ரோசி கஜனின் இயற்கை – 27 -3

“உப்புத்தண்ணி ஏரி! இப்ப இருக்கிறத விட முந்தி பெண்ணாம் பெரிசாம்!” இடையிட்ட ஆரூரன், “அன்டிலோப் ஐலன்ட் சோல்ட் லேக் சிட்டிட மேற்கில இருக்கு. இங்க உள்ள பத்துத் தீவுகளில ஒண்டு மட்டுமில்ல, பெரிய தீவும் இதான். அதோட வெள்ள மணல் ஏரிக்கரை இருக்கு. நிச்சலடிக்க எண்டே இங்க நிறையப்பேர் வருவினமாம். நடந்து, சைக்கிளில எண்டும்  சுற்றலாம். அதுமட்டுமில்லாமல் நிறைய தாவர விலங்கினங்கள் இந்த ஸ்டேட்ஸ் பார்க்கில இருக்கு. குறிப்பா, மறி மான் அதான் அன்டிலோப், மான், பொப் கட்ஸ் (bob cats), குதிரைகள், பைசன்ஸ்(bisons), எருமைகள், பருந்துகள் அதோட குதிரைப்பண்ணை எண்டு நிறைய இருக்கு.” மூச்சு விடாது ஒப்பித்தவன், “இதுக்குப் போய் பெரிய வாக்குவாதம் என்ன வேந்தன் அண்ணா?” கண்ணடித்து முறுவலித்தான்.

“அதான்…” முறுவலோடு சொன்னபடி காரை ஓரமாக நிறுத்தவும், “இங்க ஏன்?” பின்னாலிருந்து கேள்வியெழுந்தது.

“வேற என்னத்துக்கு நம்மட கமராக்கு வேலை வைக்கத்தான்.” ஆரூரன் சொன்ன விதத்தில் கலகலப்பு நகைப்போடு இறங்கி நடந்தார்கள், எல்லோரும்.

”சரி சரி, இப்ப இருந்து ஆரூரன் ‘கூகிள் டூ’ எண்டு அழைக்கப்படுவார்.” என்று சொன்ன படி இறங்கிய இலக்கியாவை அடிக்கக் கலைத்தான், ஆரூரன். அவளோ, ஓடிச் சென்று அங்கிருந்த  பைசன்ஸ் உருவச் சிலைக்குப் பின்னால் நின்றுகொண்டு, “ஆராவது ஒரு நல்ல உள்ளம் தனியா என்னை ஒரு கிளிக்!” வாயெல்லாம் பல்லாக நின்றபடி சொன்னவளை எல்லோரினதும் கமராக்கள் உள்வாங்கிக் கொண்டன. வேந்தன் மட்டும் சும்மா இருப்பானா என்ன!

அதன் பின்னர் எல்லோருமாக புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு ஸ்டேட்ஸ் பார்க்கினுள் நுழைந்தவர்கள், “முதல் காரில ஒரு ரவுண்ட் வருவம்.” வேந்தன் சொல்லவே, சம்மதித்து மெதுவாகவே சுற்றி வந்தார்கள்.

ஆரூரன் சொன்னபடி, இயற்கை வஞ்சகமேயின்றிப் பரந்து கிடந்தது. நீல வானும், ஆதவனின் அதித காதலால் பச்சைக்குப் போட்டியாக மஞ்சள் போர்த்தியிந்த மண்ணும், சற்றே தூரத்தே சுற்றிப் படர்ந்து கிடந்த மலைத்தொடர்களும், அவற்றைக் கொஞ்சிச் செல்லும் வெண்மேகத் திட்டுகளுமாக கண்ணுக்கு நல்ல விருந்து கிடைத்ததென்றால், மறுபுறமோ, விட்டுவீதியாகத் திரியும் மிருகங்கள் கருத்தினைக் கவர்ந்தன. 

கலகலப்போடு போட்டி போட்டுக்கொண்டு புகைப்படங்கள் வீடியோ எடுப்பதென்றிருந்தவர்கள், ஓரிடத்தில் காரை நிறுத்தவும் விறுவிறுவென்று இறங்கினார்கள். முன்னே பரந்து கிடந்த சோல்ட் லேக்கின் கரையைக் கண்டுவிட்டுச் சும்மா நிற்பார்களா என்ன?

இறங்கிய வேகத்தில் இளையவர்கள் ஒரே ஓட்டமாகச் செல்ல, அவர்களையெல்லாம் முந்திக்கொண்டு முதல் ஆளாகச் சென்றது, இலக்கியாதான். அவளோடு போட்டிக்கு ஓடிய ஆரூரன், கவின் அழவும் நின்று அவனையும் கூட்டிக்கொண்டு நடந்தான்.

வேந்தன் இறங்கி வருவதற்குள் பெரியவர்களும் ஏரிக்கரை நோக்கிச் சென்று கொண்டிருந்தார்கள். நாதன் மட்டும் இவனுக்காகக் காத்திருந்தார்.

“அங்க கரையில கருப்பு மணல் போல ஒருவகைப்பூச்சி இருக்கு அங்கிள், கடிக்காது எண்டு எங்கயோ வாசிச்சன்…எண்டாலும் பார்த்து இறங்கச் சொல்ல வேணும்.” அவன் சொல்லிக்கொண்டு நடக்கத் தொடங்கவே, குய்யோ முறையோ என்று கத்தத்  தொடங்கியிருந்தார்கள்.

“பச் சொன்னன்…” என்ற வேந்தன், திரும்பி ஓரெட்டில் காரை அடைந்து சில தண்ணிப் போத்தல்களையும் எடுத்துக்கொண்டு சென்றடைவதற்குள் இலக்கியாவும் ராஜியின் மகளும் துள்ளோ துள்ளென்று துள்ளி, கத்தி ஆர்பாட்டம் செய்து விட்டார்கள்.

 “பச்! கத்தாதேயும், அது ஒண்ணும் கடிக்காது, இந்தா கழுவும்!” முதலில் நின்ற இலக்கியாவிடம் தண்ணீர்போத்தலை நீட்ட, இடையிட்டு வாங்கிக்கொண்ட ஆரூரன், “ஆடாம நில்லடி! தண்ணியையே காணாத கணக்கில ஓடிவந்து பாஞ்சா இதுதான் நடக்கும்.” ராஜியின் மகள் கால்களில் தண்ணியை ஊற்றத் தொடங்கியிருந்தான்.

அவனுமல்லோ இறங்கியிருக்க வேண்டியவன்! ‘கவின்! என்ர செல்லக்குட்டி வாழ்க!’ மனதுள், தன்னைப் பின்தங்க வைத்த குட்டிச்சகோதரனை கட்டியணைத்துக் கொண்டான்.

 வேந்தனும் தாமதிக்கவில்லை. “துள்ளினா எப்பிடி? பேசாமல் நிண்டு கழுவும். இவ்வளவும் தான் வீரமோ!” 

அவள் படும் பாடு ஏற்படுத்திய நகைப்போடு தண்ணீரை ஊற்ற்றினான். சுழன்று சுழன்று கால்களில் நீரைத் தாங்கிக் கழுவியவள் ஒரு நொடி  தடுமாறிவிட்டாள். பட்டென்று  அவன் கரத்தைப் பற்றித் தன்னை நிலைப்படுத்திக்கொண்டவள், வெகு இயல்பாக, அவனைப் பிடித்தபடியே நின்று கழுவியவளுக்குச் சற்றே தாமதமாகவே தன் செய்கை உறைத்தது.

 மறுநொடியே பிடித்திருந்த பிடியை விட்டுவிட்டாள். மறந்தும் பார்வையை எங்கும் திருப்பவில்லை. அவனையும் பார்க்கவில்லை. 

‘ச்சே இலக்கியா இலக்கியா இலக்கியா!’ படபடவென்று தன்னையே தான் கடிந்துகொண்டாள்.

’இவர் அப்பிடி வந்து உரிமையோட கதைக்கப்போய்  நானும் லூசி வேல பார்த்திட்டனே’ மனதில் திண்டாடிவிட்டாள். அடுத்த நொடியே, ‘அது என்னையும் அறியாமல் பிடிச்சது. அதில ஆர் நிண்டாலும் பிடிச்சுத்தானே இருப்பன். இப்ப இதுக்கு ஏன் பெரிசா நாடகம் போட்டு விசயத்தப் பெரிசாக்க வேணும்?’ மனம் முணுமுணுத்தது.

 மறுகணம், “செக்! உடம்பெல்லாம் ஏறினது போலக் கிடக்கு! அதுக்க உங்களுக்குச் சிரிப்போ! தாங்கோ நானே கழுவிறன்.” அவன் கரத்திலிருந்த மற்றைய போத்தலைப் பிடிங்கி எடுத்தவள், “அவ்வளவு பேருக்கும் நடுவில நிண்டுகொண்டு பார்க்கிற பார்வையை! ஆளுக்கு துணிவு கூடிட்டு தம்பி இது நல்லதுக்கில்ல.’ தொடர்ந்து  முணுமுணுத்தபடி, போட்டிருந்த முக்கால் பான்ட்டை முழங்காலுக்குச் சுருட்டி விட்டுவிட்டு மீண்டும் நன்றாகக் கழுவினாள்.

“ஓடி வார வேகத்தில காலில கிடந்த செருப்பு எங்கயோ பறந்திருச்சே!” சுற்றி விழிகளைச் சுழற்றியவள், “அம்மோய்… அந்தா உங்களுக்குப் பின்னால கிடக்கு அச்சாப்பிள்ள போல இப்பிடி எடுத்துப் போட்டு விடுங்கோ!” கேட்கவும் செய்தாள்.

வேந்தனின் பார்வை அவள் முகத்தில் தான், உதடுகளில் உறைந்த முறுவலோடு! எவ்வளவு அழகாகச் சமாளித்தாள்! வாய்விட்டுச் சிரிக்க வேண்டும் போலிருந்தது, உண்மையில்  திண்டாடிப்போனான் தான்.  அவனைக் காப்பாற்றும் விதமாக அழைத்தார், அவன் அன்னை.

“அம்மா தான், கதைச்சிட்டு வாறன்.” நகர்ந்துவிட்டான். 

“அக்கா! செருப்பு…” ஒன்று ஒன்றாகத் தூக்கி அவளருகில் போட்ட கவின், ஓடிப்போய் தள்ளியே நின்றுகொண்டான். பூச்சியைப் பார்த்து பயந்துவிட்டான்.

என்னவோ ஏதோவென்று பயந்த பெரியவர்களும் முறைப்போடுதான் நின்றுகொண்டிருந்தார்கள்.

“ஓ கடவுளே! இப்ப என்ன நடந்திட்டு எண்டு முறைக்கிறீங்க? எல்லாரும் தானே ஓடி வந்தம். முதல் இறங்கினதால நாங்க மாட்டினம் இல்லையோ மற்றவை.” சமாளித்தாள், இலக்கியா.

“என்னதான் சொல்லு, இறங்கியும் இறங்காமல் இப்பிடி தலைதெறிக்க ஓடிவர இப்ப என்ன அவசரம்?”

“ஓம், நீயும் ஆருரனும் ஓடினதாலதான் சின்னப்பிள்ளைகளும் ஓடிவந்தவை பிள்ள, எத்தின தரம் சொல்லியாச்சு. அப்பா உங்கள நம்பியல்லா விட்டவர்?”

“அம்மா …இப்பத்தானே ஒண்டும் நடக்கேல்லயே!” 

“அதைத்தான் சொல்லுறம், ஒண்டு கிடக்க ஒண்டு ஆகியிருந்தா? வேற ஏதாவது விசப்பூச்சியா இருந்திருக்க!” கடிந்து கொண்டார், நாதன். 

“சித்தப்பா! இப்பிடி இருக்கும் எண்டு நான் என்ன சாத்திரமா பார்த்தன்? எல்லாம் தனக்குத் தெரியும் எண்டு அடிச்சு விளாசிற கூகிள் இதையும் முதலே  சொல்லியிருக்கலாமே!” என்ற வேகத்தில், “இன்னொருக்கா வடிவாக் கழுவ வேணும். கழுவிட்டு ஓடிவாறன்.”  காரை நோக்கி ஓட,  “பாருங்க, தான் அந்தரப்பட்டு வந்திட்டு என்ன சொல்லிப்போட்டுப் போறாள் எண்டு! முதல், ஒருக்கா கதைக்கிறது வேற, எந்தநேரமும் கூகிள் கூகிள் எண்டு என்ன இதம்மா! இவள்ட சேட்டைக்கு அளவில்லாமல் போகுது.”  முறைப்போடு முணுமுணுத்தாள், கவி.

“அவள் பகிடிக்கம்மா.” என்ற சுகுணா, “போனவள்  என்ன செய்யிறாள் எண்டு பார்த்திட்டு வாறன்.” நகர்ந்தார்.

“நல்ல பகிடிதான்.” புறுபுறுத்தாள், கவி.

“இன்னும் மிச்சம் இருக்கிற நாட்கள் கவனமாப்  போய் இந்தப் பிரயாணத்த முடிக்க வேணும். அதுக்குப் பிறகு அண்ணா வந்திருவார். அவராச்சு நீங்களாச்சு!” நாதன் சொல்ல, “சரி சரி விடுங்க, வேணுமெண்டா செய்தவை? இல்லையே! அவள் சொல்லுறதும் சரிதானே, பிள்ளைகள் ஆசையா ஓடி வந்தவே இதுவும் கருப்பு மணல் போலத்தான் இருக்கு.” சமாதானம் செய்தான், மாறன்.

“ இப்பிடி இருக்கும் எண்டு எங்கயோ பார்த்ததா தம்பி சொல்லி வாய் மூடேல்ல,  இங்க சொல்லுவம் எண்டா இறங்கிட்டினம்.” என்றார் நாதன். 

“சரி விடுங்க, வாங்க இப்பிடியே கரையால நடப்பம். பார்த்துத் தண்ணிக்க இறங்கலாம்.” மாறன் கவினோடு நடக்க, கொஞ்சத் தூரம் போய்விட்டு “அம்மாவையள பார்த்திட்டு வாறன்.” திரும்பிவிட்டாள் கவி.

மேலும் இரு தண்ணீர் போத்தல்களை முடித்து ஒருவாறு கால்களைக் கழுவியிருந்தாள், இலக்கியா. சும்மாவும் இல்லை, சோப்புப்போட்டு அவள் கழுவிய விதத்தைப் பார்த்து அடக்கமுடியாத சிரிப்போடு தாயோடு கதைத்துக்கொண்டிருந்தான் வேந்தன்.

“என்னம்மா இலக்கி இதெல்லாம்? உன்ன விட சின்னவளப் பார், ஒரு போத்தலில கழுவிப்போட்டு அங்க ஓடித் திரியிறாள்.” என்றபடி வந்தார் சுகுணா. 

“மா! சும்மா ஆரும் காலைக் கழுவிவினமோ! அவள விட எனக்குத்தான் நிறைய ஏறிச்சு. அவள் எனக்குப் பின்னால வந்து ஒரு கால்தான் வச்சாள் எண்டு நினைக்கிறன், நான் கத்தினதும் பின்னுக்குப் போயிட்டாள்.” 

error: Alert: Content selection is disabled!!