நீ தந்த கனவு 3 – 1

அது ஒரு அளவான வீடு. பெரிதாக யாரின் கண்களையும் கவராத வகையில், ஊரின் உட்புறமாக, சுற்றிவர அமைக்கப்பட்டிருந்த உயர்ந்த மதில்களுக்குள் இருந்தது.

பெரிய சத்தம் சந்தடிகள் இருக்காது. மகன் வெளிநாட்டில் இருக்க, அன்னையும் தந்தையும் அங்கு வசிக்கிறார்கள். பெரிதாக ஆட்களின் நடமாட்டமும் இருக்காது. இதுதான் அந்த வீடு பற்றிய அயலட்டை மனிதர்களின் கணிப்பு.

ஆனால், அந்த வீட்டில் வைத்து ஒருவன் எடுக்கும் முடிவுகள் அனைத்தும் யாழ்ப்பாணத்தையே உலுக்கும்; வெடி குண்டுகளாக வெடிக்கும். அப்படி இன்றைக்கும் ஒரு முடிவை எடுப்பதற்காக, அந்த வீட்டின் விறாந்தையில் சாய்ந்தாடும் நாற்காலியில் அமர்ந்திருந்து, ஒரு வித லயத்தில் ஆடிக்கொண்டிருந்தான் சத்தியநாதன்.

இருபத்தியொன்பது வயது. திருமணமாகி கொஞ்ச நாள்களே ஆகின்றன. வெள்ளை வேட்டி, வெள்ளைச் சட்டை என்று கம்பீரமும் களையும் நிறைந்த முழுமையான ஆண்மகன். மது அருந்துவதில்லை; புகைப்பதில்லை; வேறு எந்தக் கெட்ட பழக்கமும் இல்லை. ஆனால், அத்தனையையும் இந்த ஊருக்குள் பரப்பிவிட வேண்டும் என்பதுதான் அவன் போதையே!

தமிழ் அரசியல் கூட்டணிக் கட்சியின் தலைவரின் மகன்; அடுத்த அரசியல் வாரிசு. அதிலெல்லாம் அவனுக்குப் பெரிய ஈடுபாடு இல்லை. ஆனால், பதவியும் அது தருகிற அதிகாரமும் அவன் தொழிலுக்குத் தேவை என்பதில் அரசியலுக்குள்ளும் தலையை நீட்டி வைத்திருக்கிறான். அவன் தம்பி சத்தியசீலனுக்குத்தான் தூக்குத் தண்டனை தீர்ப்பாகி இருக்கிறது.

எட்டு வருடங்களாகக் காப்பாற்றி வந்தவன், கடைசி நிமிடத்தில் பிடி கொடுத்துவிட்டான். திருமணம் முடிந்த பிறகு நானே மனைவியோடு இந்தியாவுக்கு வருகிறேன் என்று இவன் சொன்னதைக் கேட்காமல், எட்டு வருடங்களாக நாட்டைப் பிரிந்து இருந்த ஏக்கமும், ஒற்றை அண்ணனின் திருமணத்தைப் பாராமல் இருப்பதா என்கிற பாசமும் சேர்ந்துகொள்ள, இருவரும் அவன் சொல்லை மீறி வந்திருந்தனர். அது இன்றைக்கு அவர்களில் ஒருவனைத் தூக்குக் கயிற்றுக்குத் தூக்கிக் கொடுத்திருந்தது.

அவன் நெஞ்சுக்குள் பெரும் எரிமலைச் சீற்றம். அந்த எல்லாளனை நடுச்சந்தியில் வைத்து உயிர் போகும் வரை அடித்துத் தொங்க விடும் அளவுக்கு வெறி உண்டாயிற்று. அவன் முகத்தில் இது எதுவும் தெரியாத ஆழ்ந்த அமைதி. அப்படியே கடந்தவை எத்தனை நிமிடங்களோ! மெல்ல விழிகளைத் திறந்தவன், “காலம் கனியட்டும்.” என்றான், தன் முன்னே நின்றிருந்த கடுமையான முகங்களிடம்.

*****

கதிரவன் சொன்ன அந்தத் தெருவுக்குள் நுழையும் போதே எல்லாளனின் விழிகள் கூர்மை பெற்றுக்கொண்டன. மத்திய தர வகுப்பினர் வாழும் இடம் என்று பார்க்கவே தெரிந்தது. சற்றுத் தள்ளி ஜீப்பை நிறுத்திவிட்டு, தன் வேக நடையில் அந்த வீட்டை நெருங்கினான்.

காவல்துறை வாகனங்கள், பிணத்தைப் பிரேத பரிசோதனைக்குக் கொண்டு செல்லும் வண்டி, தடயவியலாளர்களின் வாகனங்கள், காக்கிச் சட்டைகளின் அதீத நடமாட்டம் என்று, அந்த இடமே அசாதாரணச் சூழ்நிலையைச் சுமந்திருந்தது.

அயலட்டையினர் மிதமிஞ்சிய அச்சத்தையும் கவலைக் கோடுகளையும் முகத்தில் சுமந்தபடி ஆங்காங்கே நின்றிருந்தனர். முதல் வேலையாக கொன்ஸ்டபிள் ஒருவரை அழைத்து, கூட்டத்தைக் கலைக்க உத்தரவிட்டான். இவனைக் கண்டுவிட்டுக் கதிரவன் ஓடி வந்து சல்யூட் அடித்தான்.

“விடியக் காலம காய்ச்சல் இருந்திருக்கு. தாய், பனடோல் குடுத்திருக்கிறா. பள்ளிக்கூடம் போகேல்ல எண்டு சொல்லிப்போட்டுப் படுத்திட்டாவாம். பகல் எழுப்பிச் சாப்பாடும் குடுத்திருக்கிறா. இப்ப கொஞ்சத்துக்கு முதல் காய்ச்சல் விட்டுட்டுதா எண்டு பாக்கப் போன தாய்தான் முதல் பாத்திருக்கிறா.” இவனின் வேகநடைக்கு ஈடுகொடுத்து நடந்தபடி இரத்தினச் சுருக்கமாக விடயத்தைப் பகிர்ந்துகொண்டான் கதிரவன்.

எல்லாளனின் விழிகள் அந்த வீட்டை மிகுந்த கவனத்துடன் அலசின. எங்கும் எதுவும் கலைந்திருக்கவில்லை. எந்த இடத்திலும் அசம்பாவிதம் ஒன்று நடந்ததற்கான அறிகுறியே இல்லை. வெள்ளை உடையில் தம்மை முழுவதுமாகப் போர்த்தியிருந்த தடயவியலாளர்கள், எதையும் கலைக்காமல் தடயங்களைத் திரட்டிக்கொண்டிருந்தனர்.

அந்தப் பெண் பிள்ளையின் சடலம், அவளின் அறை வாசலிலேயே எதிர்ப்பட்டது. தொங்கிய கயிற்றிலிருந்து இறக்கியிருந்தனர். போர்வையை விலக்கிப் பார்த்தான்.

பூப்போன்ற அழகிய முகம். “பெயர் என்னவாம்?” சடலத்தில் கீறல்கள், காயங்கள் ஏதும் கண்ணுக்கு எட்டுகிறதா என்று ஆராய்ந்தபடி வினவினான்.

“சாமந்தி.”

“உடம்பில வேற ஏதும் காயம்?”

“எனக்குத் தெரிஞ்ச வரைக்கும் சின்னக் கீறல் கூட இல்ல, சேர்.”

“அனுப்பி விடுங்க!” என்று விட்டு வாசலில் நின்றபடியே அவளின் அறையை ஆராய்ந்தான்.

தடயவியலாளர்கள் தரையெங்கும் ஷோக்பீஸ் கோடுகள் வரைந்திருந்தனர். விரல் ரேகைகள் எடுப்பதற்காகத் தூவப்பட்டிருந்த இரசாயன மருந்தின் நெடி மூக்கை நிரடியது. பொருட்கள் பல பரவிக் கிடந்தன. ஆங்காங்கே கோடுகள், கீறல்கள் என்று அவர்களின் மொழியில் எதையெதையோ குறித்திருந்தனர். எதையும் கலைக்காமல், கவனமாகக் காலடிகளை எடுத்து வைத்து, நிதானமாக அறைக்குள் தாவினான்.

அவளுக்கு அவளின் அறையை மிகவும் பிடிக்கும் போலும். அவ்வளவு நேர்த்தியாக, மிக அழகாகப் பராமரித்திருந்தாள். பொருளாதார ரீதியிலும் எந்தக் குறையும் இருப்பது போல் தெரியவில்லை. அவள் பயன்படுத்திய லாப்டப், கைப்பேசி என்று அனைத்தையும் கையகப்படுத்தினான்.

கையுறை அணிந்து அங்கிருந்த புத்தகங்கள், அவளின் கப்போர்ட், மேசையின் இழுப்பறைகள் என்று அனைத்தையும் அலசினான். வீட்டின் பின் பக்கம், முன் பக்கம் என்று எல்லா இடமும் சுற்றிப் பார்த்தான். சந்தேகத்திற்கிடமாக எதுவுமே அகப்படவில்லை.

ஒரே ஒரு கடிதம் மட்டும். அதில், “அம்மா, அப்பா, அண்ணா சொறி. நான் போறன். எனக்கு வாழ விருப்பம் இல்ல.” என்று மட்டும் எழுதப்பட்டிருந்தது.

பிரேத பரிசோதனைக்குச் சடலத்தை அனுப்பிவிட்டு வந்த கதிரவனிடம், “இங்க இருக்கிற புக்ஸ் எல்லாத்தையும் கவனமாப் பாக்கச் சொல்லுங்க. முன் பக்கம், பின் பக்கம் எண்டு ஏதாவது எழுதி இருக்கலாம். ஒரு சின்ன சாட்சி கூடத் தவறக் கூடாது! அயலட்டையில விசாரிங்க. முக்கியமா சின்னாக்கள் இருப்பினம். அவேயப் பிடிங்க!” என்று உத்தரவிட்டுவிட்டு அந்தப் பெண்ணின் குடும்பத்தினரைச் சந்திக்கச் சென்றான்.

அழுதழுது ஓய்ந்து, முழுச் சக்தியையும் இழந்து, ஏன் இப்படி ஆனது என்கிற கேள்வியைச் சுமந்து அவனைப் பார்த்தனர்.

“நீங்க என்ன நினைக்கிறீங்க? உங்கட மகள் ஏன் இந்த முடிவுக்கு வந்தவா எண்டு ஏதும் தெரியுமா? இல்ல, உங்களுக்கும் அவவுக்கும் ஏதும் சண்டை நடந்ததா?”

தாய் மளுக்கென்று கண்ணீர் உகுத்தார். முற்றிலுமாக உடைந்து போயிருந்த தந்தை, பெரும் சிரமத்துக்கு மத்தியில் இல்லை என்று தலையை அசைத்தார்.

“வேற ஏதாவது சந்தேகம் மாதிரி?”

அக்கேள்விக்கு என்ன விதமாகப் பதில் சொல்வது என்று தெரியாது மூவரும் அவனையே பார்த்தனர்.

“நல்லாப் படிப்பாள். டொக்டருக்கு படி பிள்ளை எண்டு நான் சொல்லியும், இல்ல டீச்சராகப் போறன் எண்டு சொல்லிக்கொண்டு இருந்தவள். இப்பிடித் தலையில மண்ணை அள்ளிப் போடுவாள் எண்டு நினைக்கவே இல்ல.” என்று அழுதார் அன்னை.

“யாரும் ஏதும் மிரட்டின மாதிரி, வெளில போகப் பயந்த மாதிரி, இல்ல, அடிக்கடி ஃபோன்ல கதைக்கிறது இப்பிடி ஏதாவது? வழமையாச் செய்றதை விட வித்தியாசமா ஏதும் தெரிஞ்சதா? நல்லா யோசிச்சுச் சொல்லுங்கோ!”

இல்லை என்று மறுத்துத் தலையை அசைத்தார் தகப்பன்.
“ஒவ்வொரு நாளும் ஒழுங்காப் பள்ளிக்கூடம் போவா. டியூசனும் போகாம நிக்கிறேல்ல. இண்டைக்கு மட்டும்தான். அதுவும் நல்ல காய்ச்சல் எண்டுதான் போகேல்ல. ஓடி ஓடிப் படிக்கிற பிள்ளை, அதுதான் காய்ச்சல் வந்திட்டுது போல, ரெண்டு நாள் ஓய்வா இருக்கட்டும் எண்டு நினைச்சம்.” என்றவருக்கும் மேலே பேசமுடியாமல் போயிற்று. வாழ்நாள் முழுமைக்குமான ஓய்வை அல்லவோ எடுத்துக்கொண்டாள்.

error: Alert: Content selection is disabled!!
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock