நீ தந்த கனவு 38 – 1

மறைந்து போன வாகனம் கிளப்பிவிட்டுச் சென்ற புழுதி அடங்கும் முன்னே, எல்லாளனைச் சூழ்ந்துகொண்ட பத்திரிக்கையாளர்களும் தொலைக்காட்சித் தொகுப்பாளர்களும் கேள்விகளாகக் கேட்டு, மைக்கை அவன் வாய்க்குள்ளேயே புகுத்திவிட முனைந்தனர். பதிலாக மூச்சைக் கூட வெளியே விட மறுத்தான் எல்லாளன்.

அவனிடமிருந்து எதுவும் பெயராது என்றதும் பத்திரிகையாளர்களின் குறி பெண்கள் பக்கம் பாய்ந்தது. அதற்கும் அனுமதிக்காமல் கதிரவனைக் கொண்டு அவர்களை எல்லாம் அங்கிருந்து அகற்றினான்.

வீதியில் வந்த ஆட்டோ ஒன்றை மறித்து அதில் இருவரையும் ஏறச் சொன்னான். ஆதினிக்கு அவனை விட்டுப் போகவே மனமில்லை. மனம் அவனது அருகண்மைக்காக ஏங்கிற்று. நேற்றைய சண்டை நினைவிலேயே இல்லை. அவன் மார்பில் சாய்ந்து அழ நினைத்தாள். அது அவள் விழிகளில் தெரிந்திருக்க வேண்டும். அவள் கரம் பற்றி அழுத்தி, “தைரியமா இரு!” என்றான் எல்லாளன்.

கண்ணீரில் கரைந்துகொண்டிருந்த மிதிலாவைக் கண்ணால் காட்டி, “தனியா விடாத!” என்று சொல்லி, அவர்களை அனுப்பிவைத்தான்.

இதற்குள் காண்டீபன் கைதை நேரடிச் செய்தியாகத் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பத் தொடங்கியிருந்தனர். யாழ். பல்கலைக்கழக மாணவர்கள், ‘உங்களை நம்பும் எங்களைக் கெடுக்காதீர்கள்!’ போன்ற பதாகைகளோடு விரிவுரையாளர்கள், பேராசிரியர்களுக்கு எதிரான ஒரு நாள் கண்டனப் போராட்டத்தை ஆரம்பித்து இருப்பதாக வேறு, செய்தி வந்தது.

நடக்கும் அத்தனை விடயங்களுக்குப் பின்னால் சத்தியநாதன்தான் இருக்கிறான் என்று எல்லாளனுக்குத் தெள்ளத் தெளிவாகத் தெரிந்தது. இல்லாமல் இவ்வளவு வேகம் சாத்தியமே இல்லை. கூடவே, அவனைப் பெரும் குற்றவாளியாக்கி, முடிந்தால் ஆயுள்தண்டனை வாங்கிக் கொடுத்து, வாழ்நாள் முழுக்கச் சிறைக்குள்ளேயே அடைக்க முயற்சி செய்யப்போகிறான் என்றும் கணித்தான்.

பழிக்குப் பழி! அவன் மொழியில் சொல்வதானால் கணக்கு முடிக்கப் பார்க்கிறான்.

அடுத்த நிமிடமே எஸ்பியின் அலுவலகத்தில் நின்றான் எல்லாளன்.

“என்ன சேர் நடக்குது?” அவருக்கான சல்யூட்டை வழங்கிவிட்டு இறுக்கமாக வினவினான்.

அதற்குப் பதில் போன்று, அவரின் முன்னால் இருந்த கோப்பினை எடுத்து, அவன் புறமாகத் திருப்பி வைத்தார் அவர்.

எடுத்துப் பார்த்தான்.

கிட்டத்தட்டப் பத்து மாணவர்கள் தாம் பாதிக்கப்பட்டதாகக் காண்டீபன் பெயரில் புகார் அளித்திருந்தனர். அதுவும் ஒற்றை நாளில். அதில் தமயந்தியின் பெயர் மட்டும் இல்லை.

“இத நம்புறீங்களா சேர்?”

“சட்டத்துக்குத் தேவை சாட்சி. நம்பிக்கை இல்ல!” சுருக்கமாகச் சொன்னார் அவர். “பாதிக்கப்பட்ட மாணவர்கள் தந்த புகாரின் அடிப்படையில விசாரிச்சதில, நிறைய உண்மை வெளி வந்திருக்கு எல்லாளன். முக்கியமானது, காண்டீபன்ர ஸ்டூடன்ட் சாகித்தியன். அவனை நீங்க கைது செய்து, ஒரு நாள் முழுக்க ரிமாண்ட்ல வச்சு விசாரிச்சிருக்கிறீங்க. அப்பிடியே சத்தமில்லாம வெளில விட்டிருக்கிறீங்க. இன்னொரு ஸ்டூடெண்ட் அஞ்சலி. போதைப் பழக்கத்துக்கு அடிமையா இருந்திருக்கிறா. அவரின்ர கம்பஸ் மேசை லாச்சிக்க இருந்து போதை பொருட்கள் எடுத்திருக்கினம். இன்னும் என்ன வேணும் உங்களுக்கு?” என்றார் ஒருவிதக் கோபத்துடன்.

“தமயந்தி! தமயந்தி சத்தியசீலன். இந்தப் பெயர் இந்தக் கேஸ்ல எங்கேயுமே இல்லையே சேர். எங்க போனது?” அவனும் இறுக்கமாகவே வினவினான்.

“இப்ப இந்தக் கேஸ் எங்களிட்ட இல்ல எல்லாளன். பிறகும் ஏன் இதைப் பற்றிக் கதைக்கிறீங்க?”

“ஏன் எங்கள விட்டுப் போனது? அதுதான் என்ர கேள்வி சேர்.”

“காரணம் நீங்க!” என்றார் அவர். “காரணமே இல்லாம ஒருத்தனக் கைது செய்ற ஆள் இல்ல நீங்க. ஆனாலும் சாகித்தியன வெளில விட்டு இருக்கிறீங்க. சோ, உங்கட நண்பருக்காக நீங்க எதையோ மறைக்கிறீங்க எண்டு, உங்கள்ள நம்பிக்கை இல்லாமத்தான் கேஸ் மாறினது. இது எங்கட டிப்பார்ட்மெண்டுக்கு எவ்வளவு பெரிய அவமானம் தெரியுமா? எஸ்எஸ்பி கூப்பிட்டுக் கிழிக்கிறார். இதுக்கே உங்களை நான் விசாரிச்சு இருக்கோணும். ஆனாலும் செய்யேல்ல. அதை நினைச்சுச் சந்தோசப் படுங்க!”

முகம் மாறினாலும் அவன் தலை குனியவில்லை. விறைப்பாகவே நின்று, “என்ர நண்பனுக்காக நான் ஒண்ட மறைக்க நினைச்சிருந்தா அவனைக் கைது செய்ததையே மறச்சிருப்பன். ஏன், கைது செய்யாமையே விட்டிருப்பன். அவனைத் தூக்கி உள்ளுக்க வச்சிட்டு, அவனிட்ட படிச்சவனை வெளில விட வேண்டிய தேவை என்ன, சேர்?” என்று, அவரின் பதவிக்கான மரியாதை இருந்த போதிலும் அணல் தெறித்தது, அவன் பேச்சில்.

“நான் அவனைக் கைது செய்ததுக்குக் காரணம் தமயந்தி. அது தமயந்திக்கே தெரியாது. ஆனா, ஒற்றை நாளில முழு யாழ்ப்பாணத்துக்கும் தெரிஞ்சிட்டுது. காரணம் பத்துப் பிள்ளைகளின்ர புகார். இந்தப் பத்துப் பிள்ளைகளும்
இவ்வளவு நாளும் எங்க இருந்தவையாம்? முக்கியமா, அவனை நான் கைது செய்யேக்க அவன் எந்தப் பொருளோடயும் இருக்கேல்ல. நீங்க நினைக்கிறீங்களா கம்பஸ், அவன்ர வீடு எல்லாம் நான் செக் பண்ணேல்ல எண்டு. என்ர கண்ணுக்கு மாட்டாத போதைப்பொருள் சி.ஐ.டி ன்ர கண்ணில எப்பிடி சேர் மாட்டினது?”

அவனுடைய கிடுக்கிப்பிடி கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல், “எல்லாளன், அவன் ஒண்டும் நல்லவன் இல்ல. குற்றவாளி! படிக்கிற பிள்ளைகளின்ர வாழ்க்கையைப் பாழாக்கினவன். அத மறந்துடாதீங்க!” என்றார் அவர்.

“உண்மைதான். சட்டத்துக்கு முன்னால அவன் குற்றவாளிதான். அதுக்காக வெளில இருக்கிற நாங்க எல்லாரும் நல்ல மனுசர் எண்டு அர்த்தமில்லை.” என்றுவிட்டு, அவருக்கு ஒரு சல்யூட்டை வைத்துவிட்டு வெளியே வந்தவனின் முகம், ரௌத்திரத்தில் சிவந்து போயிருந்தது.

*****

பொழுது மாலையை நெருங்கும் நேரத்தில் காண்டீபன் வீட்டின் முன்னே பைக்கை கொண்டு வந்து நிறுத்தினான் எல்லாளன்.

“சந்தேகப்படுற மாதிரி ஏதும் நடமாட்டம்?”

“அப்பிடி எதுவும் கண்ணில படேல்ல, சேர்.”

“விசாரணை எண்டு ஆராவது வந்தவையா?”

“இல்ல சேர்.”

அவர் சொன்ன விபரங்களைக் கேட்டுக் கொண்டவன் விழிகள், சுற்றுப் புறத்தை வலு கூர்மையுடன் ஆராய்ந்தன.

error: Alert: Content selection is disabled!!
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock