நெஞ்சை தொட்டுக் காட்டி, “இங்கே வலிக்கிறது வது. அங்கே இருப்பதும் நீதான். உனக்கு புரியவில்லையா என் மனதின் வலி. நானும் என் காதலும் பொய்யாகிப் போனாலும் உன் காதல் பொய் இல்லையே. உண்மைக் காதல் உணராதா… மனதுக்கு பிடித்தவர்கள் படும் பாடு. உன்னால் உணர முடியவில்லையா… உன்னளவில் என்னை கொன்றதுக்கு பதிலாக என்னை நீ கொன்றே போட்டிருக்கலாம். உயிரை மட்டும் பிச்சையாக போட்டுவிட்டு அணுவணுவாக கொல்கிறாயே வது…..” என்றான் தோற்றுவிட்ட குரலில்.
“தயவு செய்து வெளியே போங்கள்….” கொஞ்சமே கொஞ்சம் குரல் கரகரத்ததோ வதனிக்கு.
வெளியே நடந்தவனின் சுயம் அவனிடம் இல்லை. வாசனும் கோபாலனும் அதிர்ச்சியோடு வாசலில் நின்றதையோ, அவர்கள் தன்னையே பார்ப்பதையோ உணரமுடியாத இளவழகன் கால் போன பாதையில் நடந்தான். வாசனிடம் கண்ணால் விடைபெற்ற கோபாலன் இளாவை மறித்து தன்னுடைய மோட்டார் வண்டியில் ஏற்றிச் செல்வதை கூட இளா உணரவில்லை.அப்படி உணரும் நிலையை அவன் தாண்டி இருந்தான்.
யாரோ தீ வைத்தது போன்று எரிந்தது அவனின் இதயம். செய்த தவறுக்கு தண்டனை கொடுப்பதாக நினைத்து உயிருடன் புதைத்து விட்டாளே… பொட்டு இல்லாத முகத்தையே பார்க்கும் சக்தி இல்லை என்றவனிடம் எப்படி உன்னால் அப்படி சொல்ல முடிந்தது வது….. நான் இறந்துவிட்டேனா….. அதில் எனக்கு கவலை இல்லை…. ஆனால் உன் முகம் பொட்டில்லாமல் இருப்பதா… அதை நான் பார்ப்பதா…… நிச்சயமாக இல்லை! விட மாட்டேன்! அப்படி இருக்க உன்னை விட மாட்டேன்….!
தவித்தவனின் மனம் ஏதோ ஒரு முடிவை எடுத்தது!
முகம் இறுகி நின்ற வாசன் இதற்கு என்ன முடிவு என்று யோசித்தான். மனதில் ஒரு முடிவை எடுத்தவன், அதை செயலாக்க வதனியின் அலுவல் அறைக்குள் நுழைந்தான்.
வதனியை நிமிர்ந்தும் பார்க்காமல், “நான் மறுபடியும் மட்டக்களப்புக்கு போகப் போகிறேன்…” என்றான் அறிவிப்பாக.
கலங்கிய கண்களை அவனுக்கு காட்டாது மறைப்பதில் ஈடுபட்டிருந்தவள், அதை மறந்து திகைத்து விழித்தாள்.
அவளின் பெயரை சொல்லாமல் பேசியது ஒரு புறம் என்றால் அவன் மட்டக்களப்புக்கு செல்ல போகிறேன் என்பதை அறிவிப்பாக சொன்ன விதம் என்று வாசனின் இந்த புதிய முகம் அவளுக்கு புதிது.
“என்னிடம் அனுமதி கேட்கிறாயா இல்லை அறிவிக்கிறாயா வாசா…” திடமாக கேட்க முயன்றபோதும் முடியவில்லை அவளால்.
அவளை ஒரு நொடி பார்த்தவனின் கண்கள் அவளின் கண்களை ஊடுருவியது.
“எனக்கு தெரிந்து என்னுடைய தோழி மதிக்கு யாருடைய மனதையும் நோகடிக்கத் தெரியாது. ஏன், கோபப்படக் கூடத் தெரியாது. ஆனால் இன்று நான் பார்த்த மதி முற்றிலும் மாறானவள். கோபப்படுகிறாள், ஆத்திரப்படுகிறாள், ஆங்காரம் கொள்கிறாள், தூக்கியெறிந்து பேசுகிறாள். வார்த்தைகளால் ஒருவர் மனதை வதைக்கும் கலையை எங்கே கற்றுக் கொண்டாய் மதி?”
கண்கள் கலங்க அவனை வெறித்தவள், “அப்போ.. நீயும் அவரைப் போல என்னை தரம் கெட்டவள் என்கிறாயா…? எப்படியெல்லாம் அவர் பேசினார் என்று உனக்கு தெரியாது. நான் பேசியதுக்கே இப்படி சொல்கிறாயே.. அவர் பேசியதை கேட்டால் என்ன சொல்வாய்….” கோபமும் குற்றச்சாட்டும் இருந்தது அவள் குரலில்.
“அவர் ஏதோ ஒன்றை சொன்னால் அது சரி என்று அர்த்தமா? அவர் சொல்வது தான் இந்த உலகத்தின் நியாயத்தீர்ப்பு என்று உனக்கு யார் சொன்னது? உன்னை அப்படி சொன்னார் என்றால், உன்னை நாடிய அவர் யார் மதி? அவர் சொன்னார் என்பதற்காக நீ இப்படி கண்ணீரில் கரைகிறாயே, உன் மீதே உனக்கு நம்பிக்கை இல்லையா? நீ அப்படியான பெண்ணா? யார் எதைச் சொன்னாலும் இப்படித்தான் உன்னையும் வருத்தி மற்றவர்களையும் வருத்துவாயா?”
கேள்விகள் ஆணித்தரமாக வந்த போதும் பதில் சொல்லத் தெரியாமல் விழித்தாள் வதனி.
ஆனாலும், “மிகுதி வாழ்வு முழுமைக்கும் நீயே துணை என்றும் நம்பும் ஒருவர் நம்மை கேவலப்படுத்தினால் வலிக்காதா வாசு? இன்றுவரை வலிக்கிறதுடா. நீயே சொன்னாய் தானே. நான் யாரையும் நோகடித்தது இல்லை என்று. அப்படியான நான் இன்று இப்படிப் பேசுகிறேன் என்றால் என்னுடைய மனம் படும்பாடு அல்லது பட்ட பாடு உனக்குமா புரியவில்லை வாசா…?” கண்களில் கண்ணீர் வழியக் கேட்டவளை பார்க்கையில் மனது தவித்தது வாசனுக்கு.
அவள் படும் பாட்டைப் பார்க்க முடியாமல் தானே அவன் இந்தக் கடுமையை காட்டுவதே….
இன்றோடு இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று நினைத்தவன், மனதை கல்லாக்கிக் கொண்டு, “உன் வேதனை எனக்கு புரிகிறது மத்திம்மா. ஆனால் ஒன்றை யோசி. இன்னும் எவ்வளவு காலத்துக்கு அவரையும் வருத்தி உன்னையும் வருத்தப் போகிறாய்? ஏற்கனவே ஐந்து வருடங்கள் ஓடிவிட்டது. இன்னும் எத்தனை வருடங்கள் உன் கோபம் இருக்கும்? இதற்கு ஒரு முடிவை சொல்லு?”
என்ன முடிவைச் சொல்ல முடியும் அவளால். அவனையே பாவமாக பார்த்தவளை பார்க்கும் போது, முன்னர் மட்டக்களப்புக்கு வரும் போதெல்லாம் ஏதாவது தவறு செய்துவிட்டு, என்னைக் காப்பாற்றேன் வாசு என்று கெஞ்சும் மதியே அவன் கண்ணில் வந்து போனாள்.
என்ன தான் பெரிய பெண் ஆனாலும் இன்னும் குழந்தையாகவே இருக்கும் இவளுக்கு இவ்வளவு வேதனைகளை ஏன் கொடுத்தாய் ஆண்டவா என்று மனது வருந்தியது அந்த உயிர்த் தோழனுக்கு.
“அவருடன் தானே உன்னால் வாழ முடியாது. சரி விடு! அவரை விவாகரத்து செய்துவிட்டு வேறு நல்ல மாப்பிள்ளை ஒன்றை நான் பார்க்கிறேன். இதற்கு உனக்கு சம்மதம் தானே….”
குண்டொன்றை அலுங்காமல் குலுங்காமல் அவள் தலையில் போட்டான் வாசன்.
விவாகரத்தா… இன்னொரு திருமணமா… இந்த வாசனின் கழுத்தை நெரித்தால் என்ன என்று எண்ணம் ஓடியது வதனிக்கு.
“உன்னிடம் கேட்டேனா நான், எனக்கு இன்னொரு திருமணம் செய்து வை என்று?” சினமிகுதியில் சீறினாள் வதனி.
மனதுக்குள் சிரித்துக் கொண்டான் வாசன்.
“ஒன்றில் இளவழகன் அண்ணாவுடன் சேர்ந்து வாழ்! இல்லையானால் இன்னொரு திருமணதிற்கு சம்மதி!” அழுத்தமாக குரல் வந்த போதும் அவன் மனதில் அது மருந்துக்கும் இல்லை.
“இரண்டும் என்னால் முடியாது போடா….” என்றவள் விரைந்து வெளியேறினாள்.
பிரச்சினையை எதிர்கொள்ளப் பயந்து ஓடும் வதனியை பார்க்கும் போது ஆச்சரியமாக இருந்தது வாசனுக்கு. இது அவளின் இயல்பு அல்ல. ஆனாலும் இப்படி நடந்து கொள்கிறாள் என்றால் இளாவை தவிர இன்னொருவனுடன் கடைசி வந்தாலும் வதனியால் வாழ முடியாது என்பதை புரிந்து கொண்டான் வாசன். காதல் எவ்வளவு மகத்தானது. நாமும் காதலித்துதான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று எண்ணம் ஓடியது அவனுக்கு.
பட்டவனின் வலி படப்போகிறவனுக்கு புரிவதே இல்லை!


