ரோசி கஜனின் இயற்கை – 8(1)

கொட்டேஜ் சென்று வந்த பின், சிலநாட்களில் புறப்படும் வகையில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது, அந்த ‘சாலைப்பயணம்’. ஒரே வரியில் சொல்வதென்றால் ‘ட்ரொண்டோ டு சான்ஸ்பிரான்ஸிஸ்கோ’, இரு கிழமைகளில்.  

  தொலைக்காட்சித்தொடர்கள், யூ டூயுப் வீடியோஸ், அது போதாதென்று இலக்கியாவின் நெருங்கிய பள்ளித்தோழியின் பயண அனுபவங்கள் என ஒவ்வொன்றும், இவர்களுள்ளும்  மிகையான ‘சாலைப் பயணம்’ பற்றிய தாகத்தை, அது பற்றிய ஆழமான கற்பனையை உருவாக்கியிருந்தது.

     ‘கவின் சின்னப்பிள்ள, சமாளிக்கிறது எப்பிடி?’ என்றதெல்லாம் ஒன்றுமேயில்லை என்றார்கள் இளையவர்கள், ‘அவன நாங்களே பார்த்துக்கொள்ளுவம் கவலைப்பட  வேணாம்!’ என்ற  உறுதியோடு.

  முதலில், அவரவர் அவரவர் கார்களில் செல்வதாகத்தான் திட்டமிட்டார்கள்.  சுதர்சன் மற்றும் அவர் ரெண்டாவது தம்பி சிவா, அவர் மனைவி ராஜி என, வேலையில் விடுமுறை எடுப்பதில் இழுபறி வரவே, “எதுக்கும் எல்லாரும் ஒண்டா  காரோ வானோ பிடிச்சே போயிருவம்.” என்ற முடிவுக்கு வந்திருந்தார்கள். 

  சான்ஸ்பிரான்சிஸ்கோவில், எல்லாருமே கலந்துகொள்ளவேண்டிய  நெருங்கிய உறவொன்றில் திருமணமும் இருப்பது கூடுதல் நன்மையளித்தது. 

   “ரெண்டு கிழமைகள், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஹோட்டலில் தங்கிக்கொண்டு வாகனத்தில இருந்து பயணம் செய்ய என்னால ஏலாது பிள்ளைகள். நீங்க எண்டா காடு மலை பாராம நடந்து திரிய ஓட எண்டு இருக்கலாம். நான் வந்தா எல்லாத்துக்கும் என்னைத்தான் பார்த்துக் கொண்டிருக்க வேணும். அதெல்லாம் சரிவராது குஞ்சுகள்.  கலியாணத்துக்கு முதல் ஃபிளைட்டில வாறனே. நீங்க சந்தோசமாகப் போயிட்டு வாங்கோ! திரும்பி வரேக்க எல்லாரும் ஒண்டா ஃபிளைட்ல வருவம்.” என்றிருந்தார், மலர். 

  சிறியவர்களுக்கு ஏமாற்றமாக இருந்தாலும், மூட்டு நோ, முதுகு நோவென்று  சொல்பவரை வற்புறுத்தவும்  இயலவில்லை. 

   சுதர்சன், சிவா மற்றும் ராஜியும் மலரோடு கல்யாணத்துக்கு வருவதாகக் கூறிவிட்டார்கள். மிகுதி ஐந்து பெரியவர்களும் ஆறு இளையவர்களுமாக வலு ஆரவாரத்தோடு பயண ஏற்பாடுகளில் ஈடுபட்டிருந்தார்கள்.

   அன்று காலையில், எவ்வளவு முடியுமோ அவ்வளவு நேரத்திற்குப்  புறப்படுவதாக முடிவு செய்திருந்தார்கள். முதல் நாளிரவு தங்குவது நயாகராவில், அமெரிக்கா பக்கத்தில்.

   “அம்மா அங்க வாகனம் வந்திட்டாம்; இன்னும் ஒரு மணித்தியாலத்துக்குள்ள இங்க வருவீனமாம்.” தொலைபேசியில் வந்த செய்தியைச் சொல்லிவிட்டுத்  தன்னறைக்குள் புகுந்து கொண்டாள், கவி.

    “இண்டைக்கு எல்லாம் சமைச்சி இருக்கு மாமி. நாளையில இருந்து உங்களுக்கு ஏலுமானதச்(இயன்றதைச்) செய்து கொள்ளுங்கோ!” என்றபடி வந்தார், இலக்கியாவின் அன்னை.

  “நீங்க அதப் பற்றியெல்லாம் யோசியாமல் உங்கட பயண அலுவலப் பாருங்கவன். நீ போய் வெளிக்கிடன், அங்க கார் வந்திட்டாம்.”  

  “இந்தா பத்து நிமிசத்தில வெளிக்கிட்டிருவன் மாமி.” அவர் உள்ளே செல்கையில், தன் பயணப்பெட்டியைக் கொண்டு வந்து வைத்துவிட்டு, “நான் ரெடி அம்மா. உங்களுக்கு ஏதாவது உதவி செய்யோணுமா?” என்றபடி வந்தாள் இலக்கியா.

  “கொண்டு போற பாக்ஸ் எல்லாம் முன்னுக்கு ஒரே இடத்தில எடுத்து வச்சு விடம்மா! பிறகு அதை மறந்திட்டம் இதை மறந்திட்டம் எண்டு நிக்காமல்.” என்றபடி சென்றவர், “பார் மறந்திட்டன், பேஸ்மெண்ட்டுக்க  மரபெட்டிக்க பேப்பர் கப்ஸ், பிளேட்ஸ்  எல்லாம் இருக்கு… பார்த்து எடுத்து வையன் தேவைப்படும் தானே?” என்றபடி செல்ல, ஓடிப் போய் எடுத்து வந்தவள், எல்லாம் சரியாகவுள்ளதா என்று பார்த்துப்  பார்த்து முன் வராண்டாவில் கொண்டு போய் வைத்தாள்.

  எப்படியென்றாலும் கடைகளில் தான் சாப்பாடு. என்றாலுமே  கேக் வகைகள், முறுக்கு, பருத்தித்துறை வடை, பக்கோடா இப்படி நொறுக்குத் தீனிகள் தயாரித்தெடுத்திருந்தார்கள்.

  “ஏன் பிள்ள, சின்ன ஸ்டவ், கொஞ்சப் பாத்திரங்கள், சாமான்கள் எண்டு கொண்டு போகலாமே! பன்னிரண்டு சீட் உள்ள வாகனமாமே! இடவசதி இருக்கு எண்டான் சுதர்சன்! ரெண்டு கிழமைகளுக்கும் கடைச் சாப்பாடு சாப்பிட்டா நாக்குச் செத்திராதா?” மலரின் ஒரே கவலை இதுதான்.

  “அப்பம்மா! எப்பவும் வீட்டல நம்மட சாப்பாடுகளச் செய்து சாப்பிடுறம் தானே? ஒரு ரெண்டு கிழமைகளுக்குச் சரி வித்தியாசம் வித்தியாசமா போற போற இடங்களில என்னென்ன கிடைக்குதோ அதையெல்லாம் ருசி பார்க்க வேண்டியதுதான். அதை விட்டுட்டு, சட்டி பானை எல்லாம் தூக்கிக்கொண்டு போய் சமைச்சுக் கொண்டிருங்களன்…வேற வேலை இல்லையோ! நல்ல காலம் உங்கள இங்க கழட்டிவிட்டது.” என்றபடி வந்து பெரியவரின் கன்னத்தை நிமிண்டினாள், கவி.

  “ஆரடி ஆரக் கழட்டி விட்டது? இப்பவும் நான் வெளிக்கிட்டு வருவன்; சும்மா இல்ல குக்கர் சாமான்கள் எல்லாம் தூக்கிக்கொண்டு!” பொய்க்கோபம் காட்டி மிரட்டினார், மலர்.

  “அய்யோ ஆர் வேணாம் எண்டது? கெதியா எழும்பிப் போய் வெளிக்கிடுங்கோ  யங்  லேடி!” ஊக்கினாள் இலக்கியா. அவளின் பார்வை மட்டும் கைபேசியில்.

    சில நாட்களாக, அதுவும் கொட்டேஜ் போனதிலிருந்து ஆரம்பித்த புதுப் பழக்கமிது! வீடியோ கிளிப் பார்ப்பதுபோல அந்தக் குறிப்பிட்ட வாட்சப்பை ஓபன் பண்ணி வச்சுக்கொண்டு பார்த்திருப்பது. அதுவும் அந்தப் புகைப்படத்தில் இமைத்தட்ட முடியாது அவள் பார்வை  ஒட்டிக் கிடக்கும். 

  ‘நான் ஏன் இப்படியானேன்?’ என்ற கேள்வி அலைக்கழிந்து திரியாதுமில்லை. இருந்தாலும் அவளால் விடை கண்டும் பிடிக்கவியலவில்லை. அது ஏதோ ஒரு சலனம், ஈர்ப்பு என்றெலாம் ஒதுக்கிவிடவும் முடியவில்லை. கூடாதென்று  எண்ணினாலும் வேண்டாமென்று  முடிவே எடுத்தாலும் அவன் இலக்கத்தை அப்படியே டெலிட் செய்துவிட கைவிரல் முயன்றாலும் முடியவில்லையே! மீண்டும் மீண்டும் அதைப் பார்ப்பதில் என்ன கண்டாளோ, அவளுக்கு அக்கணங்கள் மிகவுமே  பிடித்திருந்தன.

   “நீ என்னடி செய்யிற? உத்து உத்து அப்பிடி என்னத்தப் பாத்துச் சிரிக்கிற? எனக்கும் காட்டு!” தங்கையருகில் இடித்துக்கொண்டமர்ந்தாள் கவி.

  சட்டென்று கைபேசியை அப்பால் விலக்கி, தமக்கை இனம் கண்டுகொள்ளாமல் மெல்லத் தட்டிவிட்டுவிட்டாள், இலக்கியா.

   “அப்பிடி…அதெல்லாம்…ஒண்ணும் இல்ல…” தடுமாறிப்போன தங்கையை வித்தியாசமாகப் பார்த்தாள்,  தமக்கை.

   “இல்ல தங்கா! ஏதோ சரியில்ல. நீ கொஞ்ச நாளா ஒரு மாதிரி இருக்கிற – என்ன விசயம்?  அக்காட்டச் சரி சொல்லீரு சொல்லிட்டன்!” மிரட்டல் போலிருந்தாலும் அங்கே நட்பு கோலோச்சி நின்றது.

   “உண்மையாவே ஒண்டும் இல்ல – பிரெண்ட்ஸ் பிறந்தநாள் பார்ட்டி வீடியோ போட்டிருந்தவையல், அதப்  பாத்துக்கொண்டிருந்தனான். வேணுமெண்டா இந்தாப்  பாருங்க.” தோழிகளின் வாட்சப் குறுப்பிலிருந்த வீடியோவை காட்ட, 

  “பிள்ள அந்த கொட்டேஜில வள்ளத்தில போய்ப் பயந்திட்டாள். அதில இருந்து ராசாத்திட முகமே மாறிட்டு! என்ர  குஞ்சு… இப்பப் போற  இடம், அறியாத தெரியாத இடம் கவனமா இருக்க வேணும் சரியோ? சின்னாக்கள பாக்க வேண்டிய நீங்களே லூசுக் கூத்து ஆடுறேல்ல! அது ஒண்டுதான் எனக்குப் பயம்.” பேத்தியின் கன்னம் வருடியபடி சொன்னார், மலர்.

    “ஒருக்கா ஒரு சின்ன விசயத்தில் பிழை விட்டுட்டா அதை விடாமல் பிடிச்சிருக்கிறதில இந்த வீட்டக் கேட்டுத்தான்.” முணுமுணுப்போடு எழுந்த இலக்கியா, “கார் வருதா எண்டு பார்க்கப் போறன்.” வெளியில் சென்ற வேகத்தில், “இந்தா வந்து கொண்டிருக்கு. அம்மா நீங்க ரெடியா?” உள்ளே பார்த்துக் கூவினாள்.

 

ரோசி கஜனின் இயற்கை – 8(2)

   “எல்லாரும் ரெடியா?” என்றபடி வந்தான், மாறன்.

   “ம்ம்…இந்தா சாமான்களை ஏற்றுங்க.” என்ற மலர், “கவனம் தம்பிமார்; பிள்ளைகள் கவனம்; போறது வாறது தங்குறது சாப்பிடுறது எல்லாம் கவனம்.” 

  “அதெல்லாம் ஒண்ணும் யோசியாதீங்க அம்மா!” என்றபடி வந்தார், நாதன்.

  “எங்க இலக்கியா உள்ள போறீங்க? இனி வாங்க போகச் சரியாக இருக்கும்.” என்ற மாறன்  பயணப்பைகளை எடுத்துச் சென்று வைக்க உதவினான். 

  தயாராகி வந்த இலக்கியாவின் அன்னை, ” இந்தா உங்கட அண்ணா கதைக்கிறார், வெளிக்கிடுற நேரம் தானில்லாமல் வேலை இருக்கே எண்டு அவருக்குக்  கவலை.” கைபேசியை அங்கு நின்ற மைத்துனர்களில் ஒருவரிடம் கொடுத்துவிட்டு மலரிடம் விடைபெற்று ஏறிக்கொண்டார்.

   “ம்ம்…எல்லாரும் ஏறுங்க!” என்றுவிட்டு, “போயிட்டு வாறம் அம்மா; இங்க கவனமா இருங்க.” தானும் ஏறிய மாறன், “எங்க இலக்கியும் கவியும் இன்னும் வரேல்லையா?” வீட்டைப் பார்த்தான்.

   ஓட்டுநர் வண்டியை இயக்கி அவர்கள் வரும் வரை பார்த்திருக்க, “இந்தா வந்திட்டம்.” சகோதரிகள் இருவரும் ஓடிவந்தார்கள்.

   “எவ்வளவு வெள்ளனவே வெளிக்கிட்டாலும் கடைசிவரை வேலையிருக்கும் உங்களுக்கு.” என்ற மலர், இருபக்கமும் கட்டிப் பிடித்துக்கொஞ்சிய பேத்திகளுக்கு, மீண்டும் கவனம், பத்திரம் சொல்லிவிட்டு யன்னல்களால் எட்டிப் பார்த்த மற்றைய பேரப்பிள்ளைகளுக்கு பறக்கும் முத்தங்களை அள்ளி வீசினார்.

   “ஃபோன் சார்ஜ் எடுக்க மறந்திட்டன், அதான்.” என்ற இலக்கியா, “அக்காதான் சின்ன பாக்கை மறந்திட்டா!” போட்டுக் குடுத்தாள்.

   கவி அந்தப்பையோடு உள்ளே ஏறமுயல, “தா அதையும் ட்றங்கில போடலாம்.” வாங்கிக்கொண்டு அவர்கள் உள்ளே செல்ல வழிவிட்ட மாறன், இறங்கி அதை வைத்துவிட்டுத் தாயிடம் விடைபெற, ஆரவாரக்  கூச்சலோடு அந்த ‘ஃபோர்ட் டிரான்சிட் 12’   பயணிகள் வாகனம் நகர்ந்தது.

   “டேய் ஆரூரன், எனக்கு யன்னல் பக்கம் எண்டு சொன்னனான் எல்லா? தள்ளி இங்கால வாடா” தன்னைவிட நான்கு வயது சிறிய நாதன் சித்தப்பாவின் ஒரே மகனோடு மல்லுக்கு நின்றாள், இலக்கியா. அவனோ அசையவில்லை.

“அதுக்கு நேரகாலத்துக்கு வந்து ஏறியிருக்க வேணும் கா. இப்ப என்ன இடமா இல்ல? அங்க முன்னுக்குப் பார், சீட் சீந்துவார் இண்டிக் கிடக்கு. போயிரு…ப்ளீஸ்!” என்றான், விசமத்தோடு.

   “டேய்..எழும்பி இங்கால வாடா எண்டா!” தோளில் மாட்டியிருந்த கைப்பையை  மறுபுறமிருந்த தங்கை மடியில் வைத்துவிட்டு அவனைப் பிடித்திழுத்து கத்திக்குழறி கண்ணாடிப் பக்கத்தில் அமர்ந்து பெரும் வேலைசெய்த களைப்பில்  மூச்சு விட்டவளை, அவனோ கடி கடியென்று கடித்தெடுத்தான்.

    இவர்களின் செல்லச் சண்டைகளை, குபீரென்று வெடித்துக் கிளம்பிய சிரிப்பலைகளை தாமும் சந்தோச முறுவலோடு பார்த்து அநுபவித்தார்கள்,  பெரியவர்கள். அதோடு, தம்முள் ஆரவாரத்தோடு பயணம், தங்குமிடங்கள் பார்க்குமிடங்கள் சம்பந்தமாகவே உரையாடலில் ஈடுபட, கவின் மட்டும்  கேமில் ஆழ்ந்தான். 

    இப்படியே கலகலவென்று ஆரம்பித்த பயணம் கால் மணித்தியாலம் கடந்திராது,  “பசிக்குது!” பின்னாலிருந்து ஒரு குரல் ஆரம்பிக்கவும் வரிசையாக, “பசிக்குது” இராகமெழுந்தது. 

   “இது தெரியுமே எனக்கு! காலம தேத்தண்ணி கூட உள்ள போயிருக்காது எண்டது தெரியாட்டி எப்பிடி!” என்ற நாதன் மனைவி ரதி, “எல்லாருக்கும் டோ நட், பன்  எல்லாம் இருக்கு.” பெரிய பெட்டியை எடுத்து, “இலக்கி எல்லாருக்கும் குடும்மா!” அவளிடம் பொறுப்பை ஒப்படைக்க, “தாங்கோ சித்தி நான் குடுக்கிறன்.” வாங்கிக் கொண்டாள்,  கவி.

   “அதோட கேக்கும் இருக்கு எடுத்துக் குடு கவி!” அவள் அம்மாதான் சொன்னார்.

    “கொட்டிச் சிந்தாமல் சாப்பிடுங்க; பிறகு அதுக்க இருக்கப் போறதும் நீங்கதான்; ரெண்டு கிழமைகளுக்கு இதுவும் வீடு எண்டு நினைச்சுப்  பிழங்குங்க!” சொன்னார் நாதன். இவர் சுதர்சனுக்கு அடுத்தவர். இவரை நம்பியே சுதர்சன் வீட்டில் நின்றார். அந்தளவுக்கு எல்லாவற்றையும் பார்த்துப் பார்த்துக் கனகச்சிதமாகச் செய்து விடுவார். 

   “எங்களுக்கும் கேக் இருந்தால் தாங்கோவன்.” மாறன் கேட்க, “அதுக்கென்ன? எல்லாமே  நிறையவே இருக்கு.” என்றார், இலக்கியாவின் அன்னை சுகுணா.

   அஜியிடம் இருந்து கேக் பெட்டி கைமாறியது.

   “ஒரு பேப்பர் பிளேட் தாங்கோ அந்தத் தம்பிக்கும் குடுக்கலாம்.” நாதன் கேட்க,   “இந்தாங்கோ!” கவி கொடுத்த பிளேட்டில் இரண்டு கேக் துண்டுகளை எடுத்து வைத்துக்கொடுக்க, சாரதிக்கருகில் இருக்கும் மாறன் கை நீண்டு வாங்கிக் கொண்டது. 

   “கேக்கை சாப்பிட்டுச்  சாப்பிட்டுப்  பிறகு ஓடுறதில கவனமில்லாமல் விடுறேல்ல! ஏனெண்டா, இது எங்கட சின்னக்கா இலக்கியா செய்த கேக்; ருசி மயக்கும்!” இலக்கியாவின் அருகிலமர்ந்திருந்த நாதனின் மகன் ஆரூரன்; அவனுக்கு அவளோடு வம்பிழுக்கவில்லை என்றால் பொழுது போகாது.

   “உன்ன! எரும! இதுவரைக்கும் நாலு துண்டுகள முழுங்கிப்போட்டு நக்கல்  அடிக்கிறியோ! அந்த டிரைவர் என்ன நினைப்பார் சொல்லு?”  சகோதரனின் காதை பிடித்துத் திருகியபடி முன்னால் ஓட்டுனரைப் பார்க்க முயன்றாள், இலக்கியா.

  அது எங்கே? நாதன் தலை மறைத்தது.  அவள் கவனமும் பின்னால் எழுந்த கலகலப்பில் சென்றுவிட்டது.

   “தம்பி கேக் சாப்பிடுங்க!” நாதன். அவன் ஓடிக்கொண்டே எடுத்து உண்ணக் கூடியவகையில் கேக் தட்டை வைத்துவிட்டு தானும் கேக்கைச் சுவைத்தான் மாறன். 

   “தாங்க்ஸ் அங்கிள்!” முறுவலோடு சொல்லிக்கொண்டே இலாவகமாக வாகனத்தைச் செலுத்துபவனை ஒருகணம் ஆராய்ந்தன,  நாதனின் விழிகள்.

   இனிவரும் இருகிழமைகளுக்கு தம்மோடு இருக்கப் போகிறவன் ஆச்சே! இவனை நம்பி இத்தூரமாகப் பிரயாணம் அதுவும் கிட்டத்தட்ட மொத்தக் குடும்பமும். 

  “நீங்க எவ்வளவு காலம் இங்க வந்து?” அவர் கேட்தற்கு சிறுமுறுவலோடு, “நான் இங்கதான் பிறந்தன் அங்கிள்.” பதில் சொன்னான் அவன்.

   “ஓ! சரி சரி…” நாதன் சொல்ல, “இப்பிடி அடிக்கடி தூரப்பயணம் ஓடி இருக்கிறீங்களோ?” மாறன்  கேட்டதற்குச்  சட்டென்று பதில் சொல்லவில்லை, அவன். எவ்வளவோ தூரப்பயணங்களில் வாகனமோட்டியிருந்தாலும் இப்படித் தொடர்ந்து இருகிழமைகளுக்கென்று ஓட்டவில்லைதான்.  தேவையும் வரவில்லை. ஆனால்,  அதெல்லாம் ஒரு பிரச்சனையேயில்லை.  

    “ஒண்டுக்குமே யோசியாதீங்க! உங்களுக்கு எந்தப் பயமும் தேவேல்ல; நம்பிக்கையோட என்னோட வரலாம்.”  முறுவலோடு சொன்னபடி விரைவுப்பாதையில் போக்குவரத்தில் கலந்தானவன்.

   “நம்பிக்க இல்லாம எல்லாம் இல்ல தம்பி. யாழ் டிராவல்ஸ் எவ்வளவு காலமா இயங்குது! நம்பிக்கையானதும் கூட. நாங்க இப்பிடி ரெண்டு கிழமை போறதெண்டு முடிவெடுத்ததும்  எங்களோட வரப்போற ட்ரைவரோட கதைச்சனாங்க. டேவிட் எண்டு ஒருத்தர்.  இப்பிடிச்  சிலதடவைகள்  தான் போய்வந்திருப்பதாகவும்  சொன்னவர். எங்களுக்கும் ஒரு தெம்பா இருந்தது. காலேல பார்த்தா நீங்க வந்திருக்கிறீங்க அதான் கேட்டனான்.”

  “டேவிட்க்கு கொஞ்சம் சுகமில்லை; அதனாலதான் கடைசி நேரத்தில வர ஏலாமல்  போயிட்டு.”  என்றான், அவன்.

  “சரி சரி, ஆரு எண்டாலும் இப்ப என்ன?” என்ற மாறன்,  வேறு கதைக்கத்  தொடங்கிவிட்டான்.

இரண்டரை மணித்தியாமல் ஓடிய பின்னர் காஸ் ஸ்டேஷனோடு சேர்ந்த பெரிய ரெஸ்டாரண்ட் காம்பிளெக்சில் வண்டியை நிறுத்தும் வரையில் இவர்களின் உரையாடல்கள் பல பல விசயங்களைப் பேசிக்கொண்டன.

  வாகனத்தை நிறுத்தமுதலே நான் நீயென்று இறங்க ஆயத்தமாகினர், இளையவர்கள். 

   “முதலில வோஸ் ரூம் போவம்.” கதைத்தபடி தம் கைப்பைக்களோடு திமு திமுவென்று இறங்கியவர்களின்  பின்னால் பெரியவர்களும் இணைந்துகொண்டார்கள். 

   “கவின் ஓடாத! மாறன் அவனைப் பிடிங்க!” பிடிபடானென்று தெரிந்தே அஜி மகன் பின்னால் ஓட, இடையில் வளைத்துப் பிடித்துத்  தூக்கிக்கொண்டு நடந்தாள், கவி.

   விடுமுறைக் காலமாச்சே! பலதரப்பட்ட மக்கள் அங்குமிங்குமாக  சென்ற வண்ணமிருந்தாலும் உணவங்களில் போடப்பட்டிருந்த இருக்கைகளும் நிறைந்தே காணப்பட்டன.  அவர்களைக் கடந்து வோஸ் ரூம் சென்றால் அங்கும் வரிசை நீண்டிருந்தது.  ஆண்களும் பெண்களும் தத்தம் பிரிவுகளில் இணைந்து கொண்டார்கள்.

     “பிறகு மேக்கில மில் ஷேக் வாங்குவம்.” ஆரம்பித்தாள், சிவா, ராஜியின் மகள். 

     “ம்ம் எனக்கு ஐஸ் …எனக்கு மேக் ஃபிளோரி…” இப்படி மாறி மாறிக் கதைத்தபடி ஒவ்வொருவராக உள்ளே சென்றதில் முதலில் சென்ற இலக்கியா வெளியில் வர, அப்பவும் அவள் அன்னையும் சித்திமாரும் வரிசையில் நின்று கொண்டிருந்தார்கள், மறுபுறம் சித்தப்பாமாரும். 

  “இன்னும் ஒருவரும் வரேல்லையா? நான் வெளில போய் நிக்கிறன்.” என்றுவிட்டு வெளியே வந்தவளைக் காத்திருந்து சிறைப்பிடித்துக்கொண்டன, இரு விழிகள்!

  அருகிலேயே ‘மேக்’ இருக்கவும் அங்கு வந்து நின்றுகொண்ட இலக்கியா கைபேசியை எடுக்கவும் “ஹேய்…” மிக அருகில் கேட்ட குரல் பின்புறமாகத் திரும்பிப் பார்க்க வைத்தது. மறுநொடி,  உச்ச பட்சமாக அதிர்ந்து போனாளவள். விரிந்துவிட்ட விழிகளோடிணைந்த அவளிதழ்களோ, அவள் மனநிலையை அங்கு நின்றவனுக்குணர்த்திவிட்டிருந்தது.

  விழிகள் எக்கச்சக்கமாக நகைக்க, “வாயை மூடும்! என்னைப் பாக்க அவ்வளவு அதிர்ச்சியா இருக்கா என்ன?” தாழ்ந்த குரலில் நக்கலோடு சீண்டியவனை இப்போது முறைத்தன அவள் விழிகள். இருந்தாலும், உள்ளத்தில் எதுவோ எல்லாம் செய்தும் தொலைத்தது. எதிர்பாராத இச்சந்திப்பு அவளுள்ளத்தில் சத்தோசக் குமிழிகளை முகிழ்க்கவில்லையென்று  சாக்குப் போக்குக்கேனும் பொய் சொல்லாள்.  இத்தனைக்கும் நடுவிலும், ‘அப்ப இவர் என்னப் பின்தொடர்ந்துதான் வாறார்!’ என்ற உணர்வு ஏனோ இலேசான நடுக்கத்தையும் உருவாக்கி விட்டிருந்தது.

   அவன் பார்வை வோஸ் ரூம் பக்கம் பாய்ந்து மீண்டது.

   “இலக்கியா! எப்பிடி இருக்கிறீர்? பிறகு லேக்கில சாகசம் செய்தது போல ஒண்டும் செய்யேல்லையா? இப்ப எங்க இங்க?” கேட்டவனுக்குப் பதில் சொல்லாது, “நீங்க எங்க இங்க?” ஒரு மாதிரிக் கேட்டு வைத்தாள், இவள். 

  மனதில் சந்தேகத்தோடு வினவியதை அவள் விழிகளிலும் படிக்கமுடிந்தது. சற்றே விரிந்த முறுவலோடு பார்த்தவன் பார்வையில் எக்கச்சக்க விசமம்.

  “ஹேய்! உடனே உம்ம வால் பிடிச்சுக்கொண்டு வாறன் எண்டு எதுவும் நினைச்சிராதேயும். நான் என்ர வேல விசயமா வந்தன். அவ்வளவும் தான். சரி வாறன். லீவுக்கு ஊர் சுற்ற வெளிக்கிட்டாச்சுப் போல! என்ஜோய்!”  சொல்லிக்கொண்டே விடுவிடுவென்று நகர, ஏதேதோ கதைக்க ஆவல்கொண்ட இதயம் ஏமாற்றத்தோடு அவன் முதுகைத்தான் தொடர்ந்தது. அவனோ,  அந்த ரெஸ்டாரண்டின் மறுபக்கமாகச் சென்று மறைந்திருந்தான்.

   “இலக்கிக்கா  வா நமக்குத் தேவையானதை வாங்குவம்.” ஆரூரன் தோளில் இடித்துவிட்டு மேக் கவுண்டர் நோக்கிச் செல்ல, “என்னடி முழிசிக்கொண்டு நிக்கிற?” என்றபடி வந்தாள் கவி. 

   “பச்! ஒண்ணும் இல்ல.” சேர்ந்து நடந்தாலும் அந்தச் சனத்திரளுள் அவனுரு தென்படுகின்றதா என்பதைத் தத்தளிப்போடு தேடியலைந்தன, இலக்கியாவின் விழிகள்!

error: Alert: Content selection is disabled!!
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock