத்தவில்லை எல்லாளன். அவனே களத்தில் நின்றான்.

இருவரும் காலையில் சாப்பிட்டது. இப்போது வரை வேறு எதுவுமில்லை. எப்போது, எப்படி வருவானென்று தெரியாதவனைப் பிடிக்க நாள் முழுக்கக் காத்திருக்கிறார்கள்.

ஒருவர் இல்லாத நேரத்தில் அவன் வந்து, மற்றவரால் பிடிக்க முடியாமல் போயிற்று என்றால், அன்றைய நாளில் அவர்கள் பட்ட பாடு அனைத்துமே வீணாகிவிடும். கூடவே, அவன் உசாராகி விடுவான். இடம் மாற்றப் பட்டுவிடும். அதற்கு ஒரு நாள்ப் பட்டினி பரவாயில்லையே! அந்தக் கடைக்கே சென்று இரண்டு குளிர்பானங்கள் வாங்கி வந்தான் கதிரவன்.

“இரவு பத்துக்குப் பூட்டுவாராம்.”

“அதுவரைக்கும் பாப்பம்.”

அவ்வளவுதான் அவர்கள் பேசிக்கொண்டது. மீண்டும் கதிரவன் சென்று தனக்கான இடத்தில் நின்றுகொண்டான்.

இந்தக் கடைக்கு விநியோகிக்கிறவன் அன்றைக்கே வருவானா தெரியாது. ஆனால், காவல்துறைக்கு அஞ்சி, கடைக்காரர்கள் நிறைய வாங்கி வைத்து விற்க மாட்டார்கள் என்பது எல்லாளனின் கணிப்பு. அதுவும், இது ஒரு சின்ன பெட்டிக்கடை என்கையில் அளவு கொஞ்சமாகத்தான் இருக்கும். இன்றைக்கு இல்லாவிடில் நிச்சயம் நாளைக்கு மாட்டுவார்கள் என்கிற நம்பிக்கையோடு காத்திருந்தனர்.

அவர்களின் காத்திருப்புப் பொய்க்கவில்லை. கடையைப் பூட்டுவதற்காகக் கடைக்காரர் அனைத்துப் பொருட்களையும் ஒதுக்கி வைத்துக்கொண்டிருந்த நேரத்தில் கறுப்பு பைக் ஒன்று வந்து நின்றது.

நம்பர் பிளேட் தெளிவில்லை என்றதுமே, “கதிரவன் ரெடியா இருங்க!” என்று காதில் மாட்டியிருந்த ப்ளூடூத் வாயிலாக அறிவித்தல் கொடுத்தான் எல்லாளன்.

ஒரு பையில் கொண்டுவந்த பொருளும், மின்னல் விரைவில் நடந்த பணப் பரிமாற்றமும் அவன்தான் என்று உறுதிப்படுத்தி விட, அவனைப் பிடிக்கப் பாய்ந்தான் கதிரவன்.

நொடியில் கவனித்துவிட்டவன் பைக்குக்கு தாவி, மின்னல் விரைவில் எல்லாளனின் திசையில் அதை விரட்டினான். இதை எதிர்பார்த்திருந்த எல்லாளன், அவனை நோக்கி ஓடி வந்து, பைக்கில் இருந்தவனைப் பிடித்துத் தள்ளிவிட்டான்.

வீதியில் விழுந்து உருண்ட வேகத்திலேயே எழுந்து ஓட்டம் பிடித்தான் அவன். அதற்குள் கதிரவன் பைக்கை எடுத்துக்கொண்டு வர, எல்லாளன் துரத்திக்கொண்டு ஓடினான். இரண்டு நிமிடத் தூரத்தில் மடக்கிப் பிடித்தனர்.

அவனும் இவர்களிடமிருந்து விடுபட முழு வீச்சுடன் போராடினான். முழங்காலில் இடித்து, தரையில் விழுத்தி, கைகள் இரண்டையும் முதுகின் புறமாக எல்லாளன் மடக்கியதும் ஹெல்மெட்டைக் கழற்றினான் கதிரவன்.

யார் என்று பார்த்த இருவருமே அதிர்ந்து போயினர். கறுத்த முகமும் அவமானத்தில் சிவந்த விழிகளுமாக அங்கிருந்தவன் சாகித்தியன்.

error: Alert: Content selection is disabled!!
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock