ஏனோ மனம் தள்ளாடுதே 43 – 2

சற்று முன்னரும் முட்டைமாவைச் சாப்பிட்டாளா என்று பார்க்க வந்தவர் காதில் தீபா என்கிற பெயர் விழுந்திருந்தது. தங்கையோடு கதைக்கிறாள் என்று ஊகித்து, கதைக்கட்டும், இடைஞ்சல் கொடுக்க வேண்டாம் என்று விலகிப்போயிருந்தார்.

இப்போது தீபா, அவளின் கேள்வி இரண்டையும் இணைத்துப் பார்த்து என்ன விடயம் என்று கண்டுபிடித்தார். இனியும் அவர் எதையும் சொல்லாமல் இருந்தால் அவள் எந்தக் காலத்திலும் அவரை மன்னிக்கமாட்டாள். கூடவே, தீபாவின் வாழ்வை மோகனனோடு இணைப்பதில் அவருக்கே உடன்பாடு இல்லாததில், “தீபா மோகனனைப் பற்றிச் சொன்னவளாமா?” என்றார் மெல்ல.

அதிர்ந்து நிமிர்ந்தாள் பிரமிளா. ஆக, இந்தப் பெண்மணிக்கும் தெரிந்திருக்கிறது. தெரிந்தும் பேசாமல் இருந்திருக்கிறார். மோகனனைப் பற்றி இவருக்குத் தெரியாமலா இருக்கும்?

“கோபப்படாத ஆச்சி. நானும் வேண்டாம் எண்டு சமாளிச்சுத்தான் பாத்தனான். ஆனா, இந்த வீட்டுல ஆராவது என்னை ஒரு மனுசியா மதிக்கிறவையா சொல்லு, நான் சொல்லுறதைக் கேக்க?” என்று கேட்டுவிட்டு, ஒன்றுவிடாமல் நடந்தவற்றை எல்லாம் பகிர்ந்துகொண்டார் செல்வராணி.

அன்னையிடம் சொல்லி ஒன்றும் நடக்கவில்லை என்றதும் தானே காரியத்தில் இறங்கியிருக்கிறான். அப்படியானவன் தீபாவை அடைவதற்காகத் தமையனிடம் போவதற்கும் தயங்கமாட்டான். அவனின் நினைவு வந்ததுமே அவளுக்குள் ஒரு நடுக்கமுண்டாயிற்று.

அவன் பொல்லாதவனாயிற்றே! தான் எடுத்துக்கொண்ட காரியத்தில் வெற்றிக்கொடியை நாட்டுவதற்காக எந்தளவு தூரத்துக்கும் இறங்கி அடிப்பானே!

அவனுக்கு முதல் அவள் முந்தியே ஆக வேண்டும்! ஆனால் என்ன செய்யப் போகிறாள்? யோசிக்க வேண்டும். சரியான பாதையில் காய் நகர்த்த வேண்டும். அதற்கு யாரின் இடைஞ்சலும் இல்லாத தனிமை வேண்டும்!

உள்ளே போக எழுந்தவள் நின்று, “உங்களக் கெஞ்சிக் கேக்கிறன், இத உங்கட பெரிய மகனிட்டச் சொல்லி, என்ர தங்கச்சியப் படுகுழிக்கத் தள்ளிப் போடாதீங்க!” என்றுவிட்டுப் போனாள்.

செல்வராணியின் விழிகளிலிருந்து இரு சொட்டுக் கண்ணீர் உருண்டு விழுந்தது. அவர் மகனைப் படுகுழி என்கிறாள். கேட்டுக்கொண்டு நிற்கும் நிலை அவருக்கு.

அறைக்குள் புகுந்தவளுக்கு என்னவோ மூளையே மரத்துப்போய்விட்ட உணர்வு. என்ன செய்வேன், என்ன செய்வேன் என்று மனம் பரிதவித்துக்கொண்டே இருந்தது. ஆழம் தெரியாமல் காலை விடாதே என்பார்கள். ஆழம் தெரிந்தாலும் காலை விடப் பயம் வந்துவிடுகிறதே! அவளின் கணவனின் ஆழமும் அழுத்தமும் தெரிந்தவளாயிற்றே அவள். அவனை நினைத்தாலே நெஞ்சு பதறியது!

கல்லூரி வேலைகள் எத்தனையோ இருந்தும் அத்தனையையும் தூக்கிப் போட்டுவிட்டுப் பால்கனியில் அந்தக் கரைக்கும் இந்தக் கரைக்குமாக நடந்தாள்.

என்ன சிந்தித்தும் இந்தப் பிரச்னைக்கு என்ன தீர்வு என்பது புலப்படவே இல்லை. சினத்துடன் வந்து கட்டிலில் அமர்ந்துகொண்டாள். சற்று அறைக்குள்ளேயே நடந்தும் பார்த்தாள். மூளை பல கணக்குகளைப் போட்டுப் போட்டுப் பார்த்துச் சரிவராது என்று அழித்துக்கொண்டிருந்தது.

திடீர் என்று அறைக்குள் நுழைந்தான் கௌசிகன். திடுக்கிட்டுத் துள்ளித் திரும்பினாள் பிரமிளா.

“என்னடியப்பா? பேயக் கண்டமாதிரி முழிக்கிறாய்?” தற்போதைய நிலையில் தான் அப்படித்தான் அவளுக்குத் தெரிகிறோம் என்று தெரியாமல் சிரித்துக்கொண்டு கேட்டான் அவன்.

அவளிடம் பதில் இல்லாமல் போகவும் அவன் புருவங்கள் சுருங்கிற்று.

இமை தட்டாமல் தன்னையே பார்த்தவளின் கோலம் என்னவோ சரியில்லை என்று உணர்த்த வேகமாக அவளருகில் வந்தான். “பிரமி! ஏன் இப்பிடி நிக்கிறாய்? உடம்பு ஏதும் செய்யுதா? வயித்து வலி மாதிரி?” என்றான், அவளின் நெற்றி வியர்வையைத் துடைத்துவிட்டபடி.

அவனின் தொடுகையில் சற்றே தன்னிலை மீண்டு, இல்லை என்று தலையை மட்டும் அசைத்தாள் அவள்.

“பிறகு ஏன் இப்பிடி நிக்கிறாய்? வா வந்து இரு முதல்!” என்று அழைத்துச் சென்று கட்டிலில் வசதியாக அமரவைத்தான்.

இவன்… இவன் தன் தம்பிக்காக என்னவும் செய்வான். கல்லூரியைக் காட்டி மிரட்டலாம். அம்மா அப்பாவைக் கடத்தலாம். ஏன் தீபாவைக் கூடத் தூக்கிக்கொண்டு போய் மோகனனைக் கொண்டு தாலியைக் கட்டவைக்கவும் செய்வானே. அதன் பிறகு? கற்பனை கூடச் செய்யமுடியாமல் அடிவயிறு கலங்கிற்று. மனம் பதறியது. இல்லை… அப்படி எதுவும் நடக்க விட்டுவிடக் கூடாது.

தன்னையே விடாமல் வெறித்தவளின் பார்வையில் அவனுக்குள் கிலி உண்டாயிற்று. “என்ன பிரமி? என்ன செய்யுது. வாயத் திறந்து சொல்லன்!” பொறுமையாற்றுப் படபடத்தான்.

எட்டாம் மாதத்தைத் தொட்டுவிட்ட மனைவி. வேலை முடிந்து வந்தபோது பேயறைந்தவள் போன்று பயந்த முகமும் வியர்வையில் நனைந்த மேனியுமாக நின்றால் அவனும்தான் என்ன செய்வான்?

மனத்தின் குமுறலை, பயத்தை காட்டிக்கொடுத்துவிடாமல் இருக்க விழிகளை இறுக்கி மூடிக்கொண்டு, கட்டிலில் தலையைச் சாய்த்துக்கொண்டாள் பிரமிளா.

அவன் நடுங்கியே போனான்.

“விசரி! வாயைத் திறந்து சொல்லடி! என்ன செய்யுது? முதல் நீ என்னைப் பார்! பிரமி! என்னைப் பார்!” மயங்கிவிட்டாளோ என்று நடுங்கிக் கன்னத்தில் வேகமாகத் தட்டினான் அவன்.

அது வலித்துவிடப் படக்கென்று திறந்துகொண்டவளின் விழிகள் அவளை மீறிக் கலங்கிற்று. அவன் பதறிப்போனான். எந்த நிலையிலும் தன் கலக்கங்களை அவனிடம் காட்ட விரும்பாதவள். இன்று மட்டும் ஏன் இப்படித் துடிக்கிறாள்?

“என்னம்மா? என்ன எண்டு சொல்லன். சொன்னாத்தானே எனக்கும் தெரியும்!” என்றவன், ஏதிலிருந்தோ அவளைக் காக்கிறவனாக அவளைத் தன்னுடன் சேர்த்து அணைத்துக்கொண்டான்.

அவன் கைகளிலும் மெல்லிய நடுக்கம். அவள் மீதான கணவனின் பயமும் பதட்டமும் ஏதோ ஒரு வகையில் ஆறுதலைக் கொடுக்க, “ஒண்டுமில்ல…” என்று மெல்ல முணுமுணுத்தாள் பிரமிளா.

அவனுக்குக் கோபம் வந்தது. இரத்தப்பசையே இழந்து போயிருக்கிறது முகம். ஒன்றுமில்லையாம்! “பொய் சொல்லாத!” என்று அதட்டினான்.

“….”

இவள் என்ன வாயைத் திறக்கிறாளே இல்லை! அவள் முகத்தை நன்றாக ஆராய்ந்தான். களைப்பும் அயர்வும் மாத்திரமே தெரிந்தன.

“மாமா மாமி சுகமா இருக்கினமா?”

“ம்ம்…”

“தீபா?”

அவனுடைய வாயில் தங்கையின் பெயரைக் கேட்டதற்கே அவளுக்குத் தூக்கிப்போட்டது.

“அவளுக்கு என்ன?”

“ஒண்டுமில்ல. அவளுக்கு ஒண்டுமில்ல!” அவளின் பதற்றத்தில் அவன் விழிகளில் கூர்மை ஏறிற்று. அந்தக் கண்கள் அவளின் நெஞ்சையே அலசுவது போலிருக்க மீண்டும் விழிகளை மூடிக்கொண்டாள்.

“உன்ன நம்பேலாது. நீ ஆளே சரியில்ல.” என்று அவன் தன் கைப்பேசியை எடுக்க வெடுக்கென்று அதைப் பறித்துக்கொண்டு முறைத்தாள்.

“அவளுக்கு நீங்க எண்டாலே பயம். சும்மா இருங்க. உண்மையாவே அவளுக்கு ஒண்டும் இல்லை. எனக்கு… எனக்கு லேசா தலையைச் சுத்தினது. அதுதான் பயந்திட்டன். பிள்ளை பிறக்கிறதைப் பற்றி ஒரு வீடியோவும் பாத்தது…” பொய் சொல்கிறோம் என்பதில் குரல் உள்ளே போயிற்று அவளுக்கு.

“அதுக்கு இப்பிடித்தான் நீயும் பயப்பிட்டு என்னையும் பயப்படுத்துவியா டீச்சரம்மா?” வார்த்தைகள் அதட்டினாலும் அதற்கு மாறாக அவன் குரல் கனிந்து குலைந்து போயிற்று.

முதல் பிரவசம். நாளும் நெருங்கிக்கொண்டு இருக்கிறதே. அதை எண்ணிப் பயந்திருக்கிறாள். தைரியமூட்டுகிறவனாகத் தன் அணைப்பை இறுக்கினான்.

“உங்களுக்கு என்ன? பெத்து எடுக்கப்போறது நான்தானே.” பிள்ளைப்பேறினைப் பற்றிய மெல்லிய கலக்கம் அவளுக்குள்ளும் இருந்ததில் இப்போது பதில் வந்தது.

“அதுக்கு? கண்ணுல நெருப்புப் பறக்க என்னோட மல்லுக்கட்டின என்ர பிரமிக்கு இதெல்லாம் ஒரு விசயமா?” என்று கேட்டான் அவன்.

அவளுக்கு என்றால் அவள் ஏன் கலங்கப் போகிறாள்? மனது மீண்டும் கலங்கிவிட, “என்ர ஃபோட்டோவை ஆர் போட்டது?” என்றாள் அவனையே நேராகப் பார்த்து.

சட்டென்று அவனிடம் ஒரு கவனம் வந்து அமர்ந்தது. “இப்ப என்னத்துக்கு அதைப் பற்றிக் கதைக்கிறாய்?”

அவள் விடவில்லை. “மோகனனா?” என்றாள்.

பதில் சொல்லாமல் அவன் எழுந்துகொள்ளப்போனான். கரம் பற்றித் தடுத்தாள் அவள்.

“இப்பவும் உங்களுக்கு என்னட்டச் சொல்லேலாது என்ன?” நெஞ்சினோரம் சிறு வலியொன்று தாக்கக் கேட்டாள்.

ஒருநொடி அவளின் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறிப் பின் சமாளித்து, “பழசை எல்லாம் தூக்கிப்போடாம நீ என்னத்துக்கு அதையெல்லாம் நினைவு வச்சிருக்கிறாய்?” என்று திருப்பிக் கேட்டான் அவன்.

செய்தது தவறில்லையாம். நினைவு வைத்திருப்பது தவறாம். அவனுடைய நியாயங்கள் எப்போதுமே இப்படித்தானே!

“அந்தப் பேப்பரை தூக்கிக் குப்பையில போட்ட மாதிரி நடந்த விசயத்தையும் அண்டைக்கே தூக்கிப் போட்டுட்டன். எதிர்பாராம தடுமாறி விழுந்த ஒரு பெண்ணைப் ஃபோட்டோ எடுத்துப் பேப்பர்ல போட்டவன்தான் வெக்கப்படோணும். வேதனைப்படோணும். மறக்க முடியாம நெஞ்சுக்கையே வச்சுக் குமைய வேணும். நான் இல்ல! அந்தத் தெளிவு எனக்கு இருக்கு. ஆனா, ஏன் நீங்க இந்தப் பாடு பட்டு மறைக்கிறீங்க? உங்கட குணம் கெட்ட தம்பின்ர மானத்தைக் காக்கவா?”

சாட்டையடி போன்ற கூர்மையான கேள்வியில் அவன் முகம் இறுகியது. விழிகளில் கோபம் ஏறியது. “உனக்கு அவனைக் குறை சொல்லாம இருக்கேலாதா? எப்ப பாத்தாலும் ஏதாவது சொல்லிக்கொண்டு!” என்றவன் ஆத்திரத்துடன் அங்கிருந்து வெளியேறினான்.

அவள் அவனிடம் வாதாடியதற்குக் காரணம், செய்தது மோகனனா என்று அறிந்து கொள்வதற்கன்று. அவன்தான் என்று அவளே கண்டு பிடித்துவிட்டாளே. ஆனால், அவளா அவனின் தம்பியா என்று வந்தால், கணவன் யாருக்காக நிற்பான் என்று அறியவேண்டி இருந்தது.

அன்றைக்கு அவள் அவனுக்கு யாரோ. அதனால் தம்பிக்காக நின்றான். ஆனால் இன்றைக்கு? அவனிடம் மாற்றம் உண்டாகி இருக்கிறதா, மனைவிக்காகவும் யோசிப்பானா என்று அறியவேண்டி இருந்தது.

இல்லை என்று நிரூபித்துவிட்டுப் போயிருக்கிறான் அவன்.

மனைவி தன்னைச் சோதிக்கிறாள் என்று அறியாமலேயே அவளின் சோதனையில் படு மோசமாகத் தோற்றுப் போயிருந்தான் கௌசிகன்.

அன்று இரவு, வழமைபோல் நெருங்கிப் படுத்த கணவனின் கரத்தை விலக்கிவிட்டு முதுகு காட்டிப் படுத்துக்கொண்டாள் பிரமிளா. ஒருகணம் உதட்டைக் கடித்தவன் அதற்குமேல் அவளைக் கட்டாயப்படுத்தவில்லை.

error: Alert: Content selection is disabled!!
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock