நேசம் கொண்ட நெஞ்சமிது 11 – 1

மாணவி ஒருத்தி கேட்ட கேள்விக்கு விளக்கத்தை சொல்லிக் கொடுத்துக்கொண்டு இருந்தவளுக்கு விரிந்த புன்னகையுடன் கண்களில் காதல் கசிய அந்த கொட்டகைக்குள் நுழைந்த இளாவை பார்த்ததும் இதயம் இனிதாய் அதிர்ந்தது.

கண்களில் மகிழ்ச்சியும் நாணமும் போட்டியிட அவனை நிமிர்ந்து பார்த்தவளை விட்டால் விழுங்கியே விடுவேன் என்றது அவனின் பார்வை.

அங்கிருந்த மாணவர்கள் அவனை கண்டதும், “வணக்கம் இளா அண்ணா..” என்றதும் வதனிக்கு தான் அன்றொரு நாள் கூறிய, “இளவழகன் அண்ணா” நினைவு வரவே அவள் விழிகள் நகைத்தது.

அவளின் பார்வை சொன்ன சேதி அவனை சென்றடைய வந்த சிரிப்பை புன்னகையாக மாற்றி, தலை அசைப்பில் தன்னுடைய வணக்கத்தை மாணவர்களுக்கு தெரிவித்தான்.

“நீங்கள் எல்லோரும் தந்த பேப்பரை செய்யுங்கள். உங்களுக்கு பிரயோசனப்படும் என்று நான் எடுத்துவந்த நோட்ஸில் சில விளக்கங்கள் வதனியிடம் சொல்ல வேண்டும். அதனால் நாங்கள் கடைசி வாங்கில் இருக்கிறோம்.” என்றவன் அவளை கண்ணசைவால் தன்னுடன் அழைத்தான்.

மலைத்தே போனாள் வதனி. எப்படியெல்லாம் திட்டம் போடுகிறான். இவன் மகா கில்லாடியாகத்தான் இருப்பான் என்று மனதில் ஓடியபோதும் அவனின் செயல் அவளுக்கு பிடித்துத்தான் இருந்தது.

அவனுடன் சென்றவள் வாங்கிலில் அமர்ந்தவுடன் அவனும் அவளை அண்டி அமர்ந்துகொண்டான்.

திகைத்துப்போன வதனி, “என்ன செய்கிறீர்கள். தள்ளி அமருங்கள்.” எனவும்,

“இன்னுமா? அப்போ உன் மடியில்தான் இருக்கவேண்டும். இருக்கவா?” என்று கேட்டான் அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில்.

“ப்ளீஸ். அவர்கள் சிறு பிள்ளைகள் இல்லை. மாணவர்கள் முன் நீங்கள் இப்படி நடப்பது நல்லதல்ல…” என்று முன்னே பரீட்சை எழுதிக்கொண்டிருந்தவர்களைக் காட்டி அவள் சொல்லவும் மனமின்றி சற்றே தள்ளி அமர்ந்தான் இளா.

“அப்படி என்ன அவர்களின் பரீட்சைக்கு முக்கியமானதை கொண்டுவந்தீர்கள்.” கொஞ்சம் நையாண்டிக் குரலில் கேட்டவளுக்கு, அவன் காட்டியவைகளைப் பார்த்தபோது அவன் சும்மா சொல்லவில்லை என்று தெரிந்தது.

மாணவர்களுக்கு மிகவும் பிரயோசனமாவைதான் எனவும் முகம் மலர்ந்துபோனாள். என்னதான் அவளை பார்க்கும் ஆவல் என்றாலும் சிறு விடயத்தில் கூட அவன் பொய்ப்பதை, அவளின் மனது ஏற்க மறுத்தது.

அவளின் மலர்ந்த முகத்தை பார்த்தவனின் கண்களில் நேசம் பொங்கியது.

“நான் பொறுப்பில்லாதவன் இல்லை வனி.” என்றான்.

அவனும் தன் மனதை புரிந்துகொண்டான் என்பதை அறிந்து கொண்ட வதனி சங்கடமாக அவனை பார்த்தாள்.

அவளின் கையை பிறர் அறியாமல் இதமாய் அழுத்தியவன், “இது என்ன பார்வை? நான் பொய்த்துவிடக் கூடாது என்று நீ நினைக்கிறாய் என்பது, என் மீதான உன் அன்பை காட்டுவது…” என்றான் காதலுடன்.

அவனையே கண்ணெடுக்காமல் பார்த்திருந்தவள் அவனின் பார்வையை தொடர்ந்து சந்திக்கும் திறன் இல்லாது விழிகளைத் தாழ்த்தவும்,

“எப்போது நாம் சந்திப்பது?” என்றான் ஆவல் நிறைந்த குரலில்.

“வருகிற வெள்ளி கோவிலில்…” என்று ஆரம்பித்தவளை முறைத்தான்.

“எனக்கு இன்றே உன்னுடன் தனித்துப் பேசவேண்டும்!”

“இன்று எப்படி….?”

“அது எனக்கு தெரியாது. ஆனால் நாம் சந்தித்தே ஆகவேண்டும்…”

“இது என்ன சிறுபிள்ளை போல் இவ்வளவு அடம்…” என்றவளை முறைத்தவன்,

“நான் கிளம்புகிறேன்…” என்று கோபமாக எழுந்தான்.

அவனின் அந்தச் சிறு கோபத்தையே தாங்கும் சக்தி அற்று, தன்னை மறந்து அவனின் கையை பிடித்து இழுத்து இருத்தினாள் வதனி.

“ச்சு, எதற்கு எடுத்தாலும் இது என்ன கோபம். கொஞ்சம் குறைத்துக்கொள்ளுங்கள்.” என்றவளுக்கு பதிலைச் சொல்லாது அவளையே பார்த்தான்.

முறைப்போடு அவன் முகத்தை பார்த்தவளுக்கு, அவனின் ஏக்கம் நிறைந்த முகம் பார்த்தே ஆகவேண்டும் என்கிற எண்ணத்தை அவளுக்குள்ளும் விதைத்தது.

சற்று யோசித்தவள் நினைவு வந்தவளாக, “நான் நித்தி வீட்டுக்கு தினமும் மாலையில் விளக்கு ஏற்றப் போவேன். அங்கு வேண்டுமானால் இன்று சந்திக்கலாம்.” என்றவள் நொடியில் மலர்ந்த அவனின் முகத்தைப் பார்த்து,

“பொறுங்கள். ஆனால் நான் இங்கிருந்து நேராக அங்குதான் போவேன். அப்போது உங்களுக்கு வகுப்பு இருக்குமே…” என்றாள்.

யோசித்த இளா, “மூர்த்தி அண்ணாவிடம் வகுப்பை மாற்றிக் கேட்கிறேன். வேலையில் இருந்து வந்து கொஞ்சம் ஓய்வு எடுத்துவிட்டு வரலாம் என்று நான்தான் ஐந்து முப்பதுக்கு வகுப்பு எடுப்பதாக கூறினேன்.” என்றான்.

“இனி வகுப்பை மாற்றிக்கொள்கிறேன். இன்று மட்டும் நீ அங்கு கொஞ்சம் காத்திரு. இல்லை இல்லை.. யாருமில்லாத இடத்தில் நீ நிற்பது சரியாக வராது. நீ உன் வீடு செல். இன்று நான் ஆறு பதினைந்துக்கு வகுப்பை முடித்துவிட்டு உன் வீட்டடிக்கு வருகிறேன். சேர்ந்தே போகலாம்..” வேகமாக திட்டமிட்டான்.

தலையை சம்மதமாக அசைத்தவள், “ஆனால் வீட்டிற்கு முன்னால் நிற்காதீர்கள்..” என்றாள்.

“எனக்கு புரியாதா வனி..” கேலி கலந்திருந்தது அவன் குரலில்.

தன் வகுப்புக்குச் செல்ல எழுந்தவனுக்கு அப்போதுதான் தன் கை அவளின் கையில் சிக்கிக் கிடப்பது தெரிந்தது. அதை அவளும் உணர்ந்துகொள்ளவில்லை என்பது அவளின் மனம் அவன் பால் சாய்ந்து கிடப்பதை நன்கே வெளிச்சமிட்டுக் காட்டியது.

மனம் நிறைய, “வருகிறேன் வனி. நேரத்திற்கு வகுப்பை ஆரம்பித்தால் தான் நேரத்தோடு முடிக்கலாம்.” என்றவனிடம் சரி என்பதாக தலையை அசைத்தாள் வதனி.

error: Alert: Content selection is disabled!!
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock