நேசம் கொண்ட நெஞ்சமிது 24 – 2

“நான் எதற்கு உங்களை மன்னிக்க வேண்டும்?”

“நான் செய்த தவறுகளுக்காக.” தணிந்து போனவனின் மனம், செய்த தவறை நினைத்து தள்ளாடியது.

“நீங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை. தவறு செய்தது முழுக்க நான். பாடத்தை படிக்கும் வயதில் காதலை படிக்க நினைத்தது என் தவறு. பெற்றவர்களை ஏமாற்றியது என் தவறு. தரம் கெட்ட ஒருவனின் நடிப்பை நம்பியது அடுத்த தவறு. போதாக்குறைக்கு என்னை அங்கே இங்கே தொட விட்டது என்று, தப்பை செய்தவள் நான்……”

“ஐயோ வது! திரும்பத் திரும்ப அதை சொல்லாதே! கேட்கவே முடியவில்லை என்னால். தயவு செய்து மறந்துவிடு..”

“கோபத்தில், நீ திருமணத்திற்கு சம்மதிக்க வேண்டும் என்கிற எண்ணத்தில், உன்னை சம்மதிக்க வைத்தே ஆகவேண்டும் என்கிற பிடிவாதத்தில் செய்தவை தான் அது. நான் சொல்வதை நீ மறுப்பதா என்கிற எண்ணம் என்னை என்ன என்னவோ செய்ய வைத்து விட்டது. நான் எதையும் உணர்ந்து செய்யவில்லை. உன்னை திட்டிவிட்டு போன பிறகும் கூட நான் அதை உணரவே இல்லை. காரணம் என் மனமறிந்து, அன்று நான் எதையுமே செய்யவில்லை வது.”

“அன்று திட்டி விட்டுப் போனபிறகும், எப்படி உன்னை திருமணம் செய்து கொள்ளலாம் என்று தான் யோசித்தேனே தவிர நீ என்ன பாடு படுவாய் என்பதை யோசிக்கவே இல்லை. நான் செய்தது தவறு தான்… எனக்கு புரிகிறது.”

“பல நாட்களுக்கு பிறகு இதே வாணியில் வைத்து, நடந்தவைகளை நினைத்துப் பார்த்தபோதுதான் நான் செய்தவைகளை முழுதாக உணர்ந்தேன். அந்த நிமிடம் தொட்டு இந்த நிமிடம் வரை நான் அனுபவித்தது நரகம் மட்டுமே. உன்னிடம் மன்னிப்புக் கேட்கும் தகுதியை கூட இழந்து விட்டேன் என்பதால் தான் உன்னை பார்க்காமலேயே லண்டன் சென்றேன்….”

“ஆனால் இப்போது என்னால் முடியவில்லை. இரவும் பகலும் உனக்கு செய்தவைகளே நினைவில் வந்து என்னை வதைக்கிறது. எல்லோரும் இருந்தும் அநாதை ஆகிவிட்டேனோ என்று தோன்றுது வது. நீ வேணும்டா எனக்கு. என்ன தண்டனை வேண்டுமானாலும் கொடு. ஆனால் என்னைத் தள்ளி வைக்காதே. அதை தாங்கும் சக்தி எனக்கு இல்லவே இல்லடா….”

குரல் கலங்கிக் கரகரக்க, கலங்கிய கண்கள் மன்னிப்பை யாசிக்க, கைகள் அவளை கெஞ்ச மன்னிப்பை கேட்டு மன்றாடிய அந்த ஆறடி உயர ஆண்மகனின் தன்னிலை விளக்கத்தை கேட்ட போதும் அசையாமல் நின்றாள் வதனி.

“சொல்ல வேண்டியதை சொல்லி முடித்தாயிற்று என்றால், வெளியேறுங்கள்….!” என்றாள் திடமான குரலில் ஆத்திரத்தை அடக்கி.

பேச்சை இழந்து, பரிதவித்து நின்றான் இளவழகன். அவனின் கண்களை சந்திக்க விரும்பாது பார்வையை விலக்கிக் கொண்டாள் வதனி.

அவள் இளகுவாள். தன்னை மன்னிப்பாள் என்கிற நம்பிக்கை மெல்ல மெல்ல தேயவும், கண்களை இறுக மூடித் திறந்தான்.

“ஏன் வது, அன்று நான் செய்தது மட்டும் தான் உன் நினைவில் இருக்கிறதா. காதலோடு கூடி மகிழ்ந்த நாட்கள் பொய்யாகிப் போனதோ? எத்தனை வருடங்கள் ஆனாலும் உங்களுக்காக காத்திருப்பேன் அத்தான் என்றாயே. அந்த வார்த்தைகள் பொய்யா…? எல்லோரும் குறையும் நிறையும் உள்ள மனிதர்கள் தானே. என் கோபமும் அவசரபுத்தியும் என்னுடைய குறைகள். அவை உன்னை நோகடித்ததில் எனக்கும் மிகுந்த வேதனையே. ஆனாலும் என்னை மன்னிக்க முடியாதா…..” இதற்கு மேலும் என்ன சொல்வது என்று தெரியாமல் தவித்தான் இளா.

அவளிடமிருந்து எந்தவிதமான பதிலும் இல்லாமல் போகவே வாழ்வில் தோற்று விட்டவனாக உடல் தொய்ய வெளியே செல்லத் திரும்பினான்.

திரும்பியவன், மறுபடியும் அவள் புறமாகத் திரும்பி, “நெற்றியில் பொட்டில்லாமல் இருக்காதே வது. உன் நெற்றி வெறுமையாக இருப்பதை பார்க்க முடியவில்லை…” என்றான்.

“அதற்கான தகுதி எனக்கில்லை…” என்றவளின் குரல் முதன் முறையாக தன் வலியை காட்டியது.

அவளின் கோபத்தை, ஆங்காரத்தை, அலட்சியத்தை, வெறுப்பை, திட்டை எல்லாம் தாங்கியவனால் அவளின் இந்த தவிப்பை தாங்கவே முடியவில்லை. உயிரின் அடி ஆழம் வரை துடித்தது.

“ஏன்?? ஏன் உனக்கு தகுதி இல்லை…..” தவிப்புடன் பரபரத்தது அவனின் குரல். எதுவோ ஒன்று அவனை முழுதாக தாக்கப் போவதாக அவனது உள் மனது சொன்னது.

இப்போது அவனை திரும்பி பார்த்தவளின் கண்கள் கலங்கி இருந்த போதும் ஆத்திரத்தில் விரிந்து பார்வையாலேயே அவனை எரித்தது.

மூக்கு விடைக்க, கன்னங்கள் இரண்டும் கோபத்தில் சிவக்க, அவனை பார்த்தவள் மிக மிக நிதானமான குரலில், “நான் திருமணமானவள். ஆனாலும் பொட்டு வைக்கவில்லை. ஏன் தெரியுமா?” என்று கேட்டாள்.

சிந்திக்கும் திறனை இழந்தான் இளா. உள்ளம் படபடத்தது. உடல் குலுங்கியது. கைகள் நடுங்க நிற்க முடியாமல் தடுமாறியவன், தட்டு தடுமாறி, “ஏன்…..?” என்றான் அவனும் அடைத்த குரலில்.

“ஏனா???ஏனா ??? என்னைப் பொறுத்தவரை நான் பொட்டையிழந்து ஐந்து வருடங்கள் ஆகிறது. நல்லவன் என்று நான் நம்பிய ஒருவன், என்னை என்று விலைமாதுக்கு ஒப்பிட்டானோ அன்றே நான் மனதளவில் இறந்துவிட்டேன். என்று அவன் சட்டப்படி என்னை மனைவி ஆக்கிவிட்டு, சொன்னதை செய்துவிட்டேன் பார்த்தாயா… என்று இறுமாப்புடன் என்னிடமே சொன்னானோ அன்றே அவன் இறந்துவிட்டான். தரம் கெட்டவனுக்கு தாரமாக இருப்பதை விட, தாலியை கட்டாமலேயே அதை இழந்தவளாக இருப்பது மேல் என்பதால் பொட்டை இழந்துவிட்டேன்! ஊருக்கு வேண்டுமானால் நான் திருமணமானவளாக தெரியலாம். எனக்கு.. நான் கணவனை இழந்தவள்! இப்போது சொல்லுங்கள்? பொட்டு வைக்கும் உரிமை எனக்கு இருக்கிறதா?” கண்கள் கோபத்தில் ஜுவாலையாய் எரிந்தது வதனிக்கு.

அலுங்காமல் குலுங்காமல் அவன் தலையிலேயே இடியை இறக்கினாள் வதனி.

மனதின் வெப்பம் முழுதும் கண்களில் தெரிய கொதிநிலையின் உச்சத்தில் இருந்தவளை பார்க்கவே பயமாக இருந்தது இளாவிற்கு.

ஏதோ ஒரு நுனியில் ஊசலாடிய இளாவின் உயிர்மூச்சு அந்த நிமிடம் அவனிடமிருந்து விடை பெற்றது.

தவறு செய்துவிட்டோம் என்று சோகத்தை கூட சுகமாய் தாங்கி, தனக்குள்ளேயே அழுது புலம்பி வாழ்ந்தவனின் மனதின் ஒரு மூலையில், அவளின் காலில் விழுந்தாவது மன்னிப்பை கேட்டு வாழ்க்கையை சீராக்கிவிட வேண்டும் என்கிற ஆசை இருந்தது.

வதனியின் மனதில் கோபம் இருந்தாலும் ஏதோ ஒரு மூலையில் அவன் மேலான காதலும் இருக்கும் என்கிற நம்பிக்கையும் இன்று முற்றாக அழிந்தது அவனுக்கு.

எண்ணங்கள் நிராசையானது மட்டுமல்லாமல், காதல் கொண்டவளின் கூற்று, அவனின் உடலையும் உயிரையும் அல்லவா கூறு போட்டது.

உடலின் மொத்தமும் நடுங்கிய போதும், வரமாட்டேன் என்று அடம் பிடித்த குரலை கஷ்டப்பட்டு வெளியே கொண்டு வந்து, “அன்று நான் செய்தது தவறு தான். தப்பு செய்தால் தண்டனை கொடு. இப்படி வதைக்கிறாயே… இதற்கு நீ என்னைக் கொன்றே போட்டிருக்கலாம்…..” என்றவன், எதுவோ சொல்ல வந்தவளை கண்களை இறுக மூடி கைகளினால் தடுத்தான்.

“தயவு செய்து நீயும் வார்த்தைகளை விடாதே வது. அப்படி வார்த்தைகளை விட்டுவிட்டு நான் ஒருவன் படும் பாடே போதுமானது…”

error: Alert: Content selection is disabled!!
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock