நேசம் கொண்ட நெஞ்சமிது 5 – 2

அவனின் கேள்வியில் அவனை மேலும் கீழுமாக நன்றாக பார்த்தவள், தன்னுடைய பாணிக்கு சட்டென்று திரும்பி,

“கேள்விக்கு பிறந்தவரே, உங்களின் கேள்விக்கு பதில் சொல்லுமளவுக்கு கெட்டித்தனமற்றவள் நான். இந்தச் சிறியவள் ஒரு அறிவிலி. தாங்கள் தயை கூர்ந்து அடியவளை மன்னித்தருள்வீராக.” என்றவள் தொடர்ந்து,

“தங்களின் கேள்விக்கான பதிலை தாங்களே கூறிவிட்டால் இந்த ஜென்மத்துக்கான புண்ணியத்தை நான் பெற்றவள் ஆவேன்.” என்றாள் கண்ணின் கருமணிகள் மின்ன.

அவள் தன்னைக் கேலி செய்த விதத்தை பார்த்தவனின் முகம் சிரிப்பை சிந்த, எதையோ தன்னை மறந்து சொல்ல வந்தவன் அதனை தவிர்த்து, “எப்படி வேண்டுமானாலும் கூப்பிடு. ஆனால் இந்த சார் வேண்டாம். அதைவிட அண்ணா வேண்டவே வேண்டாம். நான் உனக்கு அண்ணா கிடையாது!” சிரிக்கும் குரலில் ஆரம்பித்து அழுத்தமான குரலில் முடித்தான்.

அவன் சொல்வது குழப்பமாக இருந்தாலும் சரி என்பதாக தலையை ஆட்டினாள் வதனி. அவள் தலையை ஆட்டிய அழகில் இளாவின் காதல் கொண்ட மனம் பெரிதாக ஆட்டம் கண்டது.

அவனால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. உறுதி படைத்த தன்னுடைய மனம் இவளின் சிறு அசைவில் கூட தடுமாறுகிறதே, அந்தளவு மனதைக் கட்டுப்படுத்தும் வலிமை அற்றவனா நான் அல்லது என்னுடைய மனதை அசைக்கும் சக்தி படைத்தவளா இந்த பெண் என்று குழம்பி நின்றான்.

இளாவின் முகத்தையே பார்த்திருந்த வதனிக்கு, அவனின் நினைவுகள் இங்கில்லை என்று புரிந்தது.

கண்களில் குறும்பு மின்ன, “அழகா, குடை மிளகா! தாங்கள் சிந்தை சிதறுவது அழகா?” என்றாள் மறுபடியும் நாடக பாணியில்.

அவளின் கிண்டலில் நினைவுக்கு திரும்பியவன், “என் பெயரையா கேலி செய்கிறாய். மரியாதை கொஞ்சமும் இல்லை. எப்போதாவது என்னிடம் மாட்டுவாய் தானே. அபோது இதற்கு பதில் சொல்கிறேன்.” என்றான் சிரிப்புடன்.

“மாட்டும்போது பார்க்கலாம்.. யார் யாரிடம் சிக்குகிறார்கள் என்று!” சவாலாக தலையை சிலுப்பினாள் வதனி.

அவளின் அந்த சிலுப்பல் கூட அவனுக்கு அழகாய் இருந்தது.

‘இனிமேலும் மாட்டுவதா? ஏற்கனவே மாட்டித் தவிப்பது போதாதா…. சந்தேகம் என்ன? நான்தான் உன்னிடம் மாட்டிவிட்டு மீளும் வழி தெரியாது முழிக்கிறேன்.’ என மனதிற்குள் நினைத்துகொண்டான்.

‘ஆட்டம் கண்ட மனதை ஒருவழியாக அடக்கிக்கொண்டு வந்தால், மறுபடியும் ஆட்டம் காண வைக்கிறாளே இவள். எப்படி இருந்த என்னை இப்படி ஆக்கிவிட்டாளே இந்த சிங்காரி’ என நினைத்த மாத்திரத்தில் அவனுக்கு சிரிப்பு வந்துவிடவும் வாய்விட்டுச் சிரித்தான்.

எதையோ சொல்லிக்கொடு இருந்தவள் அவனை வித்தியாசமாக பார்த்தாள்.

‘நான் எப்படிக் கூப்பிட என்றுதானே கேட்டேன். அதற்கு ஏன் இப்படி சிரிக்கின்றான். இவனுக்கு என்னவோ ஆகிவிட்டது. எதற்கு வம்பு. நைசாக விலத்துவதுதான் நல்லது.’ என்று நினைத்தபடி நகரப்போனாள்.

“நான் கேட்ட கேள்விக்கு பதிலைச் சொல்லாமல் எங்கே போகிறாய்..?”

அவனுடைய கேள்வி அவளை உசுப்பேத்தியது.

“நீங்கள் ஒரு லூசு. அதனால் இனிமேல் உங்களை லூசு என்றுதான் கூப்பிடுவேன்.” என்றவள் ஒரு நிமிடமும் தாமதியாது அந்த இடத்தை விட்டு ஓடிவிட்டாள்.

“லூசா?” என்று கேட்டவனுக்கு, ‘உண்மையை சொல்லிவிட்டு போகிறாள்’ என்றது அவன் மனது.

‘இதுவரை எந்தப் பெண்ணிடமும் நின்று பேசாத என்னை, உன்னுடன் நின்று வம்பளக்க வைத்திருக்கிறாய் என்றால் நான் லூசாகித்தான் போனேன்..’ என்று நினைத்துக்கொண்டே தான் பாடம் எடுக்கவேண்டிய வகுப்பு நோக்கி நடந்தான்.

‘இவளுக்கு இங்கு என்ன வேலை? படிப்புத்தான் முடிந்துவிட்டதே. காணாவிட்டால் மறந்துவிடலாம் என்று நினைத்தால் கண்முன்னே வந்து நிற்கிறாள். இதுதான் எனக்கு வந்த சோதனையோ…’ என அவனின் மனம் குழம்பியது.

அன்றைய வகுப்புக்கள் முடிய வீடு செல்லும் வழியில் கலங்கி கிடக்கும் தன்னுடைய மனதை பற்றி சிந்தித்தான் அவன்.

‘நடப்பது நடக்கட்டும். நானாக அவளை தேடிச்செல்லவில்லை. அவளாக என் கண்களில் படுகிறாள். இதுதான் கடவுளின் சித்தமோ. இனி நடப்பதைக் கண்டுகொள்வோம்’ என்று நினைத்துக்கொண்டது தடுமாறும் அவனின் மனம்.

அவளை நினைத்த மாத்திரத்திலேயே அவன் முகத்தில் புன்னகை சொல்லாமல் கொள்ளாமல் குடியேறியது.

‘எவ்வளவு வாய் துடுக்கு அவளுக்கு. அதுவும் கதைக்கும்போது நாட்டியமாடும் அந்தப் பெரிய விழிகள், பேசும்போது குவிந்து விரியும் இதழ்கள், அப்பப்போ எட்டிபார்க்கும் அழகிய பல்வரிசை. அழகோ அழகு என்னவள்’ என்று அவளை நினைத்து நினைத்து சொக்கிப்போனான் இளவழகன்.

அடுத்த நாள், எப்போதடா மாலை வரும் வாணிக்கு செல்லலாம் என்று அவன் மனம் ஏங்க தொடங்கியது. அவனுக்கே பயமாகிப்போனது அவனின் நிலை.

என்னுடைய நிலை என்ன???நான் காதலிக்கலாமா??இது சரிதானா???என்று தவித்தவனுக்கு அவனின் மனமே பதில் சொன்னது.

‘அப்படியே காதலித்தால் தான் என்ன.. அவளும் படிக்கவேண்டும்… எனக்கும் தங்கையின் திருமணத்தை முதலில் முடிக்க வேண்டும்.. எனவே இருவரும் இப்போது திருமணம் செய்துகொள்ளப் போவதில்லை… ஆனால் அதுவரை காதலிக்கக்கூடாது என்று சட்டமா இருக்கிறது?’

அவளுக்கு இப்போதுதானே பதினெட்டு வயது என்கிற எண்ணம் வந்தபோது,

‘திருமணமே செய்கிறார்கள் இந்த வயதில். காதல் செய்யக் கூடாதா? அதெல்லாம் செய்யலாம்… அதுவும் அந்த ராட்சசியின் வாய் துடுக்குக்கு நிச்சயமாகக் காதல் செய்யலாம்…. ‘ என காதல் கொண்டவனின் மனம், தனக்குச் சார்பாகவே எல்லாவற்றையும் நினைத்தது.

தன் காதலுக்கு தன்னிடமே அனுமதி கிடைத்ததில் மிகவும் மகிழ்ந்து போனான் இளவழகன். அகமும் முகமும் மகிழ்ச்சியில் மலர, எப்போதடா மாலை வரும்… எப்போது அவளை பார்ப்பது… என்று இதுவே அவன் நினைவாகிப்போனது.

நேற்று ஏன் வந்தாள்? இன்றும் வருவாளா? எப்படியாவது அவளிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளவேண்டும் என்றும் மனதில் குறித்துக்கொண்டான்.

ஆவலுடன் அவளை எதிர்பார்த்து வாணிக்கு சென்றவனை ஏமாற்றமே வந்து தழுவியது!

error: Alert: Content selection is disabled!!
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock