நீ தந்த கனவு 30 – 1

கதிரவனை அனுப்பிவிட்டு ஜீப்பிலேயே அமர்ந்திருந்தான் எல்லாளன். வீடு செல்லவில்லை; ஒரு கண்ணுக்கு உறங்கவுமில்லை. அஞ்சலி மூலம் அறிந்து கொண்ட அனைத்தும் அவனைப் போட்டு உலுக்கிக்கொண்டிருந்தன.

ஏன் ஏன் ஏன் இப்படி? என்ன வாழ்க்கை இது? நொடியில் தன்னை வெறுத்தான்; தான் பார்க்கும் வேலையை வெறுத்தான்; தன்னுடைய ஆசாபாசங்களை வெறுத்தான். இனி என்ன செய்யப் போகிறான்? அவனுக்குள் பெரும் தடுமாற்றம்.

அடுத்த கணமே அவனுடைய இயல்பான மூர்க்கம் தலை தூக்கிற்று. ஒரு முரட்டுப் பிடிவாதம்; என்ன ஆனாலும் பரவாயில்லை, மறைத்து நிற்கும் மலையின் அந்தப் பக்கத்தைக் கண்டே ஆக வேண்டும் என்கிற வெறி கிளம்பிற்று!

ஜீப்பைக் கொண்டுவந்து பல்கலைக்கழகத்தின் முன்னே நிறுத்திவிட்டுக் காத்திருந்தான். பல்கலைக்கழகம் விழிப்படைய ஆரம்பித்தது. மாணவர்களின் நடமாட்டமும் தென்படத் தொடங்கிற்று.

சற்று நேரத்தில் புல்லட் ஒன்று வந்தது. விழியசையாது அதையே பார்த்திருந்தான். அதில் வந்தவன் அதை அதற்கான பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு, எதிர்ப்பட்ட மாணவர்களின் காலை வணக்கத்தை ஒற்றைத் தலையசைப்பில் ஏற்றபடி, நடந்து வந்துகொண்டிருந்தான்.

அவன் முன்னே சென்று நின்றான் எல்லாளன்.

யார் என்கிற கேள்வியுடன் புருவம் சுருக்கப் போனவன், யார் என்று கண்டதும் அப்படியே நின்றான். அவன் முகத்தில் காணவே முடியாத ஒருவனைக் கண்டு விட்ட பரவசம்! விழிகள் ஓரம் மெல்லிய கோடாக நீர்ப்படலம் சேர்ந்தது. அதோடு மெல்லச் சிரித்தான்.

பாதடி பற்றி வந்தும் பக்கத்தில் போக விரும்பாமல் தூரவே இருந்து தாகம் தீர்த்துக்கொண்டவன் கண் முன்னே நிற்கிறான். கட்டிப் போட்டிருந்த கன்றை அவிழ்த்து விட்டால் எப்படித் தாயிடம் பாய்ந்து ஓடும்? அப்படி ஒரு வேகம் மனதில் பிறக்க, “எல்லா…” என்றபடி வேக எட்டு எடுத்து வைத்தவன் அப்படியே நின்றான்.

இரத்தக் கட்டிகளெனச் சிவந்திருந்த எல்லாளனின் விழிகளும் தாடையின் இறுக்கமும் முகத்தில் தெரிந்த கடினமும் அவன் கவனத்திற்கு வந்தன. மெல்ல எதுவோ புரிய, நிதான முறுவல் பூத்தான்.

காக்கி உடைக்கேயுரிய கம்பீரத்தைச் சேர்த்தபடி, அகன்ற தோள்களும் விடைத்த மார்புமாக, நேர்மையும் துணிவும் கொண்ட காவல் அதிகாரியாக, தன் எதிரில், தனக்கு எதிரான மனநிலையோடு நின்றவனுக்குச் சிறிதாகத் தலையைச் சரித்து, இரண்டு விரல்களை மாத்திரம் கொண்டு, சின்னதாய் சல்யூட் ஒன்றை வைத்துவிட்டு, “ஒரு நிமிசம் ஏஎஸ்பி சேர்.” என்றவன், அவர்களைக் கடந்து சென்ற மாணவன் ஒருவனை அழைத்தான்.

அவனிடம் பைக்கின் திறப்பைக் கொடுத்து, தன் மேசையின் இழுப்பறைக்குள் வைக்கச் சொல்லி அனுப்பிவிட்டான்.

அவன் போனதும் இவனிடம் திரும்பி, “போவம்!” என்றபடி நடந்தான்.

காவல் நிலையத்தை நோக்கிய அவர்களின் பயணம், அடர்த்தியான மௌனத்தைச் சுமந்தபடி ஆரம்பித்தது.

காண்டீபனின் நெஞ்சுக்குள் மெல்ல மெல்லப் பெரும் புயல்கள் அடிக்க ஆரம்பித்தன. குடும்பத்தினரின் நினைவு வந்து விட, முகத்தை வெளிப்புறம் திருப்பிக்கொண்டான்.

ஒரு கணம் விழிமூடி யோசித்துவிட்டு, கைப்பேசியை எடுத்து மிதிலாவுக்கு அழைத்தான். “ஒரு வேலையாப் போறன் மிது. திரும்பி எப்ப வருவன் எண்டு தெரியாது. அப்பாவையும் மாமியையும் கவனமாப் பாத்துக்கொள் என்ன!” என்றவனின் குரலில் இலேசான கரகரப்பு.

“எங்க போறீங்க? ஏன் முதலே சொல்லேல்ல?” இயல்பாக விசாரித்தால் அவள்.

அவளின் கேள்விகளை எல்லாம் புறம் தள்ளி, “நீயும் பிள்ளையும் வலு கவனம்!” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்தான்.

கேட்டிருந்த எல்லாளன் தேகம் விறைத்தது. அதை உணரும் நிலையில் காண்டீபன் இல்லை. நடந்துகொண்டிருக்கும் நிகழ்வுகளின் எழுத்தாளன் அவன் தான். இந்தத் திருப்பங்கள் எல்லாம் அவனுக்குத் தெரியாததன்று! இருந்தாலும்…

மேலே யோசிக்கப் பிடிக்காமல் திரும்பி எல்லாளனைப் பார்த்தான். அதே இறுக்கம் சற்றும் குறையாமல் ஜீப்பை செலுத்திக்கொண்டிருந்தான் அவன்.

“எப்பிடியடா இருக்கிறாய்?” கரகரத்த குரலில் வினவினான்.

எல்லாளனின் தாடை ஒரு முறை இறுகி அடங்கியது. இவன் புறம் திரும்பவே இல்லை.

“இண்டைக்கு உன்னப் பாப்பன் எண்டு நினைக்கவே இல்ல.”

அதற்கும் பதில் இல்லை என்றதும் அமைதியாகிப்போனான் காண்டீபன். யார் முன்னும் அவன் உடைந்ததில்லை. அவனை உடைக்கும் சக்தி யாருக்குமில்லை. ஆனால், அருகில் இருக்கிறவன்? அவனுடைய அருகண்மையில் இருக்கிறோம் என்கிற நினைப்பே, இறுகிக் கிடந்த மன அடுக்குகளை மெல்ல மெல்ல இளக்க ஆரம்பித்திருந்தது. சீட்டில் தலையைச் சாய்த்து, விழிகளை மூடிக் கொண்டான்.

காவல் நிலையமும் வந்து சேர்ந்தது. பல குற்றவாளிகளை, சந்தேக நபர்களைத் தோலுரித்துத் தொங்க விட்ட அதே விசாரணை அறை. இருவரும் எதிரெதிரே அமர்ந்திருந்தனர். ஒருவன் சந்தேக நபராக! இன்னொருவன் காவலதிகாரியாக!

இரு ஆண் மகன்களினதும் பார்வை, நேர்கோட்டில் சந்தித்துக் கொண்டன. இறுக்கமாய் ஒருவன்; இளக்கமாக மற்றொருவன். ஓராயிரம் கனவுகளையும் கற்பனைகளையும் பகிர்ந்துகொண்ட நாள்களில், எண்ணியே பார்த்திராத ஒரு சூழ்நிலை!

“நீ ஏன் இஞ்ச வந்திருக்கிறாய் எண்டு தெரியுமா?”

பதில் சொல்லாமல் அவனையே பார்த்தான் காண்டீபன்.

“அஞ்சலி எல்லா உண்மையையும் சொல்லிட்டாள்.”

இதற்குள் ஓரளவுக்கு ஊகித்திருந்த காண்டீபன், அதைக் கேட்டுப் பெரிதாகவெல்லாம் அதிரவில்லை. அது, எல்லாளனைச் சினம் கொள்ள வைத்தது.

“நீ ஒரு விரிவுரையாளன். உன்ன நம்பிப் படிக்க வந்த பிள்ளைக்குப் போதையப் பழக்கி இருக்கிறியே, வெக்கமா இல்லை? இதுல, உன்ர அப்பா ஒரு போலீஸ்.”

காண்டீபன் குன்றிப்போகவோ குற்றவுணர்ச்சிக்கு ஆளாகவோ இல்லை. அதற்கு மாறாக, “தமயந்தி ஆர் எண்டு உனக்குத் தெரியாம இருக்காதே. ” என்றான் நிதானமாக.

“எதிர்கால அமைச்சர் சத்தியநாதனின்ர மனுசி. இன்னும் வடிவாச் சொல்லப்போனா, என்னையும் தங்கட மகன் மாதிரி வளத்த என்ர மாமாவையும் மாமியையும் கொடூரமாக் கொன்ற சத்தியசீலன், சதீஸ்வரன் குடும்பத்து மருமகள். அதுதான், அவளுக்கு அதைப் பழக்கின்னான்.” தான் செய்தது குறித்து எந்தக் குன்றலும் இல்லாமல் சொன்னான்.

எல்லாளனின் உதடுகள் ஏளனமாக வளைந்தன. “அதாவது, பிள்ளை மாதிரி வளர்த்த மனுசருக்காக, சேர் பழிக்குப் பழி வாங்க இதைச் செய்தீங்களோ? அவே பெத்த மகனுக்கே இல்லாத அக்கறை உங்களுக்கு? அந்தளவுக்கு நல்லவர்! அதுதான் அவே செத்ததும் ஊரை விட்டு ஓடி ஒளிஞ்சீங்க போல!” என்றான் எள்ளலும் எரிச்சலுமாக.

அவனைப் பொருள் விளங்காப் பார்வை பார்த்தான் காண்டீபன். அது, எல்லாளனின் மனக்கொதிப்பை இன்னும் கிளறிவிட்டது.

“இஞ்ச பார்! உன்ர இந்த நடிப்பை எல்லாம் வேற எவனிட்டயும் போய்க் காட்டு. என்னட்ட இல்ல. எனக்கு உண்மை வேணும். இல்லையோ, எப்பிடி உண்மைய வாங்குறது எண்டு எனக்குத் தெரியும்!” என்று சீறினான்.

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock