சாந்தம் தவழும் முகத்தில் புன்னகையோடு தன்னைப் பார்த்த தாயிடம் கேட்டாள்.
தகப்பனைப் பார்த்தாள். எப்போதும் தன்னம்பிக்கையையும் தைரியத்தையும் ஊட்டி வளர்த்த அப்பா. தீர்க்கமான பார்வையால் அவளுக்கு மீண்டும் பலத்தை உருவாக்கினார்.
‘நான் ஏனப்பா கவலைப் படவேணும்? கேக்கிறவன் கேட்டா எனக்கு என்ன. நான் எப்பிடி எண்டு எனக்குத் தெரியும். என்ர குடும்பத்துக்குத் தெரியும். வேற யாரும் வந்து சர்ட்டிபிகேட் தரத் தேவையில்ல.’ என்று தகப்பனிடம் சொன்னவளின் மனம் சற்றே தெளிந்தது.
கண்ணைக் கையால் துடைத்துக்கொண்டு எழும்பவும் விக்ரம் உள்ளே வரவும் திகைத்துப்போனாள்.
“யார்… யார் நீங்க?” மனம் கலங்கியிருந்ததில் குரல் தடுமாறி வந்தது.
“நான்தான் விக்ரம்.” என்றான் அவளையே பார்த்து.
‘ஓ…’ என்று திகைத்தாள் அவள்.
‘ஆன்ட்டி சொன்ன வெளிநாட்டு மாப்பிள்ளை’
அப்போதுதான் அவனையே பார்க்கிறாள். அவனானால் அவளைக் கல்யாணத்துக்கே கேட்டுவிட்டான்.
சட்டென அவள் முகத்தில் ஒருவித இறுக்கம். பார்வையில் கண்டிப்பு!
விழிகளை நேரே அவன் முகத்தில் வைத்து, “ஆன்ட்டிட்ட பதில் சொல்லிட்டேனே. பிறகு என்ன?” என்று கேட்டாள்.
அந்தப் பார்வை, அந்தக் குரல் வேறு யாரையும் அதற்குமேல் பேச விடாது. எல்லையைத் தாண்டாதே என்று எச்சரித்தது!
விக்ரம் அதை உணர்ந்து முறுவலித்தான்.
“காரணம் தெரியோணும். சும்மா வேண்டாம் எண்டால் எப்படி?” என்றான் அவனும் அவள் விழிகளையே பார்த்து.
“கல்யாணம் செய்ற எண்ணம் எனக்கு இல்ல.” முகத்தைத் திருப்பிக்கொண்டு சொன்னாள்.
“அதுதான் ஏன்?”
இதென்ன தொனதொனப்பு! மெல்லிய சினம் வர, “எனக்கு என்ர மகளே போதும்.” என்று அந்தக் குட்டியைப் பார்த்துச் சொன்னாள்.
இவன் பார்வையும் அவளிடம் சென்றது. இவன்தான் காரில் போய்வருகிறவன் என்று கண்டுகொண்டாள் போலும். கருமணிகளை உருட்டி உருட்டி அவனையேதான் பார்த்துக்கொண்டிருந்தாள்.
“இங்க வாங்க செல்லம்.” தங்களின் பேச்சை விட்டுவிட்டு அவளை அழைத்தான்.
அவள் அசையாமல் இருக்க, “இங்க பாருங்கோ. செல்லத்துக்குச் சொக்லேட்ஸ். இந்தாங்கோ, ஓடிவந்து வாங்குங்கோ.” என்று ஆசை காட்டினான்.
அவள் விறுவிறு என்று தாயிடம் ஓட, இடையிலேயே மறித்துப் பிடித்துத் தூக்கிக்கொண்டான் விக்ரம்!
அவள் தாயை நோக்கி உதடுகளைப் பிதுக்கத் தொடங்கவும், “ஹேய் செல்லம்! இங்க பாருங்க, இங்க பாருங்க.” என்றபடி மேலே மேலே தூக்கிப்போட்டுப் பிடித்தான்.
உடம்பெல்லாம் கூசிவிட்டதில் கிளுக்கிச் சிரித்தாள் அவள். இரண்டு மூன்று தடவை அவன் அப்படிச் செய்யவும், அவளின் சிரிப்பு அந்த வீடு முழுவதுமே அலையலையாகப் பரவியது! அவள் வயிற்றில் முகத்தைப் புதைத்துக் கிச்சுக் கிச்சு மூட்டினான் விக்ரம். சின்னவளோ அடங்காமல் சிரித்தாள்.
தனக்குக் கிடைத்த புதுக் குதூகலத்தில் அவனோடு சேர்ந்துகொண்டாள் அந்தச் சுட்டி.
வெண் பற்கள் பளீரிட, மகளை மேலே தூக்கிப்போட்டுப் பிடித்து விளையாடுகிறவனை அதிர்ந்துபோய்ப் பார்த்திருந்தாள் யாமினி.
அவளை ஒரு கையில் தூக்கி வைத்துக்கொண்டு, “சொக்லேட் வேணுமா செல்லத்துக்கு?” என்று அவன் பொக்கெட்டிலிருந்து எடுத்துக் கொடுக்கவும், வாங்கி வாயில் போட்டுக்கொண்டாள். இதில் ஒரு கையால் அவன் கழுத்தை வேறு வளைத்துப் பிடித்துக்கொண்டிருந்தாள்.
பார்த்துக்கொண்டு இருந்தவளுக்கு அதிசயம்தான். லேசில் யாரிடமும் சேரமாட்டாள். அப்படிச் சேர்வதற்கு யாரும் இல்லையும் கூட! இவளும் குழந்தை விளையாடட்டும் என்று எங்கும் அனுப்பியதும் இல்லை. எல்லாமே அவளுக்கு இவள்தான். இன்று இவனோடு ஓட்டிக்கொண்டாளே!
அவள் குழந்தையையே பார்க்க, “உனக்கு இன்னொரு கல்யாணம் நடந்தா, வாறவன் இவாவை ஒதுக்கிப் போடுவானோ எண்டுற பயத்திலதான் மறுக்கிறாய் எண்டால், அந்தக் கவலை உனக்கு வேண்டாம். இனி இவாவும் எனக்கு மகள்தான். இவாவப் பிடிச்சதாலதான் உன்னயே கேக்கச் சொன்னனான்.” என்றான் அவன்.
விழிகள் ஆச்சரியத்தில் விரிய அவனைப் பார்த்தாள் அவள்.
அவளிடம் கட்டிக்கொள்ளச் சொல்லிக் கேட்கும் முதல் ஆண் இவன் அல்லன். இதற்கு முன்னே பலர்.
‘உன்னை நான் ராணி மாதிரி வைத்திருப்பேன்.’ என்று கேட்டவர் சிலர்.
‘கடைசிவரைக்கும் கைவிடமாட்டேன்.’ என்றவர் சிலர்.
‘இன்னும் எவ்வளவு காலத்துக்கு இப்படித் தனியாவே இருந்து கஷ்டப்படுவாய்.’ என்று ‘அக்கறை’ காட்டியவரும் உண்டு!
எல்லோருக்குமே அவள் மீதுதான் அக்கறையும் கவலையும் கவனமும் வந்தது. அவள் கூடவே இருக்கும் குழந்தை கண்ணில் படவேயில்லை. முதன் முதலாகக் குழந்தைக்காகத் தன்னை மணந்துகொள்ளக் கேட்டவனை மரியாதையோடு பார்த்தாள்.
“எனக்கும் ஒரு மகன் இருக்கிறான். பெயர் டெனிஷ்.” என்று சொல்லும்போதே அவன் இதழ்களில் அழகான புன்னகை ஒன்று மிளிர்ந்தது.
‘அப்பாவும் மகனும் நல்ல நெருக்கம் போல. மகன் பெயரச் சொல்லேக்கையே பாசத்துல குரல் குழையுது.’ தன்பாட்டுக்கு நினைத்துக்கொண்டாள்.
“அவனும் இவாவை மாதிரியேதான். ஒரு இடத்துல இருக்கமாட்டான்.” என்றான் அந்தக் குட்டியைப் பார்த்தபடி.
அந்தக் கண்களில் தெரியும் பாசமும் கனிவும் பொய்யில்லை. ஏனோ அவளுக்கு அழுகை வந்துவிடும் போலிருந்தது. அவளைத் தவிர இந்தச் சின்ன மொட்டைப் பாசமாகக் கைகளில் ஏந்தியவர் யாருமே இல்லை.
என்றாலும் தன் முடிவில் உறுதியாக நின்றவள், “நீங்க வேற யாரையாவது பாருங்கோ. உங்களுக்குப் பொருத்தமா.” என்றாள் தெளிவாக.
“ஏன்? உன்னைப் பாத்தா என்ன?” தடாலடியாகக் கேட்டான் அவன். அதுவும் அவளையே பார்த்தபடி.
யாமினி முழித்தாள். என்ன கேள்வி இது. இதற்கு என்ன பதிலைச் சொல்வது? அவன் பார்வையில் வேறு அசௌகர்யமாக உணர்ந்தாள்.
எல்லோரிடமும் கடின முகத்தைக் காட்டுகிறவளால் மகளைத் தூக்கியபடி நின்று கேட்பவனிடம் முடியவில்லை. அதுவும் மகளும் அவன் தோளில் ஒய்யாரமாய்ச் சாய்ந்து கிடப்பதைப் பார்த்துக்கொண்டே.
“இல்ல… அது சரியா வராது. அதோட கல்யாணம் கட்டுற எண்ணமே எனக்கு இல்ல.” திரும்பவும் அழுத்திச் சொன்னாள்.
“ஏன் இல்ல? உனக்கு ஒண்டும் பெரிய வயது இல்லையே. என்ன ஒரு இருபத்தியேழு. இருபத்தியெட்டு இருக்குமா?”
“இருபத்தியாறு.”
“நான் நினைச்சதை விடச் சின்னப்பெண். பிறகு என்ன?”
‘முப்பதியிரண்டுக்கு இருபத்தியாறு ஓகே.’ மனம் கணக்கு போட்டது.
சற்றே சினம் துளிர்த்தது அவளுக்கு.
“திரும்ப திரும்ப இதென்ன கேள்வி? எனக்கு என்ர மகள் மட்டும் போதும். அவள் மட்டும்தான் என்ர வாழ்க்கை. ஒரு கல்யாணத்தக் கட்டி, அதால ஒரு பிரச்சினை வந்து அவளைப் பாதிக்கிறதுல எனக்கு விருப்பம் இல்ல. அப்பிடியெல்லாம் இல்ல அது இது எண்டு எதுவும் சொல்ல வேண்டாம். நான் யாரையும் நம்ப மாட்டன். எனக்கும் கல்யாணம் கட்ட விருப்பம் இல்ல. அதால என்ன விட்டுட்டு வேற யாரையும் பாருங்கோ!” என்று படபடத்தாள் அவள்.
பின்னே, எவ்வளவு நேரம்தான் பொறுமையோடு சொல்வது?
அப்படியே போய்விட்டால் அது விக்ரம் அல்லவே!
“எனக்கும்தான் மகன் இருக்கிறான். நாளைக்கு என்ன கைக்க போட்டுக்கொண்டு நீ அவன ஒதுக்கிவிட்டா என்ன செய்றது எண்டு நான் யோசிக்கேல்லையே.” என்றான்.
“நான் ஒண்டும் அப்படியான பெண் இல்ல!” கோபமாகச் சொன்னாள்.
“எனக்கும் அது தெரியும்!”
‘எப்படி?’ஆச்சரியமாக அவனைப் பார்த்தாள்.
“நம்பிக்கை! இந்தச் சின்ன வயசில, எல்லாருக்கும் இருக்கிற ஆசாபாசங்கள் உனக்கும் இருக்கும். ஆனாலும் மகளுக்காகக் கல்யாணம் வேண்டாம் எண்டு கிட்டத்தட்ட சந்நியாசி மாதிரி வாழுற நீ, தோட்ட வேலைக்குப் போய் மகளைக் காப்பாத்திற நீ என்ர மகனையும் நல்லா பாத்துக்கொள்ளுவாய் எண்டுற நம்பிக்கை. அந்த நம்பிக்கைல தான் கேட்டனான். உன்ர மகளுக்கு அப்பா இல்ல. என்ர மகன் அம்மா இருந்தும் இல்லாம வாழுறான். நாங்க ரெண்டு பேரும் சேர்ந்தா அதுகள் ரெண்டுக்கும் ஒரு முழுமையான குடும்பம் கிடைக்குமே. அதையேன் வேண்டாம் எண்டு சொல்லுறாய்?”
“என்ர பிள்ளைக்கு ஒரு அப்பாவ நான் தேடேல்ல. எல்லாமா இருந்து அவள நான் பாப்பன். உங்கட மகனுக்கு ஒரு அம்மா வேணும் எண்டா வேற யாரையும் நீங்க பாருங்கோ. ” என்றாள் தன் முடிவில் உறுதியாக.
ஆனால், எல்லாமாக இருந்து என்ர பிள்ளையை நான் பார்ப்பேன் என்று சொல்லும் அவளை எப்படித் தவற விடுவான் அவன்?
“திரும்பவும் சொல்றன். இந்தச் செல்லம்தான் எனக்கு முதல் பிடிச்சதே. அவாவில வச்ச பாசம்தான் உன்னக் கட்டோணும் எண்டுற முடிவ எடுக்க வச்சது. உன்ர முகத்தையே நான் இண்டைக்குத்தான் பாக்கிறன். நான் கேக்கிறது எனக்கு ஒரு மனுசிய மட்டுமில்ல. இந்தப் பிள்ளைக்கு அப்பாவா இருந்து எல்லாம் செய்ற சந்தர்ப்பத்தையும் எனக்குத் தா எண்டுதான். நல்லா யோசி. நல்ல முடிவாச் சொல்லு.” என்று சொல்லிவிட்டு அந்தக் குட்டியை இறக்கி விட்டுவிட்டு வாசல்வரை சென்றவன் நின்று திரும்பி, “இனி நான் வேற பொம்பிளை பாப்பன் எண்டு நினைக்கேல்ல.” என்றுவிட்டுப் போனான்.