நீ தந்த கனவு 22 – 1

இளந்திரையனின் முன்னால் காண்டீபன் தந்த அட்மிஷன் ஃபோர்மை வைத்தாள் ஆதினி.

அருகிலிருந்த கண்ணாடியை எடுத்து அணிந்துகொண்டு, அதன் மீது பார்வையை ஓட்டியவர் வேகமாக நிமிர்ந்து, “என்னம்மா இது?” என்றார்.

“எனக்குக் கொழும்பில படிக்க விருப்பமா இருக்கப்பா.” நிச்சயமாக இதை அவர் எதிர்பார்த்திருக்க மாட்டார் என்று தெரிந்ததால், மெல்லிய தயக்கத்தோடு சொன்னாள்.

“இதென்ன திடீரெண்டு? முதல், அப்பிடி எப்பிடியம்மா கொழும்புக்கு, அதுவும் தனியா விடுறது? அதெல்லாம் சரி வராது.” யோசனையே இல்லாது மறுத்தார் அவர்.

“அப்பா! இன்னும் கொஞ்ச நாளில எனக்கு இருபத்தியொரு வயசாகப் போகுது.” என்று சிரித்தாள் அவள்.

அந்தச் சிரிப்பில் கலந்துகொள்ளாமல், “அப்பாவில இருந்த கோபம் போகேல்லையாமா? இல்ல, அம்மாதான் இல்ல, இனி அப்பாவும் வேண்டாம் எண்டு நினைக்கிறீங்களா?” என்று கவலை தோய்ந்த குரலில் அவர் கேட்கவும் கலங்கிப்போனாள் ஆதினி.

“அப்பா என்னப்பா?” என்றாள் தொண்டை அடைக்க.

“எல்லாளனை உங்களுக்குக் கட்டி வைக்க நினைச்சதுக்கு இன்னொரு காரணம், காலத்துக்கும் எனக்குப் பக்கத்திலேயே நீங்க இருப்பீங்க எண்டுறது. அப்பிடி நான் நினைச்சா, நீங்க விலகிப் போறன் எண்டு சொல்லுறீங்கம்மா. அதுதான் உங்கட விருப்பம் இல்லாம, இனி எதுவும் நடக்காது எண்டு சொல்லிட்டேன்தானே? பிறகும் என்ன?” என்றவருக்கு மகளின் இந்த முடிவில் மிகுந்த வருத்தம்.

“அப்பா ப்ளீஸ்!” என்றாள் ஆதினி கெஞ்சலாக. “அதுக்காகப் போகேல்ல. இது எனக்கு விருப்பமா இருக்கு. இன்னும் ஒரு ரெண்டரை மூண்டு வருசம்தான். அது பாத்துக்கொண்டிருக்க ஓடிடும். படிச்சு முடிச்சிட்டு இஞ்சதான் வருவன்.”

“இவ்வளவு காலமும் இல்லாமத் திடீர் எண்டு இந்த முடிவு எடுக்க என்ன காரணம்? எனக்கு உண்மை வேணும்!” விழிகளில் தீர்க்கமும் குரலில் உறுதியுமாக வினவினார் அவர்.

அந்தக் கேள்விக்குப் பதில் சொல்லத் திணறினாலும் தன்னை விளக்காமல் சம்மதிக்க மாட்டார் என்று அவளுக்கு விளங்கிற்று.

“இங்க என்ர அடையாளம் நீதிபதி இளந்திரையன்ர மகள், ஏஎஸ்பி அகரனின்ர தங்கச்சி எண்டுறது அப்பா. இவ்வளவு காலமும் எனக்கும் அது நல்லாத்தான் இருந்தது. இப்ப இப்ப அது பிடிக்கேல்ல. இங்க என்னால நானே நினைச்சாக் கூட அந்த அடையாளங்கள் இல்லாம இருக்கேலாது. அதோட… உங்க எல்லாரையும் விட்டுக் கொஞ்சம் விலகி இருக்கோணும் மாதிரியும் இருக்கு.” என்று, கடைசி வார்த்தைகளை அவர் முகம் பாராமல் சொல்லி முடித்தாள்.

நடந்த நிகழ்வுகள் எல்லாம் அவளை இந்தளவு தூரத்துக்குப் பாதித்திருக்கிறது என்பது அவருக்குள் மெல்லிய அதிர்ச்சியாக இறங்கிற்று. இல்லாமல், இத்தனை நாள்கள் கழித்தும் விலக நினைத்திருக்க மாட்டாள்.

அணிந்திருந்த கண்ணாடியைக் கழற்றி வைத்துவிட்டு, முகத்தைக் கைகளால் துடைத்தார்.

ஆதினிக்கு விழிகள் இலேசாகக் கலங்கின. “சொறி அப்பா.” என்றாள் அடைத்த குரலில்.

“இந்த விலகல் தற்காலிகமா, இல்ல, நிரந்தரமா?” என்றார் எந்த உணர்வையும் காட்டாது.

“அப்பா, என்னப்பா நீங்க? என்னாலயும் நிறைய நாளைக்கு உங்களை எல்லாம் விட்டுட்டு இருக்கேலாது. என்னவோ விலகி இருக்கோணும் மாதிரியே இருக்கு. எனக்கான அடையாளத்தை நானே தேடோணும் எண்டு நினைக்கிறன். இதுதான் நான் எண்டு சொல்லுற மாதிரி, என்னைப் பற்றி எனக்கே தெரிய வேண்டி இருக்கு. இவ்வளவு ஸ்ட்ரோங்கா என்ர மனம் இதுக்கு முதல் இப்பிடி எதையும் நினைச்சதே இல்ல. ஒருக்காப் போய்த்தான் பாக்கிறேனே. நீங்க ஆரும் இல்லாத வெறும் ஆதினியா மட்டுமே வாழ்ந்து பாக்கிறேனே.” என்று அவள் தெளிவாகச் சொன்னபோதுதான், அவருக்குள்ளும் ஒரு தெளிவு உண்டாயிற்று.

அவள் தன்னைத் தேட ஆரம்பிக்கிறாள்; தன் சுயத்தைக் கண்டுபிடிக்க விரும்புகிறாள். அதற்கு மேல் அவர் மறுக்கவில்லை. இத்தனை நாள்களாகத் தன் சிறகுகளுக்குள் வைத்துப் பாதுகாத்தார். அதன் பிறகு எல்லாளனின் கைகளுக்குள் கொடுக்க எண்ணினார்.

இப்போது யோசித்துப் பார்க்கையில் அது தவறு என்றே தோன்றிற்று. அவள் அவளாக மிளிர்வதுதானே அழகு? செல்லப்பெண்; அவளைப் பிரிந்திருப்பது இலகுவான காரியமல்ல; அந்த வீடு அவளில்லாமல் அதன் சோபையை இழந்து விடும்; துள்ளலை மறந்துவிடும். ஆனாலும் வேறு வழியில்லை. அவள் தன்னைத் தேடி எடுத்துக்கொண்டு வரட்டும் என்று எண்ணிச் சம்மதித்தார்.

அன்றைய இரவு உணவின்போது அவள் முடிவை அறிவித்தார் இளந்திரையன். அகரனுக்கு மிகுந்த அதிர்ச்சி. “அப்பிடியெல்லாம் விடேலாது ஆதி!” என்று உடனேயே மறுத்தான்.

“முதல், இஞ்ச என்ன குறை எண்டு அங்க போகக் கிடக்கு? அது பாதுகாப்பும் இல்ல. அங்க நீ என்ன செய்றாயோ, எப்பிடி இருக்கிறாயோ எண்டு தெரியாம, இஞ்ச என்னால நிம்மதியா இருக்கேலாது.” அதை யோசிக்கக் கூட முடியாதவனாகச் சொன்னான் அவன்.

அவள் ஒரு வார்த்தை பேசவில்லை. அவன் எவ்வளவோ சொல்லியும் உணவில் மட்டுமே கவனம் செலுத்தினாள்.

இயலாமையுடன் தந்தையை நோக்கினான் அகரன்.

“அவள்தான் யோசிக்காமக் கேட்டாள் எண்டா நீங்க ஏனப்பா ஓம் எண்டு சொன்னனீங்க? பயம் இல்லையா? முதல், நீங்க எப்பிடி அவள் இல்லாம இருப்பீங்க?”

ஒரு நெடிய மூச்சுடன், “ஆசைப்படுறா. ஏன் தடுக்க? அதைவிட, என்ர நண்பன் குணசேகரன் கிரிமினல் லோயரா கொழும்பிலதானே இருக்கிறான். அவன்ர வீட்டிலேயே தங்கிப் படிக்கட்டும். பயமில்லை.” என்றார் அவர்.

ஆக, அவருக்கும் சம்மதம்தான். மீண்டும் தங்கையிடம் திரும்பி, “ஏன் ஆதிம்மா, அண்ணாவில இருக்கிற கோபம் உனக்குப் போகவே போகாதா? அண்டைக்குப் பிறகு நீ என்னோட பழைய மாதிரிக் கதைக்கிறதே இல்ல. போக போகச் சரியாகிடுவாய் எண்டு நம்பிக்கொண்டு இருந்தனான். ஆனா நீ… இது நீ எனக்குத் தாற தண்டனையா?” என்று கேட்டவனுக்குக் குரலே எழும்பமாட்டேன் என்றது.

ஆதினிக்கும் தொண்டை அடைக்காமல் இல்லை. ஆனால், அவள் வாழ்க்கையில் அவளாக முதன்முறை எடுத்த முடிவு இது. அதை மாற்ற விருப்பமில்லை. அதில், “எண்ட்ரன்ஸ் எக்ஸாமுக்குப் போட்டுட்டன்.” என்று அறிவிப்புப் போல் சொன்னாள்.

ஆக, அத்தனை வேலைகளையும் முடித்துவிட்டுத்தான் சொல்லி இருக்கிறாள். உன் பேச்சுக்கு இங்கே மரியாதை இல்லை என்கிறாள்.

சின்ன விசயத்துக்கும் அண்ணா அண்ணா என்று அவன் காலைச் சுற்றியவள் இன்று, தன் வாழ்வின் முக்கியமான முடிவு ஒன்றை எடுக்கும்போது அவனைக் கேட்கவும் இல்லை; அவன் கருத்தைப் பொருட்படுத்தவும் இல்லை.

கூர் ஈட்டியாக நெஞ்சுக்குள் எதுவோ பாய, சாப்பிடக் கூட முடியாமல் அப்படியே அமர்ந்திருந்தான் அகரன்.

சியாமளாவுக்குக் கணவனின் நிலை கண்டு கண்ணீரே வரப் பார்த்தது.

“இதெல்லாம் என்னாலதானே ஆதினி? அதுதான் சொறி சொல்லிட்டேனே. இப்பவும் சொல்லுறன், அண்டைக்கு நான் அப்பிடியெல்லாம் கதைச்சிருக்கக் கூடாது. உன்ர அண்ணாவும் உனக்குக் கை நீட்டி இருக்கக் கூடாது. எங்க ரெண்டு பேரையும் மன்னிச்சுக்கொள்ளு. ஆனா, எங்களை விட்டுட்டுப் போகாத பிளீஸ். இது என்னக் காலத்துக்கும் குற்ற உணர்ச்சில தள்ளப் போகுது. அதுதான் உன்ர விருப்பமா?” என்றதும் விழுக்கென்று கோபத்துடன் நிமிர்ந்தவள், புதிதாகப் பயில முயன்றுகொண்டிருக்கும் பாடமாகத் தன்னை அடக்கி, நிதானமாகப் பேசினாள்.

“தயவு செய்து ஆளாளுக்கு என்னாலயா என்னாலயா எண்டு கேக்காதீங்க! என்னவோ எனக்கு நான் செய்யவே கூடாத ஏதோ ஒண்டச் செய்ற மாதிரி இருக்கு. எனக்கு இந்த உலகத்தைத் தனியா எதிர்கொள்ள விருப்பமா இருக்கு. எப்பிடியும் நான் லோயர் ஆகோணும் எண்டால், ஃபைனல் எக்ஸாம் எழுத கொழும்புக்குப் போகத்தான் வேணும். அத இப்பவே செய்றன். அதவிட, நான் ஒண்டும் நிரந்தரமா இஞ்ச இருந்து போகேல்ல. சோ பிளீஸ், இனி ஆரும் இதப் பற்றிக் கதைக்க வேண்டாம்!” என்றுவிட்டுப் போனாள் அவள்.

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock