நேசம் கொண்ட நெஞ்சமிது 20 – 2

உணவை எடுத்துவைக்கப் போனவரிடம் புகையிரத நிலையத்தில் சாப்பிட்டுக்கொள்வதாய் கூறிப் புறப்பட்டுவிட்டான்.

வைதேகிக்கோ மனம் சஞ்சலமாக இருந்தது. முகத்தில் சந்தோசம் இல்லாமல், பிடித்தவளை கட்டிக்கொண்டோமே என்கிற மகிழ்ச்சி இல்லாமல் இருக்கும் மகனின் மனநிலையை அவரால் கணக்கிடவே முடியவில்லை. ஆனாலும் பொறுப்பான மகன் தன்னைத் தானே பார்த்துக்கொள்வான் என்று தன்னையே தேற்றிக்கொண்டார். அவருக்கும்தான் வேறு வழி ஏது?

சங்கரன், கலைமகள் இருவரின் முகமும் மகிழ்ச்சியில் மலர்ந்திருந்தது. எதுவும் முழுதாக சரியாகாத போதும், இனி எல்லாம் நன்றாகிவிடும் என்கிற நம்பிக்கை ஒளி ஒன்று பெற்றவர்களின் மனதில் இருந்தது. அந்த நிமிடம் எதையும் யோசிக்கும் நிலையில் இல்லை வதனி. அவளின் முகமும் பொய்யாக என்றாலும் புன்னகையை பூசி இருந்தது.

மணிவண்ணனும் வந்துவிட இன்னும் மகிழ்ச்சி பெருகியது. சங்கரனும் வதனியும் பேசிக்கொள்வதைப் பார்த்தவர் தனியாக சங்கரனை அழைத்து நடந்ததை தெரிந்துகொண்டார்.

வதனியை அருகே அழைத்து உச்சி முகர்ந்தவரின் கண்கள் பனித்திருந்தது.

‘பூப்போன்ற என் செல்வத்தை கயவன் ஒருவன் கசக்கப்பார்த்தானே…’ என்று நினைத்துத் துடித்தார்.

வதனிக்கும் ஏன் என்று அறியாமலேயே கண்கள் கலங்கியது.

“நீண்ட ஆயுசோடு நீ என்றுமே எல்லாம் பெற்று நன்றாக இருக்க வேண்டும் கண்ணா…..” என்றார் பாசம் பொங்க.

‘இனியுமா….’ என்று மனதில் நினைத்தவள் வெளியே எதையும் காட்டிக்கொள்ளவில்லை. வெற்றுப்புன்னகை ஒன்றை சிந்தினாள்.

வதனியிடம் எதையும் தூண்டித்துருவாத போதும் அவள் மகிழ்ச்சியாக இருக்கும்படி பார்த்துக்கொண்டார் மணிவண்ணன்.

அவர்களைப் பொறுத்தவரை காதலை மறைத்ததால் தந்தை தன் மீது கோபம் கொண்டதாலும், குளக்கட்டில் நடந்த அசம்பாவிதத்தாலுமே வதனி தன்னுடைய இயல்பை தொலைத்துவிட்டாள் என்று எண்ணினார்கள்.

அதனால் முடிந்தவரை அவளின் மனதை தைக்கும் வேதனைகளை ஒதுக்க முயன்றனர். அவர்களுடன் தானும் முயன்று மகிழ்ச்சியாக இருப்பதாக காட்டிக்கொண்டாள் வதனி.

மனதளவில் அனைத்தும் மரத்தது போன்ற உணர்வு அவளிடம் குடியேறி இருந்தது. கலங்கும் கண்களை யாரும் அறியாமல் துடைப்பதையே தனது வேலையாக கொண்டவள் அவர்கள் முன்னிலையில் முடிந்தவரை மலர்ச்சியாக முகத்தை வைத்திருந்தாள்.

சங்கரனுக்கும் கலைமகளுக்கும் மகளின் முகத்தை பார்க்க பார்க்க தெவிட்டவே இல்லை. அவளை பார்த்துப் பார்த்து பூரித்துப்போனார்கள்.

“திருமணம் ஆனதும் நம் மகளின் முகத்தில் அழகு கூடிவிட்டது இல்லையா கலை..” பூரிப்புடன் மனைவியிடம் ரகசியம் பேசினார் சங்கரன்.

மனமும் கண்களும் மகளில் லயித்திருந்ததில் தலையை மட்டும் ஆமென்பதாக அசைத்தார் கலைமகள்.

தொடர்ந்த சில தினங்கள் எந்த விஷயத்தை பற்றியும் குறிப்பாக வதனியின் வாழ்வை பற்றிப் பேசாது தங்கள் குடும்பத்தின் தனியான மகிழ்ச்சியை மணிவண்ணனோடு சேர்ந்து அனுபவித்தது அந்தக் குடும்பம்.

என்ன இருந்தாலும் இளவழகன் தான் நம்முடைய மருமகன். அவனுடன் பேசாமல் இருப்பது சரியல்ல என்று நினைத்த சங்கரன், அவனுக்கு அழைத்தார்.

அவன் எடுத்ததும், “தம்பி, நா.. நான் சங்கரன் பேசுகிறேன். எப்படி இருக்கிறீர்கள்?” கொஞ்சம் தடுமாற்றத்துடன் பேசினார்.

“நான் நன்றாக இருக்கிறேன் மாமா. வ… நீங்கள் எ.. எலோரும் எப்படி இருக்கிறீகள்?”

“எல்லோரும் நன்றாக இருக்கிறோம்…” அவனின் தேடல் அறியாது பொதுவாக பதில் சொன்னார் அவர்.

சம்பிரதாய பேச்சுக்கள் முடியவே, “எப்போது லண்டன் போகிறீர்கள்? விசா எடுத்துவிட்டீர்களா?” என்று கேட்டார் சங்கரன்.

“இப்போது கொழும்பில் தான் நிற்கிறேன் மாமா. விசாவுக்கு கடவுசீட்டை கொடுத்துவிட்டேன். இன்னும் டிக்கட் எடுக்கவில்லை….” என்றவனின் குரலில் தயக்கமும் சோர்வும் சேர்ந்திருந்தது.

மகளிடமோ தங்களிடமோ சொல்லாமல் சென்றுவிட்டானே என்று உறுத்தியது அவருக்கு.

ஆனாலும், “ஓ.. நீங்கள் கொழும்புக்கு போனது எனக்கு தெரியாதே தம்பி. அப்படியே லண்டனுக்கு கிளம்பிவிடுவீர்களா?” ஏமாற்றம் அவரின் குரலில் எட்டிப்பார்த்தது.

‘அடம் பிடித்து மணந்துகொண்டவன் மகளிடம் கூட சொல்லாமல் கொழும்புக்கு சென்றிருக்கிறானே…’

அவரின் எண்ணத்தை புரிந்துகொண்டவனின் மனம் இன்னும் குற்ற உணர்ச்சியால் துவண்டது.

சோகப்பந்தை தொண்டைக்குழியில் புதைத்தவன், “மன்னித்துக் கொள்ளுங்கள் மாமா. வேண்டும் என்று சொல்லாமல் வரவில்லை. அவசரமாக வரவேண்டியதாக போய்விட்டது. அதனால்தான் சொல்லவில்லை. இன்னும் இரண்டு மூன்று நாட்களில் வவுனியா வந்துவிட்டுத்தான் திரும்பவும் கொழும்பு வருவேன்….” என்றான் மெல்ல.

நிமிடத்தில் மனம் மகிழ்ந்துவிட்டது சங்கரனுக்கு.

“மன்னிப்பு எல்லாம் எதற்கு தம்பி. சரிதான் வவுனியாவுக்கு வந்த பின்னர் எனக்கு அழைக்கிறீர்களா. அல்லது வனிம்மாக்கு அழைத்தாலும் சரிதான்…” மெதுவாக மகளின் பேச்சை மருமகனிடம் இழுத்தது அந்தத் தந்தையின் உள்ளம்.

சில மணித்துளிகள் அந்தப் பக்கம் எந்த விதமான சத்தமும் இல்லை. கண்களை இறுக மூடித்திறந்தவனுக்கு நெஞ்சு வெடித்துவிடுமோ என்று இருந்தது.

“சரி மாமா. வவுனியா வந்தவுடன் அழைக்கிறேன்…” வலிமை இழந்து வெறுமையாகச் சொன்னான். யாரை அழைக்கிறேன் என்பதை சொல்லாமல் சாமர்த்தியமாக தவிர்த்துவிட்டான்.

“தம்பி? ஏதாவது உடல் நிலை சரியில்லையா. குரல் சோர்வாக இருக்கிறதே?” கவலையுடன் கேட்டவரின் அந்த அக்கறை கூட அவனை குத்தியது.

“அப்படி எதுவும் இல்லை மாமா. இங்கு வெயிலும் அதிகம். அதோடு அலைச்சலும். அதுதான் குரல் சோர்ந்து தெரிகிறது என்று நினைக்கிறேன்…” என்றவனிடம் உடலை பார்த்துக்கொள்ளுங்கள் என்று அக்கறையாகக் கூறி வைத்தவருக்கோ மனம் நிறைந்திருந்தது.

‘மருமகன் நல்லவன் தான்.. அன்று வனிம்மாவை கட்டிவிட வேண்டும் என்பதில் கொஞ்சம் கோபமாக பேசிவிட்டான் போல. என் மகளின் மேல் இருந்த அன்பு அவனை அப்படி பேச வைத்திருக்கிறது. கொடுத்து வைத்தவள் என் வனிக்குட்டி…’ என்று அதையும் நினைத்து பெருமைப் பட்டுக்கொண்டார் அவர்.

மனைவியிடம் மருமகனுடன் பேசியவற்றை சொன்னார் சங்கரன். அவர் சொல்வதைக் கேட்ட வதனியின் முகம் மாறியதை கவனிக்கத் தவறினார்கள் சங்கரனும் கலைமகளும்.

இப்படியே நாட்கள் அதன் பாட்டில் நகர, ஒரு நாள் சங்கரனின் கடையில் இரண்டாம் முறையாக சங்கரனை சந்தித்தான் இளவழகன். அவனைக் கண்டதும் மகிழ்ச்சியுடன் வாசலுக்கே வந்து கைப்பிடித்து அழைத்துச் சென்றவர் அங்கு வேலை செய்யும் அனைவருக்கும், “இவர்தான் என்னுடைய மருமகன்…” என்று முகம் மலர அறிமுகப்படுத்தினார்.

error: Alert: Content selection is disabled!!
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock