இப்போதும், அவளுக்கு அவன் சொன்னதன் முழுமையான அர்த்தம் பிடிபடவில்லை. அதில் உண்டான சலிப்புடன் எழுந்து, வாங்கிலில் இருந்த தன் பொருட்களைச் சேகரித்துக்கொண்டே, “என்னவோ தெரியா சேர். இனி ஆரையும் அவ்வளவு ஈசியா நம்புவனா தெரியாது. உங்களையும் தான்.” என்றாள்.
அவளின் பேச்சில் அவன் உதட்டினில் பொருள் விளங்காப் புன்னகை ஒன்று உதயமாயிற்று. அதைக் கண்டுவிட்டு நகர முடியாமல் நின்றவளை, ஒற்றைத் தலையசைப்பால் தன்னருகே அழைத்தான். வந்தவளிடம், “கனவுல கூட இந்தக் குட்டிப் பிள்ளைக்கு ஒரு பாவமும் செய்யமாட்டன். உனக்குத் தெரியாது, நீ எனக்கு எத்தினையோ வருசமாத் தணியாம இருந்த தாகத்தைத் தணிய வச்சுக்கொண்டு இருக்கிறாய். அதால, எந்தக் கவலையும் இல்லாமப் போ. நானே நினைச்சாக்கூட என்னால உனக்கு ஒரு தீமையச் செய்யேலாது.” என்றான் அவள் மனதை வருடும் பட்டுபோன்ற மென் குரலில்.
அவளுக்குள் மெல்லிய திகைப்பு. கூடவே, தலையும் அதுபாட்டுக்குச் சரி என்பதாக ஆடியது. போ என்று மீண்டும் தலையை அசைத்தான்.
மாயமந்திரத்துக்குக் கட்டுப்பட்டவள் போன்று அவளும் அவனைவிட்டுத் தூரமாக நகரத்தொடங்கினாள்.
எங்கோ பார்வை நிலைகுத்தியிருக்க அப்படியே அமர்ந்திருந்தான் காண்டீபன். அவனுடையது கலைப்பீடம். அவளுடையது சட்டம். இருவரும் சந்திக்கச் சாத்தியமும் இல்லை, அவசியமும் இல்லை. ஆனாலும், அவள் முகம் பார்க்கவும் அவளோடு பேசவும் என்றுதான் கட்டடங்களைத் தாண்டி, அவளைத் தேடி வந்திருந்தான். அவளோ அவனைத் தூக்கி அவனின் இறந்தகாலக் குளத்துக்குள் போட்டுவிட்டுப் போயிருந்தாள். அதற்குள் மூழ்கப்போன மனதைப் பிடிவாதமாக வெளியே இழுத்துக்கொண்டு எழுந்து, தன் வகுப்பு நோக்கி நடந்தான்.
அங்கே, ஒரு திருப்பத்தில், அழுது வீங்கிய முகத்துடன் அவனுக்காகக் காத்திருந்தாள் அஞ்சலி. ஒருநொடி நடை நிற்கப் புருவங்களைச் சுருக்கியவன், வேகமாக அவளருகில் வந்து, “மாதவன் பிடிபட்டுட்டானா?” என்று தாழ்ந்த குரலில் வினவினான்.
ஆம் என்று தலையசைத்தவளின் கன்னங்களில் கண்ணீர் உருண்டு ஓடியது. ஒற்றைக் கையால் தன் நெற்றியைத் தேய்த்துவிட்டான். விழிகள் ஒருமுறை என்னவோ யோசனையில் சுருங்கி விரிந்தது. அவ்வளவுதான் அதற்கு அவனாற்றிய வினை. “இது எப்பவாவது ஒருநாள் நடக்கும் எண்டு எதிர்பாத்தது தானே. பிறகு என்ன? முகத்தைக் கழுவிக்கொண்டு விரிவுரைக்கு நட!” என்றுவிட்டு அவளைக் கடந்து போனான்.
“நான் இண்டைக்கு வீட்டுக்குப் போகட்டா சேர்?” அழுத தடம் தெரிந்த குரலில் வினவினாள் அஞ்சலி.
நடை நிற்க வேகமாகத் திரும்பியவனின் விழிகளில், கோபம் தெறித்தது. “போய்? என்ன செய்யப்போறாய்? தனியா குந்தி இருந்து அழப்போறியா? இல்ல..” அதற்குமேல் அவன் பார்வையை எதிர்கொள்ளத் தைரியமற்றுத் தலைகுனிந்தாள்.
“நட வகுப்புக்கு!” என்று அதட்டியவன், மீண்டும் அவளருகில் வந்து, “தமயந்திக்கு கொஞ்ச நாளைக்கு ஒண்டும் குடுக்காத. வீட்டிலயும் எதையும் வச்சு எடுக்காத. எல்லாளன் கொஞ்சம் அமைதியாகட்டும். லொலி கேட்டா சும்மா லொலிய குடு.” என்று, இப்போதும் மற்றவர்களுக்குக் கேட்காத குரலில் சொல்லிவிட்டு நடந்தான்.
அன்று, காண்டீபனின் விரிவுரைகள் நண்பகலோடு முடிந்திருந்தது. குறிப்பு எடுக்கவேண்டிய வேலை இருந்தது. எப்போதும், பல்கலைக்கழக நூலகத்தில் அமர்ந்துதான் அதை முடிப்பான். இன்று, மனம் ஏனோ எதிலும் இலயிக்கமாட்டேன் என்றது. ஆதினியின் கேள்வி, மாதவன் சிறைப்பட்டது என்று எல்லாம் சேர்ந்து, அவன் அமைதியைக் குலைத்திருந்தது. காலையில் மாத்திரமே உண்டுவிட்டு வந்த வயிறு வேறு என்னைக் கவனி என்றது. பேசாமல் வீட்டுக்குப் புறப்பட்டான்.
உச்சி வெயில் இன்னுமே தணியவில்லை. மாமரத்தின் நிழலின் கீழே வண்டியை நிறுத்திவிட்டு வந்தவனை, அமைதியான வீடே வரவேற்றது. பகல் என்பதில் பெரியவர்கள் இருவரும் உணவை முடித்துக்கொண்டு உறங்குவார்கள் என்று தெரியும். ஆனால், என்னதான் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாலும், இவனுடைய வண்டியின் சத்தம் கேட்டதுமே விழித்துக்கொள்வார், அவனின் தந்தை. “வா தம்பி!” என்கிற அவரின் குரல் நிச்சயம் கேட்கும்.
இன்று, அது இல்லை என்றதும், நேராக விறாந்தையில் படுத்திருந்த அவரின் அருகில் சென்று, நெற்றியில் கைவைத்துப் பார்த்தான். உடல் சூடு எதுவுமில்லை. நல்ல உறக்கம் மட்டுமே என்றபிறகுதான், அங்கிருந்த மேசையில், கையில் இருந்த பொத்தகங்களை எல்லாம் வைத்தான். மனைவியைத் தேடி விழிகளைச் சுழற்றினான். அவள் உறங்கமாட்டாளே என்று எண்ணியவனின் எண்ணத்தை மெய்யாக்கிக்கொண்டு, வீட்டின் பின்பக்கமிருந்து வந்து கொண்டிருந்தாள் மிதிலா.
நீர்த் திவலைகளைச் சுமந்திருந்த முகமும், தோளில் கிடந்த துவாயும், அப்போதுதான் குளித்திருக்கிறாள் என்று சொல்ல, அவன் விழிகளில் ரசனை படர்ந்தது.
அந்தப் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் அவள் முகம் சூடாகியது. அதைக் கண்டுவிடப்போகிறான் என்று பயந்து, வேகமாக அறைக்குள் நழுவினாள். கண்ணும் முகமும் சிரிக்க, அவளின் பின்னே அறைக்குள் புகுந்தவன், சத்தமில்லாமல் கதவைச் சாற்றிவிட்டு, அவளைப் பின்னிருந்து அணைத்தான்.
மிதிலாவுக்குத் தேகமெங்கும் நடுக்கமொன்று ஓடி மறைந்தது.
“நான் இன்னும் சாப்பிடேல்லை.” அவளின் காதோரமாகச் சொன்னான்.
“உடுப்பை மாத்திக்கொண்டு வாங்கோ. சாப்பாடு போடுறன்.” நாசுக்காக அவனிடமிருந்து விலக முயன்படி சொன்னவளைத் திருப்பித் தன் முகம் பார்க்க வைத்தான் காண்டீபன்.
“இது ஒரு வருசப் பசி எண்டு தெரியாதா உனக்கு?” அவன் பார்வையில் தெரிந்த தீவிரத்தில் அவளுக்கு நெஞ்சு அடித்துக்கொள்ள ஆரம்பித்தது. “மாமா இப்ப எழும்பிடுவார்.” என்று எழும்பாத குரலில் மெல்ல இயம்பினாள்.
“எழும்பினாக் கூப்பிடுவார். நான் இருக்கிறன் எண்டு தெரிஞ்சா அதுவும் செய்யமாட்டார்.” விடாப்பிடியாகச் சொன்னவனைக் கலவரத்துடன் நோக்கினாள் மிதிலா.
“உங்களுக்குப் பசிக்கேல்லையா?”
“பசிக்குது எண்டுதானே சொல்லுறன்.” பார்வை அவளைக் கொய்ய, வலிவும் வனப்பும் மிகுந்த நீண்ட விரல்கள், பட்டுக் கன்னத்தை வருடின.
எப்போதும் இப்படிப் பிடிவாதம் பிடிக்க மாட்டானே. மனம் தவித்தது. அலைபாய்ந்த விழிகள் என்னை விட்டுவிட்டேன் என்று அவனிடம் கெஞ்சிற்று. அதை உணர்ந்தாலும், “பொறுத்தது காணும் எண்டு நினைக்கிறன்..” என்றான் அவன்.
திக் என்றது அவளுக்கு. தேகம் வெளிப்படையாகவே நடுங்க ஆரம்பித்தது. “ப்ளீஸ்..” விழிகளில் நீர் கோர்க்க, இயலாமையுடன் அவன் முகம் பார்த்துக் கெஞ்சினாள். அவன் சொன்னதுபோல, அவர்களுக்குத் திருமணமாகி ஒரு வருடமாகப் போகிறது. இன்னுமே, ஒருமித்த மனதாக, அவனோடு இணைய முடியாமல், மனதெங்கும் ஆயிரம் கசடுகள்.
அவளின் யாசிப்பில் அவனுக்குக் கோபம் உண்டாயிற்று. “என்ன பிளீஸ்? சொல்லு! என்னத்துக்குப் பிளீஸ்? யாரும் எங்கயும் யாருக்காகவும் தேங்க இல்ல. அவே அவே அவேன்ர வாழ்க்கையைப் பாத்துக்கொண்டுதான் இருக்கினம். நீயும் நானும் மட்டும் அதே இடத்தில நிக்கிறதால இந்த உலகமும் நிண்டுடாது மிது. அது போய்க்கொண்டே தான் இருக்கும். அதோட சேர்த்து இங்க வாழுற மனுசரும். அது விளங்க இல்லையா உனக்கு?” என்று அடிக்குரலில் சீறியவன், “இல்ல…” என்று ஏதோ சொல்ல வரவும், நடுங்கும் விரல்களால் அவன் உதட்டினை மூடினாள், மிதிலா. தழும்பிவிட்ட விழிகளோடு சொல்லாதே என்று மறுத்துத் தலையசைத்தாள்.
“நான் ஆருக்காகவும் எதுக்காகவும் விலகி நிக்கேல்ல. எ..னக்கும் உங்களோட வாழவேணும். நிறையக்காலம். நிறையப் பிள்ளைகளோட. ஆனா.. இன்னும் கொஞ்ச நாள்.. பிளீஸ் தீபன்..” என்றவளை, அடுத்த நொடியே எலும்புகள் நொறுங்கிவிடுமோ எனுமளவுக்கு இறுக்கி அணைத்திருந்தான், காண்டீபன்.
தீபன்! ஆடிப்பாடித் திரிந்த காலத்தில், வாய்க்கு வாய் அவள் சொன்ன தீபனை மீண்டும் எத்தனையோ வருடங்களுக்குப் பிறகு கேட்கிறான். இது போதுமே. அவனுக்கு இது போதும்! தன் மகிழ்வைச் சொல்லுகிறவனாக அவளின் முகமெங்கும் முத்தமிட்டான். “போய்ச் சாப்பாட்டைப் போடு! வாறன்.” என்றான் விழிகளினோரம் படர்ந்துவிட்ட மெல்லிய நீர்ப் படலத்துடன்.
அவள் முகத்திலும் கண்ணீரும் சிரிப்பும் ஒருங்கே மலர்ந்திருந்தது. சரி என்பதாகத் தலையை அசைத்துவிட்டுத் துள்ளிக்கொண்டு ஓடினாள்.


