ஏனோ மனம் தள்ளாடுதே 29 – 1

அன்று ஞாயிற்றுக்கிழமை. தீபா மத்தியானம் தான் புறப்படுகிறாள் என்றபோதிலும், காலை உணவை முடித்துக்கொண்டதுமே அம்மா வீட்டுக்குப் புறப்பட்டாள் பிரமிளா.

ஒரு குடும்பமே அவளைச் சுற்றி இருக்கிறது. ஆனாலும் அந்த வீட்டில் தன்னையும் ஒருத்தியாக உணர முடியவில்லை. இங்கிருந்து என்ன செய்வது என்கிற சலிப்பு. அங்குப் போனால் தங்கையோடு கொஞ்ச நேரத்தைச் செலவிடலாம் என்கிற ஆவல். இன்றைக்கு ஞாயிறு என்பதால் அவனும் வீட்டில் இருப்பான் என்கிற ஊகமும் ஓடிவிடு என்று துரத்தியது.

தயாராகிக் கீழே வந்தவளைத் தொலைக்காட்சியில் கவனமாக இருந்த கௌசிகன் கேள்வியோடு திரும்பிப் பார்த்தான்.

‘நேற்றுக் கூப்பிட்டும் வராத உனக்குப் பதில் சொல்ல வேணுமோ?’ என்கிற வீம்புடன் அவன் பார்வையை அலட்சியம் செய்தபடி இறங்கினாள் அவள்.

தமையனுக்கு மாறாக, “உங்கட அம்மா வீட்டை போறீங்களா அண்ணி? இண்டைக்குப் பிரதீபா போறா என்ன?” கேள்வியும் அவளே பதிலும் அவளேயாகக் கேட்டாள் யாழினி.

“ஓம் யாழினி. நேரத்துக்கே போனா கொஞ்சநேரம் அவளோட கதைச்சுக்கொண்டு இருக்கலாம். இப்ப போனா இனி அடுத்த செமஸ்டர் லீவுக்குத்தான் வருவாள்.” என்றவள் பொதுவான ஒரு வருகிறேனுடன் ஸ்கூட்டியில் வெளியேறி இருந்தாள்.

அந்த வீட்டின் கேட்டைத் தாண்டிய பிறகுதான் சிறையிலிருந்து தப்பிய உணர்வு.

இவளைக் கண்டதுமே, “அக்கா! நீங்க மத்தியானம்தான் வருவீங்க எண்டு நினைச்சன். வாங்க வாங்க.” என்று ஓடிவந்து கூட்டிக்கொண்டு போனவளின் உற்சாகம் பிரமிளாவையும் தொற்றிக்கொண்டது.

பெற்றவர்களுக்கும் காலையிலேயே பெண்ணைக் கண்டதில் மிகுந்த சந்தோசம். “வா அம்மாச்சி!” பாசத்துடன் வரவேற்றார் தனபாலசிங்கம்.

சின்ன பெண்ணைப் போன்று ஓடிப்போய் மகளுக்குத் தேநீரும் உணவும் கொண்டுவந்து கொடுத்தார் சரிதா.

“சாப்பிட்டன் அம்மா.” என்று சொன்னதைக்கூடக் கருத்தில் கொள்ளாமல், “அதுக்கு என்ன? கடலைதான் இண்டைக்கு அவிச்சுத் தாளிச்சனான். உடம்புக்குச் சத்து, சாப்பிடம்மா.” என்று அவளைச் சாப்பிட வைத்துவிட்டுத்தான் விட்டார்.

தாங்களாவது அனுசரணையாக இருந்து அவளுக்கு ஆறுதல் தந்துவிட வேண்டும் என்கிற முனைப்புடன் அவர்கள் கவனித்துக்கொள்வதை உணர்ந்தவளுக்கு உள்ளம் நெகிழ்ந்துபோயிற்று. இவர்களுக்காகவாவது அவனை மாற்றி அவனோடு சந்தோசமாக வாழ்ந்துவிட முயல வேண்டும் என்று எண்ணிக்கொண்டாள்.

பிரதீபா போகிறாள் என்பதில் தனபாலசிங்கம் வாங்கிவந்திருந்த கோழியை வெட்டிக் கறி வைத்து, இரவுக்கு அங்கே போய்ச் சாப்பிடுவதற்கு என்று ரொட்டி சுட்டு, அதற்கு அவள் வேண்டுமே வேண்டும் என்று அடம்பிடித்த உருளைக்கிழங்குப் பிரட்டல் செய்து சமையலை முடித்தார் சரிதா.

அது போதாது என்று, “என்ர அக்காச்சி எல்லா. உங்கட ஸ்பெஷல் வட்டலாப்பம் செய்து தாங்கோவன். என்ர ஃபிரெண்ட்ஸ்க்கும் நீங்க செய்றது சரியான விருப்பம். பிளீஸ் பிளீஸ்!” என்று கெஞ்சினாள் பிரதீபா.

சரிதாவுக்குப் பெரிய மகளை வேலை வாங்க மனமில்லை. எனவே, “ஏன் அம்மாச்சி? அக்கான்ர கலியாணத்துக்குச் செய்த அரியதரம், பயத்தம்பணியாரம், முறுக்கு எல்லாம் இருக்கு. வெட்டுப்பலகாரம் செய்திருக்கிறன். முட்டை மா எல்லாம் எடுத்து வச்சிருக்கிறன். பிறகு ஏன் அக்காவை வேலை வாங்குறாய். அவள் உன்னக் கொண்டுவந்து விட்டுட்டு அங்க போகோணும் எல்லோம்மா.” என்று எடுத்துச் சொன்னார் அவர்.

முகம் வாடினாலும், “ஓம் என்ன? ஓகே ஓகே எனக்கு இருக்கிறதே காணும்! ஆனா, அடுத்தமுறை நான் வரேக்க செய்து தரோணும் சரியா?” என்று சமாளித்தாள் சின்னவள்.

அவளை முறைத்துவிட்டு, “என்னவோ நான் அங்க வெட்டி முறிக்கிற மாதிரி எல்லோ ரெண்டுபேரும் கதைக்கிறீங்கள். இஞ்ச எப்பிடி அம்மா பாக்கிறாவோ அப்பிடித்தான் அங்க மாமி பாக்கிறா. நீ வா நாங்க செய்வம்!” என்று வேலையைத் தொடங்கினாள் பிரமிளா.

அவள் என்னவோ சர்வ சாதாரணமாகத்தான் சொன்னாள். கேட்டிருந்த பெற்றோருக்கு அந்த வார்த்தைகள் மிகுந்த ஆறுதலைக் கொடுத்தன. பரவாயில்லை. பெண் அங்கே சிரமப்படாமல்தான் இருக்கிறாள். தாமும் முறையாக நடந்துவிட வேண்டும் என்று எண்ணி, தனபாலசிங்கம் மகளை அழைத்தார்.

“என்னப்பா?” என்று வந்தவளைப் பாசத்துடன் தன்னருகில் அமர்த்திக்கொண்டார்.

“நீங்க இன்னும் இஞ்ச விருந்துக்கு வரேல்லயம்மா. எப்ப எண்டு சொன்னா முறையா வந்து கூப்பிடலாம்.”

அவளின் மாப்பிள்ளை அத்தனை முறைகளையும் தாண்டியவன் அல்லவா. அவனுக்கு என்ன முறை செய்வது? தன் கோபத்தைப் பெற்றோரிடம் காட்ட விரும்பாமல், “பாப்பம் அப்பா. நான் அவரோட கதைச்சிப்போட்டு சொல்லுறேனே. அதுவரைக்கும் நீங்களா ஒண்டும் கதைக்க வேண்டாம்.” என்றாள் பொதுவாக.

அப்படிச் சொன்ன மகளின் தலையை வருடிக்கொடுத்தார் தனபாலசிங்கம். முதல்நாள் அவன் வீட்டுக்குள் வராமல் போனதிலேயே பல விடயங்கள் அவருக்குப் புரிந்திருந்தது. இன்று பெண்ணின் மனதும் புரிந்தது.

பிறந்தது இரண்டுமே பெண் குழந்தைகள் என்று என்றைக்குமே அவர் வருந்தியதில்லை. மாறாகச் சீரும் சிறப்புமாக வளர்த்து, நல்ல கல்வியைக் கொடுத்துச் சொந்தக்காலில் நிற்கவைத்தார். இத்தனையையும் செய்துவிட்டுத் திருமணத்தில் கோட்டை விட்டுவிட்டேனோ என்று மனம் அரித்தது.

தானாவது முன்னின்று மறுத்திருக்க வேண்டுமோ? அவன் உருவாக்கிய பிரச்சினைக்கு வேறு வழியில் தீர்வைக் கண்டிருக்க வேண்டுமோ என்று பல கேள்விகள் அவரைப்போட்டுக் குடைந்தன.

ஆனால், எந்த வழியில் தடுத்திருக்க முடியும் என்று இப்போதும் புலப்படவில்லை. கல்லூரியில் நடந்த இவ்வளவு பெரிய பிரச்சனைக்கே நியாயமான தீர்வு தராமல் உறங்கும் காவல்துறை, இந்த விடயத்துக்கு நியாயமான தீர்வைத் தந்திருக்குமா?

இன்னுமே உடலில் காயத்தோடும் ஊமை வலியோடும் நடமாடும் ரஜீவன் என்னாகியிருப்பான்? அவனின் அன்னைக்கு அவரால் என்ன பதிலைச் சொல்லியிருக்க முடியும்? எல்லாவற்றையும் விட அவர்களின் கையில் அகப்பட்டுக்கொண்ட கல்லூரியும், அங்குக் கற்கும் மாணவச் செல்வங்களின் எதிர்காலமும்தான் அவரை இன்னுமே மருட்டியிருந்தது.

தன் பெண்ணும் அதைத்தான் முதன்மையாக யோசித்துவிட்டுத் திருமணத்துக்குச் சம்மதித்திருப்பாள் என்று தெரியும். எல்லாம் புரிகிறதுதான். ஆனால், அவரின் அன்பு மகளின் எதிர்காலம் என்னாகப்போகிறது? நெஞ்சின் மேலே யாரோ மிகப்பெரிய பாராங்கல்லை வைத்து அழுத்துவது போலுணர்ந்தார் தனபாலசிங்கம்.

error: Alert: Content selection is disabled!!
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock