ஆதார சுதி 45 – 2

“என்னப்பு ஒண்டுமே கதைக்காம இருக்கிறாய்? அம்மம்மாவில கோவமோ?”

“கோவிக்காம? திரும்பி வருவன் எண்டு சொல்லிப்போட்டுத்தானே போனனான். பிறகும் இப்பிடி கவலைப்பட்டு உடம்பக் கெடுத்து வச்சிருக்கிறீங்க எண்டா என்னை நம்பேல்ல எண்டுதானே அர்த்தம். மகனை மாதிரி பேரனும் அங்கேயே நிண்டுடுவான் எண்டு நினைச்சீங்களா?” அவனின் கோபம் கூட அந்த மூதாட்டிக்குக் கற்கண்டாக இனித்தது.

“சரி ஐயா. என்ர குஞ்சு கோவப்படாத. அதுதான் வந்திட்டாய் தானே. அந்த டாக்குத்தர்(டொக்டர்) அறுவானிட்ட சொல்லு; எனக்கு ஒண்டுமில்லையாம் வீட்டை விடட்டாம் எண்டு. கண்ட கண்ட கருமாந்திர குளுசை(மாத்திரை) எல்லாம் தந்து விழுங்கச் சொல்லுறான்!” பழைய தெய்வானை திரும்பியிருக்க அவரின் அடாவடி ஆரம்பித்திருந்தது.

“நான் சொல்ல மாட்டன். உங்கட வாய்க்கொழுப்புக்கு இன்னும் பத்து நாளைக்கு இருந்திட்டு வாங்கோ! என்ன சொன்னீங்க, உங்கள காடு வாவா எண்டு கூப்பிடுதோ?” என்று அவரைக் கலங்கடித்தாலும், வைத்தியரைச் சந்தித்துப் பேசி கையுடனேயே அவரைக் கொண்டுபோய் வீட்டில் விட்டுவிட்டுத்தான் தன் வேலைகளைப் பார்க்கப் போனான்.

தோட்டத்தைப் பார்த்து, நண்பர்களைச் சந்தித்துப் பிளாஸ்ட்டிக் இல்லா யாழ்ப்பாணத்தின் நிலை அறிந்து, அப்படியே வைத்தியரைச் சந்தித்துத் தாத்தாவைப் பற்றி விசாரித்து, அழைத்த ராகவியிடமும் போயிருந்து சற்றுநேரம் பேசிவிட்டு அவரிடமே உணவையும் முடித்துக்கொண்டு அவன் வீடு வந்தபோது இரவாகியிருந்தது.

அறைக்குள் வந்ததுமே சஹானாவுக்குத்தான் அழைத்தான். பார்த்துக்கொண்டே இருந்தவள் உடனேயே அழைப்பை ஏற்றாள். “வந்திட்டனா எண்டுறதை எடுத்து கேக்க மாட்டியா? அதென்ன மெசேஜ் அனுப்புறது?” என்றான் அவளையே விழிகளால் விழுங்கிக்கொண்டு.

அவளுக்குப் பேச்சே வரவில்லை. நேற்று இதே அறையில் தன்னை அவன் கைச்சிறைக்குள் வைத்திருந்தவன் இன்றைக்கு எங்கோ தொலைவில் இருக்கிறான் என்பதை நம்ப முடியவில்லை. கண்ணைக் கரித்தது. மற்றவர்களின் முன்னால் நல்லபிள்ளையாக இடைவெளி விட்டு நிற்கிறவன் அவளின் அறைக்குள் வந்துவிட்டால் போதும், தன் கைகளுக்குள்ளேயேதான் வைத்திருப்பான். முத்தங்களால் மூச்சுமுட்ட வைப்பான். ‘நீ என் உயிர். நீயில்லாமல் என்னால் நொடியும் இருக்கமுடியாது’ என்று ஒரு பார்வையில், நெருக்கத்தில், அணைப்பில் உணர்த்திக்கொண்டே இருப்பான். இன்றோ.. அவன் தொலைவில் அவள் தனிமையில். பதில் சொல்ல இயலாமல் தொண்டை அடைத்துக்கொள்ள ஒரு கையால் ஃபோனைப் பிடித்துக்கொண்டு மறுகையால் மெத்தையைச் சுரண்டினாள்.

அவனுக்கும் பேச்சு நின்றுபோயிற்று. இவ்வளவு நேரமும் தெரியாதபோதும் இரவும் உறக்கமும் அவளின் அருகாமையைத்தான் சுமந்து வந்தது. “சஹி..” என்றான் மென்மையாக.

“..”

“சஹி, என்ன பார்.”

அவள் அவனைப் பார்க்க, விழிகளில் தானாகவே நீர் கோர்த்தது.

“என்னடா?”

“என்னையும் ஏன் நீங்க கூட்டிக்கொண்டு போகேல்ல?” கண்ணீரை அடக்கியபடி கேட்டாள்.

“அடிதான் வாங்கப்போறாய். வா வா எண்டு கெஞ்சக் கெஞ்ச திமிர் கதை கதைச்சுப்போட்டு இப்ப என்ன கதைக்கிறாய்?”

“நான் சொன்னா விட்டுட்டு போய்டுவீங்களா? உங்கட அம்மம்மாவும் தான் இங்கயே இருக்கச் சொன்னவா. இருந்தீங்களா? இல்லை எண்டு அங்க திரும்பப் போனீங்க தானே. அதே மாதிரி என்னையும் வாடி எண்டு கையோட இழுத்துக்கொண்டு போயிருக்கலாம் தானே?”

இவளை… இதுல என்ர அம்மம்மாவாம். தன்னைத் தேடும் அவளிடம் கோபத்தைக் காட்டவும் மனமில்லை. “சரி ஒண்டுக்கும் யோசிக்காத. நான் மாமாவோட கதைக்கிறன். பிறகு என்ன செய்றது எண்டு பாப்பம். சரியா?” என்றான் கனிவோடு.

“உங்களுக்கு நான் வேண்டாம் என்ன? இல்லாம அப்பாட்ட அப்பிடி சொல்லியிருக்க மாட்டீங்க தானே!” என்றாள். இங்கே அவனுடைய அறையில் வைத்து விவாக ரத்து என்ற சொல்லை அவள் எடுத்ததே வீம்புக்குத்தான். அந்தச் சொல்லின் பொருளை உணரவும் இல்லை அதைப்பற்றி யோசிக்கவும் இல்லை. அந்த நொடியில் அவனைச் சீண்டும் நோக்கில் உதிர்த்த வார்த்தை. அதையே அவன் கொஞ்சிக் குலாவி பாசத்தைப் பொழிந்துவிட்டு அவள் ஒன்று சொன்னதும் அப்படிச் சொல்வானாமா? அவளால் அதை ஏற்கவே முடியவில்லை.

மனதின் சிணுக்கத்தை முகத்தில் காட்டி நின்றவளைப் பார்த்து மெல்லச் சிரித்தான் சஞ்சயன். “எனக்கு நீ வேணும். நீ மட்டும் தான் வேணும். உனக்கு நான் வேணுமா தெரியாதே? இல்லாட்டி உன்ன தேடி அவ்வளவு தூரம் வந்தவனை ஒருக்கா கூட மச்சான் எண்டு கூப்பிடாம இருப்பியா?” என்றான் குறையாக.

“கூப்பிட்ட நேரமெல்லாம் கூப்பிடாத எண்டு கழுத்தைப் பிடிச்சுப்போட்டு இப்ப கூப்பிடு எண்டா எப்பிடி கூப்பிடுறது?” எனும்போதே அவளுக்குக் குரல் உடைந்துபோயிற்று.

“அத மறக்கவே மாட்டியா?”

“நினைவு வச்சிருக்க எனக்கும் விருப்பம் இல்லத்தான். ஆனா நினைவிலேயே நிக்குதே.” என்றவளிடம் அதை அவள் மறக்கிற வரைக்கும் பேசினான். அவர்கள் இருவருக்கும் மட்டுமேயான பிரத்தியேகப் பேச்சுக்கள். அந்தரங்கமான வார்த்தையாடல்கள். நெருக்கமான பார்வைப் பரிமாறல்கள். செல்லக் கொஞ்சல்கள் என்று அவளைச் சொக்கவைத்தான். இவன் இப்படியெல்லாம் கதைப்பானா என்று திகைத்தாள் சஹானா. சில நேரம் பேசுவது அவன்தானா என்று விழிகளை விரித்தாள். சில நேரம் போர்வையால் முகத்தை மூடிக்கொண்டாள். சில நேரம், ‘அடி வாங்கப் போறீங்க!’ என்று செல்லமாகச் சிணுங்கினாள். இருவரில் ஒருவரின் கைபேசி தன் உயிரை விடுகிற வரைக்கும் இரவுகள் அவர்களுக்காக விழித்திருந்தது. முத்தங்கள் இலங்கைக்கும் ஒல்லாந்துக்கும் பறந்து பறந்தே களைத்துப் போயின.

error: Alert: Content selection is disabled!!