நீ தந்த கனவு 33(1)

கடந்த மூன்று வருடங்களாக, எல்லாளனோடு இணைந்து பணியாற்றிக் கொண்டு இருக்கிறான், கதிரவன். தினமும், ஒரு நாளின் அதிக நேரத்தை, அவனுடன் தான் செலவு செய்கிறான். அவன் ஒரு வழக்கை எப்படிக் கையாள்வான், எப்படியெல்லாம் கொண்டு போவான், சந்தேகிக்கும் குற்றவாளிகளை என்ன விதமாக மடக்குவான் என்பதெல்லாம் தெள்ளத் தெளிவு! அப்படியான, எல்லாளனின் விசாரணைகள் எப்படி இருக்கும் என்றும் தெரியும்.

இன்று காலையில் நடந்ததும் அப்படியான, கடுமை மிகுந்த ஒரு விசாரணைதான். ஒரு விரிவுரையாளனாக இருந்தும் தன்னிடம் கற்ற மாணவிக்கு, போதை மருந்தைப் பழக்கியிருக்கிறான் என்று அறிந்ததில் இருந்து, கதிரவனுமே உக்கிரம் கொண்டிருந்தான். அதனாலேயே, காண்டீபனின் மீதான எல்லாளனின் விசாரணையில் எந்தக் கருணையும் அவனுக்கு வரவில்லை.

அப்படி இருக்கையில் தான், பகல் பொழுதில், சாதாரண உடையில், மீண்டும் வந்திருந்தான், எல்லாளன். வெளி அலுவல்கள் ஏதும் இருந்தால் அப்படி வந்து, இங்கு இருக்கும் அலுவல்களை முடித்துக்கொண்டு, வெளி வேலைகளைப் பார்க்கப் போவது வழமை என்பதில், அதனை அவன் பெரிதாக எடுக்கவில்லை. ஆனால், அதன் பிறகு நடந்தவை? நடந்துகொண்டு இருப்பவை?

நம்பமுடியாமல் நின்றிருந்தான். அவன் மட்டுமல்ல, அன்றைக்குப் பணியில் இருந்த அனைவருமே அந்தச் சிறை முறையைத்தான் நம்ப முடியாமல் திரும்பி திரும்பிப் பார்த்துக்கொண்டு இருந்தனர். நடப்பது புதிது மாத்திரமல்ல எல்லாளனின் இளகிய சிரிப்பும் பேச்சும் கூட புதிதாய் இருந்தது.

என்ன பேசிக்கொள்கிறார்கள் என்று கேட்கும் தூரத்தில் நிற்காவிட்டாலும் அவர்களின் சிரிப்புச் சத்தம் அடிக்கடி கேட்டுக்கொண்டே இருந்தது. அதிலிருந்தே, நெருங்கிய நண்பர்கள் என்று அறிய முடிந்தது. அப்படியான நண்பனையா காலையில் அத்தனை கடினத்தோடு கையாண்டான் என்று நினைக்கையில், எல்லாளன் மீது மதிப்பும் உண்டாயிற்று. கூடவே, எல்லாளனின் மனதுக்கு இந்தளவில் நெருக்கமான ஒருவன், இப்படியான காரியங்களில் ஈடுபடுவானா என்கிற கேள்வியும் குடைந்தது.

நேரம் போய்க்கொண்டிருந்தது. அவனுக்கான அடுத்தக் கட்டளைகள் என்ன என்று தெரியாது. நேற்றைய நள்ளிரவில் அஞ்சலியை விசாரித்தபிறகு கதிரவனை, வீட்டுக்குப் போகச் சொல்லியிருந்தான், எல்லாளன். சற்றுக்கு ஒய்வு எடுத்துவிட்டுக் காலையில், அவன் மீண்டும் பணிக்கு வந்தபோது காண்டீபனை விசாரித்துக்கொண்டிருந்தான், எல்லாளன். பின் புறப்பட்டுப் போனவன் வந்து சிறை அறைக்குள் அமர்ந்து இருக்கிறான்.

அவர்களுக்குள் இடையிட்டுக்கொண்டு போகவும் மனமற்று, அங்கேயே, குட்டி போட்ட பூனை போன்று நடந்துகொண்டு இருந்தான், கதிரவன்.

இதை எல்லாளன் கவனித்திருக்க வேண்டும். “கதிரவன்!” என்று, சிறை அறைக்குள் இருந்தே குரல் கொடுத்தான்.

“சேர்!” அடுத்த நொடியே அவன் முன்னே நின்றிருந்தான், கதிரவன்.

“இவன் என்ர சின்ன வயசு நண்பன், காண்டீபன்.” அவனுக்குக் காண்டீபனை அறிமுகம் செய்து வைத்தான், எல்லாளன்.

“ஹாய் சேர்!” சிறு தலையசைப்புடன் சொன்னான், கதிரவன்.

அந்த மரியாதை, எல்லாளனினால் தனக்குக் கிடைக்கிறது என்று உணர்ந்து, “ஒரு குற்றவாளிக்கான மரியாதையே போதும் கதிரவன்.” என்று, சிறு புன்னகையோடு சொன்னான், காண்டீபன்.

அதிலேயே, அவர்கள் இருவருக்கும் இடையிலான அந்த நட்பின் தன்மையை, இன்னும் சற்று அதிகமாகக் கதிரவனால் விளங்கிக்கொள்ள முடிந்தது. “ஓகே சேர்.” என்றான் இப்போது, இறுக்கங்கள் அற்ற இயல்பான சிரிப்போடு.

“ஏதும் அவசர வேல இருக்கா?” கதிரவனிடம் வினவினான், எல்லாளன்.

“மாதவன், அஞ்சலிக்கு அடுத்த ஸ்டெப் என்ன எண்டு சொன்னா பாப்பன் சேர். சாகித்தியனும் இன்னும் இங்கதான் இருக்கிறான். மற்றது…” என்று இழுத்துவிட்டு, “ஆதினி மேம் இன்னும் மூண்டு மணித்தியாலத்தில வந்திடுவா. கூப்பிடப் போகவேணும் எண்டு சொன்னீங்க.” என்று பணிவுடன் நினைவூட்டினான்.

“ஓ, அதுக்கிடையில அவ்வளவு நேரம் போயிட்டுதா?” கேட்டுக்கொண்டே கைக் கடிகாரத்தைத் திருப்பிப் பார்த்தான். அதுவும், ஆமாம் என்றது. “ஓகே! நீங்க..” என்றபடி நிமிர்ந்தவனுக்குக் கதிரவன் பயபக்தியுடன் ஆதினியைப் பற்றிச் சொன்னது அப்போதுதான் கவனத்துக்கு வந்தது. உதட்டினில் மெல்லிய முறுவல் அரும்ப, “உனக்குத் தெரியுமா, கதிரவனும் ஆதினியும் திக் பிரெண்ட்ஸ்.” என்று, காண்டீபனிடம் வேண்டுமென்றே சொன்னான்.

“சேர்!” என்று கதிரவன் அதிர, “எனக்கும் தெரியும். அவளின்ர ஸ்கூட்டியை விழுத்திப்போட்டு இவர் பட்ட பாட்டப் பாத்தனான்.” என்று சிரித்தான், காண்டீபன்.

அந்த நாள் கதிரவனுக்கு மறக்குமா? என்ன சொல்வது என்று தெரியாது திணறி நின்றான்.

“நீங்க நினைக்கிற அளவுக்கெல்லாம் அவள் இல்ல கதிரவன். இவன்தான் சும்மா சும்மா அவளுக்கு எதையாவது சொல்லிக் கோபப்படுத்தி, அவளையும் பதிலுக்கு எதையாவது செய்ய வைக்கிறது. பிறகு அவளைப் பிழை சொல்லுறது. நீங்க கொஞ்சம் பிரெண்ட்லியா மூவ் பண்ணிப் பாருங்க. உங்களுக்கு நல்ல ஒரு நண்பி கிடைப்பாள்.” என்றான் காண்டீபன், அசைக்க முடியாத நம்பிக்கையோடு.

அவளோடு ஒரு நட்பா? நினைக்கையிலேயே அவன் நெஞ்சம் ஆட்டம் கண்டது. அதைக் காட்டிக்கொள்ளாமல், “ஓகே சேர்.” என்றான் அப்போதும்.

அவனுடைய பாவனையிலேயே அவன் எல்லாளனின் சிறிய பதிப்பு என்று புரிந்துவிட, “கொஞ்சம் இலகுவா இருங்க கதிரவன். இவனோட சேர்ந்து சேர்ந்து உங்களுக்கும் இவன்ர குணம் வருது எண்டு நினைக்கிறன்.” என்ற காண்டீபனை இப்போது, கதிரவனுக்கு மிகவுமே பிடித்துப் போனது.

இவ்வளவு இலகுவாக, நட்புணர்வுடன், பழக இனிமையாக இருக்கிறவன் ஏன் இங்கே வந்து இருக்கிறான்? கேள்வி அவனுக்குள் ஓடியபோதும் காட்டிக்கொள்ளாமல், “ஓகே சேர்!” என்றான் மீண்டும்.

“இதுக்கும், ‘ஓகே சேர்’ தானா?” சிரிப்புடன் கேட்ட காண்டீபனின் பார்வை எல்லாளனை நோக்கிற்று.

அதுவரை நேரமும் இருந்த இளகிய நிலை மாறி அவன் முகம் இறுகி இருந்தது. “என்னடா?” என்றான் ஒன்றும் விளங்காமல்.

ஒன்றும் இல்லை என்பதுபோல் தலையை அசைத்துவிட்டு எழுந்து நின்றான் எல்லாளன். “நீங்க போங்க, நான் வாறன் கதிரவன்.” என்று, அவனை அனுப்பி வைத்தவனால் அங்கிருந்து நகரவே முடியவில்லை. இனி அவன் போக வேண்டும்; இருக்கும் வேலைகளைப் பார்க்க வேண்டும். ஆனால், காண்டீபன்? அந்தச் சிறைக்குள் வரும்போது இருந்த இறுக்கம் மீண்டும் அவனைக் கவ்விக்கொண்டது.

அவன் நினைத்தால் கைது செய்த அடையாளமே தெரியாமல் அவனை வெளியே விட்டுவிட முடியும். ஆனால், சட்டத்துக்கும், மனச்சாட்சிக்கும் கட்டுப்பட்டவன் அவன். அவனால் அது முடியாது. நிச்சயம் முடியாது! ஆனால், இனி நடக்கப் போகிறவை? மீண்டும் தனக்குள் போராட ஆரம்பித்தான், எல்லாளன்.

அவன் தன்னைக் குறித்தான உணர்வுகளுக்குள் சிக்குண்டு நிற்பது புரிந்து, “அளவுக்கதிகமா என்னை மனதுக்க எடுக்காத மச்சான். இதெல்லாம் தெரியாம நான் எதையும் ஆரம்பிக்க இல்ல. அதால எல்லாத்துக்கும் ரெடியாத்தான் இருக்கிறன். உன்னைப் பாத்திட்டன், உன்னோட கதைச்சிட்டன். இனி எனக்காக நீயும் இருக்கிறாய். அவ்வளவும் போதும்.” என்று, மனதிலிருந்து சொன்னான், காண்டீபன்.

அது எல்லாளனுக்குப் போதாதே. இவ்வளவுக்குத் தன்னைச் சிநேகிக்கும் நண்பனுக்கு எதுவும் செய்ய முடியாமல் நிற்கிறானே. அவன் மனது, கடமைக்கும் நட்புக்கும் இடையில் கிடந்து அல்லாடியாது.

அவன் அவ்வளவு சொல்லியும் கேட்காமல், எங்கேயோ பார்வை நிலைகுத்தி நிற்க இறுகி நின்றவனை இலகுவாக்கும் பொருட்டு, “என்ர தங்கச்சி வாறாளடா! போய் அவளோட இந்த நாளைக் கொண்டாடு! எப்பிடியும் உன்னோட முறுக்கிக்கொண்டுதான் நிப்பாள், சமாதானப்படுத்து. முடிஞ்சா கொஞ்சு!” என்றான் வேண்டுமென்றே.

அவனுடைய அந்தக் கேலியை உள்வாங்கும் நிலையில் இல்லை எல்லாளன். காண்டீபனை நோக்கிக் கைகளை விரித்தான். மெல்லிய திகைப்புடன் எரித்த காண்டீபனின் முகம் இப்போது மாறிப்போனது. ஒருகணம் நண்பனையே பார்த்தவன் வேகமாக விழிகளை அகற்றிக்கொண்டான். தொண்டைக்குழி ஏறி இறங்கிற்று.

“டேய், வாடா!”

“இல்ல மச்சான், நீ போ!”

“இப்ப வரப்போறியா இல்லையா நீ?”

காண்டீபனின் நிலை மிக மோசமாகிக் கொண்டிருந்தது. நண்பனைப் பார்க்க மறுத்தான்.

“என்ன நடந்தாலும் சரி, நீ வராம இங்க இருந்து நான் போகமாட்டன்!” என்றான் உறுதியான குரலில்.

வேறு வழியற்று, மனமே இல்லாமல், எல்லாளனின் அணைப்புக்குள் வந்தான், காண்டீபன்.

அவனைப்போல் அல்லாமல் ஆரத்தழுவிக்கொண்டான் எல்லாளன். உள்ளுக்குள் தவிக்கும் மனதை ஆற்றுப்படுத்தும் அளவுக்கு இறுக்கி அணைத்தான். இளம் வயதில் உணர்ந்த நண்பனின் அந்தத் தேகச் சூடு மனதை நிறைத்தது.

நொடிகள் சில கடந்த பின், அவனைத் தன் முகம் பார்க்க வைத்து, “உன்னைத் தேடி வரேக்க, நீயா இப்பிடி எண்டு அதிர்ச்சியா இருந்தாலும் உன்ன நல்லா சாத்துற(அடிக்கிற) ஆத்திரமும் இருந்தது எனக்கு. ஆனா இப்ப சொல்லுறன், உன்ர கைல படிஞ்சிருக்கிற அந்தக் கறைல எனக்கும் பங்கிருக்கு. உன்ர இந்த நிலைக்கு நானும் காரணம் தான். உங்களை எல்லாம் நான் தேடி வந்திருந்தா போதும். இதெல்லாம் நடந்திருக்காது. சரி விடு, நடந்ததை மாத்தேலாது. ஆனா, சட்டத்துக்கு மாறா நான் எதுவும் செய்யமாட்டன் மச்சான். அது உனக்கும் பிடிக்காது எண்டு எனக்குத் தெரியும். எப்பிடியும் நீ தண்டனை அனுபவிக்க வேண்டித்தான் வரும். அதை என்னால முடிஞ்ச வரைக்கும் குறைக்கப் பாக்கிறன். மாமா, மாமி, மிதிலா, குழந்தை எண்டு ஆரைப்பற்றியும் கவலைப்படாத. நான் இருக்கிறன்.” என்றதும் அவனைப் பாய்ந்து அணைத்துக்கொண்டான் காண்டீபன். அவன் விழிகள் எவ்வளவோ கட்டுப்படுத்த முயன்றும் முடியாமல் கலங்கிப் போயிற்று. அதோடு, எல்லாளனின் முகம் பார்த்துச் சிரித்தான்.

“தெரியும் மச்சான். நீ இருக்கிறாய் எண்டுற நம்பிக்கைல தான் நானும் இங்க பயமில்லாம இருக்கிறன். மிது… மிது இன்னுமே வெளி உலகத்துக்கு முகம் காட்டப் பயப்பிடுவாள். அவளை மட்டும்..” என்றவனை மேலே பேசவிடாமல், “டேய், இனி உன்ர தொங்கச்சி வேற இங்கதான் இருப்பாள். பிறகென்ன? உன்ன நான் தான் உள்ளுக்குப் போட்டனான் எண்டு தெரிஞ்சதும், என்னை என்ன செய்யப் போறாளோ தெரியாது எண்டு எனக்கு அது வேற பயமா இருக்கு.” என்றதும் கலங்கிய கண்களோடு வாய்விட்டுச் சிரித்தான், காண்டீபன்.

“பரவாயில்ல மச்சான், சம்சாரி ஆக்கிட்டாய். இனி வாழ்ந்திடுவாய்.”

“போடா…” என்று பொய்யாக முறைத்து, மிகுதியைச் சொல்லலாமலேயே அங்கிருந்து வெளியே வந்தவனின் மனது, கனத்துத்தான் கிடந்தது. அதைக் காட்டிக்கொள்ளாமல், கதிரவனை அழைத்தான்.

error: Alert: Content selection is disabled!!
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock