இனி? மனம் மீண்டும் நிகழ் காலத்தில் வந்து நின்றது. இருவரிடையேயும் மீண்டும் ஒரு இறுக்கம். எல்லாளனிடம் நிறையக் கேள்விகள் இருந்தது. கேட்பதற்கு யோசித்துக் கொண்டிருந்தான்.
“வயசு இப்பதான் முப்பதைத் தாண்டுது. ஆனா, ஓடி ஓடிக் களைச்ச மாதிரியே இருக்கு மச்சான். நிம்மதியான ஒரு வாழ்க்கை கிடைக்காதா எண்டு இருக்கு.” இத்தனை காலமும், வீட்டினரின் துன்பங்களை எல்லாம் தான் தாங்கி, அவர்களைக் கவனித்து அவர்களுக்குத் தூணாக நின்றவன் காண்டீபன். இன்றைக்கு, துணைக்கு நண்பன் இருக்கிறான் என்கிற எண்ணம் அவனுக்குள் ஆழப் புகுந்திருக்க வேண்டும். தன் பாட்டுக்குச் சொன்னான்.
அந்த நிம்மதியைத் தொலைத்தது அவனே தானே. அது கொடுத்த கோபத்தில், “அதுக்கு நீ இதெல்லாம் செய்யாம இருந்திருக்க வேணும்.” என்றான் எல்லாளன் சினத்துடன்.
உடனே பதில் சொல்லவில்லை காண்டீபன். கொஞ்ச நேரம் விழிகளை மூடியபடியே இருந்தான். பின் திரும்பி நண்பனைப் பார்த்தான். “அப்பிடி இருந்திருந்தா அது இன்னும் என்ர நெஞ்சப் போட்டு அறுத்து இருக்குமடா. இப்பயாவது எங்க எல்லாரையும் துரத்தி துரத்தி அடிச்சவனுக்குக் கொஞ்சமாவது திருப்பி அடிச்சனே எண்டுற சந்தோசம் இருக்கு. அதையும் செய்யாட்டி புழு மாதிரி என்னை நானே உணர்ந்திருப்பன் மச்சான். யோசிச்சுப் பாரு, ஆருமே அடிக்கிறவனுக்கு உடனேயே திருப்பி அடிக்கிறேல்லடா. விலகிப் போகத்தான் நினைப்பாங்கள். அடிமேல அடியா விழுந்துகொண்டு இருக்கேக்க நமக்கே நம்மைப்பற்றி ஒரு கேள்வி வரும். நீ என்ன புழுவா? போறவன் வாறவன் எல்லாம் மிதிச்சுப்போட்டுப் போறான் எண்டு. அந்தக் கோபம் தான்டா இது.”
“அதுக்கு நீ சட்டப்படி போயிருக்க வேணும்!” என்று எல்லாளன் சொன்னதும் சின்னதாகச் சிரித்தான் காண்டீபன்.
“மாமா மாமிய கொன்றவங்களை உன்ர சட்டத்தால என்ன செய்ய முடிஞ்சது? இந்த ஊருக்கே ஏசிபியா இருந்து கூட அவங்களைப் பிடிக்க உனக்கு எத்தின வருசமானது எண்டு சொல்லு? அப்பவும் ஒருத்தனுக்குத் தானே தண்டனை வாங்கிக் குடுத்திருக்கிறாய். என்ர அப்பா ஒரு போலீஸ். அவருக்கு நீதி கிடைச்சதா? குடிச்சிட்டு, எங்கயோ போய்ச் சண்டை பிடிச்சு, அவருக்கு இப்பிடி ஆகிட்டுதாம் எண்டு கேஸ முடிச்சிட்டாங்கள். நீ சொல்லு, அவர் குடிக்கிறவரா?”
தாடை இறுக அவனைப் பார்த்தான் எல்லாளன்.
“போதைய பாவிக்கிற பிள்ளைகளைப் பிடிச்ச, சரி. டீலர்ஸ பிடிச்ச, ஓகே! ஆனா, இது எல்லாத்துக்கும் தலையா இருக்கிறவங்களை உன்னால என்ன செய்ய முடிஞ்சது? இல்ல, இனியும் ஏதும் செய்யேலும் எண்டு நினைக்கிறியா? அண்டைக்கு அண்ணண் தம்பி மூண்டு பேரும் மட்டுமா செய்த கொலை கொள்ளையை இண்டைக்கு ஒரு கும்பலா சேர்ந்து செய்றாங்கள்டா. சட்டத்துறை நீதித்துறை எண்டு எல்லாத்துக்கையும் அவங்களுக்கு ஆக்கள் இருக்கு. உன்னால முடிஞ்சா, இப்ப நீ போடுற உன்ர யூனிபோர்மால முடிஞ்சா, உன்ர சட்டத்தால முடிஞ்சா அவங்களுக்குத் தண்டனையை வாங்கிக் குடுத்துக் காட்டு. அதுக்குப் பிறகு நான் செய்தது எல்லாம் பிழை எண்டு நானே வந்து உன்னட்ட மன்னிப்புக் கேக்கிறேன்.” என்றான் அவன்.
எல்லாளனின் புருவங்கள் சுருங்கியது. யோசனையோடு நண்பனைப் பார்த்தான். அந்த நாட்களிலேயே ஊருக்குள் நடக்கும் குற்றச் செயல்களைப் பற்றி அக்கு வேறு ஆணி வேறாக ஆராய்கிறவன். அவனுக்கு அது இயல்பாகவே வரும். இவ்வளவு அடிபட்டவன் இன்றைக்கு, நிச்சயம் அதன் அடி ஆழம் வரை சென்று ஆராய்ந்திருப்பான். ஆக, எல்லாளனின் அடிமனதில் இருக்கும் சந்தேகமும் சரிதான். என்ன, சாட்சிகள் இல்லாமல் அவனால் சட்ட நடவடிக்கைகள் எடுக்க முடியாது. அதனால் தான் ஒவ்வொரு முறையும் ஏதாவது கிடைத்துவிடாதா என்று ஓடிக்கொண்டு இருக்கிறான். அதற்காக அவன் செய்தது சரி ஆகிடாதே. அந்த எரிச்சலில், “அதுக்காக நீ செய்தது எல்லாம் சரி எண்டு சொல்லாத காண்டீபா! இதுவும் குற்றம் தான். இதுக்கு நீ தண்டனை அனுபவிச்சே தான் ஆகவேணும்!” என்றான் கோபத்தோடு.
“அது எனக்கும் தெரியும் மச்சான்!” என்றபடி எல்லாளனின் மடியில் தலை வைத்துச் சாய்ந்து கொண்டான் காண்டீபன். எத்தனை வருடத்து ஏக்கம். உச்சி வெயிலில், தார் வீதியில், செருப்பே இல்லாமல் நடக்கிறவனுக்கு ஒற்றை மரமும் அதன் நிழலும் கிடைத்தால் எப்படி இருக்கும்? அப்படி இருந்தது நண்பனின் மடி. சுகமாக விழிகளை மூடிக் கொண்டான். ஒரு காலை மடித்து வைத்து, மற்ற காலை தரையில் நீட்டி இருந்தான். அந்தக் காலில் தான் கம்பி வைத்திருக்க வேண்டும் என்று கணித்தான் எல்லாளன்.
“எனக்கும் உனக்கு முன்னால குற்றவாளியா நிக்க ஆசை இல்லயடா.” நெற்றியின் மீது ஒரு கையைப்போட்டிருந்தவன் பெரிய மூச்சை இழுத்துவிட்டபடி சொன்னான். “உன்ன இறுக்கிக் கட்டிப்பிடிக்கோணும் மாதிரி இருக்கு. பழைய மாதிரி உரிமையோட பழக ஆசையா இருக்கு. ஆனா, என்னால முடியேல்ல. ‘உன்ர கை ரெண்டும் கறை பட்ட கையடா’ எண்டு என்ர மனமே என்னட்ட சொல்லுது. அதால நீ எனக்குத் தண்டனையை வாங்கித் தா. ரெண்டு வருசமோ மூண்டு வருசமோ அனுபவிச்சுப்போட்டு வந்து உன்னக் கட்டிப்பிடிக்கிறன்.”
ஒருவித அதிர்வுடன் நண்பனைப் பார்த்தான் எல்லாளன். ஆக, செய்வது தவறு, அதற்கான தண்டனை இது என்று எல்லாம் தெரிந்துதான் செய்திருக்கிறான்.
“நீ எந்த மனநிலைல அந்த ஊர விட்டு வந்தியோ அதே மனநிலைல தான் நானும் வந்தனான். நீயில்லாம, மாமா மாமி இல்லாம அந்த ஊரே சுடுகாடா ஆனமாதிரி ஒரு உணர்வு. நீங்க இருந்த வீட்டுப் பக்கம் போகவே பயம். அங்க இருக்கவே ஏலாம போச்சு. மிதிலாவும் ஒதுங்கிட்டாள். அப்ப, நானும் அத பெருசா யோசிக்கிற நிலைமைலையோ அவளைக் கவனிக்கிற நிலையிலையோ இருக்கேல்ல மச்சான். எங்கடா, எனக்கான பிரச்சினையே போதுமா இருந்தது. ஊர விட்டு வந்தும் அப்பாக்கு ஆங்கில வைத்தியம், சித்த மருத்துவம் எண்டு எல்லாம் பாத்து, இனி அவருக்கு இடுப்புக்குக் கீழ இயங்கவே இயங்காது எண்டு முடிவாகிறதுக்கே மூண்டு வருசமாச்சு. இதுல என்ர கையையும் காலையும் பாக்கோணும். படிப்பு ஒரு பக்கம், பார்ட் டைம் வேல இன்னொரு பக்கம் எண்டு நரகமடா கொஞ்சக் காலம்.” ஆரம்ப நாட்களில் எல்லாளன் அனுபவித்த அதே சிரமங்கள். அது அவனுக்குப் புரியாதா? மனம் கனத்துவிட அப்படியே இருந்தான்.
“ஆனாலும் மனம் கேக்க இல்ல. ஒரளவுகு எல்லாம் சரியானதும் ஊருக்குப் போனனான். நீ வந்தியா, உன்னைப்பற்றி ஏதும் தெரிஞ்சதா எண்டு கேக்க மிதிலா வீட்டுக்குப் போனா..” என்றவனுக்கு மேலே பேச்சு வரமாட்டேன் என்றது.
என்னவோ அவன் விரும்பத் தகாத ஏதோ ஒன்று வரப்போவதை மனம் சொல்ல, தன்னை இறுக்கிப் பிடித்தபடி அமர்ந்திருந்தான் எல்லாளன்.
“மாமி.. மிதிலான்ர அம்மா என்னடா பிழை செய்தவா? இளம் வயசில இருந்தே மனுசனும் இல்லாம, மகள்ல உயிரா இருந்த மனுசி, தன்னைச் சுத்தி என்ன நடக்குது எண்டு தெரியாத நிலைல இருந்தாடா. மிதிலா… அந்த நேரம் அவளை நீ பாக்கேல்லை. பாத்திருந்தா தெரிஞ்சிருக்கும். இன்னுமே அவளுக்குக் கைகால் நடுக்கம் முழுசா போகேல்ல. இனி நானும் இல்லாம என்ன செய்யப் போறாளோ தெரியாது. முந்தி எப்பிடி இருந்தவள் சொல்லு? அவளுக்குப் போதையப் பழக்கி..” கனத்த குரலில் சொல்லிக்கொண்டு வந்தவன் பேச்சை நிறுத்திவிட, அதிர்ந்துபோய் அவனைப் பார்த்தான், எல்லாளன். காவல் அதிகாரியாக நின்று அவ்வளவு மிரட்டிக் கேட்டும் சொல்லாதவன் நண்பனின் காலடியில் தன் மனத்தைத் திறந்துகொண்டிருந்தான்; தன்னை அறியாமலேயே. அதைவிட, அவன் சொல்லிக்கொண்டிருக்கும் விடயம்?
“அஞ்சலி ஆர் எண்டு தெரியுமா?” விழிகளைத் திறந்து வினவினான் காண்டீபன். வார்த்தைகளின் மீது நம்பிக்கையற்று தலையை இல்லை என்று அசைத்தான் எல்லாளன்.
“அவளும் எங்கட ஊர் தான். போஸ்ட் மேன் தாத்தாவ உனக்குத் தெரியும் எல்லா. அவரின்ர பேத்தி. அவள் தான் காசுக்குப் பதிலா மிதிலாக்குப் பழக்கி இருக்கிறாள். இவளும் நாங்க ரெண்டுபேரும் இல்லாம போனதில அவளோட சேர்ந்திருக்கிறாள். மிதிலாக்கு சும்மாவே திடம் இல்லாத உடம்பு. சின்னதா காய்ச்சல் சளி வந்தாலே தாங்க மாட்டாள். போதைய தாங்குவாளாடா? அவளுக்கு அது ஒத்துக்கொள்ளவே இல்லை. அது இல்லாமையும் இருக்க முடியேல்ல. ஒரு கட்டத்தில் பைத்தியம் மாதிரி ஆகி, மாமிக்கு அடிச்சு மண்டைய உடைச்சிட்டாள். அதுலதான் மாமிக்கு மூளை பிசகிப் போச்சு. இப்பவும் நிதானமா இருந்தா அமைதியா இருப்பா. மனநிலை குழம்பிட்டா மிதிலாவ பக்கத்திலேயே விடமாட்டா.” என்றவனின் நெஞ்சு ஒருமுறை பெரிதாக மேலே ஏறி இறங்கிற்று. அது அவன் மனதின் பாரத்தைச் சொல்ல வாயடைத்துப்போய் அமர்ந்திருந்தான் எல்லாளன்.


