“அதாவது, பிள்ளை மாதிரி வளர்த்த மனுசருக்காக்க சேர் பழிக்கு பழி வாங்க இதைச் செய்தீங்களோ? அந்தளவுக்கு நல்லவர்! அதுதான் அவே செத்ததும் ஊரைவிட்டு ஓடி ஒழிஞ்சீங்க போல.” என்று எள்ளலாகக் கேட்டவனையே பொருள் விளங்காப் பார்வை பார்த்தான் காண்டீபன். “இங்க பார், உன்ர இந்த நடிப்பை வேற எவனிட்டயும் போய்க் காட்டு. என்னட்ட இல்ல. எனக்கு உண்மை வேணும். இல்லையோ எப்பிடி உண்மைய வாங்குறது எண்டு எனக்குத் தெரியும்!” என்றவனின் சீற்றத்தில் சற்று நேரம் அமைதியானான் காண்டீபன். அவன் பார்வை மேசையில் கோர்த்திருந்த அவன் கைகளிலேயே இருந்தது.
ஒரு நெடிய மூச்சு ஒன்றை இழுத்து விட்டுவிட்டு நிமிர்ந்து எல்லாளனைப் பார்த்துப் பேச ஆரம்பித்தான்.
“எனக்கொரு உயிர் நண்பன் இருந்தவன். நினைவு தெரியிறதுக்கு முதலில இருந்தே நானும் அவனும் தான் கிரைம் பார்ட்னர்ஸ். ரெண்டு வீட்டிலேயும் பெரிய வசதி இல்ல. அதாலயோ என்னவோ அவ்வளவு நெருக்கம். எனக்கும் அவனுக்கும் நிறையக் கனவுகள். நல்லா படிக்கோணும், நல்ல உத்தியோகத்துக்குப் போகோணும், எங்கட ஊர்க் கோயிலைப் பெருசா கட்ட வேணும், ஏழைகளுக்கு இலவசமா படிப்புச் சொல்லிக் குடுக்கோணும், முதல் முதலா காதலிக்கிறவளையே கட்டவேணும் எண்டு நிறைய நிறைய..” என்றவனின் உதட்டோரம் வறண்ட சிரிப்பு.
பார்வையை வேகமாக அகற்றிக்கொண்டான் எல்லாளன். அவன் தாடை இன்னும் இறுகியது. “அவனுக்கு ஒரு ஆசிரியன் ஆகவேணும் எண்டு ஆசை. எனக்கு என்ர அப்பா மாதிரி நேர்மையான போலீஸ் ஆகவேணும் எண்டு ஆசை. ஒரு நாள்… ஒரு நாள்.. அந்த நாள் எங்கட வாழ்க்கைல வந்தே இருக்கக் கூடாது. ஆனா வந்தது. அவன்ர அம்மாவும் அப்பாவும் கொடூரமா கொலை செய்யப் பட்டுட்டினம். அப்பாக்கு அதைத் தாங்கவே முடிய இல்ல. நானும் அவனும் எப்பிடியோ அப்பிடித்தான் அவரும் அவன்ர அப்பாவும். கோபத்தோட, தன்ர நண்பன்ர குடும்பத்துக்கு நடந்த அநியாயத்தைத் தட்டிக் கேக்கப் போன அப்பாவைக் காணேல்ல. நாலு நாளா சித்திரவதை செய்தே இடுப்புக்கு கீழ இயங்கவிடாம செய்திட்டாங்கள். எங்க போனவர், ஆரைத் தேடிப் போனவர் எண்டு அவரைத் தேடிப்போன எனக்குக் கால முறிச்சிட்டாங்கள். இந்தக் கையால இப்பவும் ஒரு அளவு தாண்டின பாரத்தைத் தூக்கேலாது. உணர்வு இல்லாம போய் விட்டுடுவன்.” என்று இடக்கையைக் காட்டினான்.
அதிர்வுடன் திரும்பி அவனைப் பார்த்தான் எல்லாளன். சின்னதாகச் சிரித்தான் காண்டீபன். அந்தச் சிரிப்பின் பின் இருந்த வலியை, வேதனையை, விரக்தியை கண்டுகொண்ட எல்லாளனுக்குள் பெரும் பிரளயங்கள் நிகழ ஆரம்பித்தன.
“ஒரு மாசம், அப்பாவும் மகனும் அனாதைகள் மாதிரி ஆஸ்பத்திரில கிடந்தோம். ஆருமே வந்து பாக்கேல்லை. ஆருக்குமே நாங்க என்ன ஆனோம், எங்க போனோம் எண்டு தெரியாது. அப்பாக்கு நான் இருக்கிறனா எண்டு தெரியாது. எனக்கு அவர் இருக்கிறாரா எண்டு தெரியாது. ஒருவழியா ரெண்டுபேரும் உயிரோட வந்து சேர்ந்தா என்ர உயிர் நண்பனைக் காணேல்ல.” என்றவன் அந்த நாட்களுக்கே சென்று வந்திருக்க வேண்டும். களைப்புடன் விழிகளை ஒருமுறை மூடித் திறந்தான்.
“அவனை தேடுற நிலைமைலயும் நான் இல்ல. என்னைப் பாப்பேனா இல்ல அப்பாவைப் பாப்பேனா? அவனுக்கு என்னில கோவமாம், தோள் கொடுத்திருக்க வேண்டிய நேரத்தில அப்பாவையும் கூட்டிக்கொண்டு நான் எங்கயோ போயிட்டேன் எண்டு நினைச்சிருக்கிறான். அவனுக்கு உதவிக்கு வந்தா எங்களுக்கும் ஏதும் நடந்திடுமோ எண்டு நாங்க பயந்திட்டோமாம் எண்டு சொன்னானாம் எண்டு பிறகு ஒருநாள் மிதிலா சொன்னவள்.” என்றதும் மீண்டும் முகத்தைத் திருப்பிக்கொண்டான் எல்லாளன். அன்றைய நாட்களில் அவன் அப்படி நினைத்ததும் உண்மைதான்; அதை மிதிலாவிடம் சொன்னதும் உண்மைதான். அதனால தான் போகுமிடத்தைக் கூட யாரிடமும் சொல்லாமல் போனான். அந்த நேரம் அவ்வளவு விரக்தியும் கோபமும்.
“ஆனா, எனக்கு அவனில கோவம் இல்ல. திடீரெண்டு அம்மா அப்பாவைக் கோரமாப் பறி குடுத்துப்போட்டு, அதுக்கு போலீஸ், கேஸ் எண்டு அலைஞ்சுகொண்டு, குமர்ப்பிள்ளையா இருக்கிற தங்கச்சியையும் வச்சுக்கொண்டு, இனி அவனுக்கும் அவன்ர தங்கச்சிக்கும் எந்த நேரம் என்ன நடக்குமோ எண்டு பயந்துகொண்டு அந்த நேரம், அவன் என்ன பாடெல்லாம் பட்டிருப்பான் எண்டு எனக்குத் தெரியும். அவனால தெளிவா சிந்திக்கக்கூட அந்த நேரம் ஏலாம இருந்திருக்கும். என்ன, அவனுக்கு நான் தேவையா இருந்த நேரம் கூட நிக்கேலாம போச்சே எண்டுதான் எனக்குக் கவலை. அவன் அத எண்டைக்காவது ஒருநாள் விளங்கிக் கொண்டான் எண்டா காணும்.” என்றவன், “என்ர நண்பன் அத விளங்கிக் கொள்வான் தானே ஏசிபி சேர்?” என்று வினவினான்.
எல்லாளன் கதைக்கும் நிலையில் இல்லை. அவன் தொண்டை அடைத்துக்கொண்டிருந்தது. காண்டீபனையே பார்த்திருந்தான்.
“கால் முறிஞ்சு, காலுக்குக் கம்பி வச்சு, நான் தனியா நடக்கிறதுக்கே எவ்வளவோ காலமாச்சு. அப்பாக்கும் ஒண்டுமே செய்யேலாமா போச்சு. ஆசைப்பட்ட வேலைக்குப் போறதுக்குக் கூட தகுதி இல்லாதவனா நிண்டனான். எல்லாமே வெறுத்துப் போச்சு. நண்பன் வருவான் எண்டு நினைச்சன். அவனும் வரவே இல்ல. எங்க போனான் எண்டும் தெரியாது. நாங்களும் அந்த ஊரை விட்டே வந்திட்டம். அப்பாவையும் பாத்துக்கொண்டு வாழ்க்கையை ஓட்டுறதுக்கு ஒரு வேல எண்டு படிச்சு ஒரு விரிவுரையாளனா ஆகி, வாழ்க்கை எப்பிடியோ போய்க்கொண்டு இருந்த நேரம், யாழ்ப்பாணத்துக்கு புது ஏசிபியா எல்லாளன் இராமச்சந்திரன் பதவியேற்கிறாராம் எண்டு நியூஸ்ல சொன்னாங்கள்.” என்றவன் கண்களில் படிந்திருந்த மெல்லிய நீர்ப் படலத்துடன் சந்தோசமாகச் சிரித்தான். “அவ்வளவு சந்தோசமா இருந்தது. நான் போலீஸ் ஆகாட்டி என்னடா, என்ர நண்பன் ஆகி நிக்கிறான், பாருங்கடா எண்டு கத்தவேணும் மாதிரி இருந்தது.” என்றவனின் பார்வை இப்போது எல்லாளனில் படிந்தது. “நல்லாத்தான் இருக்கு, என்ர நண்பனுக்கு அந்த உடுப்பு, அந்தக் கம்பீரம், அந்த மிடுக்கு எல்லாமே!” அவனுக்கே உரித்தான உதட்டோரச் சிரிப்புடன் தலையை அசைத்துச் சொன்னவனின் விழிகளில் மிகுந்த ரசனை.
எல்லாளனின் நிலை மிக மோசமாக இருந்தது. எழுந்து சென்று அவனுக்கு முதுகு காட்டிக்கொண்டு நின்றான். சில கணங்களின் பின்னே வந்து மேசையில் கையை ஊன்றிக்கொண்டு, தன் கூர் விழிகளால் காண்டீபனைத் துளைத்தான்.
“எல்லாம் சரி, தமயந்திக்கு ஏன் போதைய பழக்கினி?” என்றான் நிதானமாக.
“அதுதான் சொன்னேனே. என்ர குடும்பத்தையும் என்ர நண்பனின்ர குடும்பத்தையும் நாசமாக்கினவனை பழி வாங்க நினைச்சன்.”
“இத நீ என்னை நம்பச் சொல்லுறியா?
“உண்மை இதுதான்.”
“என்னட்ட அடி வாங்காத. உயிர் நண்பன் அது இது எண்டு ஆயிரம் கத சொன்னியே, அதெல்லாம் எப்பவோ முடிஞ்சு போச்சு! இப்ப நான் ஏசிபி, நீ சந்தேக நபர். உடம்பப் புண்ணாக்காம உண்மைய சொல்லு!” என்று மிரட்டினான் எல்லாளன்.
“இவ்வளவுதான் உண்மை.”
“ஓகே! நான் மிதிலாட்டயே போறன். அவளை விசாரிக்கிற மாதிரி விசாரிச்சா எல்லாம் தெரிய வரும் தானே.” என்றவனின் பேச்சில் முதன் முறையாக அதிர்ந்தான் காண்டீபன்.
“வேண்டாம் மச்சான். அவள் அதத் தாங்க மாட்டாள். ஐஞ்சு மாசம் டா. அவள் அம்மா ஆனதே பெரிய விஷயம். அவளை வதைக்காத. உன்னால ஏலாது. நீ செய்ய மாட்டாய்!” அவ்வளவு உறுதியாகச் சொன்னவனின் கன்னத்தில் அடுத்த நொடியே பளார் என்று ஒன்று விழுந்தது.
காண்டீபன் அணிந்திருந்த கண்ணாடி, பறந்துபோய் சில்லுச் சில்லாகச் சிதறியபடி தரையில் விழுந்து கிடந்தது. அதை ஒருமுறை ஆழ்ந்து பார்த்தான். உதடு வெடித்து இரத்தம் வடிந்தது. எல்லாளனின் ஒற்றைக் கண்ணசைவில் காண்டீபனின் முன்னே தண்ணீர் கோப்பை வைக்கப்பட்டது. எடுத்து அருந்தினான். வாயில் கசிந்திருந்த இரத்தம் தண்ணீரோடு உட்சென்றது. மெல்ல அந்த உதட்டோரத்தை பெரு விரலால துடைத்துவிட்டு நிமிர்ந்து பார்த்தான் காண்டீபன். அவன் விழிகள் கலங்கி இருந்தன.
“என்ர அப்பாவும் நானும் இப்பிடியாகிறதுக்கு அவன் காரணம். உன்ர குடும்பம் நொருங்கிப் போனதுக்கு அவன் தான் காரணம். அஞ்சலி என்ர மாணவி. அவள் போதைக்கு அடிமையானதுக்கும் அவன்தான் காரணம். மாதவன் ஜெயிலுக்குப் போய் வந்ததுக்கு அவன்தான் காரணம். என்ர அப்பாவை நீ பாத்திருக்கிறியா? வீட்டை போய்ப் பார். எப்பிடி வாழுறார் எண்டு. அந்தக் கோவம் தான். மாதவன், அஞ்சலி மூலம் எனக்குப் போதை ஈஸியா கிடைக்கும். தமயந்தி என்ர வகுப்புக்கே வந்தது நானே எதிர்பாக்காதது. லட்டு மாதிரி அவனே எனக்கு ஒரு சந்தர்ப்பத்தை தரேக்க விட சொல்லுறியா? ஊர்ல இருக்கிற அத்தனை பேருக்கும் போதைய பழக்கிறவன் வீட்டுல இருக்கிறவைக்கே பழக்கினா எப்பிடி இருக்கும்? அதுதான் பழக்கினான்!”
அதற்குப் பதில் சொல்லவில்லை எல்லாளன். “இவனை செல்லுக்க போடுங்க!” என்று உத்தரவிட்டுவிட்டு அங்கிருந்து வெளியேறினான்.